பக்கங்கள்

சனி, 16 பிப்ரவரி, 2019

கிரிமிலேயர் என்னும் கிருமியை ஒழிப்போம்







மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 7.8.1990 அன்று பிறப்பித்தார். இதனை எதிர்த்து, தமிழகம், தென் மாநிலங்கள் தவிர்த்து, வட மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. இட ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து உயர்ஜாதியினர் வழக்கு தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தடையை பெற்றனர்.


அடுத்து வந்த பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசில், ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை 25.9.1991-அன்று பிறப்பித்தது. இந்த ஆணையும், உச்ச நீதிமன்ற வழக்கில் சேர்க்கப்பட்டது.


இறுதியாக, இந்த இரு வழக்கிற்கும் சேர்த்து, உச்ச நீதிமன்றம், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு 16.11.1992 அன்று தீர்ப்பினை அளித்தது. வி.பி.சிங் பிறப்பித்த ஆணை செல்லும்; பி.வி.நரசிம்மராவ் பிறப்பித்த பொருளாதார முறையிலான இடஒதுக்கீடு ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.


இத்துடன் நில்லாமல், 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை கண்டறிந்து (கிரீமிலேயர்), அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த ஆணையின்படி, பிற்படுத்தப் பட்டோரில் முன்னேறியவர் பற்றி கண்டறிய, மத்திய அரசு 22.2.1993 அன்று, நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.


பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) யார் யார் என்று பட்டியலிட்டு, குழு தனது அறிக்கையை 10.3.1993 அன்று மத்திய அரசுக்கு அளித்தது.


நிபுணர் குழுவின் அறிக்கையை, மக்களவை-யில் 16.3.1993 அன்றும், மாநிலங்களவையில் 17.3.1993 அன்றும் அரசு வைத்தது. குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்-டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் 8.9.1993 தேதியிட்ட ஆணையின் மூலம் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.



நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையிலான குழு பரிந்துரைத்த கிரிமிலேயர் பட்டியல் என்ன?


நிபுணர் குழு தனது பரிந்துரையில் கீழ்காணும் பதவி வகிப்பவர்களை, ஆறு பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் கிரிமிலேயர் என பரிந்துரைத்தது.


1. அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள பதவிகள்:


குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், மத்திய, மாநில அரசு சர்வீஸ் கமிசன் ஆணையர்கள், மத்திய தணிக்கைத் துறை தலைவர் உள்ளிட்ட பதவிகள். இதில், கவர்னர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கிடையாது.


2. சேவைத் துறை:


மத்திய, மாநில அரசில், குரூப் ஏ பதவிகள்


கணவன்  மனைவி இருவரும் குரூப் பி பதவிகள்


பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு, மத்திய அரசுக்கு ஈடான பதவி எது என கண்டறியும்வரை, வருமான* அடிப்படையில்.


3. ராணுவத்தில் கலோனல் பதவியில் உள்ளவர்கள்


4. வணிகர்கள், தொழில் சார்ந்த பிரிவினர், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில்முறை நிர்வாகத்தவர்கள்.


5. சொத்து வைத்திருப்போர்


6. ஆண்டு வருமானம்* ரூ.1 லட்சம் உள்ளவர்கள் மற்றும் செல்வம் வைத்திருப்போர்


(*வருமானம் என்பதில், மாதச் சம்பள வருமானமும், விவசாய வருமானமும் விலக்கு அளிக்கப்பட்டது)


மத்திய அரசின் ஆணை 8.9.1993-இன் படி, மேற்கொண்ட பட்டியலில் உள்ளோர், கிரீமிலேயர் என அறிவிக்கப்பட்டு, அவர்களது பிள்ளைகளுக்கு, ஓபிசி (பிற்படுத்தப்பட்டோர்) சான்றிதழ் கிடையாது. ஏனையோர்க்கு ஓபிசி சான்றிதழ் பெற வழிவகை செய்தது. இந்த ஆணையின் அடிப்படையில் 8.9.1993 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் பணிகளில் சேர்ந்திட ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பெரும்பிரிவினர் இந்த ஆணையின் காரணமாக பாதிக்கப்பட்டனர்.


இந்த நிலையில், 8.9.1993 அரசின் ஆணைக்கு, விளக்கம் அளிக்கிறோம் என்ற பெயரில், மத்திய பணியாளர் நல அமைச்சகம், 14.10.2004 அன்று ஒரு விளக்க ஆணையை பிறப்பித்தது. இதில், பொதுத்துறையில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் பற்றி குழப்பமான விளக்கத்தை அளித்தது.


மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. (குடிமைப்பணி தேர்வு) நடத்திய தேர்வில் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோர் சிலருக்கு, 2015-ஆம் ஆண்டு பணிக்கான ஆணையை, மத்திய பணியாளர் நலத் துறை வழங்க மறுத்தது. காரணம், அவர்களது பெற்றோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் உள்ளதாலும், அவர்களது மாத வருமானம், நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பை (2015இ-ல் ரூ.6 லட்சம்) மீறுவதாலும், அவர்களுக்கு பணி வழங்க முடியாது என கூறியது.


ஆனால், அதே துறையின் 8.9.1993- தேதியிட்ட ஆணையில், வருமான வரம்பை கணக்கிடும்-போது, மாத வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடப்-பட்டுள்ளதை, அதே துறையே ஏற்க மறுத்தது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டில், தேர்வு பெற்ற 25 பேருக்கு பணி வழங்கப்படவில்லை.


பாதிக்கப்பட்டோர், சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். 12.1.2017 அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு, உடனடியாக பதவி வழங்க வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறைக்கு ஆணையிட்டது. இதே தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றமும், 31.8.2017 அன்று அளித்தது. ஆனால், வழக்கை உச்ச  நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, தடையாணை பெற்றது மத்திய அரசு.


டில்லி உயர் நீதிமன்றத்திலும், பாதிக்கப்-பட்டோர் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு சாதகமாக, 22.3.2018 அன்று தீர்ப்பளித்தது.


ஆனால், இந்த தீர்ப்பையும், மத்திய அரசு ஏற்கவில்லை.


இதனிடையே, 2016, 2017, 2018 ஆண்டுகளில், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கு (ஏறக்குறைய நூறு பேர்), அவர்களது பெற்றோரின் மாதச் சம்பளத்தை கணக்கில் எடுத்து, இன்றளவும் பணி வழங்காமல், மத்திய அரசு சமூக அநீதியை செய்து வருகிறது. தனது தவறான வழிமுறையை நியாயப்படுத்தும் விதமாக, மத்திய பணியாளர் நலத் துறை, 6.10.2017 அன்று ஓர் ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் பெரும்-பான்மையோர், கிரீமிலேயர் என அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.


