பக்கங்கள்

செவ்வாய், 12 டிசம்பர், 2017

மண்டல் பரிந்துரை அமலாகி 24 ஆண்டுகள் ஓடிய பிறகும் - பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இருந்தும் அதனை அளிக்காமல் வஞ்சிப்பதா? கண்டனம்!

மண்டல் பரிந்துரை அமலாகி 24 ஆண்டுகள் ஓடிய பிறகும் - பிற்படுத்தப்பட்டோருக்கு

27 சதவிகிதம் இருந்தும் அதனை அளிக்காமல் வஞ்சிப்பதா? கண்டனம்!

தென் மாநில சமூகநீதி அமைப்புகளின்

கூட்டமைப்பை உருவாக்குவோம் - போராடுவோம்!

கேரளா கோழிக்கோடு சமூகநீதிக் கருத்தரங்கில்

தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்று முக்கியம் வாய்ந்த அறிவிப்பு



கோழிக்கோடு,டிச.12 ஒடுக்கப்பட்டவர்களுக்காக கல்வி யிலும், வேலைவாய்ப்பிலும் ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்தும் வகையில் தென் மாநிலங்களில் உள்ள சமூகநீதி அமைப்புகளின் கூட்டமைப்பை உருவாக்கி அதன்மூலம் போராடுவோம் என கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் அறிவித்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காமராஜ் நிறுவனத் தின் (Challenges to Social Justice and Secularism) 
41 ஆம் தேசிய மாநாடு நடைபெற்றது.  2017 டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்ற மாநாட்டின் மூன்றாம் நாளில் சமூக நீதிக்கும் மதச்சார்பின்மைக்குமான  அறை கூவல்கள் (சிலீணீறீறீமீஸீரீமீs tஷீ ஷிஷீநீவீணீறீ யிustவீநீமீ ணீஸீபீ ஷிமீநீuறீணீக்ஷீவீsனீ)  எனும் தலைப்பிலான கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி தலைமை வகித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

தமிழர் தலைவரின் தலைமை உரை

காமராஜ் நிறுவனத்தின் 41 ஆம் தேசிய மாநாட்டினை ஒட்டி சமூக நீதி  மற்றும் மதசார்ப்பின்மைக்கான அறை கூவல்கள் எனும் தலைப்பில் சிறப்பானதொரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரான தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மரபினர், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் பெற்று வரும் சமூக நீதியின் வழிமுறையான இடஒதுக்கீடு ஒரே நாளில் கிடைத்துவிடவில்லை.  மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபா பூலே, சாகு மகராஜ், கேரளத்தில் சிறீ நாராயண குரு, தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேற்கொண்ட  கடும் பணிகளால் இன்று இடஒதுக்கீடு முறை, பின்பற்றப்பட்டு வருகிறது.  ஒருபக்கம் கடைப்பிடிக்கப்படுகின்ற இடஒதுக்கீடு கூடுதல் தளங்களில் கிடைப்பதற்குப் போராடுகின்ற சூழ்நிலைகள் நிலவி வருகின்றன.  இன்னொரு பக்கம் ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு அளவு முழுமையாக அளிக்கப்படாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.  கிடைக்கின்ற இடஒதுக்கீட்டு அளவும், வழிமுறைகளும் பறிபோகக்கூடிய அச்சுறுத்தல்களும், அறை கூவல்களும் நீடித்து வருகின்றன.

‘இந்து’ ஏடு வெளியிட்டுள்ள

அதிர்ச்சியூட்டும் தகவல்

இடஒதுக்கீட்டின்பலனைஅனுபவிக்கின்றமக்களி டையே அதுபற்றிய விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும்.  இட ஒதுக்கீட்டின்  முழுமையான பரிமாணம் உணர்த்தப்பட வேண்டும்.  உரிமைகளின் பெருமையும், அவசியமும் உரிய மக்களால் உணரப்படாவிட்டால், கடந்த காலங்களில் போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோகும் சூழல்கள் உருவாகிவிடும்.  அந்த ஆபத்தான சூழல்களை சமூகநீதிக்கு எதிரானவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள்.  சமூகநீதிக்கு எதிரான அறை கூவல்கள் நிலவி வருகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய (10.12.2017) ‘தி இந்து’ ஆங்கில ஏட்டின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக ஒரு நிலவரம் வெளிவந்துள்ளது. ‘‘24 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மத்திய அரசின் பணிகளில் மண்டல் பரிந்துரைத்த இடஒதுக்கீட்டு அளவு இன்னும் எட்டப்படவில்லை’’ என்பதாக செய்தி வந்துள்ளது.  ‘இந்து’ ஏட்டின் அனைத்துப் பதிப்புகளிலும் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் பல துறைகளிலும் வஞ்சனை!

