பக்கங்கள்

புதன், 7 மே, 2025

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 


விடுதலை நாளேடு

தமிழ்நாடு

சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தாக்கல் செய்யப் பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.4.2025) பதிலளித்து பேசினார். அப்போது, தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்கிற சொல் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-ஆவது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். மேனாள் முதலமைச்சர் கலைஞர், ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கூறுவார். ஆனால் அவர் தற்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். கலைஞர்  இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் தமிழ்நாடு அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வியாழன், 28 நவம்பர், 2024

பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கொடூரம் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்குதல்!

 

விடுதலை நாளேடு

புவனேசுவர், நவ.23 பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்கு தல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி உள்ளார். ஒடிசாவில் பழங்குடியினரின் நலனுக்காக மோகன் சரண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பெருமை பேசினர்.

ஆனால் ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஒடிசாவின் லங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் அபய் பக் எனும் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குச் சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி பயிர்களை நாசம் செய்து இருக்கிறார்.
இதைக் கண்டித்தும், அபய் பக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இளம்பெண்ணும், அவரது உறவி னர்க ளும் ஜுராபந்த் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் நவ.19ஆம் தேதி அன்று வயலை நாசப்படுத்திய ஜாதி வெறிக் குண்டர்களைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளம்பெண் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அபய் பக் இளம்பெண்மீது தாக்குதல் நடத்தி, மானபங்கம் செய்தது மட்டுமல்லாமல் ஆபாசமான வார்த்தைகளால் ஜாதிய ரீதியாக திட்டியிருக்கிறார்.

தனது மகளை மீட்க வந்த இளம்பெண்ணின் தாயின் கழுத்தை பிடித்து நெரித்து அபய் பக் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் மனித மலத்தை எடுத்து இளம் பெண்ணின் முகம் முழுவதும் பூசி, அவரது வாயிலும் திணித்திருக்கிறார் அபய் பக்.
இதனையடுத்து இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசா ரணை நடத்துவதாக மட்டுமே தெரி வித்துள்ளனர். ஆனால், இன்னமும் அபய் பக் கைது செய்யப்படவில்லை. இதனால் அபய் பக் பா.ஜ.க.விற்கு நெருக்கமானவராக இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

புதன், 25 செப்டம்பர், 2024

ஆந்திர சட்ட மன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – அமைச்சரவையில் தீர்மானம்


விடுதலை நாளேடு

அமராவதி, செப்.20 ஆந்திர அமைச் சரவை கூட்டம் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் அமராவதியில் நேற்று (19.9.2024) நடை பெற்றது.

இதில் சட்டப் பேரவையில், பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் சந்திரபாபு நிறைவேற்றி உள்ளார். மேலும் மதுபான கடைகளை மீண்டும் தனியாருக்கே வழங்கி, தரமான மதுபானங்களை குறைந்த விலைக்கு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

180 மிலி ரூ.99-க்கு தரமானதாக வழங்கிட வேண்டுமெனவும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு விலை இருக்க வேண்டுமெனவும், அதுவும் தரமான மதுபானங்களை மட்டுமே விற்க வேண்டுமெனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜெகன் அரசு, அவரது ‘சாட்சி’ நாளிதழை மட்டுமே கிராம,வார்டு செய லகங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.200 செலுத்தி அரசு சார்பில் வழங்கி வந்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும், சாட்சி நாளிதழ் வழங்குவதை நிறுத்தவும் முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவிட்டார்.

ஆதார் அட்டைபோன்று, மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டையை அரசு தரப்பில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ‘ஸ்டே மீ’ எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உள்துறைக்கு புதிய கார்ப்பரேஷன் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

இடஒதுக்கீட்டில் மோசடி செய்து வெளிநாடுகளில் உல்லாச வாழ்வு! ஜாதியோ உயர்ந்த ஜாதி! செய்வதோ தரம் தாழ்ந்த அநீதி!-பாணன்

 ஞாயிறு மலர்,விடுதலை


இடஒதுக்கீட்டில் மோசடி செய்து, ஜாதிப் பிரிவுகளுக்கு போலிச் சான்றிதழ் கொடுத்து, ஒன்றிய அரசின் நிதிச் சலுகைகளைப் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்று உல்லாசமாக வாழும் பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினர் குறித்துப் பார்க்கலாம்:

இது மத்தியப் பிரதேசம்

போலி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சான்றிதழ் கொடுத்து வெளிநாடு படிக்கச்சென்று செட்டில் ஆன பார்ப்பனர்கள்.

வெளிநாடு சென்று படிப்பதற்காக 30 மாணவர்கள் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளின் போலி ஜாதிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பை முடித்துவிட்டு லண்டன். சிட்னி, மிட்சிகன்(அமெரிக்கா) உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களில் பணியில் சேர்ந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

தகுதி இருந்தும் பல ஆண்டுகளாக தங்களுக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று விண்ணப்பித்திருந்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், இவர்களின் சான்றிதழ்களை தனியார் அமைப்பு ஆய்வு செய்தபோது இவர்கள் தகுதியானவர்கள். ஆனால், இவர்கள் இடத்தில் வேறு நபர்களுக்கு உதவித்தொகை கொடுத்து அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதும் தெரியவந்தது.