இதனை எதிர்த்து, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்க கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.  திராவிடர் கழகமும் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. சமூக, அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று கோரிக்கை வைத்துள்ளது.




இந்த கோரிக்கையின் அடிப்படையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடனடியாக அறிக்கை வெளியிட்டதோடு, 9.11.2018 அன்று, கிரீமிலேயர் எனும் கிருமி ஒழிப்பு மாநாட்டையும் நடத்தியுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


தற்போது, பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு, இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட முடிவு செய்து, பொதுமக்கள் கருத்தை அறிந்திட பத்திரிகையில் செய்தியும் வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் 6.10.2017 தேதியிட்ட கிரீமிலேயர் தொடர்பான ஆணை திரும்பப் பெற வேண்டும் என்பது அவசரம்; அவசியம்.


1. அரசியல் அமைப்பு சட்டத்தின் 340-ஆவது பிரிவில் சமூக ரீதியாக, கல்விரீதியாக (Socially and educationally) என்று தான் உள்ளது. அதனைப் பின்பற்றி, முதல் அரசியல் சட்ட திருத்தம் 15(4) கொண்டுவந்த போது, அதே வார்த்தைதான் கையாளப்பட்டது.


2. பொருளாதார அடிப்படையில் என்பதை நாடாளுமன்றம் ஏற்கவில்லை. சில உறுப்பினர்கள், பொருளாதார அளவுகோல் வேண்டும் என்ற நிலையில், நாடாளுமன்றத்தில் 1.6.1951 அன்று  வாக்கெடுப்பு நடந்து 245-5 என்ற வாக்கில் அன்றே தோற்கடிக்கப்பட்டது.


3. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல.


4. முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காகா கலேல்கர் தலைமையில், 30.3.1955 அறிக்கை அளித்தது. அதில் பொருளாதார அளவுகோல் இல்லை.


5. மண்டல் குழு பரிந்துரை 31.12.1980 அன்று அளிக்கப்பட்டது. அதிலும், பொருளாதார அளவுகோல் இல்லை.


6. வசந்தகுமார் கர்னாடகா வழக்கில் (8.5.1985) தீர்ப்பளித்த நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி கூறியதாவது:


பொதுப்போட்டியில், சமூகத்தின் கிரீமிலேயராக உள்ளவர்கள், பல இடங்களை கைப்பற்றுவது தவறு இல்லை என்றால், இட ஒதுக்கீட்டு இடங்களில், அதே போன்று, பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய சிலர் கைப்பற்றுவது எப்படி தவறாகும்? என்று கேட்டார்.


7. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.பி.சாவண்ட் அவர்கள், கிரீமிலேயர் பற்றி கூறுகையில், அரசியலமைப்பில் ஒதுக்கீடு "வகுப்புகளுக்கு" (Classes) வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு (Individuals)  அல்ல.


அரசு நிர்வாகத்தில், இந்த பிரிவுகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது என்று சொன்னார்.


8. சமூகரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்-பட்டோர் யார் என்பதை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க்கு உள்ள பட்டியல் போன்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்-பட வேண்டும். அதுவே, கிரீமிலேயர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும் என மேனாள்  நீதிபதி ஏ.கே.ராஜன் கூறுகிறார்.


9. 24.7.1998 அன்று நாடாளுமன்றத்தில், கிரீமிலேயர் தொடர்பாக, தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உறுப்பினர் ஜி.எம்.பானட்வாலா, இன அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு இருக்குமானால், அதற்கான தீர்வும், இன அடிப்படையில் தான் இருக்கவேண்டும் என அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


கிரீமிலேயர் ஆபத்து!


1992 இல் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றான 16(4) படி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை, அந்நாள் பிரதமர் திரு. வி.பி.சிங் போட்ட ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட (இந்திரா சகானி வழக்கு) வழக்கில் 9 நீதிபதிகள் அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பையொட்டியே பெரிதும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றாலும், இதில் கிரீமிலேயர் (Creamy layer) என்ற வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித் திருப்பது, ஒரு கையால் கொடுத்ததை மறு கையால் பறித்துக் கொள்ளுவது போன்றதொரு அநீதியை ஏற்படுத்தியுள்ளது!


பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வருமானம் அதிகமுள்ள மேல் தட்டினைப் பிரித்து, அவர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராகக் கருதாமல் செய்யும் இந்த தீர்ப்பு அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும் (Unconstitutional)..


உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இதனை எழுப்புவதன் உள்நோக்கமே, இப்படி ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியை வைத்தால், அதனால் காலியாகும் இடங்களை தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் என்பதுதானே!


உயர்ஜாதியினர் அபகரிக்கத் திட்டம்


Carry Forward  என்ற முறை அமலில் இல்லை. அதாவது இந்த ஆண்டு தகுதி உள்ளவர்கள் வராததால், காலியாகும் இடங்களை அப்படியே அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் முறை கிடையாது என்பதால், அது பொதுப் போட்டிக்குச் செல்லும். அதனைத் தாங்களே அபகரிக்கலாம் என்பதால்தானே!


பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்றம், கிரீமிலேயரை அறிமுகப்படுத்துவது ஏன்?


அரசமைப்புச் சட்டத்தில் பொருளாதார அடிப்படைக்கு இடம் இல்லை என்று கூறிவிட்டு இப்படிச் சொன்னதே மிகப் பெரிய தவறு. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இந்த சமுதாயக் கொடுமையை அனுபவித்தறியாதவர் களான அல்லது தங்களுக்கே உரிய உயர்ஜாதி தத்துவத்தின் வியூக அடிப்படையில்தான், தெருக்கதவு வழியாக நுழைக்க முடியாததை, கொல்லைப்புற வழியாக அந்த நான்கு உயர்ஜாதி நீதிபதிகளும் புகுத்தி விட்டார்கள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டு ஆணைகளில் எது செல்லும், எது செல்லாது என்று மட்டும் கூறவேண்டிய வர்கள், எதை எதையோ வழக்குக்குச் சிறிதும் சம்பந்தமில்லாதவற்றை வலிய போய்த் தேடி ஏதோ இட ஒதுக்கீட்டிற்கே இதுதான் கடைசி தீர்ப்பு என்பது போலக் காட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். எருதின் புண் அதனைக் கொத்தும் காக்கைகளுக்கு எப்படித் தெரியும்?