மத்திய அரசின் பணியாளர், பொது குறை தீர்வு மற்றும் ஓய்வூதியத்துறை அளித்துள்ள தகவல் அறியும் சட்டத்தின்மூலம் பெறப்பட்டுள்ள விவரங்களின்படி மத்திய அரசின் 37 ஆட்சித் துறை மற்றும் அரசமைப்புத் துறைகளில் 24 துறைகளில் மண்டல் பரிந்துரைத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் உரிய  அளவு  பணியாளர்கள்  நியமிக்கப்படவில்லை.  இடஒதுக்கீடு பரிந்துரை நடைமுறைக்கு வந்து 24 ஆண்டுகள் ஆன நிலையிலும் 27 விழுக்காடு அளவு எட்டப்படவே இல்லை என்பதுதான் அந்த விவரங்களின் மூலம் தெரிய வருகிறது.  குரூப் ஏ பிரிவில் 14 விழுக்காடும், குரூப் பி, சி மற்றும் டி பிரிவில் முறையே 15, 17 மற்றும் 18 விழுக்காடு அளவிற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள் உள்ளனர்.  சில துறைகளில், சில பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் இல்லாதது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.  மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள குரூப் ஏ பிரிவில் உள்ள 64 பேரில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அறவே இல்லை.  60 பேர் திறந்தவெளிப் போட்டியில் வந்தவர்கள்.  4 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்.

1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மண்டல் பரிந்துரை  இட ஒதுக்கீடு  இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய அள வில் வழங்கப்படவில்லை.  சில பிரிவுகளில் இடஒதுக்கீடு இல்லை என்பது அதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது. பிற்படுத்தப்பட்டவர்களை வஞ்சிக்கக் கூடியதாகும்.

பணியிடங்களில் கடந்த காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலை, போதாத நிலைபற்றி நாடாளுமன்றத்தில் பதிலளித்த மத்திய அமைச்சர், இதனைக் களைவதற்கு அறிவித்த திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.  மேற்கண்டவாறு ஆங்கில ஏட்டில் வந்த செய்தியின் சாரமாக உள்ளது.

போராடிப் பெறப்பட்டது

இட ஒதுக்கீடு!



போராடிப் பெற்ற வகுப்புவாரி உரிமையின் நிலை நம் கண்முன்னே பறிபோகின்ற வகையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.  இட ஒதுக்கீடு பெறுவதில் புதிய அத்தியாயங்களைத் துவக்குவதற்கும் சட்டரீதியாக பெறப்பட்ட இடஒதுக்கீட்டினை முழுமை யாக நடைமுறைப்படுத்துவதற்குமான  சமூகநீதிக்குப் பாடுபடும் அமைப்புகளை இணைத்து கூட்டமைப்பு விரைவில்உருவாக்கப்படும்.சமூகநீதிக்காகஅரும் பாடுபட்ட தலைவர் பெயரில் உள்ள காமராஜ் நிறுவனத்தின் தேசிய மாநாட்டில் நடைபெறும் கருத்தரங்கத்தின் மேடையிலிருந்து இந்த சமூகநீதி கூட்டமைப்புப் பற்றிய அறிவிப்பினை வெளியிடுவதில் உத்வேகம் பெறுகிறோம் - அடுத்து போராடுவோம்!

