உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவு
சென்னை, ஜூன் 20- தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொதுப்பெயர்களைச் சூட்டவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- விடுதலை நாளேடு,20.6.25
சென்னை, ஜூன் 20- தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொதுப்பெயர்களைச் சூட்டவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- விடுதலை நாளேடு,20.6.25
சென்னை, ஜூன் 26 தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டி யின்றி மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அரசு பணிகளில் பதவி உயர்வின்போது, பணியிட மாறுதலின்போது மாற்றுத்திறனாளி களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படும். அரசால் கண்டறியப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும். இதில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம், பெருமூளை வாதம், தசைநார் சிதைவு, அமில திரவம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீதம், ஆட்டிம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீதம், அனைத்து மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு ஒரு சதவீதம் என மொத்தம் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு,26.6.25
உச்சநீதிமன்ற பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடுக்கு
வழி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் ஆணை வரவேற்கத்தக்கது!
உயர்நீதிமன்றங்களிலும் இம்முறை இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்!
எஸ்.சி., எஸ்.டி.,க்கு அளிக்கப்பட்டதைபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்
உச்ச, உயர்நீதிமன்றங்களிலும் அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு அவசியம் தேவை!
தமிழர் தலைவர் ஆசிரியரின் சமூகநீதிக்கான அறிக்கை
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது; இதில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்யவேண்டும்; அதேபோல, உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும்; இதற்காக சமூகநீதி அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமூகநீதி பாய வேண்டிய முக்கியமான தளங்களில் முதன்மையானது உச்சநீதிமன்றம்; அதற்கடுத்தவை உயர்நீதிமன்றங்கள்.
நீதிமன்றங்களிலும்
இட ஒதுக்கீடு!
நாமும் (திராவிடர் கழகம், தி.மு.க. போன்ற திராவிட இயக்கம்), முற்போக்கு கட்சிகளும், அமைப்புகளும், ராகுல் காந்தியின் முக்கிய பொறுப்பில் இயங்கும் இன்றைய இந்திய தேசிய காங்கிரசும், இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் இயக்கங்களும் சமூகநீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது – சற்று காலந்தாழ்த்தியாவது – பலன் அளித்து வருகிறது!
மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் சட்டங்களைச் ‘செல்லும் அல்லது செல்லாது’ என்று தீர்ப்ப ளிக்கும் மேல்நிலையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் உள்ளன!
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் முக்கியம்!
அங்கே பொறுப்பேற்கும் நீதிபதிகள் நிய மனங்களில் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற சமூகநீதி அடிப்படையிலும், பல நாள் பட்டினியால் வாடியவர்களான ‘பசியேப்பக்கா ரர்களுக்கு’ முன்னுரிமை, அஜீரணம் ஆகும்வரை ஏற்கெனவே விருந்தில் வயிறு முட்ட உண்டவர்களுக்கு அடுத்த வரிசை என்ற அடிப்படையிலும்தான் நியமனங்கள் அமையவேண்டும்.
தந்தை பெரியார், திராவிடர் இயக்கத்தின் அடிநாதம் இதுவே ஆகும்!
இந்தத் தத்துவம் – டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அடிப்படை உரிமைகள் பகுதியில் ஒடுக்கப்பட்டோரை நியமனம் செய்யும்போது ‘Adequately’ என்ற சொல்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றவர்களோடு சமப்படுத்தும்வரை!
இலத்தீன் மூலச் சொல் Adequatus என்பதன் ஆங்கிலச் சொல்லான Adequate என்ற சொல்லின் பொருள் ‘Till it is equalized’ – ‘மற்றவர்களோடு சமப்படுத்தும் வகையில் அமையவேண்டும்’ என்பதுதான்.
நீதிபதிகள் நியமனங்களுக்குப் பரிந்து ரைக்கும் கொலிஜியத்தில் (Collegium) சமூகநீதி சில ஆண்டுகளுக்கு முன்தான் உச்சநீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பிருந்துதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொள்கை அளவில் வெளிப்படையாகவே ஏற்கப்பட்டது. (எடுத்துக்காட்டு, ஜஸ்டிஸ் மகாதேவன் அவர்களது நியமனப் பரிந்துரை).
வரவேற்கத்தக்கது!
இப்போது தலைமை நீதிபதியாகியுள்ள ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்கள், உச்சநீதி மன்றப் பணி நியம னங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தி ருப்பதை நாட்டின் சமூகநீதிப் போராளிகளின் சார்பாக வரவேற்கிறோம்.
ஆனால், இதில், OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று விரிவுபடுத்தப்படுவதும் அவசியமாகும்.
மாண்பமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் இதனை உடனடியாகப் பரிசீலித்து ஆணை வழங்குவது அவசியமாகும்.
நீதிபதிகள் நியமனத்தில் இக்கொள்கையை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அது செயலுக்கும் வந்துவிட்ட பிறகு, உச்சநீதிமன்றப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோ ருக்கும் அதைத் தருவது நியாயம்தானே!
எனவே, மாண்பமை தலைமை நீதிபதி அவர்கள், பணி நியமனத் தொடர்ச்சியில் விட்டுப் போனதையும் இணைத்தால், சமூகநீதி அனைவருக்கும் கிடைத்த வரலாறு முழுமை அடையும்.
நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு – பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேவை!
மற்றொரு முக்கிய வேண்டுகோள் – உச்ச நீதிமன்றப் பணி நியமனங்களில் பின்பற்றப்படும் இதே நடைமுறை உயர்நீதிமன்றங்களிலும் பின்பற்றப்படல் வேண்டும்.
உயர்நீதிமன்றப் பணி நியமனங்களில் சமூகநீதி பின்பற்றப்படல் முக்கியமானதாகும். இதுவரை இருப்பதாகத் தெரியவில்லை.