எனவே, மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கையில், கிரீமிலேயர் என்ற காரணம் காட்டி, அவர்கள் வெற்றி பெற்றும் பதவி தராமலிருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதம்; சமூக அநீதியும் ஆகும்!


தேர்வு எழுத அனுமதித்து விட்டு பணி நியமனத்தின்போது குறுக்கிடுவதா?


அவர்கள் தேர்வு எழுது முன்னர், அக்காரணத்தைக் காட்டி, அவர்களது மனுக்களை நிராகரிக்காமல், அவர்களைத் தேர்வு எழுதவிட்டு, அவர்கள் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் _ இப்படி கிரீமிலேயர் _ அதிக வருமானம் உள்ள பெற்றோர்களைக் கொண்டவர்கள் என்று காரணம் காட்டித் தடுப்பது இயற்கை நீதி (Natural Justice) என்பதற்கேகூட விரோதமான ஒன்றாகும்!


இது ஒருபுறமிருக்க, கிரீமிலேயர், கிரீமிலேயர் என்பது நீ சதா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென்றே _ இவர்களை பதவிக்கு வராமல் தடுக்க வைக்கப்பட்ட கண்ணி வெடிகள் ஆகும்.


இந்திரா சஹானி வழக்கில்  சம்பந்தம் இல்லாமல்..


இந்திரா சஹானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தீர்ப்பு எழுதிய 5 நீதிபதிகளை _ வழக்கிற்கே சிறிதும் சம்பந்தமில்லாத கிரீமிலேயர் என்பதை தனியே, யாரும் கேட்காமலேயே கேள்வியும் நானே பதிலும் நானே என்பதுபோல வலிய புகுத்தப்பட்டது தானே இந்தக் கிரீமிலேயர்?


பொருளாதார அளவுகோல் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்த அன்றைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் முடிவு செல்லாது என்று தெளிவாக அதே தீர்ப்பில் கூறி விட்டு கொல்லைப்புற வழியாகப் புகுத்தல் போல, இந்த கிரீமிலேயர் நுழைக்கப்படுவது ஏன்? ஏன்?


கிரீமிலேயர் ஆதரவாளர்களுக்குச் சில கேள்விகள்


கிரீமிலேயர் என்று வற்புறுத்துவோர், அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகட்டும், ஆதிக்க ஜாதியாய் இருந்து கொண்டு, ஊடகங்களை தங்களது அஸ்திரங்களாக ஆக்கி மற்றவர்கள்மீது எய்தி இன்புறும் எவராயினும், அவர்களை நோக்கி சில நியாயமான கேள்விகளை முன் வைக்கிறோம். அவர்கள் இந்த கிரீமிலேயர் பற்றி பதில் கூறி விளக்க வேண்டும்.


இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட _ பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றிலாவது கிரீமிலேயர் (பொருளாதார அடிப்படை) கூறப்பட்டுள்ளதா? வற்புறுத்தப்பட்டுள்ளதா?


மண்டல் அறிக்கையில் பொருளாதார அளவுகோல் உண்டா?


மண்டல் கமிஷன் என்ற இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனின் பரிந்துரைகளில் ஏதாவது ஒன்றிலாவது கிரீமிலேயர் என்ற சொற்றொடரோ, கருத்துரையோ, பரிந்துரையோ உள்ளதா?


சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தலைமையிலான அரசு தனது (மத்திய) அரசு சார்பில் செயல்படுத்திய ஆணை (Official Memorandum) யிலாவது இந்த கிரீமிலேயர் மூலம் வடிகட்டல் நடத்தப்பட்ட பிறகே, நியமனம் என்று கூறப்பட்டதா?


அரசமைப்புச் சட்டத்தில் தான் உண்டா?


அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் 1951இல் (First Amendment)  பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் போன்றவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப் பட்டதில், Socially Educationally என்ற சொற்றொடர் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்களை அடையாளப்படுத்தப் பயன் படுத்தப்பட்டன; 'Econamically' என்பது நீண்ட விவாதத்திற்குப் பின், அதில் சேர்க்க மறுக்கப்பட்டது என்பதும் உண்மை அல்லவா?


மேல் அடுக்கான திறந்த _ பொதுப் போட்டி _ தொகுதிக்கும் கிரீமிலேயர் இல்லை.


அடியில் உள்ள S.C., S.T., என்ற தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கான தொகுதியிலும் கிரீமிலேயர் இல்லை. அப்படியிருக்க கிரீமிலேயர் என்ற மறைமுகமாக பொருளாதார அளவுகோல் ஏன் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு மட்டும் அடிப்படையாக இருக்க வேண்டும்? இப்படி நாம் கேட்பதனால் அவர்களுக்கும் கிரீமிலேயர் வேண்டும் என்பது அல்ல. யாருக்கும் கூடாது என்பதே!


52 சதவீத மக்களுக்கு 27 சதவீதம் தானே!


பிற்படுத்தப்பட்டோரில் உள்ள _ மண்டல் பரிந்துரைப்படி _ 52 விழுக்காட்டில், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 27சதவிகிதம் தானே. அதாவது பாதி அளவுதான்! இதிலும் கிரீமிலேயர் என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம்? இது சமூகநீதிக்கு விரோத மானதல்லவா. அது மட்டுமல்ல. 27 சதவீதத்திலும் இதுவரை 12 சதவீதத்துக்கு மேல் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலை! பிற்படுத்தப்பட்டோரில் உள்ள வசதி படைத்தோரை இந்த இடஒதுக்கீடுகளை அனுபவிக்காமல் தடுக்கவே, பிற்படுத்தப்-பட்டோரில் உள்ள ஏழைகளைக் காப்பாற்றவே இந்த வடிகட்டல் என்பது அத்தரப்பு வாதமானால், நாம் ஒன்றைக்  கேட்கிறோம். பதில் கூறட்டும்!


எந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்  பாதிக்கப்பட்டு, ஆட்சியாளரிடமோ, நீதிமன்றங்களிடமோ முறையிட்டு, அதன்பின் ஆட்சியாளரோ, நீதிமன்றங்களோ ஆணையிட்டு, புள்ளி விவரப்படி மேல் தட்டு வர்க்கத்தினரே அத்தனை இடங்களையும் கபளீகரம் செய்து விட்டனர் என்று கண்டறியப்பட்டதனால், இப்படி கிரீமிலேயர் அளவுகோல் புகுத்தப்பட்டதா? இல்லையே!