சமூகநீதியில் காமராசரின் பங்களிப்பு

சமூக நீதியை வென்றெடுத்ததில் தலைவர் காமராஜ ருக்குப் பெரும்பங்கு உண்டு.  நாளும் மக்களைச் சந்தித்து, பொது மக்களின் நல வாழ்வுக்கு - குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு, தாம் தமிழ்நாட்டின் முதல மைச்சராக இருந்த பொழுதும், அதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவராக, பின்னர் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த காலங்களிலும்               அளப்பரிய பணி ஆற்றியவர் காமராஜ் ஆவார்.  இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதால், நடைபெறும் அலுவலகப் பணிகளில் தகுதிக்குறைவு, திறமையின்மை, ஆற்றல் குறைந்த நிலைமை உருவாகி வருகிறது என சமூகநீதி எதிர்ப்பாளர்கள் பரப்புரை செய்து வந்த பொழுது காமராஜர் தமக்கே உரிய எளிய மக்கள் மொழியில் பதிலடி கொடுத்தார்.

‘‘இதுநாள்வரை இடஒதுக்கீட்டின் மூலம் படித்து வேலைக்கு வந்த இன்ஜினியர் கட்டிய பாலம் ஏதாவது உடைந்திருக்கிறதா?

இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து டாக்டராக வந்தவர், போட்ட ஊசியால், பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளால் எந்த நோயாளியாவது சாக நேர்ந்ததா?’’

இட ஒதுக்கீட்டின் மூலம் படித்துப் பணியாற்றுபவர்களிடம் எந்தவித தகுதிக் குறைவும், திறமை பற்றாக்குறையும் கிடையாது என ஆணித்தரமாகப் பதிலளித்தார்.  காமராசரின் கூற்றுக்கு சமூகநீதி எதிர்ப்பாளர்களால் மறுபதில் கூறமுடியவில்லை.

அண்மைக் காலமாக மதச் சார்ப்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் பெருகிவருகின்றன.  மதச் சார்பின்மை நெறிசார்ந்த இந்திய அரசமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக மதச் சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத்  துணைபோவதாக, அதனை ஊக்குவிப்பதாக இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

காமராசரைப் படுகொலை செய்ய முயற்சி!

பசுப் பாதுகாப்பு என்பதன் பெயரால் ஒரு மதத்திற்கு, அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாகவும், பிற மதத்தினருக்கும், மதம் சாரா தரப்பினருக்கும் உரிமை மறுக்கப்படுகின்ற வகையிலும் அரசு செயல்பட்டு வருகிறது.  சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால், பசுப் பாதுகாப்பு என்பதாக ஒரு சில மதவெறிக் கும்பல் அதிகாரத்தை தமது கையில் எடுத்துக் கொண்டு சட்ட ஒழுங்கு சீர்குலைவு செய்து வருகிறது.  ஒருவர் தமக்கு  வேண்டியதை, விரும்பியதை உண்ணுவது அடிப்படை உரிமையாகும்.  அந்த உரிமையினை தட்டிப் பறிக்கின்ற வகையில் பசு மாமிசம் உண்ணக்கூடாது; இன்னும் ஒருபடி மேலே போய் பசு மாமிசம் வைத்திருந்தாலே குற்றம்; தண்டனைக்கு ஆளாக வேண்டும் என சட்டம் இயற்றப்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

பசுப் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக  இருந்த நிலையில், காமராஜர் கருத்து தெரிவித்தார்.  அது சமயம் காமராஜர் டில்லியில் தங்கியிருந்த பொழுது இந்துத்துவா மதவெறியாளர்கள் பசுப்பாதுகாப்புக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த காமராஜரை கொலை  செய்ய முயன்று, அதிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்பது வரலாற்றுச் செய்தி.  அன்று அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘பசுப்பாதுகாப்பு’ வன்முறைச் செயல்கள் இன்று வடநாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகின்றன.  நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளை இனம் கண்டு உரிய காலத்தில் -  தேர்தல் காலத்தில் பாடம் கற்பிக்க வேண்டியது நாட்டுப் பற்றாளர்களின் முக்கிய கடமையாகும்.  இதனை காமராஜ் நிறுவனத்தின் தேசிய மாநாட்டுச் சூளுரையாக மேற்கொள்ளுவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தரங்கின் தொடக்க உரையினை காமராஜ் நிறுவனத்தின் தலைவரும் கேரள அரசின் மேனாள் அமைச்சருமான டாக்டர். நீலலோகிததாசன் வழங்கினார்.  கருத்தரங்கில் பேராசிரியர் கே.பி.விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார்.  மேலும், கேரள அரசின் மேனாள் அமைச்சர் முகமது குட்டி, வழக்குரைஞர் பிரகலாதன், கே.ஆர்,ஆர்யா, நசீர் யாதவ், பேராசிரியர் முனைவர்  ஜான்குமார், பி.கே.கபீர் சல்லா, பி.ஏ.ஹம்சா ஆகியோர் உரையாற்றினர்.