மத்தியப் பிரதேச அரசு ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு வந்த விண்ணப்பங்களில் பல விண்ணப்பதாரர்களின் சிலரை ஆய்வு செய்தது. அப்படி விண்ணப்பித்து பணம் பெற்று வெளிநாடு சென்றவர்களின் குடும்பப் பெயர் சர்மா ஆகும்.
இதில் ஆயுஷி சர்மா, சிசிர் சர்மா மற்றும் நயன் சர்மா ஆகிய மூவரைப் பற்றியும் துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.

இந்தூரில் தயாரிக்கப்பட்ட அவர்களது ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளூர் நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டபோது, மூன்று மாணவர்களும் பார்ப்பனர்கள் என்பது தெரிய வந்தது.

ஓபிசி மகாசபை, பழங்குடியினர் சேவா சங்கம் மற்றும் பிற அமைப்புகள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டன. 2019 முதல் 2022 வரை உதவித்தொகை பெற்ற மாணவர்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்படி ஆய்வின் போது 50 க்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்களாக இருந்தனர்.

எனவே, இந்த அமைப்புகள் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிபார்ப்பதுடன், அவர்கள் வசித்த இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தின. இந்த விசாரணையின் போது, அவர்கள் பார்ப்பனர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

புகார் அளித்த பிறகும் இது குறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக புகார் அளித்த அமைப்புகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளன.

1. ஜனவரி 1, 2022 அன்று நயன் சர்மாவின் போலி ஜாதிச் சான்றிதழ் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், ஏப்ரல் 2022இல் 19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022இல் நயன் ஆஸ்திரேலியா சென்றார். ஜாதிச் சான்றிதழ் போலியானது என கண்டறியப்பட்டது.

2. சிசிர் சர்மா 2020இல் 35 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றார். இவருக்கு இயக்குநர் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரி சிபாரிசு செய்திருந்ததாக கூறப்படுகிறது மேலும் அவர் சிக்ஷா சாஸ்திரி கலா பள்ளி, கனாடியா சாலை, இந்தூரில் படித்ததாகக் கூறினார். சான்றிதழில் குறிப்பிடப்பட்ட அந்தப் பள்ளியே இல்லை என்பது தெரிய வந்தது. மாவட்ட கல்வித்துறை உயரதிகாரியும் இதை உறுதிப்படுத்தினார். இவர் லண்டனில் உள்ளார்.

3. அவனீஷ் தன்வருக்கு 2022இல் 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. தன்வரின் சான்றிதழ் இந்தூரில் எந்த முகவரியில் தயாரிக்கப்பட்டதோ அது வாடகை வீடு என்பதும், அய்டிஆர் மற்றும் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பானிபட் முகவரியும் போலியானது என்பதும் தெரிய வந்தது. இவர் சிட்னியில் உள்ளார்.
கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் போலி ஜாதிச் சான்றிதழ் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரது பெயர் பட்டியலில்.

1. பெயர் நயன் ஷர்மா, ஆண்டு: 2021, அரசு உதவி: ₹20 லட்சம், ஜாதி: பிராமணர்.
2. கரிமா சிங், ஆண்டு: 2020, அரசு உதவி: ₹29 லட்சம், ஜாதி: தோமர் ராஜ்புத்.
3. ஆஷின் மொஹ்பே, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹26 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
4. பிரகர் அமிர்தா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹27 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
5. ஷுபம் தேஷ்முக், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித் தொகை: ₹31 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
6. தருண் கும்ராவத், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹2 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
7. ஆஷிர், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹37 லட்சம், ஜாதி: ஜெனரல் ராஜ்புத்.
8. அவ்னிஷ் தன்வார், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹20 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.
9. ரவீனா சர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹1 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
10. ஷிஷிர் சர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹35 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.

 

11. ஆயுஷி ஷர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹30 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
12. தர்ஷன் சோன்வானே, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹35 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.

மத்தியப் பிரதேசம் விதிசா என்ற இடத்தில் பழங்குடியின சான்றிதழைக் கொடுத்து 32 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் அபிசேக் சர்மா என்ற பார்ப்பனர். இவர் மீது புகார் அளித்த பிறகும் விசாரணையை துவங்க 12 ஆண்டுகள் ஆனது. அதற்குள் அவர் பணி ஓய்வும் பெற்றுவிட்டார்.

13. நீலம் ரத்தோர், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹37 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.
14. பரம் கேவலே, ஆண்டு: 2019, பெற்ற அரசு உதவித்தொகை: ₹28 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
15. துவாரகை வீர், ஆண்டு: 2010, பெற்ற அரசு உதவித்தொகை: ₹48 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வரவேற்கத்தக்க அரிய தீர்ப்பு! பழங்குடியினருக்கு உள்இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

 


புதுடில்லி, ஆக.1 தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே மிகவும் பின் தங்கிய வருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கிய முடிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும்
7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்ப ளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறு பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளன. அந்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலிருந்த திமுக அரசு அருந்ததி யினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பு அளித்தது.