தேசிய பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்தின் நன்முயற்சி


இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது _ வற்புறுத்தியதுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. (இந்த ஆணையத்திற்குச் சட்ட ரீதியான அந்தஸ்து  _ இதுவரை கொடுக்கப்படாததும் ஓர வஞ்சனை, பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவா?)


ஆண்டுக்கு ஆண்டு வருமானம் கூடுவதும், குறைவதும் உண்டு. இது சரியான அளவுகோல் ஆகாது என்ற காரணத்தால்தான், அரசியல் சட்டப்பிரிவு, 1951இல் ஏற்பட்ட நாடளுமன்றக் குழு விவாதம் இவைகளில் எல்லாம் 'Econamically' என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட்டது; ஏனெனில் அது குழப்பம் உருவாக்கக் கூடியது. நிலையானவற்றை அளவுகோலாகக் கொள்வதுதானே அறிவுடைமை! மாறி மாறி வரும் நிலையற்றதை அளவுகோலாகக் கொள்வது அறிவுடைமையா?


ஆளுவோர் சிந்திக்கட்டும். கிரீமிலேயர் முறை _ அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்ற ஓர வஞ்சனை ஒழியட்டும் _ அணி திரள்வீர்! 


 



குழப்பம் தரும் கிரீமிலேயர் அளவுகள்!

மத்திய அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு முழுமையானதாக இல்லை. ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளவர்கள் கிரீமிலேயர்களாக, அதாவது வசதி படைத்தவர்களாக, கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இந்த அநீதி ஒருபுறமிருக்க, கிரீமிலேயர்களை கணக்கிடுவதில் மத்திய அரசு இழைக்கும் பெரும் அநீதி காரணமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகளின்படி மத்திய, மாநில அரசுகளில் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. மத்திய, மாநில அரசுகளின் சி மற்றும் டி பிரிவு பணிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கிடப்படாது; அதேநேரத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படும்.
அதன்படி பார்த்தால், சி மற்றும் டி தொகுதி பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பெற்றோர் இருவரும் இப்பணிகளில் இருந்து ரூ.1.30 லட்சம் மாத வருவாய் ஈட்டினாலும் கூட அவர்களின் வாரிசுகள் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள்; ஆனால், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பெற்றோர் இருவரும் தலா ரூ.35,000 மாத வருவாய் ஈட்டினாலே அவர்களின் வாரிசுகள் கிரிமீலேயராகக் கருதப்பட்டு ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில் தான் 2017-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 பேருக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட முன்னணி வரிசை பணிகள் மறுக்கப்பட்டுள்ளன. இவர்களின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதால் அவர்களின் வருமானமும் கணக்கில் சேர்க்கப்பட்டு, 29 பேரும் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டிருக்கிறது. சமூக நீதியை இதைவிடக் கொடூரமாக யாராலும் படுகொலை செய்ய முடியாது.

-  உண்மை இதழ், 16-30.11.18

வியாழன், 14 பிப்ரவரி, 2019

இட ஒதுக்கீட்டுக்கு பெரியார் தான் காரணம்!

கட்சி உறுப்பினர்களுக்காக கட்டுரை எழுதாமல் இளைய தலைமுறைக்காக உண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே !  பகுதி -1
................................................................

இட ஒதுக்கீட்டுக்கு பெரியார் தான் காரணமா என்று தலைப்பிட்டு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் .  அந்தக் கட்டுரையில் " பிராமணரல்லாத மண்ணின் மக்களின் கோரிக்கையை வெள்ளை அதிகாரிகள் பரிவுடன் பார்த்தனர்" என்று நம்மைச் சுரண்ட வந்த ஆங்கிலேயரை உயர்த்தியும் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரை விலக்கியும்  இந்த கட்டுரையை முன்வைக்கிறார் .

நம்மைச் சுரண்ட வந்த வெள்ளை அதிகாரிகள் மீது இவ்வளவு கரிசனம் தோழர் பெ.ம வுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

ஏகாதிபத்தியம் தன்னுடைய சுரண்டல் நலன் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இப்படியான சலுகைகளை  வழங்கவே செய்யும்.

1857 சிப்பாய் புரட்சிக்குப் பின்னர் இந்தியாவிலுள்ள அதிகாரங்களில் இந்தியாவிலுள்ள அனைத்து சமூகத்தவர் அனைவரையும்  பிரதிநிதித்துவப் படுத்துவதன் மூலமே தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று ஆங்கிலேய அரசு முடிவு செய்தது .இதனடிப்படையிலேயே அதிகாரத்தைப் பரவலாக்கியது.    இது சுரண்டல் நலன் கொண்டதே தவிர மக்கள் நலனில் அக்கறையோடு செய்வதில்லை இதை இவ்வளவு வியந்து பாராட்டத் தேவையில்லை.

உண்மையில் ஆங்கிலேயர்கள் இப்படியான அறிவிப்பை கொடுப்பதற்கு மகாத்மா ஜோதிராவ் புலே , அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனிவாசனார் நீதிக்கட்சி தலைவர்கள்  மிக முக்கியமான பங்கை ஆற்றினார்கள் .

1891 ஆம் ஆண்டில் "விகிதாச்சார உரிமை" என்ற சமூகநீதிக் கருத்தை  பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் முதலில் முன்வைத்தார். 1891 டிசம்பர் 1ஆம் தேதி உதகமண்டலத்தில், அயோத்திதாசர் பண்டிதர் கூட்டிய திராவிட மகாஜன மாநாட்டில் போடப்பட்ட முதல் தீர்மானமே, கிராம அலுவலர் உட்படப் பல அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதன் மூலம், அவர்களின் பொருளாதார வாழ்வை உயர்த்துமாறு கோருகிற இடஒதுக்கீட்டுத் தீர்மானமாகும். அதன் அடிப்படையில் தொடர்ந்துப் போராடி, இரண்டு இடஒதுக்கீட்டு ஆணைகளையும் பண்டிதர் அயோத்திதாசர் பெற்றார் என்பது தான் வரலாறு .

ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியாவெங்கும் போராட்டம் நடைபெற்ற காலங்களில் அதை மட்டுப்படுத்துவதற்கு இதைவிட்டால் ஆங்கிலேய அரசுக்கு வேறு வழியில்லை இந்தப் பின்னணியை ஆங்கிலேய அதிகாரிகள் பரிவுடன் செய்ததாக  தோழர் மணியரசன் அவர்களால் எப்படித்தான் எழுத முடிகிறதோ.
சரி விசயத்திற்கு வருவோம்.

இந்தக் கட்டுரை வாயிலாக :
1. பெரியாருக்கு தாய் கட்சி நீதிக் கட்சி யல்ல காங்கிரஸ் கட்சிதான்.
2. காங்கிரஸில் சேர்ந்த பெரியார்  காந்தியாகவே  வாழ்ந்தார்
3. ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி இட ஒதுக்கீட்டு ஆணை போட்டதே தவிர அதைச் செயல்படுத்தவில்லை
3. பெரியாரிய திராவிடவாதிகள்   இட ஒதுக்கீட்டு விசயத்தில் காங்கிரஸ்காரரான  முத்தையா அவர்கள் பங்களிப்பை  மறைத்து விட்டார்கள்  
5. முதல் சட்டத் திருத்தம் பெரியாரால் ஏற்படவில்லை
6. பெரியார் பிறக்காத போது நடக்காத நிகழ்வுகளுக்கு பெரியாரை காரணமாக்கி உயர்த்தக் கூடாது
- இவை தான் கட்டுரையின் சாராம்சம். இது குறித்து ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்

எழுத்தில் உண்மையை எழுதுதல் என்பது ஒருவகை, எழுத்தில்  உண்மையைத் திரித்து பொய்யாக எழுதுவது இன்னொரு வகை இதில் தோழர்.பெ.ம அவர்கள் புதுவகை. அதாவது உண்மையை மறைத்து பாதி உண்மையை எழுதுவது.

எடுத்துக்காட்டாக  சங்கர் என்பவன் சரவணன் என்பவனை அடித்ததால் சரவணன்  சங்கரை அடித்தான் இது முழு செய்தி. இதில் "சங்கர் சரவணனை அடித்ததால் " என்ற பாதி உண்மையை மறைத்து விட்டு சரவணன்  சங்கரை  அடித்தான் என்று மட்டும் எழுதி சங்கர் செய்த செயலை மறைத்து சரவணனை மட்டும் குற்றவாளியாக்கி விடுவது. இப்படி ஒரு புது வகையைத் தான்  இப்பொழுது தோழர்.பெ.ம அவர்கள் பெரியார் விசயத்தில் கையாண்டிருக்கிறார்.

// தந்தை பெரியார் அவர்களுக்கு நீதிக்கட்சி தாய்க் கட்சி அல்ல  காங்கிரசுதான் //  திராவிடத்தின் தந்தை அந்த தாய் கட்சியிலும் சேராமல் அவரது மொழியில் பார்ப்பன-பனியா கட்சியான காங்கிரஸில் சேர்ந்தார் //  ,   பெரியார் காங்கிரசில் சேர்ந்து மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். காந்தியராகவும் இருந்தார் //    // " 1925 இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்படாததால் அவர் காங்கிரசை விட்டு வெளியேறினார்" //  இது தான் தோழர் பெ.ம வின் பெரியாரைப் பற்றிய கருத்து

  வரலாறு தெரிந்த யாரும் பெரியாருக்கு நீதிக்கட்சிதான் தாய் கட்சி என்று எழுத மாட்டார்கள் , பெரியார் தன்னுடைய அரசியல் தொடக்கத்தை காங்கிரசிலிருந்து தொடங்கியதா கத்தான் எழுதுகிறார்கள் , பேசுகிறார்கள். அது கூட பகுதி உண்மை தான்.

பெரியார் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை காங்கிரசிலிருந்து கூட தொடங்கவில்லை அதற்கு முன்பாக அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய  ஹோம் ரூல் இயக்கத்திலிருந்து தொடங்குகிறார் . தீண்டாமை , மூடப்பழக்கவழக்கங்கள் பெண்ணுரிமை  போன்றவை குறித்து  அன்றைய கட்டத்தில்  ஹோம் ரூல்  இயக்கம்  பேசி வந்ததால் பெரியார் அதனை ஆதரித்தார். அதற்குப் பின்பாக  அவ்வியக்கத்தின்  கொள்கைகள் பெரியாருக்கு உடன்பாடு இல்லாமல் வெளியேறுகிறார்.

அதற்கு அடுத்தபடியாக 1917 இல் பார்ப்பனரல்லாதாருக்கு சட்டசபைகளிலும் உத்தியோகத்திலும் இட ஒதுக்கீட்டை கோரும்  காங்கிரஸ் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாதோர் இணைந்து உருவாக்கிய சென்னை மாகாண சங்கத்தில் போய் இணைகிறார்  .( நீதிக் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டது) . இதன் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து பெரியார் பணியாற்றியுள்ளார் .

அப்படித்தான் இட ஒதுக்கீட்டுக்கான பெரியாரின் குரல் அரசியல் களத்தில் தொடங்குகிறது இப்படித் தொடங்கிய பெரியாரின் குரலை மறைத்துவிட்டுத் தான் காங்கிரசில்  கதராடை அணிந்தார் , கள்ளுக்கடை மறியல் செய்தார் என்று மொன்னைப்படுத்தி தோழர். பெ.ம எழுதுகிறார்.

அதற்கு அடுத்தபடியாக 1919 நவம்பர் இல் தொடங்கப்பட்ட தேசியவாதிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து பணியாற்றுகிறார் இந்த சங்கமும் "  சட்டசபையில் 50 விழுக்காடு பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்"  என்ற கோரிக்கையை முன் வைத்து இருந்தது. இது சேலம் விஜயராகவாச்சாரியார் மற்றும் கோபாலாச்சாரியார் ஆகியோரை முறையே தலைவராகவும் பொதுச் செயலராகவும் கொண்டு செயல்பட்டது .

இங்கு தான் ராஜாஜிக்கும் பெரியாருக்கும் அரசியல் ரீதியான நெருக்கமான உறவு ஏற்படுகிறது

ராஜாஜி சேலம் வரதராஜுலு இருவரின் வற்புறுத்தலின் பேரில் 1920 பெரியார் காங்கிரசில் சேருகிறார் பெரியார் 1920 , 1923 , 1924 லில் ஆகிய ஆண்டுகளில் காங்கிரசின் தமிழ் மாகாணத் தலைவராகவும் 1921 , 1922 , 1925 ஆறு ஆண்டுகளில் செயலாளராகவும் இருந்து 1925 மாநாடு காஞ்சிபுரத்தில்  நடக்கும்போது மாநாட்டில் இருந்து வெளியேறி காங்கிரசை ஒழித்துக்கட்டுவேன் என்று சூளுரைக்கிறார்.