வி.சுதாகரன் வரவேற்புரை ஆற்றினார்.  கருத்தரங்கில் உரையாற்ற சென்றிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன். மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் ஆகியோர் சென்றிருந்தனர்.

காமராஜ் நிறுவனத்தின் மூன்று நாள் தேசிய மாநாடு சிறப்பாக நடந்தேறியது.  மூன்று நாள்களும் நாட்டின் பல பகுதிகளிருந்தும் கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பேராளர்கள், பார்வையாளர்கள் மிகப் பலராகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.



- விடுதலை நாளேடு,12.12.17

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஜாதி மறுப்புத் திருமண மானியம் பெற வருமான உச்ச வரம்பு நீக்கம்!


புதுடில்லி, டிச.10  ஜாதி பிரச் சினையை ஒழிக்கவும், கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கவும், தலித்தை திருமணம் செய்யும் ஜாதி மறுப்பு மணத்துக்கு வழங்கப்படும், மானியத்துக்கான வருமான உச்ச வரம்பை, மத்திய அரசு நீக்கியுள்ளது.

இவ்வாறு ஜாதி மறுப்பு மணம் புரிவோருக்கு, மத்திய அரசு, 2.5 லட்சம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. 
ஜாதி மறுப்பு திருமணத்தை ஊக்கு விக்கும் வகையில், 2013இல் கொண்டு வரப்பட்ட, டாக்டர் அம்பேத்கர் ஜாதி மறுப்பு  திருமணம் மூலமான சமூக ஒற்றுமை திட்டத்தில், 2.5 லட்சம் ரூபாய் மானியத்தை, மத்திய அரசு வழங்குகிறது. இதில், மணப்பெண் அல்லது மண மகனில் யாராவது ஒருவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த மானியத்தை பெறு வதற்கான வருமான உச்ச வரம்பு, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆண்டுக்கு, 500 பேருக்காவது இந்த மானியத்தை வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித் துள்ளது. ஜாதி மறுப்பு மணம் புரியும் தைரியமான முடிவு எடுப் பதை கவுரவிக்கவும், அவர்கள் திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையிலும், இந்த மானியம் வழங்கப்படுகிறது.

முதல் திருமணத்துக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது. மேலும், இந்து திருமணச் சட் டத்தில் பதிவு செய்திருக்க வேண் டும்.

இதற்காக, திருமணமாகி ஓராண்டுக்குள் விண்ணப்பிக் கலாம். தற்போது, இந்த திட்டத் துக்கான வருமான உச்ச வரம்பை, மத்திய சமூக நீதித் துறை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங் களில், ஜாதி மறுப்பு மணம் புரிவோருக்கான நிதியுதவிக்கு, எந்த வருமான உச்ச வரம்பும் கிடையாது. ஆண்டுக்கு குறைந்த பட்சம், 500 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2014 - 2015இல், அய்ந்து பேருக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட்டது.

கடந்த, 2015 - 2016இல், 522 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில், 72 பேருக்கு வழங்கப் பட்டது. 2016  -  2017இல், 736 விண்ணப்பங்களில், 45 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை பெறப்பட்ட, 409 விண்ணப்பங்களில், 74 பேருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், குறைந்த எண்ணிக்கை உள்ளவர் களுக்கே, இந்த நிதி வழங்கப் பட்டுள்ளது.

மேலும், வருமான உச்ச வரம்பு ஒரு தடையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, இந்த நிதியைப் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றுவதை தடுக்க, இணையரின் ஆதார் எண்ணும், வங்கிக் கணக்கு எண்ணும் சமர்ப்பிக்க வேண்டும். இந்து திருமணச் சட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த நிதி வழங்கப்படும். சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்திருந்தால் வழங்கப் படாது.

