பக்கங்கள்

வெள்ளி, 29 ஜூன், 2018

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்



 


இன்றைய தினம் இந்தியா தேசத்தில் இந்திய மக்களுக் குள் இருந்துவரும் ஜாதி மத பேதங்களுக்குத் தகுந்தபடியான பிரதிநிதித்துவம் ஏற்படக்கூடாது என்பதே தான் இந்திய காங்கிரஸ் கொள்கையாகவும், தீவிர தேசியமாகவும் இருந்து வருகின்றது. அன்றியும் இந்தப்படி சொல்லுகின்றவர்கள்தான் தேசியவாதிகளாகக் கூடும்.

நம்மைப் பொறுத்தவரையிலும், ஜாதி, மத வகுப்புப்படி மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்று சொல்லுவதாலேயே தீவிர தேசியவாதிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்படாமல்  வகுப்புவாதிகள், தேசத் துரோகிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்பட்டுவிட்டது. ஆனபோதிலும் 'ஜாதி, மதம், வகுப்பு ஆகியவைகளை அடியோடு அழிக்கவேண்டும்' என்று சொல்லுகின்ற 'ஜாதி மதத்துரோக' லிஸ்டிலும் நமது பெயர் மாத்திரமேதான் இருக்கின்றதேயொழிய மற்றபடியான 'தீவிர தேசியவாதிகள்' பெயரெல்லாம் ஜாதி, மத வகுப்பைக் காப்பாற்றும் லிஸ்டி லேயே தான் பதியப்பட்டிருக் கின்றன! இதில் இருந்து பகுத் தறிவுள்ள மக்கள் ஜாதி, மத வகுப்புவாதிகள் யார்? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். ஆனாலும் சொந்த அறிவே சிறிதும் இல்லாத பாமரமக்கள் நம்மைக் குறை கூறாமல் இருக்கமாட்டார்கள். இந்த நாட்டில் நாமறிய சுமார் 20 வருஷ காலமாகவே பிராமணர்கள் மகாநாடு, வருணா சிரம மகாநாடு, கிறிஸ்துவர் மகாநாடு, முஸ்லிம்கள் மகாநாடு, சைவர் மகாநாடு, வைணவர் மகாநாடு, ஆரிய தர்ம பரீட் சித்து மகாநாடு, மற்றும் சத்திரியர், வைசியர், பார்ப்பனரல் லாதார், பறையர், சக்கிலியர், வண்ணார், நாவிதர், நாயக்கர், பள்ளர்கள், வணியவைசியர்கள், வேளாளர், படையாட்சி, வேடுவர், கோமுட்டி வைசியர், நாட்டுக்கோட்டை, வைசியர், அகமுடையர், உடையார், நாடார், மறவர், கள்ளர், வீரசைவர், தேவாங்கர், இராஜபுத்திரர், சாலியர்,  மராட்டியர், கைக் கோளர் சௌராஷ்டிரர்கள், குலிஜியர்கள், குயவர்கள், கோனார் முதலிய பல முக்கிய வகுப்புக்காரர்களின் தனித் தனி மகாநாடுகளும், மற்றும் இவற்றுள் நூற்றுக்கணக்கான உட்பிரிவு வகுப்புகள் மகாநாடுகளும் நடைபெற்ற வண்ண மாகவே இருந்து வருகின்றன.

மற்றும் தேசிய கொள்கைகள் என்பவைகள் எல்லாம் ஜாதி, மத வகுப்புகளை காப்பாற்று வதிலும், அவற்றின் பரம்பரை உரிமைகளைக் காப்பாற்றுவதிலும், பழக்கவழக்கங் களைக் காப்பாற்றுவதிலும் தவற மாட்டோமென்று அந்த வகுப்பாருக்கு உறுதி கொடுப்பதாகவே தான் தீர்மானித் திருக்கின்றன. சர்க்காரார் கணக்கிலும் ஜாதிக்கொரு கலமும், மதத்திற்கொரு கலமும், வகுப்புக்கொரு கலமும், போடப் பட்டு அதை அனுசரித்தே சிவில் கிரிமினல் சட்டங்களும், ஆட்சியும் நடத்தப்பட்டு வருகின்றன. வியாபாரத் துறை யிலும் ஜாதி வகுப்புகள் ஆதிக்கமும், விவசாயத் துறையிலும் ஜாதி, மத வகுப்புகள் ஆதிக்கமும் இருந்து வருவதோடு சமுகத் துறையிலும் ஜாதி, மத வகுப்பு ஆதிக்கம் தலைசிறந்தே விளங்குகின்றன.

உதாரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு இராஜகோபாலாச்சாரியார் அவர்களே தலைவர் ஹோதாவில் 'எவனாவது கள் குடித்தால் அவனை ஜாதியை விட்டும் வகுப்பை விட்டும் பகிஷ்காரம் செய்து அதாவது அவனுக்கு நீர், நெருப்பு, பூமி ஆகியவை யாரும் கொடுக் காமல் கொடுமைப்படுத்துவதான ஜாதி வகுப்பு கட்டுப் பாட்டைப் பலப்படுத்துங்கள்' என்று அறிக்கை விட்டிருக் கின்றார்.

இந்த மாதிரியான முறையில் தேசியம் முதல் காந்தியம் வரை ஜாதி மத வகுப்பு பிரிவினைகளுக்கு இரும்புப் பூண் கள் போடப் பட்டது போல் உறுதிப்படுத்தி, கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும், இவை சுலபத்தில் ஒழிக்கப்பட யாராலும் சம்மதிக்க முடியாது என்பதிலும் எவரும் எவ்வித சந்தேகமும் கொள்ள முடியாது. ஒரு பறையர் ஒரு பொதுத்தெருவில் நடந்தால் இன்ன தண்டனை. ஒரு வாணிய வைசியர் ஒரு பொது கோவிலுக் குள் போனால் இன்ன தண்டனை. ஒரு நாடார் சத்திரியர், ஒரு பொதுக் குளத்தில் தண்ணீர் மொண்டால் இன்ன தண்டனை என் கின்ற பினல் கோட் சட்டமும், அதற்காக இன்ன நஷ்டம் கொடுக்க வேண்டும் என்கின்ற சிவில் கோட் சட்டமும், கிராம முன்சீப் கோட் முதல் பிரிவிகவுன்சில் வரை செல வாணி ஆகிக் கொண்டுதான் இருக்கின்றது.

அன்றியும் இதற்கு விரோதமாய் பேசுபவன் ஒவ்வொரு வனும் ஒவ்வொரு ஜாதிமத வகுப்புக்கும் விரோதியா கின்றானே யொழிய, அவன் சமரசக்காரனாவதில்லை. இவை மாத்திரமல்லாமல். பொதுரோட்டில் ஒரு இந்து மேளம் அடித்தால் மகமதியர்கள் கத்தியால் குத்துகிறார்கள். பொதுத்தெருவில் ஒரு மகமதியர் மாட்டைப் பிடித்துக் கொண்டு போனால் இந்துக்கள் அவரைக் கத்தியால் வெட்டுகிறார்கள் சீக்கியரும், முகமதியரும் தங்களை ஒருவருக்கொருவர் ஜன்ம விரோதிகள் என்ற சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறார்கள். பிராமணருக்கும் சூத்திரருக்கும் இருக்கும் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த நிலைமையில் உள்ள மக்களுக்கு ஜாதிப்படியோ, மதப்படியோ, வகுப்புப்படியோ பிரதிநிதித்துவம் மாத்திரம் கூடாதாம்!

ஏனெனில், அது தேசியத்திற்கு விரோதமாகிவிடுமாம்! ஆனால், அப்படிப்பட்ட ஜாதிமத வகுப்புகளை என்றும் நிலையாய் இருக்கும்படி காப்பாற்றுவது மாத்திரம் தேசியமும். அதற்காகவே திரு. காந்திக்கும் காங்கிரசுக்கும் சுயராஜ்யம் வேண்டுமாம். இந்த நிலைமையுள்ள இதன் யோக்கியதை ஒருபுறம் இருக்க பொதுஜனங்களுக்கு அளிக்கப்படும் (பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கும் முறை) நிலைமையைப் பற்றி சிறிது யோசிப்போம்.

