பக்கங்கள்

திங்கள், 5 செப்டம்பர், 2016

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!


செங்கற்பட்டு மாவட்டம், மதுராந் தகம் அருகில் உள்ள கோழியாளம் என்னும் சிற்றூரில் 07.07.1859 அன்று, இரட்டைமலை---ஆதிஅம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார் இரட்டைமலை சீனிவாசன். சீனி வாசனின் குழந்தைப் பருவத்திலேயே இவரது குடும்பம் விவசாயக் கூலியாக தஞ்சை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தது.
தஞ்சை மாவட்டத்தில் திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வி யையும், உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தும் படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார்.அதன் பிறகு கோயம் புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்டோரில் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.
நீலகிரியில் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1882 ஆம் ஆண்டு எழுத்தர் பணியில் சேர்ந்தார். ரெங்கநாயகி என்பவரை 1888 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனை யாளராக, -சீர்திருத்தவாதியாக,- போராட் டக்காரராக -உருவாக அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனு பவித்த கொடுமைகளும் காரணமாக அமைகின்றன. இரட்டைமலை சீனிவாசன், தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.
இரட்டைமலை சீனிவாசன் 1904 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு நேட்டால் நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இடக்காரண மாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன். தென்னாப்பிரிக்காவில் 1920 ஆம் ஆண்டுவரை பணி புரிந்தார்.
இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டார். தாழ்த் தப்பட்ட மக்கள் மற்றவர்களுக்குச் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங் களிலும், கட்டடங்களிலும் நுழையவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.
தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார். சென்னை மாகாணம் தழுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க அதிகமான விடுதிகளும், கல்வி உதவிப் பணமும், மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆரம்பக் கல்வி, இல வசமாகவும் கட்டாயமாகவும் தாழ்த் தப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமெனில், தனிப் பள்ளிகள் திறக்கப்பட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை முன் வைத்து முனைப்போடு செயல்பட்டார்.
சென்னை விக்டோரியா மண்ட பத்தில் 07.-10-.1895- அன்று ஓர் மாநாட் டைக் கூட்டினார். அம்மாநாட்டின் மூலம், அரசுத் துறைகளில் தாழ்த்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடவும், அரசாங்க அலுவலகங்களில் இடம் பெறவும், விமானம், கடற்படை, இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றிட வும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வேண்டும் என்று கூறினார்.
சென்னை-- மயிலாப்பூரில் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் பிராமணர் தெருவில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே வரக்கூடாது- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்ற வும், சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண் டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுநரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப் பட்ட ஜாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் 28.04.1894 ஆம் நாள், தமது தலைமையில் நிலப் போராட்டத்தை இரட்டை மலை சீனிவாசன் துவக்கினார். இப்போராட் டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய அரசு நிலம் அளித்தது. இந்நிலத்திற்கு பஞ்சமி நிலம் என்ற பெயரும் வைத்தது! தாழ்த்தப் பட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அரசு உதவித்தொகை வழங்கவேண்டும். ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வயதை ஏனைய, வேறு ஜாதியினர் வயதுடன் ஒப்பிடக்கூடாது; வறுமை, ஏழ்மை ஆகிய காரணங்களால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், குறிப் பிட்ட வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத காரணத்தால், வயது வரம்பை தளர்த்திட வேண்டும் என்று அப்போதைய பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
தீண்டாமையை அடியோடு ஒழிப் பதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமை புரிபவர் எவராக இருந்தா லும் அவர்களுக்கு அபராதம் விதிப்ப தோடு, தண்டனை அளித்து அவர் களைச் சிறையில் அடைக்கவேண்டும் என்று கடுமையாக சட்டமன்றத்தில் பேசினார். சிறையிலும் ஜாதிப் பாகுபாடு நிலவியதை கண்டித்ததுடன், குற்றவாளிகளில் உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்று பார்க்காமல் அனைவ ரையும் சமமாக நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்.