ஆனாலும், ஏற்கெனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதி கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், அரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஏழு நீதிபதிகள் அமர்வில் விசாரணை!
அந்த வழக்குகள் ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதம், 7 நீதிபதிகள் அமர்வின்முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியது.
இதில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும். பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என பெரும்பான்மை அமர்வு தீர்ப்பளித்தது. உள் ஒதுக்கீடு சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பில் நீதிபதி பெலா திரிவேதி மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீற வில்லை. அதன்பிறகு பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை.இதன் காரணமாக உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடை யாது என உச்ச நீதிமன்றம் இறுதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதன், 24 ஜூலை, 2024

பாட்னா மாநாடு: கொட்டும் மழையிலும் கலையாத 2 லட்சம் மக்கள்

 

வடபுலத்து தலைவர்-சமூகநீதிப் போர்த்தளபதி இராம்விலாஸ் பஸ்வான் நினைவுகளும்-சில நிகழ்வுகளும்

கி.வீரமணி

.com/img/b/R29vZ2xl/AVvXsEgXfEuXpx5SBa3J4ijsCSA8GTq-pVwZL4MdGUX6ZcaG4x6oNBgGp32jtMkSnwuepDPv36B59uVZlCvd1uAWP8ysAg_OjM1Kui2UIyrzuEGVEMqwSw_e_FoEySVcPC3erFIo6w6QJNpkaGI/


பீகார் தந்த மிகப்பெரிய கொள்கைச் சிங்கம் அருமை நண்பர் இராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் வடபுலம் தந்த அருமையான சமூகநீதிப் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவர்!


மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்து, படித்துப் பட்டம் பெற்று, காவல்துறை பணிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டும், அரசியல் பொதுப் பணியே அந்த இளைஞரை ஈர்த்தது.


ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப் புரட்சி இயக்கத்தின் தாக்கம், ராம்மனோகர் லோகியாவின் ஜாதி மறுப்பு சமூக சமதர்மச் சிந்தனைகள் இவற்றைத் தாண்டி பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி லட்சியங்கள் இவற்றால் அரசியலுக்கு வந்தவர் - மிசாவில் சிறைக் கைதியாக இருந்தவர்.


பீகார் மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாற்றுக்கு உரியவர் என்பதோடு,  அடுத்த தேர்தலில் முன்னிலும் அதிக வாக்குகள் வித்தியாசம் காட்டி தனது சாதனையை அவரே முறியடித்தவர்  கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற வெற்றி வீரர்.


32 வயதில் 33 முறை சிறைசென்ற கொள்கைப் போராளி. கம்பீரமான தோற்றம் - உயரத்திலும் வளர்ந்தவர் - கொள்கை லட்சியப் பயணங்களைப் போலவே!


மேடைகளில் ஏறினால், சிம்ம கர்ச்சனை அவரது தாய் மொழி பீகாரி ஹிந்தியில்!


நாடாளுமன்றத்தில் 8 முறை வெற்றி பெற்று முத்திரைப் பதித்த முதிர்ச்சியாளர்.


தந்தை பெரியார்மீதும், தமிழ்நாட்டின் திராவிடர் இயக்கத்தின்மீதும், நம்மீதும் தணியாத நட்பை உறவாகக் கொண்ட உண்மை நண்பர். கலைஞரின் உற்ற நண்பர்.


கொள்கையால் பூத்த நட்பு


1980 முதல் அவர் நமக்கு அறிமுகமானவர். வடபுலத்தின் மூத்த சமூகநீதிப் போராளித் தலைவர் சந்திரஜித் (யாதவ்) அவர்கள்தான் நண்பர் இராம்விலாஸ் பஸ்வானை எனக்கு புதுடில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும், பிறகு அவரது இல்லத்து (நார்த் அவென்யூ) விருந்திலும் அறிமுகம் செய்து நட்புறவுப் பாலம் அமைத்துத் தந்தவர்!


9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையை பிற்படுத்தப்பட்டோர்மீது சுமத்திய எம்.ஜி.ஆர். அரசின் ஆணையை எதிர்த்துப் போராடி நாம் வெற்றி பெற்ற பிறகு (தி.க., தி.மு.க, சி.பி.அய். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சில காங்கிரஸ், ஜனதா தள நண்பர்கள் ஓர் அணியாக ஓராண்டு தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் பயன் விளைச்சல் அது) 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை நீக்கியதோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி, 68 சதவிகித இட ஒதுக்கீடாக்கி தமிழ்நாட்டில் வரலாறு படைத்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.