காங்கிரசின் தலைமையில் இருந்த ஆறு ஆண்டுகளும் வகுப்பு வாரி  இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ச்சியாக தீர்மானத்தை முன்மொழிந்து போராடி வந்துள்ளார், பார்ப்பனரல்லாத தலைவர்களை ஒன்று திரட்டினார்

1920ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்து  பெரும்பான்மையை பெற்று நிறைவேற்றியும் தலைவர் சீனிவாச அய்யங்கார் அனுமதிக்க மறுத்துவிட்டார் .

1921 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாகாண மாநாட்டில் இதைக் கொள்கையாக வைத்துக் கொள்ளலாம் தீர்மானம் வேண்டாம் என்று ராஜகோபாலாச்சாரியார்  தந்திரமாகத்  தடுத்துவிட்டார்.

1922 ஆம் ஆண்டு திருப்பூர்  மாகாண மாநாட்டில் கொண்டுவர முயன்று விவாதத்தால் கலவரமாக மாற்ற முயன்ற போது  மனுதர்ம சாஸ்திரத்தையும் ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என பேசினார்.

1923 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டிலும் தீர்மானத்தை முன்மொழிந்த போது கலவரம் மூளுவதாக அறிவித்து  டாக்டர் நாயுடுவும் , ஜார்ஜ் ஜோசப்பும் தலையிட்டு சமாதானம் செய்து விட்டனர்.

1924 இல் திருவண்ணாமலை  மாநில மாநாட்டுக்குத் தலைவர் பெரியார் தான் . வகுப்பு வாரி உரிமைத் தீர்மானத்தை பெரியார் கொண்டு வந்த போது எஸ். சீனிவாச அய்யங்கார் ஆட்களைத் திரட்டி  தடுத்து விட்டார். 

1925-இல் காஞ்சிபுரத்தில் மாநில மாநாடு அந்த மாநாட்டுக்கு   திரு.வி.க. தலைமை தாங்கினார்.    " தேசிய முன்னேற்றத்துக்கு இந்து சமூகத்தாருக்குள் பற்பல
சாதியாருக்குள் பரஸ்பர நம்பிக்கையும் துவேஷமின்மையும்
ஏற்பட வேண்டுமாகையால் ராஜ்ய சபைகளிலும் பொது
ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணர் அல்லாதார்,
தீண்டாதார் எனக் கருதப்படும் இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடுக்கு ஏற்ப தங்கள் தங்கள் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும்" என்று தீர்மானம் கொண்டு வந்தார் பெரியார். அதைத் தலைவர் நிராகரித்தார். இதனால் ஆத்திரங் கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார்.

வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமின்றி தீண்டாமைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

திருவிதாங்கூர் வைக்கம் போராட்டமாக இருக்கட்டும் சேரன்மாதேவி நடந்த குருகுலம் போராட்டமாக இருக்கட்டும் தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களும் பங்கேற்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதாவை காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்கள் எதிர்த்தபோதும் காங்கிரசில் இருந்த பெரியார் அதை ஆதரித்தார்.

இப்படியாக தன்னுடைய அரசியல் தொடக்கம் தொடங்கி காங்கிரசிலிருந்து வெளியேறும் வரை தீண்டாமைக்கு எதிராகவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் எதிராகவும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் பணியாற்றிய தந்தை பெரியார் அவர்களை கையில் பகவத் கீதையோடு வாயில் சிறீராம் உச்சரிப் போடு வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்ட காந்தியைப் போல வாழ்ந்தது போல் "காந்தியராகவே வாழ்ந்தார் "  என்று சுட்டிக் காட்டுவது எந்த வகையில் நேர்மை தோழர்.பெ.ம அவர்களே
(தொடரும்)

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது



புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மனு


'கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற் படுத்தப்பட்டோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, சமீபத்தில், நாடாளுமன்றத்தில் நிறை வேறியது. இதை எதிர்த்து, வங்கலா ஈஸ்வரய்யா என்பவர் உள்ளிட்டோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'இடஒதுக்கீடு அளிப்பதற்கு, பொருளாதார சூழ்நிலையை வரையறையாகக் கருத முடியாது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.

- விடுதலை நாளேடு, 12.2.19

புதன், 6 பிப்ரவரி, 2019

டில்லி - சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரின் எழுச்சியுரை

இடஒதுக்கீடு கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கே! முதலில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது மனுதர்மமே!

உயர்ஜாதியினருக்காக உருவாக்கப்பட்ட


10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லத்தக்கதல்ல''


டில்லி - சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரின் எழுச்சியுரை




புதுடில்லி, பிப்.6 டில்லியில் 5.2.2019 அன்று இடஒதுக்கீடு வழிமுறை - முன்னுள்ள அறை கூவல்கள்'' (Reservation Policy - Challenges Ahead)  எனும் தலைப்பிலான சமூக நீதிக் கருத்தரங்கினை சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றம் (Lawyer’s Forum for Social Justice) ஏற்பாடு செய்திருந்தது.

டில்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள அரசமைப்புச் சட்ட மன்றத்தில், துணை சபாநாயகர் அரங்கில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்க நிகழ்விற்கு சமூகநீதிக்கான வழக் குரைஞர்கள் மன்றத்தின் நிர்வாக அறக்கட்டளையாளரும், உச்சநீதிமன்ற முதுநிலை வழக்குரைஞருமான சுப்பாராவ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் சமூகநீதிக்கான அறைகூவல்கள் பற்றியும், எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், ஆழமான கருத்துச் செறிவுடன் கூடிய உரையினை ஆற்றினார்.

தலைமை தாங்கிய முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ் உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி வழங்குவதில் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அக்கறை அற்ற தன்மை பற்றிய தனது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்


நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சில், சமூக நீதித் தத்துவத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராசர் ஆற்றிய பங்களிப்பின் சிறப்புப்பற்றி  குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்திட தந்தைபெரியார் காரணமாக அமைந்தார். இன்று 'பொருளாதார அடிப்படையில்' அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்புக்குப் புறம்பாக உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (?) 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தினை, ஆணையினை எதிர்த்து திமுக சார்பில் முதன்முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.

து.ராஜா எம்.பி., (சி.பி.அய்.)


நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா பேசும்பொழுது, இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை, கோரிப் பெறவேண்டியதில்லை என எழுச்சியுடன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங் கோவன் உரையாற்றும்பொழுது பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றார். மேலும் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 8 லட்சம் என்பது பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெற பாதகமாகவும், உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியான அணுகு முறைப்பற்றிக் கூறினார்.

தமிழர் தலைவர் உரை




தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமைக்குப் 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி பெற வேண்டியிருந்தது. ஆனால் இன்று உயர்ஜாதியினர் இடஒதுக்கீட்டிற்கு வலுவில்லாத சட்டத்திருத்தத்தினை ஒரு வாரக் காலத்தில் நடைமுறைப்படுத்தியது எப்படி? அடக்குமுறை, ஆதிக்கம் நிறைந்த அரசியல் ஆட்சியாளரான மோடியின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையினையே இது வெளிப்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீட்டைத் தொடங்கியது இன்றைய காலத்தில் அல்ல; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வர்ண அடிப்படையில், ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது மனு - மனுஸ்மிருதி. அந்தப் பாகுபாட்டைக் களைந்திட இன்று கோரப்படுவது நேர்மறை இடஒதுக்கீடு - சரி செய்ய இட ஒதுக்கீடு தொடங்கியது. பாகுபாட்டைத் தொடங்கிய ஆதிக்க மனநிலை இன்றும் ஆட்சியாளரிடம் தொடர்கிறது என்பதற்கு அடையாளம்தான்  103 ஆம் அரசமைப்புச் சட்ட திருத்தமாகும் (2019). பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினருக்குக் கொண்டு வரும் இந்த சட்டத்தை நீதிமன்றத்திலும் சந்திப்போம்; வீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்துப் போராடுவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் கூறினார்.

கருத்தரங்க நிகழ்ச்சியினை கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) ஒருங்கிணைத்துத் தொகுத்தளித்தார்.

நிறைவாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 6.2.19

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு - கூடாது ஏன்?



கோ. கருணாநிதி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 31.1.2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, அரசின் கல்வி நிலையங்களிலும், அரசின் வேலைவாய்ப்பிலும், பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பத்திரிக்கையாளர்களிடம் இக்கூட்டமைப்பின் சார் பில் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி கூறியதாவது:

1. உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு, அரசின் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திட வகைசெய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானதாகும்.

2. இந்திய இந்து சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் சிலர் உயர்ந்தவர்கள், பெரும்பான்மை மக்கள் சூத்தி ரர்கள், தாழ்ந்தவர்கள் என பல நூறு ஆண்டு காலமாக கற்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மறுக்கப் பட்டன. அந்த மக்கள் பல இழிவுகளை சுமந்து வந்தனர்.

3. இவ்வாறு ஜாதியின் அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்பின் அடிப்படையில் சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

4. அதனால் தான், அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5. ஆனால் தற்போது மத்திய அரசின் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று அறிவித்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

6. சமூகரீதியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்குத் தான் இட ஒதுக்கீடு அளிக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டம் இதைத்தான் அனுமதிக்கிறது.

7. பொருளாதார ரீதியில் நலிந்தவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கிட, அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. இப்போது சட்டத்திருத்தம் செய்து விட்டதனாலேயே, அது சட்டப்படி சரி என்று கூற முடியாது. 8. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள், உயர்ஜாதியில் மட்டும் இல்லை. எல்லா ஜாதியிலும் உள்ளார்கள். 9. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் முன்னேற, நலத் திட்டங்கள்தான் தீர்வே தவிர, இட ஒதுக்கீடு அல்ல. அதனால்தான், பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்கள், மலிவாகவும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

10. அரசியல் அமைப்புச் சட்டம் முதல் திருத்தத்தின் போதே, பொருளாதார அளவுகோல் சேர்க்கப்பட வேண்டும் என்ற சில உறுப்பினர்களின் கோரிக்கை, தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

11. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட ஆணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொருளாதார அளவுகோலை மட்டும் வைத்து, இட ஒதுக்கீடு கொடுக்கமுடியாது என ரத்து செய்தனர்.

12. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் குறித்து 2005-ல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சின்கோ கமிசன் தனது பரிந்துரையை ஜூலை 2010-இல் அளித்தது. தனது அறிக்கையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தர முடியாது; நலத் திட்டங்கள் மட்டுமே தர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

13. அரசியல் அமைப்புச் சட்டமும், நீதிமன்றமும், அரசு அமைத்த ஆணையமும், சமூகரீதியாக கல்விரீதியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்குத்தான் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.

14. உயர்ஜாதியில் உள்ள நலிந்தவர்கள் உள்ளிட்ட எவருக்கும், எந்த காலத்திலும், கல்வி உரிமை மறுக்கப்பட வில்லை. எந்த இழிவையும் அவர்கள் சந்திக்கவில்லை. 15. அதுமட்டுமல்ல. அரசின் அனைத்து நிர்வாகத் திலும், உயர்கல்வி நிலையங்களிலும், தங்களின் மக்கள் தொகைக்கு மிக மிக அதிகமான அளவில் பிரதி நிதித்துவம் பெற்றுள்ளார்கள்.

அ. எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் 40 பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்கள் பதவிகளில், உயர்ஜாதியினர் 95 விழுக்காடு உள்ளனர். துணைப் பேராசிரியர் பதவிகளில் 93 விழுக்காடும், உதவி பேராசிரியர் பதவிகளில் 66  விழுக்காடும் உள்ளனர். மீதம் உள்ள நிலைகளில் இட ஒதுக்கீடு உரிமை உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இருக் கின்றனர். குறிப்பாக, பேராசிரியர் 1125 பதவிகளில், துணைப் பேராசிரியர் 2620 பதவிகளில், ஒருவர் கூட பெரும்பான்மை மக்களைக் கொண்ட பிற்படுத்தப் பட்டோர் இல்லை.

ஆ. இதேபோன்று, குரூப் ஏ பதவிகளில், உயர் ஜாதியினர் 70 விழுக்காடு பதவிகளில் உள்ளனர். பொதுத் துறை நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பதவிகளிலும், உயர்ஜாதியினர் 60 விழுக்காட்டிற்கும் மேலே உள்ளனர். உயர்பதவிகளில், 90 விழுக்காடு உள்ளனர்.

16. அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 16 (4)-ன் படி, அரசுத் துறையில் போதிய பிரதிநிதித்துவம் தருவதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியும்.