தமிழக சட்டமன்ற மேலவையில், பல ஏழை மக்களின் உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்  என்ற தீர்மானத்தை இரட்டைமலை சீனி வாசன் கொண்டுவந்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், விழா நாள் களிலும், அரசு விடுமுறையின் போதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார். ஏழை எளிய மக்கள் மதுவுக்கு அடிமையாகி, தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனரே என மனம் வருந் தினார்.
இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரும்பாடுபட்டார்.
இங்கிலாந்தின் இலண்டன் மாநக ரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியா விலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிற போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டா மைக் கொடுமை ஒழியும். சட்ட மன்றத்திலும், ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும் -என்று வலியுறுத்தினார்.
லண்டனில் நடைபெற்ற இரண்டா வது வட்டமேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனி வாசனும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க கொண்டு வந்த தனித் தொகுதி முறையை காந் தியார் கடுமையாக எதிர்த்து புனேவில் பட்டினிப் போராட்டம் மேற்கொண் டார். இறுதியில் காந்தியாரின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, காந்தியாரின் விருப்பத்துக்கு விட்டுவிட்டார் அம் பேத்கர். அது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் அம் பேத்கரும், இரட்டைமலை சீனிவாச னும் புனே ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு இராவ்சாகிப், திவான் பதூர், இராவ் பகதூர் ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. இரட்டை மலை சீனிவாசனின் பணி யைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், திராவிடமணி எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக் காகப் போராடிய  இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று தனது எண்பத்து ஆறாம் வயதில் இயற்கை எய்தினார். இந்திய நடுவண் அரசு, 15.08.2000 அன்று இரட்டைமலை சீனிவாசனுக்கு சிறப்பு அஞ்சல் வில்லை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.
விடுதலை ஞாயிறு மலர், 16.7.16

குஜராத்தில் கோயில் கட்டிய தலித் பெண்ணுக்கு கோயிலுக்குள் நுழைய உரிமை இல்லையாம்!

மஞ்சை வசந்தன்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நந்தனார் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று வழிபட போராடியபோது தீட்சதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, நந்தன் தொடர்ந்து அதற்காகப் போராட, தீட்சதர்கள் சூழ்ச்சியாக நந்தனாரை நெருப்பில் தள்ளி எரித்த காலந்தொட்டு தலித்துக்கள் கோயிலுக்கு செல்ல முயலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அண்மையில் கோயில் வழிபாடு சார்ந்து தாழ்த்தப்பட்டோருக்கும் ஜாதி இந்துக்களுக்குமான மோதலில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், ஆண்டிமடம் அருகில் சிலம்பூர் கிராமத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் 14 பெண்கள் உட்பட 21 பேர் இருதரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலம்பூரில் உள்ள அய்யனார் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் வழியாடு நடத்த ஜாதி இந்துக்கள் மறுத்து எதிர்ப்புத் தெரிவித்ததால் பெருங் கலவரம் நிகழாமல் இருக்க உடையார்பாளையம் வருவாய் கோட்ட அலுவலர் (RDO) சனிக்கிழமை இரவு (06.08.2016) 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
காந்தியார் பிறந்த மாநிலம் குஜராத். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமும் இதுதான்.
ஆனால், குஜராத்தில் ஜாதி ரீதியான பாரபட்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலித்களுக்கு சம உரிமை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
பெரும்பாலான கோவில்களில் தலித்துகளை உள்ளே அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலயத்தின் கேந்திர பகுதிக்கும், நுழைவாயிலுக்கும் இடையே அக்னி குண்டம் உள்ளது. இந்த அக்னி குண்டத்தை கடந்து செல்லும் உரிமை தலித்துகளுக்கு கிடையாது. உயர் ஜாதி இந்துக்கள் மட்டுமே அக்னி குண்டத்தை கடந்து செல்ல முடியும்.