மேலும், அவர்களுடைய விண்ணப்பத்தை, எம்.பி., அல் லது, எம்.எல்.ஏ., அல்லது மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண் டும்.

இவ்வாறு ஆட்சியர்கள் கூறினர்.

- விடுதலை நாளேடு, 10.12.17

மண்டல் குழு பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27% அளிக்கப்படாமல் வஞ்சித்து வரும் மத்திய அரசின் துறைகள்!


மண்டல் குழு பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27%

அளிக்கப்படாமல் வஞ்சித்து வரும் மத்திய அரசின் துறைகள்!

அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்



சென்னை, டிச.10 24 ஆண்டுகள் ஆன போதிலும் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான வேலைவாய்ப்பில் மண்டல்  குழு பரிந்துரை பின்பற்றப்படாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமூக நீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில் மண்டல்  குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டது. மண்டல் குழு பரிந் துரையின் பேரில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

சமூகநீதியை எட்டிட பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அய்ந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார். மண்டல் குழுவின் பரிந் துரையின்படி, மத்திய அரசுப் பணிகளில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பின் பற்றாத நிலை தொடர்ச் சியாக இருந்துவருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின்படி,

மத்திய அமைச்சக அலுவலகங்கள் 35இல் 24லும், மத்திய அரசுத் துறைகள் 37இல் 25இலும், அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்தவேண்டிய அமைப்புகளாக உள்ள பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றில் மண்டல் பரிந் துரைகள் கடந்த 24 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.

பெறாத பயன் நிலை

நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசுத் துறை களில் உள்ள பணிவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட் டவர்கள் பெரிதும் பயன்பெறாதநிலையே இருந்து வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் கடந்த 8.9.1993 அன்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அலுவலகம் 1.1.2017 அன்று வெளியிட்ட தகவலின்படி, மத்திய அரசின் 24 அமைச்சக அலுவலகங்களில் குரூப் ஏ பிரிவு அலுவலர்களில் 17 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வர்கள் உள்ளனர். குரூப் பி பிரிவில் 14 விழுக்காட்டுக்கும் கீழ் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். குரூப் சி பிரிவில் 11 விழுக்காட்டள விலும், குரூப் டி பிரிவில் 10 விழுக்காட்டளவிலும் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர்.

மத்திய பணியாளர் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் மக்களவையில் கூறியதன்படி, மண்டல் குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட் டவர்களுக்கு மத்திய அரசுப்பணிகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று 1993ஆம் ஆண்டில் உத்தரவானது. 1.1.2014  அன்றுவரை மத்திய அரசின் 71 அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகளில் 19.24 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். பணியிடங்களில் காலிப்பணியிடங்களை அடையாளம் காண்பது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை நியமிப்பதற் கான நடைமுறைகளில் கால இடைவெளி முக்கிய காரணமாக உள்ளது.

மத்திய அரசின் 24 அமைச்சகங்கள், 25 துறை களில்  குரூப் ஏ பிரிவில் 14 விழுக்காடு, குரூப் பி,சி,டி ஆகிய பிரிவுகளில் முறையே 15, 17, 18 விழுக்காட்டளவில்தான் பிற்படுத்தப்பட்ட வர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய இடங்களை விட குறைவானதாகவே இருக்கிறது.

அமைச்சக செயலகத்தில் ஒரு வரிகூட இல்லை

அமைச்சக செயலகத்தில் குரூப் ஏ அலுவலர் களுக்கான பிரிவில் 64 பணியிடங்களில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்பட வில்லை. திறந்த போட்டியில் 60 பேரும், தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடத்தில் நால்வரும் இடம்பெற்றுள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் குரூப் ஏ பிரிவு அலுவலர்கள் 503 பேரில் 25பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்.