சமூகநீதி அமைப்புகள், இயக்கங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து, ஓரணியில் நின்று இந்த உரிமைக்குக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்.
முதலில் ‘‘கணக்குத் திறந்தது’’போல ஒரு புதிய அத்தியாயத்தினைத் தொடங்கிய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்களின் உத்தரவு சமூகநீதிக்கான அமைதிப் புரட்சியாகும்! அவருக்கு நமது வாழ்த்துகளும், நன்றியும்!
அனைவரும் ஒருமித்து குரல் தருவதும், அவசரம், அவசியமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.7.2025
விடுதலை நாளேடு, July 4, 2025
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தமது நெஞ்சம் நிறைந்த பாராட்டினையும், நன்றியையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆணை பிறப்பித்ததை வரவேற்று நேற்று (4.7.2025) ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டிருந்தோம்.
OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு விரிவுப்படுத்த வேண்டியது அவசரம், அவசியம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். நமது கோரிக்கைக்கு செவி சாய்த்ததுபோல் இன்று (5.7.2025)) காலை அந்த நல்ல செய்தி வெளிவந்துவிட்டது. ‘பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்ற ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், மேனாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்ற மேலதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கான 1961 ஆண்டின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பணி சார்ந்த விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் சார்ந்த விவரங்கள் அடங்கிய பட்டியலில் முறைப்படி திருத்தம் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜூலை 3 ஆம் நாள் கையொப்பமிட்டு விதி எண்.4A–வில் திருத்தத்தை அங்கீகரித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் விதி எண்.146/பிரிவு 2–இன்படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விதி 4A–வின்படி- “பல்வேறு பதவிகளுக்கான நேரடி நியமனங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. அவ்வப்போது ஒன்றிய அரசு வெளியிடும் அறிவிப்புகள், அறிக்கைகள், அரசாணைகள் மட்டும் விதிமுறைகளுக்கு ஏற்றபடி இது பின்பற்றப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பற்றிய விவரங்கள், இன்ன பிற திருத்தங்கள், நிபந்தனைகள் போன்றவற்றை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவ்வப்போது அறிவிக்கும்போது அவற்றுக்கேற்ப மேற்கண்ட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். பணி நியமனங்களின்போது மேற்கண்ட பிரிவினர் அனைவரும் ஒதுக்கீடு பெறுவது உறுதி செய்யப்படுகிறது.”
இவ்வாறு திருத்தப்பட்ட விதி எண்.4A–வில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணையை பிறப்பித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் பி.ஆர்.கவாய் அவர்களுக்கு, நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
5.7.2025
சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தாக்கல் செய்யப் பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.4.2025) பதிலளித்து பேசினார். அப்போது, தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்கிற சொல் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-ஆவது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். மேனாள் முதலமைச்சர் கலைஞர், ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கூறுவார். ஆனால் அவர் தற்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.
தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் தமிழ்நாடு அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புவனேசுவர், நவ.23 பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்கு தல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி உள்ளார். ஒடிசாவில் பழங்குடியினரின் நலனுக்காக மோகன் சரண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பெருமை பேசினர்.
ஆனால் ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஒடிசாவின் லங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் அபய் பக் எனும் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குச் சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி பயிர்களை நாசம் செய்து இருக்கிறார்.
இதைக் கண்டித்தும், அபய் பக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இளம்பெண்ணும், அவரது உறவி னர்க ளும் ஜுராபந்த் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் நவ.19ஆம் தேதி அன்று வயலை நாசப்படுத்திய ஜாதி வெறிக் குண்டர்களைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளம்பெண் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அபய் பக் இளம்பெண்மீது தாக்குதல் நடத்தி, மானபங்கம் செய்தது மட்டுமல்லாமல் ஆபாசமான வார்த்தைகளால் ஜாதிய ரீதியாக திட்டியிருக்கிறார்.
தனது மகளை மீட்க வந்த இளம்பெண்ணின் தாயின் கழுத்தை பிடித்து நெரித்து அபய் பக் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் மனித மலத்தை எடுத்து இளம் பெண்ணின் முகம் முழுவதும் பூசி, அவரது வாயிலும் திணித்திருக்கிறார் அபய் பக்.
இதனையடுத்து இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசா ரணை நடத்துவதாக மட்டுமே தெரி வித்துள்ளனர். ஆனால், இன்னமும் அபய் பக் கைது செய்யப்படவில்லை. இதனால் அபய் பக் பா.ஜ.க.விற்கு நெருக்கமானவராக இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அமராவதி, செப்.20 ஆந்திர அமைச் சரவை கூட்டம் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் அமராவதியில் நேற்று (19.9.2024) நடை பெற்றது.
இதில் சட்டப் பேரவையில், பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் சந்திரபாபு நிறைவேற்றி உள்ளார். மேலும் மதுபான கடைகளை மீண்டும் தனியாருக்கே வழங்கி, தரமான மதுபானங்களை குறைந்த விலைக்கு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
180 மிலி ரூ.99-க்கு தரமானதாக வழங்கிட வேண்டுமெனவும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு விலை இருக்க வேண்டுமெனவும், அதுவும் தரமான மதுபானங்களை மட்டுமே விற்க வேண்டுமெனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜெகன் அரசு, அவரது ‘சாட்சி’ நாளிதழை மட்டுமே கிராம,வார்டு செய லகங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.200 செலுத்தி அரசு சார்பில் வழங்கி வந்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும், சாட்சி நாளிதழ் வழங்குவதை நிறுத்தவும் முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவிட்டார்.
ஆதார் அட்டைபோன்று, மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டையை அரசு தரப்பில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ‘ஸ்டே மீ’ எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உள்துறைக்கு புதிய கார்ப்பரேஷன் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.