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை ஏற்க முடியாது. தலித்துகளை கேந்திரப் பகுதிக்குள் அனுமதித்தால் புனிதம் கெட்டுவிடும் என்று கோவில் பூசாரிகள் கூறுகிறார்கள். கோதா என்ற இடத்தில் உள்ள சுவாமி நாராயண் நூதன் மந்திர் என்ற நவீன ஆலயத்திலும் கூட தலித்துகளுக்கு சம உரிமை அளிக்கப்படுவதில்லை.
கோயில் கட்டியவருக்கே கோயிலுக்குள் செல்ல தடை
குஜராத்தில் அகமதாபாத் அருகேயுள்ள குக்கிராமம் ரகமல்பூர் என்பதாகும். இந்த கிராமத்தை சேர்ந்த பிந்தூபென் கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். தலித் சமூகத்தை சேர்ந்த இவருக்கு 35 பிகா நிலம் உள்ளது. இது சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பிற்கு சமம். இந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை சேமித்து வைத்து ரூ.10 லட்சம் திரட்டிய அவர் இதைக் கொண்டு ஒரு கோவில் கட்டினார்.
இந்த கோவிலில் நேரந் தவறாமல் வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆனால், கோவிலுக்குள் நுழைய பிந்தூபென்னுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று உயர் ஜாதியினர் கூறுகின்றனர். கட்டிய கோவிலுக்குள் நுழைய முடியாதது பிந்தூபென்னுக்கு மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் தலித் சமூகத்தினர் பாரபட்சமாக நடத்தப்படுவதால்தான் அங்கு அடிக்கடி கலவரங்கள் நடக்கின்றன.
கோயிலுக்குள் நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம்
கர்நாடக மாநிலம் ஹொலேநார்சிபூர் தாலுகாவில் உள்ள சிகரனஹல்லியில் ஸ்ரீபசவேஸ்வரர் கோயிலில் தடையை மீறி நுழைந்ததாக 4 தலித் பெண்களுக்கு உயர் சாதியினர் அபராதம் விதித்தனர்.
கடந்த ஆண்டு (2015) ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது இந்த 4 தலித் பெண்களும் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த 9 பெண்களும், கோயிலுக்குச் சென்றனர், அப்போது வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த தேவராஜா என்பவர் தலித் பெண்கள் நால்வரும் நுழையக் கூடாது என்று உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு அடுத்த நாளே உயர் சாதியினர் கூடி ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் சடங்குகள் என்பது கோயிலின் புனிதத்தையும் தூய்மையையும் காக்க நடைபெறுகிறது என்றும் இந்நிலையில் தலித்துகள் நுழைவினால் கோயிலின் புனிதம் கெட்டு விட்டது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.
கர்நாடகத்தில் பல புராதன பெருமைவாய்ந்த கோயில்கள் உள்ளன. அதில் உலகப் புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களை சாதி அடிப்படையில் நடத்துவது பல நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது.
இங்கு உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற அடிப்படையில் தனித்தனியாக உணவு பரிமாறப்படுகிறது.
கடந்த மாதம் 15-ஆம் தேதி (ஏப்ரல் 2014) உணவு அருந்தச் சென்ற பெண் ஒருவர் சாதியைக் காரணம் காட்டி வெளியேற்றப் பட்டார். இது கண்டனத்திற்குரியது.
எவிடன்ஸ் என்னும் அரசுசாரா நிறுவனம் கேவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த புள்ளிவிவரம் இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும்,இந்த கணிணி யுகத்திலும் தொடர்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.. 85 ஊராட்சிகளில் உள்ள 69 கேயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கேயில்களின் சன்னிதானமும் 56 கேயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கேயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. 52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடத்தைத் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது பேன்ற சடங்குகளின்போது 60 கேயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.