வகுப்புரிமை வரலாற்று ஆவணம்


இதனை பார்ப்பனர் பின்னணியில் இருந்து, பாதிக்கப்பட்டோர் Oppressed Community  சார்பில் என்று ஓய்வு பெற்ற சைவப் பிள்ளைமார் ஜாதியை சார்ந்த மார்த்தாண்டம் (பிள்ளை) உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டபோது, நாமும் அதில் இணைத்து அவர்களைக் கொண்டு (தமிழக அரசுடன்) வாதாடிய நிலையில்தான் உச்சநீதிமன்ற ஆணைப்படி இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனை அன்றைய எம்.ஜி.ஆர். அரசு 1980-81 இல் பிற்படுத்தப்பட்ட (வன்னியர்) சமூகத்தைச் சேர்ந்தவரான அம்பாசங்கர் அய்.ஏ.எஸ். தலைமையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி நியமித்தது. உச்சநீதிமன்றத்தில் நம் சார்பில் திராவிடர் கழகம் சார்பில்) வாதாட ஆர்.கே.கார்க் என்ற மூத்த வழக்குரைஞரை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு வரலாறு தனிப்பெரும் வரலாறு ஆனபடியால் அதை விளக்கிக் குறிப்புகள் அடங்கிய ஓர் ஆவணத்தை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொடுக்குமாறு நம்மைக் கெட்டுக் கொண்டார். அதற்கிணங்க வகுப்புரிமை வரலாற்றை ஓர் ஆவணமாக்கி- ஆங்கிலத்தில் தந்தோம் - பிறகு அதனை விரிவாக்கி ஆங்கில நூலாகவும் அச்சிட்டுப் பரப்பினோம்.


.com/img/b/R29vZ2xl/AVvXsEi2qpghM47OveiJLAgK6XyZbnBZElTdGGtsR_KCw99h5EcRMF-SKiqj8O7_LizSQhvqZ95-enMDRYvRWOmi5nBK8q7EaylKS0bA2HUeihHIB4y4JCacf5QdGNNqalwnl7PKnTsrvEoX8DY/


இதை டில்லி சென்று சந்திரஜித் யாதவ் அவர்களைச் சந்தித்த தி.மு.க. பிரமுகரும், நமது நண்பருமான பாளை சீத்தாராமன் அவர்கள் தந்தார். அதைப் படித்துச் சுவைத்து, நாடாளுமன்ற விவாதத்திலேயே இந்த நூலைப்பற்றியும் கூறி, பதிவு செய்துள்ளார்.


நான் டில்லி சென்று அவருக்கு அறிமுகமாகி நண்பரான நிலையில், எங்கள் நட்பு விரிந்தது - கொள்கை அடிப்படையில்! - அவருடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சமூகநீதி, இட ஒதுக்கீடு பிரச்சினையில் நெருக்கமானவர் நண்பர் இராம்விலாஸ் பஸ்வான்.


நாங்கள் அடுத்தமுறை டில்லி சென்றபோதுதான், அவர்மூலம் மேலே சுட்டிய நட்புறவு தொடங்கியது!


தந்தை பெரியாரின் சமூகப்புரட்சி கருத்துப் புத்தகங் களைத் தந்தோம். ஆர்வமாகப் படித்து உள்வாங்கி மிகுந்த ஈடுபாடு கொண்டார் நண்பர் பஸ்வான்.


தமிழ்நாட்டோர் ரசித்த இந்திப் பேச்சு


அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, இந்த ‘‘Fire Brand Young Leader’’ என்று அறிமுகப்படுத்த வாய்ப்பைப் பெற்றோம்.


அதன் பிறகு பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு தமிழ்நாட்டின் நடுநாயகமான திருச்சி மாநகரில் நடைபெற்றது. அதில் அவர் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டார். அம்மாநாட்டில் கலைஞர் டில்லி செல்வதற்காக அப்போதுதான் முன்கூட்டியே பேசி விடை பெற்றார். திரு.இராம்விலாஸ் பஸ்வானை நாங்கள் அறிமுகம் செய்து வைத்தோம். அவரும் மிகப் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அம்மாநாட்டில் நண்பர் இராம்விலாஸ் பஸ்வானின் கொள்கை முழக்கம் இரவு ஒரு மணி 2 - மணிவரை தொடர்ந்தது. ஹிந்தியில் அமைந்த அவரது எழுச்சி உரையை - தோழர் தலித் எழில்மலை தமிழில் மொழி பெயர்த்தார்!


துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டாக்களாக அவரது உரை வீச்சு முழக்கங்கள் அமைந்தன! இளைஞர் பட்டாளத்தை வெகுவாகக் கவர்ந்தது மட்டுமல்ல - சுயமரியாதை வீரர் மன்னை ப.நாராயணசாமி அவர்கள் பிரமித்துப் பாராட்டி மகிழ்ந்து, பிறகு கலைஞரிடமும் அதுபற்றி சிலாகித்தார்!


‘‘இந்து தர்மம் என்பது மனித தர்மத்துக்கு எதிரானது. சமத்துவத்துக்கு எதிரானது. நாம் அந்தத்  தர்மத்துடன் உடன்பாடு செய்து கொள்ள முடியாது.’’


‘‘ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பவர்களைக் கேட்கிறேன்; உனக்குத் துணிவிருந்தால் ஜாதிய அமைப்பைத் தகர்க்கத் தயாராக இருக்கிறாயா? ஜாதி இருக்கும்வரை ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருந்துதான் தீரும்; தீரவேண்டும்.’’