2015ஆம் ஆண்டில், மத்திய அரசின் 12 அமைச் சக அலுவலகங்களிலும் 10 துறைகளுக்கான அலுவலகங்களிலும் குரூப் ஏ பிரிவு அலுவலர் களில்  10.71 விழுக்காட்டளவில் மட்டுமே பிற் படுத்தப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குரூப் பி பிரிவில் அலுவலர்களில் 7.18 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டனர். 2013ஆம் ஆண்டில் 55 மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட வர்கள் 9.43 விழுக்காட்டளவில் நியமிக்கப்பட் டனர். மத்திய அரசு அலுவலகங்களில் மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத் தப்பட்டவர்களுககான பணியிடங்கள் குறித்து விவரங்களைக் கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஈ.முரளிதரன் என்பவர் விண்ணப்பித்தார். அவர் கூறுவதாவது:

விவரம் தராத இரயில்வே துறை

“இந்த விவரங்கள் மட்டுமே முழுமையான தகவல்களை அளித்துள்ளதாக ஆகிவிடாது. ஏனென்றால், அதிகமான அளவில் பணியாளர் களை நியமித்துவருகின்ற துறைகளான ரயில்வே துறை, பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் 11 அமைச்சகங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பணியாளர்கள்குறித்த தகவலை அளிக்கவே மறுத்துள்ளன. மத்திய அமைச்சகங் களில் அதிக அளவிலான பணியிடங்களைக் கொண்டுள்ள அமைச்சகங்கள்தான் 91.25 விழுக் காட்டளவில் மத்திய அரசின் பணிவாய்ப்புகளைக் கொண்டுள்ளனவாக உள்ளன. 24 அமைச்சகங் களின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 8.75 விழுக்காட்டளவில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வர்கள் உள்ளனர்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி மத்திய அரசின் துறைகளில், ரயில்வே துறையில் 13 லட்சத்து 28ஆயிரத்து 199 பணியிடங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் வகுப்புகள் ரீதியிலான புள்ளிவிவரத்தகவல்கள் கிடையாது. மத்திய அரசின் பணிகள் 31 லட்சம் இருப்பதற்கு மாறாகவே புள்ளிவிவரத்தகவல் 2லட்சத்து 71 ஆயிரத்து 375 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்.

2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் 40 அமைச்சகங்கள் மற்றும் 48 துறைகளில், பிற்படுத் தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் எண்ணிக்கை பற்றிய தகவல் அளிக்குமாறு கோரி விண்ணப் பித்த நிலையில், பல அமைச்சகங்கள், துறைகள் பதில் அளிக்க மறுத்துள்ளன.

அய்.அய்.டி. மேனாள் மாணவர் குமுறல்!

19.12.2003 அன்று மத்திய பணியாளர்துறை வெளியிட்ட விரிவான அறிக்கையின்படி, மத்திய அமைச்சகங்கள¢, மத்திய அரசுத் துறைகள் அனைத்திலும் உள்ள  பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள் பணியாளர்கள்குறித்த தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அது மீறப்பட்டுள்ளது என்று சென்னை அய்.அய்.டி. மேனாள் மாணவர் குறிப்பிட் டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஜூனில் மத்திய பணி யாளர் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடியினத்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து அனைத்து மத்திய அரசுத்துறை, அமைச்சகங்கள் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரியது.

ஆறு மாத கால இடைவெளியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட  சில நிபந்தனைகளைத் தளர்த்தி, சிறப்பு பணி நியமனங்களைச் செய்ய வேண்டும் என்று மத்திய பணியாளர் பயிற்சித் துறை அமைச்சகம் குறிப்பிட்டது. இடஒதுக்கீட் டுப் பிரிவுகளுக்கான காலிப்பணிய¤டங்களை நிரப்ப, சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சக அலுவலர்கள், பழங்குடியினருக்கான துறை மற்றும் ரயில்வே, உள்துறை, உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

சிறப்பு பணிநியமனங்கள்மூலமாக திட்டம் துரிதமாக செயல்படுத்தப்படாததால் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான வாய்ப்புகள் 1.1.2017 அன்று அளிக்கப்பட்ட தகவலின்படி, மோசமான அள விலேயே உள்ளன என்றார் டாக்டர் முரளிதரன்.

தற்பொழுது பிற்படுத்தப்பட்டவர்கள் எண் ணிக்கை அதிக அளவில் உள்ளது. குழு அமைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வகைப்படுத்துவதன்மூலம் பிற்படுத்தப்பட்டவர் களை பிரித்தாள அரசு முயற்சிக்கிறது. என்று முரளிதரன் கூறியுள்ளார்.