05.04.2016 அன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மலையம் விநாயகம்பட்டியில்,  கோயிலில் ஒரு சமூகத்தினர் சிலை வைக்க முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் வாக்குவாதம் முற்றியது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் 4 போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
22.10-.2015இல் உசிலம்பட்டி அருகே ஏழுமலை கோயில் திருவிழாவில் இருபிரிவினர் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதில் தாசில்தார் ஜீப் உள்பட சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  இது தொடர்பாக 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தப்புரத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஆதிதிராவிடர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பில் சுவாமி சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. அப்போது கோயில் அருகே இருந்த அரசமரத்தில், ஒருவர் ஆணி அடித்து அதில் மாலை அணிவித்தார். இதனை மற்றொரு பிரிவினர் தட்டிக்கேட்டனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. போலீசார் தகராறை விலக்கி விட்டனர். இது குறித்து முனியாண்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சித் தலைவரின் கணவர் முருகேசன் உள்பட 35 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
2011ஆம் ஆண்டு மதுரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி.கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க சாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் சாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.
அகமுடையார்கள் வசிக்கும் மேலத் தெருவான காளியம்மன் கோயில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போகக் கூடாது.
ஆண்டுதோறும் ஆடிமாதம் 5 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தங்களுக்கும் ஒருநாள் கட்டளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தள்ளிமேடு பகுதி தலித் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி திருவிழாவில் ஒருநாள் கட்டளை நடத்திக் கொள்ள அனுமதிக்காவிட்டால், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறப் போவதாகவும் தலித் மக்கள் கூறினர். இதனால் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சு வார்த்தையில் தலித் மக்களுக்கு கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு கட்டளை நடத்திக் கொள்ளக் கூறப்பட்ட ஆலோசனைகளை எதிர்த் தரப்பினர் ஏற்க மறுத்தனர்.
1924ஆம் ஆண்டில் வைக்கத்தில் கோயில் நுழைவு உரிமை முழக்கத்தை பெரியார் மீண்டும் முன்வைத்தார்.
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் தூண்டு விளைவாக திருவிதாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட சுசீந்திரத்தில் தீண்டப்படாதார் கோயில் நுழைவுக் கிளர்ச்சி 1925ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் நடைபெற்றது.
1927ஆம் ஆண்டு தமிழகக் கோயிலுக்குள் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் செல்லும் போராட்டத்தை நடத்தினர். ஜே.என்.இராமநாதன் தலைமையில் பல தாழ்த்தப்பட்டோர் திருச்சி தாயுமானவர் கோயிலில் நுழைந்தனர். அவர்கள் கோயிலை நோக்கி மலைப்படியேறிச் சென்றபொழுது பார்ப்பனர் ஏவிய ரவுடிகளால் தாக்கப்பட்டு, மலைப்படியில் உருட்டித் தள்ளப்பட்டனர்.
ஜே.என் கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலையில் கோயிலுக்குள் நுழைந்தவர்களை கோயிலுக்குள் பூட்டி வழக்கு தொடர்ந்தனர்.
1927 மே மாதம் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியினரும் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்குள் நுழைய முயன்றனர். அதை அறிந்த கோயில் நிர்வாகிகள் கோயிலைப் பூட்டித் தடுத்தனர். அதையும் மீறி பக்க வழியே போராட்டக்காரர்கள் கோயிலுக்குள் நுழைந்தனர்.
25.06.1928இல் திருச்சி மலைக்கோட்டையிலும், 12.08.1928இல் திருவானைக்காவலிலும் கோயில் நுழைவுப் போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள் பங்கு கொண்டனர். இரண்டு இடங்களிலும் போராட்டக்காரர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டனர்.
1929ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி அவர்கள், ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயிலுக்குள் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய தாழ்த்தப்பட்டோருடன், ஆதிதிராவிடர் தோழர்களையும் அழைத்துக்கொண்டு, நாகம்மையார், பொன்னம்பலனார் ஆகியோருடன் பூசைப் பொருட்களுடன் நுழைந்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை ஜாதி மோதல் காரணமாக மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு - ஏடுகள் தரும் செய்திகள்!