தமிழ்நாட்டிலே சூத்திரர்களின் ஆட்சி - தி.மு.க. ஆட்சி நடைபெற்றதே அந்த ஆட்சியில் என்ன குறை இருந்தது? சிறப்பாகத்தான் அந்த ஆட்சி நடைபெற்றது?


திராவிடர் கழகத் தோழர்களே, அந்த உரிமைப் பணியை துரிதப்படுத்துங்கள்!  எதிர்வரும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து எறியுங்கள்! உங்களால் அது முடியும்!” - இப்படி அடுக்கடுக்காக வாதங்களை வைத்து முழங்கியது ஓர் போர் முரசமாகியது!


ஹிந்தி எதிர்ப்புக்குப் பேர் போன தமிழ்நாட்டு மண்ணில் - ஒன்றரை மணிநேரம் ஹிந்தியில் பேசுவதை கைதட்டி வரவேற்ற நிலை மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியது என்று அந்த நிகழ்ச்சிபற்றி பார்ப்பன நாளேடு ஒன்று குறிப்பிட்டிருந்தது என்றால், அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்!


கருப்புச் சட்டைகளின் கட்டுப்பாடு கண்டு பெருமிதம் கொண்ட நண்பர் இராம்விலாஸ் பஸ்வான், அவரது மாநிலமான பீகாரில் வடபுல சுயமரியாதை இயக்கம் ஒன்று தொடங்கப்படவேண்டும் என்ற உணர்வால் உந்தப்பட்டார்!


மண்டலுக்கு முன்னெடுப்பு


மண்டல் அறிக்கையை வெளிப்படுத்த வடபுலத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டிற்கு வடபுலத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து மாநாடு ஒன்றை பெரியார் திடலில் மாலையில் நடத்தவும்; காலையில், அகில இந்திய அளவில் திட்டமிட ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தால் நல்லது என அவர்கள் விரும்பியதை அறிந்து, அந்த அழைப்பை ஏற்று திராவிடர் கழகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தோம்.


.com/img/b/R29vZ2xl/AVvXsEh7uMrboirEi5QZ4-fwHHnn_dgd7GGZ2vtvAYwjsaUIDay2hdpWx1yMFYHnAORTFnGGIjZ6s_GeoUARgcJsqIT6HXfJre01Q1OByjJEmWOKbxwKASOfmfFirL_1FLBl_c1W64fs4jvYQNw/


டில்லியின் முன்னாள் முதலமைச்சரும்  பிரதமர் பண்டித நேருவின் நெருங்கிய ‘சகாவு’மான  சவுத்திரி பிரம் பிரகாஷ் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பினை உருவாக்கி நடத்தினார். (National Union of Backward Classes) அதன் சார்பில் அனைவரையும் அழைத்ததோடு, தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களையும் ஒருங்கிணைத்தோம். ராம்விலாஸ் பஸ்வான், போலே பஸ்வான் சாஸ்திரி (முன்னாள் பீகார் முதல்வர்), கர்ப்பூரி தாகூர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர்கள் பலரும் வருகை தந்தனர். கலைஞரை முக்கியத் தலைமை விருந்தினராக அழைத்தோம்; அவர்கலந்துகொண்டு பெருமிதம் அடைந்தார்.


அன்றுதான் NUBC என்பதை NUBC and S.C., S.T.,,  என்று விரிவாக்கப்பட்டது சென்னை பெரியார் திடலில் - திராவிடர் கழகத்தின் முயற்சி வெற்றி பெற்றது!


இராம்விலாஸ் பஸ்வான் இதுபோன்ற முயற்சிகளுக்கு மிகுந்த ஊக்கம் தந்து பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது!


பீகாரில் உணர்ச்சி வெள்ளம்


பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பெரிய மைதானம் - காந்தி மைதானம். அங்கே பீகார் மாநில தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), மலைவாழ் பழங்குடி ஆதிவாசிகள் இணைந்து நடத்திய மாநாட்டில், என்னை சிறப்புப் பேச்சாளராக அழைத்து மகிழ்ந்த நண்பர் இராம்விலாஸ் பஸ்வான். 9.10.1983 அன்று சுமார் 2 லட்ம் பேர் கூடிய அந்த திறந்தவெளி மாநாடு பிற்பகல்  3 மணியளவில் தொடங்கியது.


(அம்மாநாட்டிற்கு அன்றைய தி.மு.க. எம்.பி.யும், தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வழக்குரைஞர் அமைப்பின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினருமான நெய்வேலி டாக்டர் வெ.குழந்தைவேலு  M.D., M.P. அவர்களும், புகைப்பட நிபுணர் சுபா சுந்தரம் அவர்களும் உடன் வந்தனர்).