ஓட்டானது கல்வியைப் பொறுத்ததகாவும், பணத்தைப் பொறுத்ததாகவும், வரும்படியைப் பொறுத்ததாகவும் இருக்க வேண்டும் என்ற அளவில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவில் உள்ள மற்ற எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும் எந்த வகுப்புக்கும் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் இருந்தாலும் பஞ்சமர், ஆதிதிராவிடர், தீண்டபடாதார் என்கின்ற 7 கோடி மக்களில் கல்வியோ, சொத்தோ, குறிப் பிட்ட வரும்படியோ 1000ல் ஒருவருக்காவது இருக்கின்றதா என்று பார்த்தாலே அதன் இல்லாமை உண்மை நன்றாய் விளங்கும்.

பார்ப்பனர்களுக்கு 100க்கு 100 பேர் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் எல்லாமும் அல்லது ஏதாவது ஒன் றும் உடையவர்கள். ஆகவேதான் இருப்பார்கள். ஆதலால் அவர்கள் எல்லோருமே எப்படியும் எந்தத் தொகுதியிலும் ஓட்டர்களாகி விடுவார்கள். மற்றபடி மேல் ஜாதிக்காரர் என்பவர்களிலும் அரைவாசிப் பேராவது ஓட்டர்களாக ஆகிவிடுவார்கள்.

நடு ஜாதிக்காரர் என்பவர்கள் அரைக்கால்வாசிப் பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள்.  மற்றும் சில கீழ்ஜாதிக்காரர் என்பவர்களும் வீசம் வாசிப் பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள், ஆனால், பறையர், சக்கிலியர், பள்ளர், முதலிய தீண்டாத வகுப்பார் என்பவர்களில் முந்திரிப் பெயராவது அதாவது 300ல் ஒரு பாகம் பெயர்களாவது ஓட்டராக இருக்கமுடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நிற்க, மற்றொரு விதத்திலாவது அதாவது அவர்களுக் கென்று சில தானங்களை பொதுத் தேர்தலில் ஒதுக்கி வைத் தாலும் உண்மையான பறையரோ, சக்கிலியரோ வர முடியுமா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். பறை யனிலேயே பட்டை நாமம், துளசிமணி போட்டுக்கொண்டு 'மற்ற பறையனைத் தொட்டால் தீட்டு' என்று கருதுகிறவனும், விபூதி உத்ராட்சம் போட்டுக் கொண்டு பறத்தெருவுகளுக்குள் போய் வந்தால் குளிக்கின்றவனும் தனது சொந்தநலத்திற்குச் சமுகத்தை விற்பவனும் தான் வரமுடியுமே யொழிய இவற்றிற்குச் சௌகரியமில்லாதவன் வரமுடியுமா? என்று பாருங்கள். ஒருக்காலும் முடியாது. ஏனெனில், உண்மை யாகவே தங்கள் சமுகம் முன்னேற வேண்டும் என்று கருதுகின்றவனையும், தன்னை ஏன் மற்றவர்கள் பறையன் என்று சொல்லுகின்றார்கள் என்று கருதுகின்றவனையும் மற்ற ஜாதியார்கள் (மேல் ஜாதியார்கள்) தெரிந்தெடுக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள். மற்றபடி கிராமங்களிலோ அங்குள்ள மிராசுதாரர்கள்  தங்கள் குதிரைக்காரனையும், நாய்க்குப் பதிலாய் இருக்கும் அடிமையையும் மாத்திரம்தான் தெரிந்தெடுத்ததாய் சடங்கு செய்து, அவனைத் தங்கள் கைத்தடி முனையிலேயே வைத்திருப்பார்களே யொழிய தங்களுடன் சரிசமமாய் உட்கார நினைப்பவனைக் கிராமத்தி லேயே வைத்திருக்க மாட்டார்கள்.