-விடுதலை நாளேடு, 10.12.17

செவ்வாய், 5 டிசம்பர், 2017

பதவி உயர்வில் இடஒதுக்கீடு - தனியார்த் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேட்டி



 

பாட்னா,டிச.5 அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக் கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில்திருத்தம்கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் திங்கள்கிழமை நடைபெற்ற வாரந்திர மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில், முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி, பிரத மர் மோடிக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்த கருத்து தொடர்பாக நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குபதிலளித்து,நிதீஷ் கூறியதாவது:

பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, நாங்கள் எப் போதுமே ஆதரவானவர்கள். பிகார் அரசுப் பணிகளில் பதவிஉயர்வின்போதுதாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியின ருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டப் பிரிவை அறிமுகப்படுத்தினோம். ஆனால்,அந்தசட்டப் பிரிவை, உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. தற்போது அந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இடஒதுக்கீடு விவகாரத்தில், பாஸ்வானின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். நமது நாட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

கல்வி,சமூக ரீதியில் பின் தங்கியோருக்குசமமானவாய்ப் புகளைகிடைக்கச் செய்வதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை யாகும். தற்போதைய கால கட்டத்தில் அரசுத் துறையை விட தனியார் துறையில் தான் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றார் நிதீஷ்குமார்.
- விடுதலை நாளேடு,5.12.17

தமிழ்நாட்டைப் பின்பற்றி ஆந்திராவிலும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றம்

அய்தராபாத், டிச.5 தமிழ்நாட்டைப் பின்பற்றி ஆந்திர மாநில சட்டப்பேரவையிலும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இட ஒதுக் கீட்டுக்கு வழிவகை செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இங்கு, காபு சமூகத்தினர், வேலைவாய்ப்பு, கல்வியில், தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி, ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தினர். கிழக்கு கோதாவரியில் நடந்த போராட்டங்கள், பயங்கர வன்முறைகளில் முடிந்தன. அம்மாவட்டத்தில், பல ரயில்கள் எரிக் கப்பட்டன; ரயில் நிலையம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

கடந்த, 2014 இல், ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடந்தபோது, ‘காபு சமூகத்திற்கு, இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, தெலுங்கு தேசம் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதன் படி, ஓய்வு பெற்ற நீதிபதி, மஞ்சுநாதா தலைமையில், ஆய்வுக் குழு அமைக் கப்பட்டு, காபு சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆந்திர சட்டசபையில் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. காபு சமூகத்திற்கு, கல்வி, வேலை வாய்ப்பில், 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் இந்த மசோதா ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. இதன்மூலம், உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீட்டுக் காக நிர்ணயித் திருந்த, 50 சதவீத உச்சவரம்பிற்கும் அதிக மாக அளிக்க முடிவு செய்து சட்டமியற்றி யுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆந்தி ராவில், பிற்பட்ட வகுப்பினருக்கு, ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில், 29 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்.சி., பிரிவினருக்கு, 15 சதவீதமும், பழங்குடியி னருக்கு, 6 சதவீதமும் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. தற்போது, காபு சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோராக வகைப்படுத் தப்பட்டு, ‘எப்’ பிரிவில், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, சட்டத்திருத்தம் இயற்ற ப்பட்டுள்ளது.

குறிப்பு: தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்த நிலையில், 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக்கூடாது என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பின் காரணமாக சிக்கல் ஏற்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின் அடிப்படையில் மாநில அரசே சட்டம் இயற்றலாம் என்ற சட்ட அறிவை எடுத்துக் கூறி, அதற்கான மாதிரி மசோதாவையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தயாரித்துக் கொடுத்ததும், அதனடிப்படையில் தமிழ் நாடு சட்டப்பேரவையில், அ.தி.மு.க. ஆட்சியில் அம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அதன் பின் நாடா ளுமன்றத்தின் ஒப்புதலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று அரசமைப்புச் சட்டம் 9 ஆம்  அட்ட வணையிலும் சேர்க்கப்பட்டு, தமிழ் நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

- விடுதலை நாளேடு,5.12.17