நான்பேச ஆரம்பிக்கும் முன்பே மழை. பஸ்வான் தனது உரையை வெகு சுருக்கமாக்கிக் கொண்டு, மாநாட்டில் கூடியவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திவிட்டு, பேசுமாறு கேட்டுக்கொண்டார். எனது உரையை சமதர்மக் கட்சியில் சிறப்பான இந்து மஸ்தூர் தொழிற்சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராம்னிகா குப்தா அம்மையார் ஹிந்தியில் சிறப்பாக மொழி பெயர்த்தார். அவர் ஏற்கெனவே தமிழ்நாட்டில் சில காலம் பயிற்சி எடுத்தவர். ஆங்கில உரையை எவ்வளவு விறுவிறுப்போடு நான் பேசினேனோ, அதே வேகம் குறையாமல் - பொருளும் மாறாமல் உணர்ச்சியோடு மொழி பெயர்த்து - கொட்டும் மழை - மக்களோ அசையவில்லை - மழைக்கும், நமக்கும் போட்டி - சுமார் ஒரு மணிநேரத்திற்குமேல் தொடரும் உரை. லட்சக்கணக்கான மக்கள் குடைகளைப் பிடித்துக் கொண்டு, அப்படியே கேட்டதோடு, இடையிடையே உற்சாக மிகுதியால் ‘ஜிந்தாபாத்’ முழக்கமிட்டனர்!


இதுபற்றி பிறகு பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் கர்ப்பூரி தாக்கூர் அவர்கள் மேடையில்  வியந்து பேசினார். அந்நிகழ்வுபற்றி டாக்டர் வெ.குழந்தைவேலு எம்.பி.,  அவர்கள் ‘விடுதலை’யில் எழுதினார்.


புதிதாக பிரதமராக வந்த திருமதி இந்திரா காந்தி அவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை நாடாளு மன்றத்தில் வைப்பதோடு, பரிந்துரைகளை செயல்டுத்த வேண்டுமென்று வற்புறுத்தினார் நண்பர் பஸ்வான். வகுப்புரிமை, சமூகநீதி தீர்மானத்தைப்பற்றி வாதம் நடைபெற்றது.  இரண்டு நாள்கள் நடுநிசி 12 மணியளவுக்கும் கூட நடந்தது!


Reservation is non negotiable அதுபற்றிய மறு விவாதத்திற்கே இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு என்பதுதான் பிரகடனம் அதில் நிறைவேறியது. அதற்கு முக்கிய பங்காற்றியவர் ராம்விலாஸ் பஸ்வான், சந்திரஜித் யாதவ், டி.பி.யாதவ், ஜெய்ப்பால் சிங் காஷ்யப், டாக்டர் குழந்தைவேலு போன்றவர்கள் - துணை சபாநாயகர் நண்பர் லட்சுமணன் எம்.பி.யும் கூட!


மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்


பிறகு நல்வாய்ப்பாக வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்ற அமைச்சரவையில் இராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.


இவர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்கு மண்டல் பரிந்துரையை செயல்படுத்த வைப்பதில் முக்கிய செயல் ஊக்கியாக அமைந்தார்!


வி.பி.சிங்கைப் பாராட்டி திராவிடர் கழம் ஒருபுறம்;  தி.மு.க., கலைஞர் முயற்சிகள் மறுபுறம் என்றெல்லாம் அழுத்தமும் கொடுக்கப்பட்டது. தென்னாட்டிலும், வடபுலத் திலும் திராவிடர் கழகம் 4 மாநாடுகளையும், 16 தொடர் போராட்டங்களையும் நடத்தியது. இதில் பெரும்பாலான வடபுல நிகழ்ச்சிகளில் நண்பர் பஸ்வான் நமது அழைப்பை ஏற்று கலந்துகொண்டு முழங்கத் தவறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய அமைச்சரானவுடன் சென்னை வந்த நண்பர் பஸ்வான், பெரியார் திடலுக்கு வந்து, பெரியார் நினைவிடம் சென்று, நம்மிடம் நீண்ட நேரம் வழமைபோல் கலந்துரை யாடினார்!


அப்போது நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு - இராம் விலாஸ் பஸ்வானின் செயல் ஆற்றலுக்கும், சமூகநீதி உணர்வுக்கும் எடுத்துக்காட்டான ஒன்றாகும்!


சென்னையில் சிறப்பான பல ஆண்டு அனுபவம் பெற்ற உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த திராவிடர் இயக்க பெரியார் பற்றாளர், உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு அவர் தகுதி படைத்தவர். எப்படியோ தமிழக அரசின் பரிந்துரையில் அவரது பெயர் விடுபட்டு விட்டது. இதை அறிந்தவுடன், பெரியார் திடலுக்கு அவரது வாழ்க்கைக் குறிப்புகளுடன் ((Bio-data)  வரச் சொல்லி, அவர்பற்றி பிரதமருக்குக் கூறி, இவருக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று மற்ற அளவுகோல்படி எல்லாம் சரியாக இருக்கிறது என்றும், நீங்களும், உரியவர்களும் கருதினால் சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு இவருடைய பெயர் பரிசீலிக்கப்பட வேண்டிய முழுத் தகுதி உடைய ஒன்று என்று கூறி, அவரை அறிமுகம் செய்து வைத்த நிலையில், ஆவன செய்வதாகவும், உரியவர்களிடம் தெரிவித்து முயற்சிக்கிறேன் என்றும் சொன்னார்.