இவை நிற்க, 21 வயது வந்த ஆண்களுக்கெல்லாம் ஓட்டு உரிமை கொடுப்பதாய் வைத்துக் கொண்டாலும், அந்த அந்த கிராமத்து மிராசுதாரன் சொன்னபடிதான் ஆசாமிகள் அபேட்சகர்களாக நிற்கவும், ஓட்டர்கள் ஓட்டுகள் போடவும் முடியுமே அல்லாமல், மற்றபடி பிரதிநிதித்துவத்திற்குத் தகுந்தவர்கள் ஒரு நாளும் வரமுடியவே முடியாது.

ஆகவே, மற்ற ஜாதி மத வகுப்பார் இடம் நம்பிக்கை இல்லை என்று கருதுகின்ற எந்த சிறுவகுப்புக்காரர்களாயிருந்தாலும், அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கும் படியாகவும், அந்த பிரதிநிதித்துவத்தை அவர்களே சகல உரிமைகளுடன்  தெரிந் தெடுத்துக் கொள்ள தகுந்ததாக வுமேதான் சுயராஜ்ய ஆட்சி முறை ஏற்படுத்தப்படவேண்டும். அப்படிக்கில்லையானால் ஒரு பொது வான, அதாவது இந்திய ஜாதி மத வகுப்பு வித்தியாசத்தில் கட்டுப் படாத ஒரு கூட்டத்தின் ஆட்சியில்தான் விட வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அதை விட்டு விட்டு 'என் ஜாதி உயர்வையும் அனுபவத்தையும் விடமாட்டேன். ஆனால், நான் கீழ் ஜாதி என்று வதைத்து, கொடுமைப்படுத்திக்  கொண்டிருக்கின்றவனுக்கு நான்தான் தர்ம கர்த்தாவாய் இருப்பேன்' என்றால் அது வடிகட்டின அயோக்கியதனமேயாகும்.

நிற்க. திரு. காந்தியவர்கள், 'முகமதியருக்கும் சீக்கிய ருக்கும் மாத்திரம்தான் தனிப் பிரதிநிதித்துவம் தனித்தொகுதி மூலமாய் வேண்டுமானாலும் கொடுக்க சம்மதிப்பேன். ஆனால், தீண்டாதார் என்கின்ற வகுப்புக்குமாத்திரம் கொடுக்க மாட்டேன்' என்று சொல்லுவதும், திரு. மாளவியா அவர்கள், அதற்கும் ஆமாம்சாமி போடுவதும் என்றால், இதில் கடுகளவாவது நீதியோ அல்லது நல்ல எண்ணமோ இருக்கின்றதா என்று பார்க்கும்படி வாசகர்களைக் கேட்கி றோம்.

சாயபு வாய் வார்த்தை வாயில் இருக்க, முதலில் கையை நீட்டி விடுகிறார். உடனே  ஆயிரக்கணக்கான சாயபுகள் மேல்விழுந்து நசுக்கிவிடுகின்றார்கள். அவர்களிடத்தில் அவ்வளவு கட்டுத்திட்டமும், வீரமும் இருக்கின்றது. ஆதலால் அவர்களுக்குப் பதில் பேசாமல் 'கொடுப்பதற்குள் என்ன சாயபு அவசரம்' என்று மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கின்றது. அதுபோலவே சீக்கியர்களும் வாய்வார்த்தை வாயிலிருக்க கிருபானை (கத்தியை) எடுத்துக் கொள்ளு கிறார்கள்.

அன்றியும், சீக்கியப்பூச்சாண்டி, காட்டி சாயபை ஏமாற்ற வேண்டியும் இருக்கின்றது. ஆதலால் சீக்கியர் எண்ணிக்கை லட்சக்கணக்குள் இருந்தாலும், அவர்களுக்குத் தனித் தேர்தல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், தீண்டாத ஜாதியார் என்பவர்களோ ஏழு கோடி பேர் இருந்தாலும் அவர்களுக்கு மானம் இல்லாமல், மனி தத்தன்மை நினைத்துப்பார்ப்பதற்கில்லாமல் வீரம் என் பதற்கு அர்த்தமே தெரியமுடியாமல், உதைத்த காலுக்கு முத்தம் இடும் மிருகத்தன்மையில் அடக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆதலாலும், அவர்கள் இன்னும் மேல் ஜாதியார்களுக்கு உழைத்துப் போடவேண்டிய அடிமை களாயிருக்கவேண்டியிருப்பதால், அவர்களை முன் னேற்றமடைய விடமுடியாதென்று சொல்லி அவர் களுக்குத் தனித்தேர்தல், தனிப் பிரதிநிதித்துவம் காங்கிரசும், காந்தியும், மாளவியாவும் மறுக்க வேண்டியதாகிவிட்டது.