17. ஆனால், மக்கள் தொகையில் 15 விழுக்காடு உள்ள உயர்ஜாதியினர், ஏற்கனவே அரசின் உயர் பதவிகளில் 70 முதல் 90 விழுக்காடு வரை பிரதி நிதித்துவம் உள்ளபோது, அதில் பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் என்று பிரித்து, மேலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது, சமூக அநீதி மட்டுமல்ல. பாபா சாகிப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கின்ற செயலாகும்.

18. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்ட மல்ல. சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் ஜாதியின் காரணமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அதிகாரத்தில் வழங்கப்படும் பங்கு. 19. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அரசு, அவர்களுக்கு, கல்வி கற்க ஊக்கத்தொகை அளிக்கலாம்; கல்விக் கடன் குறைந்த வட்டியில் தரலாம். அப்படிப்பட்ட திட்டங்களும் அரசு கொண்டு வந்துள்ளது. சிறப்புப் பயிற்சி அளிக்கலாம். ஆனால், இட ஒதுக்கீடு தீர்வு அல்ல. 20. ஏற்கெனவே, தங்களது விகிதாசாரத்திற்கு பன் மடங்கு அதிகமாக (70 விழுக்காட்டிற்கும் மேல்) அதி காரத்தை கையில் வைத்திருக்கும்,உயர்ஜாதியினர்க்கு, குறுக்கு வழியில், மேலும் 10 விழுக்காடு அளிப்பது, சமூக அநீதியாகும்; பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமை பறிக்கும் செயலாகும்.

21.         உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை எந்த ஒரு அரசின் ஆணையமும் தெரிவிக்கவில்லை. அப்பிரிவு மக்கள், போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என்ற புள்ளிவிவரம் எதனையும் மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் சரி, மக்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.

22. மத்திய அரசு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தர உள்ளதாக அரசின் சார்பில் சொல்லப்படுகிறது. இது மக்களை ஏமாற்றுவதற்கும், திசை திருப்புவதற்குமான சொல் தானே தவிர உண்மை அல்ல. 23.              உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரி வினர் என்போர், ஆண்டு வருமானம் ரூ.எட்டு லட்சத் திற்கும் குறைவாக உள்ளோர் அதாவது மாதம் ரு.65000 பெறுபவர், நலிந்த பிரிவில் இட ஒதுக்கீடு பெறலாம். அதேபோன்று, 1000 சதுர அடிக்கு குறைவாக அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளோர், அய்ந்து ஏக்கருக்கும் சற்று குறைவாக நிலம் வைத்திருப்போர் நலிந்த பிரிவில் இட ஒதுக்கீடு பெறலாம். இவர்கள் எல்லாம் ஏழைகளா?

24. மேற்குறிப்பிட்ட அளவுகோல் ஒன்றே, இந்த சட்டம் யாருக்குப் பயன்பட போகிறது என்பதை தெளி வாக்குகிறது. ஒருபுறம், ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் மேல் இருந்தால், வருமான வரி கட்ட வேண்டும் என்று அரசு சொல்லி விட்டு, இன்னொருபுறம், அவர் களை நலிந்த மக்கள் என வரையறுப்பது, கேலிக்கூத்து மட்டுமல்ல. அரசின் நோக்கமே வேறு என்பதை எடுத்துக் காட்டுகிறது.

25.         மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு, பள்ளிகளில் இட ஒதுக்கீடு உள்ளது. புதுடில்லியில் ஆண்டு வருமானம் ரூ.65000-க்கும் குறைவாக உள் ளோர், இந்த இட ஒதுக்கீடு பெறலாம். அதற்கு மேல் இருந்தால் பள்ளியில் சேர முடியாது. ஆனால், தற் போதைய 10% இட ஒதுக்கீடு, மாத வருமானம் ரூ.65000 இருந்தால் பெறலாம். இத்தகைய முரண்பாட்டை உள்ளடக்கி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

26.         மத்திய அரசில் அரசியல் அமைப்புச் சட்டத் தின்படி, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்க்கு இட ஒதுக்கீடு இருந்தும், அது முறையாக நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இப்பிரிவு மக்கள், 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே அரசு பதவிகளில் உள்ளனர். இது குறித்த புள்ளி விவரங்கள் நிறையவே உள்ளன.

27. ஆனால், உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதில், அரசு இவ்வளவு வேகம் காட்டுகிறது. இதனை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

28.         அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சமூக நீதிக் கோட்பாடு தான் முதன்மையாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சமூக நீதிக் கோட்பாட்டை முற்றி லுமாக நீக்கி, பொருளாதார அளவுகோலை உயர்ஜாதி மட்டுமன்றி, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைவருக்கும் பொதுவாக்கி, அதன்மூலம், தொடர்ந்து தங்களின் ஆதிக்கத்தை தளர்த்த விடாமல், உறுதிப்படுத்திக் கொள்ள, எடுக்கப் பட்ட மிகப் பெரிய திட்டமே இந்த சட்டம்.

29. ஆகவே தான், இந்த ஆபத்தை பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் உணர்ந்து, ஒன்றிணைந்து அறவழியில் போராட வேண்டும்; சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்க நினைக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் என்று தெரிவிக்கவே, எங்களது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங் களின் கூட்டமைப்பு இந்த செய்தியாளர் சந்திப்பின் வழியே தெரிவிக்கிறோம்.

30. உயர்ஜாதியினர்க்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்க்கும் அதே வேளையில், இதன் ஆபத்தை உணர்ந்து, சமூக நீதியைக் காப்பாற்றிட, அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என அனைத்து சமூக நீதி அமைப்புகளுக்கும், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்கங்களின் கூட்ட மைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

31. சமூக நீதியில் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து, அனைத்து மாநிலங் களிலும், போராட்டம் நடத்திடவும் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் ஜே.பார்த்தசாரதி - செயல் தலைவர், எம். இளங்கோவன் - பொருளாளர், எம்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் -துணைப் பொதுச் செயலாளர், இராம. வேம்பையன் - அமைப்புச் செயலாளர், செய லாளர்கள் ஏ.ராஜசேகரன், எஸ்.பிரபாகரன், அன்புகுமார் மற்றும் யூனியன் வங்கி கே.சந்திரன் ஆகியோர்  பத்திரிக்கை யாளர் சந்திப்பில் உடன் இருந்தனர்.

-  விடுதலை நாளேடு, 2.2.19