அடுத்து சில வாரங்களில், கழக வழக்குஞைர் பெயர் நீதிபதி நியமனப் பட்டியலில் இடம்பெற்று, சமூகநீதி வெற்றி பெற்றது. அவர் பிறகு தனது பணிகளைப் பல ஆண்டுகள் எவ்வித அப்பழுக்கும் இன்றி, ஒரு மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகி, உச்சநீதிமன்றத்திலும் பல ஆண்டுகள் சிறப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்திரைப் பதித்த தீர்ப்புகளை வழங்கியவரானார்! இன்னமும் அமைதியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நேர்மையின் ஆற்றலின் சின்னமாகத் திகழ்கிறார் (இதை அவரே நன்றி மறக்காமல் ஒருமுறை முக்கியமான இடத்தில் குறிப்பிடவும் செய்தார்!).


இராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் வெறும் வாய்ப்பேச்சு வீரரல்ல என்பதற்கு இது எடுத்துக்காட்டு.


இராமாயண எதிர்ப்பு மாநாடு


15.4.1989ல் காரைக்குடியில் நாம் நடத்திய அகில இந்திய ராமாயண எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று முழங்கினார்.


பின்னர் அவர்  வி.பி.சிங் அமைச்சரவையில் தொழிலா ளர் நலத் துறை அமைச்சராகவும், சமூக நலத்துறை அமைச் சராகவும் இருந்தபோதுதான் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா கொண்டாட வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், அதனை மிகச் சிறப்புடன் கொண்டாட பிரதமர் வி.பி.சிங் அவர்களும், அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வானும் கலந்துகொண்டு இந்தியா முழுவதிலுமுள்ள முக்கிய தலைவர்கள், பல்துறை அறிஞர்கள், விற்பன்னர்கள் கொண்ட ஒரு நூற்றாண்டுக் குழுவை அமைத்து அதன் முதல் கூட்டத்தை புதுடில்லி பார்லிமெண்ட் அனெக்ஸ் (Annex)  கட்டடத்தில் பிரதமர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர்.


அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாக்குழு


.com/img/b/R29vZ2xl/AVvXsEj1jx5TlfqmgyKTtHtoY1z2DjXJQYUmsCXUKfn-5niNIqjituJOv1cIrSPQR7CyKNqcySfTlttEEfEiVEFzai9y8yg-JY-u08kyvdkpWP1GiOX2SIqPb67BKeqSfa_iGwoL_2ePOaFR46g/


அக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து அப்போது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராக இருந்த திரு.ஏ.பத்மநாபன் அய்.ஏ.எஸ்.,  ‘விடுதலை’ ஆசிரியர், திராவிடர் கழக பொதுச் செயலாளர் என்ற முறையில் நான், இசைஞானி இளையராஜா, இந்து ஆசிரியர் ராம் ஆகியோர் இடம்பெற்றோம். எதிர்க் கட்சித் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஓர் உறுப்பினராகப் பங்கேற்றுள்ளார்.  அக்கமிட்டியின் துணைத் தலைவர் இராம்விலாஸ் பஸ்வானுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையாடினோம் - சிறப்பாக நடத்த திட்டமிட்டோம்.  (21.6.1990)


.com/img/b/R29vZ2xl/AVvXsEhjQAJBBw_ewWmozlv-GE9ec_3s_uaZpDxmpIiLaSsZGn-GKpR3HOQRdwxQInvZjTG-1Th87L1pQytKK0mKxEwGxSskqrmzYuFWLy2Vp8sxh6rHjXkBsbGMDMSBjBmmtENQc5kH34LvxZs/


(அக்கூட்டத்தில்தான் இடைவேளையில் என்னிடம் வந்து, என்னை தனியே ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, ராஜீவ் காந்தி ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி கலந்துரை யாடினார். சில அரிய தகவல்களையும் கூறினார்).


பிறகு அதில் சில தனிக் குழுக்கள் நலத்துறை அமைச்சகத் தால் பஸ்வான் அவர்களால் அமைக்கப்பட்டன. என்னை அம்பேத்கர் எழுத்துப் பேச்சு பற்றி வெளியீடுகளைக் கொண்டு வரும் துணைக் குழுவுக்குத் தலைவராகவும் நியமித்தார். (பிறகு ஆட்சி மாற்றம் காரணமாக, அது செயல்பட முடியவில்லை).


மத்திய அமைச்சராக அவர் இருந்தபோது 13.5.1990 அன்று பெரியார் திடலில் ஒரு நிகழ்ச்சி - தலித் சேனா சார்பில் பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட் நண்பர் சந்திரகேசன் அவர்களது சீரிய ஏற்பாட்டில் நடந்தது. நான் பேசியபோது, ‘‘துரோணாச் சாரியார் விருது’’ என்ற பெயரை ‘‘ஏகலைவன் விருது’’ என்று மாற்ற முயற்சிகள் எடுக்குமாறு வைத்த யோசனையை ஏற்று, விரைவில் முயற்சி எடுக்கிறேன் என்று ஆமோதித்து வரவேற்று உரையாற்றினார் அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான்!