ஆகவே, காங்கிரசின் - திரு.காந்தியின், திரு.மாளவி யாவின் தேசபக்தியும், தேசியமும் வகுப்புப் பிரதிநிதித்து வத்தை எதிர்ப்பதல்லாமல் வேறு கொள்கை ஒன்றும் முக் கியமானதல்லவென்றே சொல்லுவோம்.

தவிர சர்க்காரார் தான் ஜாதிமத வகுப்பு பேதங்களால் ஜனங்களைப் பிரித்து விட்டு, சுயராஜ்யம் கொடுக்காமல், சூழ்ச்சி செய்கின்றார்கள் என்று திரு.காந்தியும், கிளிப்பிள்ளை தேச பக்தர்களும் அடிக்கடி சொல்வதுண்டு. ஜாதி மத வகுப்புகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்ததா? அல்லது இந்தியஇராம இராஜ்யம் பிரித்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும், முலீம்கள் விஷயத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவதலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காக தேசிய முஸ்லிம் என்றும் தேசத்துரோக முஸ்லிம் என்றும் பிரித்து வைத்து, நீங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். உங்கள் பங்கைக் கொடுக்கத் தடையில்லை என்று  சொல்லுவது திரு. காந்தியா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமா? என்று கேட்கின்றோம்.

திரு. காந்தி அவர்களின் சட்டைப்பையின் டிக்கட் பாக்கட்டில் இருக்கும் திரு. அன்சாரியைத் தவிர தேசிய முஸ்லிம் தலைவரோ, தொண்டரோ, பின்பற்றுபவரோ வேறு முஸ்லிம் யார்? என்று கேட்கின்றோம்.

அப்படித்தான் இருந்தாலும் 8 கோடி முஸ்லிம்களில் எத்தனை கோடிப் பேர்கள் 'தேசிய முஸ்லிம்கள்?' எத்தனை கோடிப் பேர்கள் 'தேசத்துரோக முஸ்லிம்கள்' என்று சொல்லக் கூடும்? என்று கேட்கின்றோம். ஏழைகளுக்காக, திக்கற்றவர்களுக்காக, வாயில்லாப்பூச்சிகளான கிராமவாசி களுக்காக, சிறுபான்மையோருக்காக, தாழ்த்தப்பட்ட வருக் காகத்தான் நான் பாடுபடுகின்றேன். அவர்கள் பிரதிநிதியாகத்தான் நான் வட்ட மேஜை மகாநாட்டிற்கு வந்து இருக்கின்றேன் என்று பல்லவி பாடி மந்திரம் ஜபிக்கும் திரு. காந்தியர்வர்கள் உண்மையில் யாருடைய பிரதிநிதியாய் சீமை சென்றிருக்கிறார்? என்பதைச் சற்று கவனித்துப் பாருங்கள்.

ஆகவே, வரப்போகும் சுயராஜ்ஜியத்தில் எவ்வளவு சிறிய சுதந்திரம் கிடைத்தாலும், எவ்வளவு பெரிய சுதந்திரம் கிடைத்தாலும் அது இந்தியாவில் உள்ள இருக்க வேண்டிய எல்லா ஜாதி மத வகுப்புக்கும் சரியான பிரதிநிதித்துவமாய் இருக்கக் கூடியதாய் இருந்தால்தான், இந்திய மக்களால் ஒப்புக்கொள்ளக் கூடியதாகும். இல்லாதவரை எதிர்க்க வேண்டியதாகும்.

குடிஅரசு - தலையங்கம் - 11.10.1931

 

- விடுதலை நாளேடு,  24.6.18

2 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    பதிலளிநீக்கு