28.12.1992இல் திருச்சியில் உள்ள நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் புதிய கட்டடத்தை பஸ்வான் தலைமையில், வி.பி.சிங் (இருவருமே பதவியில் இல்லாதபோது), திறக்கும்படி ஏற்பாடு செய்தோம்.  மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர் என்பதும் மறக்க முடியாத நிகழ்வு ஆகும்! அதில் நம் குழந்தைகள் இல்லம் அய்யா, அம்மாவின் காலத்தில் எப்படி உருவாக்கப்பட்டு நடைபெற்று வந்தது என்பதையும், நம் காலத்தில் எப்படி தொடர்ந்து சிறப்பாக நடக்கிறது என்பதையும் கேட்டு மகிழ்ந்து பேருவகை அடைந்தார். இப்படி பல நினைவுகள் நிழலாடுகின்றன!


அதன்பிறகு வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசிலும் இடம்பெற்றார். எனினும், எந்த நிலையிலும் எங்களது கொள்கைப்பூர்வ நட்பு மாறாத ஒன்றாகும்! அரசியல் நிலைப்பாடுகள் மாறினாலும்கூட, அவர் கொள்கைகளை மாற்றிக் கொண்டவரல்ல. நம்மோடும், திராவிடர் இயக்கத்தோடும், கலைஞரோடும் கடைசிவரை நட்புறவோடு திகழ்ந்த தனிப்பெரும் பண்புக்குச்  சொந்தக்காரர் அவர்.


இனப்படுகொலை எதிர்ப்பாளர்


ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைக்கெதிரான குரலை எப்போதும் உயர்த்தத் தவறாதவர். ஈழத் தமிழர் உரிமைக்காக பல்வேறு காலகட்டங்களில் நாம் நடத்திய நிகழ்வுகளிலும் பங்கேற்றவர்.


சென்னை வரும்போதெல்லாம் நம்மைச் சந்திப்பார். கலைஞரைத் தவறாமல் பார்ப்பார்.  ஒருமுறை நான் அவரைச் சந்திக்கவில்லை. அப்போது அவர் உணவுத் துறை அமைச்சராக, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். எனது உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டோடு இருந்தேன். இதை விசாரித்து அறிந்து விமான நிலையம் செல்லும்முன் ஒரு கூடை பழத்துடன் நண்பர் சந்திரகேசனுடன் அடையாறு இல்லத்திற்கே வந்து, உடல் நலம் விசாரித்து, நேரே மீனம்பாக்கம் சென்றார்!


இரண்டாம் முறை மோடி அரசில் இடம்பெற்ற பிறகு, ஒரு நாள் அவசரமாக ஆய்வுக் கூட்டத்திற்கு சென்னைக்கு வந்து திரும்பும்போது, இரவு 11 மணிக்கு விமானம் நிலைய லவுஞ்சிலிருந்து என்னிடம் தொலைப்பேசிமூலம் நலம் விசாரித்து விடைபெற்றார்!


அவரது சகோதரர் மறைந்த போது, அவருடன் தொலைப்பேசியில் வெகுநேரம் பேசி ஆறுதல் சொன்ன நிகழ்வுதான் கடைசி வாய்ப்பு.


சில வாரங்களுக்குமுன் நண்பர் சந்திரகேசன் அவர்களது மகன், ஒரு தனி எண்ணைத் தந்து, உடல்நலம் குன்றி மன அழுத்தத்துடன் இருக்கும் அவருடன் பேசுமாறு என்னிடம் கூற, உடன் (அவர் மறைவதற்கு இரண்டு வாரங்களுக்குமுன்) அவரது செயலாளர்மூலம் முயற்சித் தேன். அநேகமாக அது செப்டம்பர் முதல் வாரமாக இருக்கலாம். இருமுனைகளிலும் இணைப்பு சரியாக கிடைக்கவே இல்லை.


அதன் பிறகு, மருத்துவமனையில் அவர் சேர்ந்தபோது, கவலையோடு, அவர் உடல்நலம் பெற்றுத் திரும்ப விழைந்தோம். இயற்கை தனது கோணல் புத்தியைக் காட்டி, அவரை  நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.


வடபுலத்து போர்த் தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக மறைந்த நிலையில், இன்று நாம் நிராயுதபாணிபோல் ஆகிவிட்டோம் என்ற கவலை நம்மை வாட்டினாலும், அவர்கள் காட்டிய வீரமும், தீரமும் நம்மை சோர்விழக்கச் செய்யாது பயணிக்கவே செய்யும்!


வாழ்க பஸ்வான் - வருக ஜாதியற்ற சமூகம்!


.com/img/b/R29vZ2xl/AVvXsEgJwRlbnlm3uOEzYN9X_8uoEakRDHoDx7BtnnqEwjwFwYcB20WoVp7gGej_O8ZY0x1YUM9kZJ41Im2fplHsJJDIA7Z6EiwTAgSJkiY-1AYSX4tDJClI2ensPpphj5Rf00MXoemTzr6NuOw/