திராவிடன் 16.12.1929 பாகம் 4 பக்கம் 1
சிதம்பரத்தில் ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள் நுழைந்து விடுவார்களென்று தீட்சதர்கள் நடுக்கம் கொண்டிருக்கிறார்கள். அதற்காக போலிஸ் படையையும் வைத்திருக்கிறார்களாம். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. தீட்சதர்களுக்கு நுழைய எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமையும் ஆதிதிராவிடருக்கும் உண்டு.
திராவிடன் 25.12.1929 பாகம் 3 பக்கம் 2
ஜாதி எனும் சண்டாளப் பேயை கொல்லுவதற்காக நடைபெறப் போகும் சிதம்பரம் நடராஜர் ஆலயப் பிரவேச இயக்கத்தில் கலந்துகொள்ள துறையூரிலிருந்து சுமார் 500 ஆதிதிராவிடர் வரை கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்கள்.
திராவிடன் 26.09.1932 பாகம் 11
ஸ்ரீ மீனாக்ஷி கோவில் ஆலயப் பிரவேசம்: கோயில்களில் பூஜைசெய்யும் பட்டர்கள் நிலை ஒரே நிலையில் இல்லாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சியார் அதிகாரிகள் உத்தரவுப்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசத்தை ஒப்புக்கொள்ளலாம் என்றும், மற்றொரு கட்சியார், எவர் எவ்விதம் உத்தரவிடினும் தாங்கள், தீண்டாதார் ஆலயப் பிரவேசத்தை ஆதரிப்பதில்லை என்றும், ஒருக்கால் பெருந்திரளாக மக்கள் ஆலயத்தினுள் புகுந்துவிட்டால் ஸ்வாமி இருக்கும் மூலஸ்தானத்தைப் பூட்டிக்கொண்டு வெளியில் வந்துவிடுவதென்றும் தீர்மானம் கொண்டிருப்பதாய்த் தெரிகிறது.
கோயிலுக்குச் சென்ற மூவரை கோயில் சிப்பந்திகள் யார், எந்த ஊர் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் நீ யார் என்று கேட்டுவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
திராவிடன் 1929
ஈரோட்டில் சர்க்கிள் தேவஸ்தானம் கமிட்டியின் தீர்மானத்திற்கு 4ஆம் தேதி காலையில் கருப்பர், தேசியன், சாளி, வெங்கடாசலப் பண்டிதர், கலியப் பண்டிதர் ஆகியோர், ஈஸ்வரன், மாயவரம் நடராசன், ராவணன், பொன்னம்பலனார், நித்தியாநந்தம், குருசாமி ஆகியோர் தலைமையில் இதுவரை பஞ்சமர் அனுமதிக்கப்படாத இடம்வரை சென்று முதல் வாசற்படியருகில் பாட்டுகள் பாடிக்கொண்டு சென்றபோது அர்ச்சகர் முதலாவது வாயிற்படியை மூடிவிட்டான் மறுநாளும் கோயில் கதவுகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கானோர் ஏமாறித் திரும்பினர்.
திராவிடன் 19.05.1930
சுசீந்திரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பிரவேச உரிமையை நிலைநாட்ட தீண்டாதாரும் அவர்களிடம் அனுதாபம் உடையவர்களும் ஆரம்பம் செய்திருக்கும் சமதர்மப் போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தினந்தோறும் மாலை 4 மணிக்கு ஆலயத்துக்குச் செல்லும் சந்நிதித் தெருவில் 4 தொண்டர்கள் சத்தியாக்கிரம் செய்கிறார்கள். இதுவரை தலைவர் ராமன் பிள்ளை உட்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் 4 பேருக்கு திருவிதாங்கூர் பீனல்கோடு 90ஆவது செக்ஷன்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததினால் 6 மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை 16.08.1939
ஆடி அமாவாசையன்று சுமார் 100 நாடார்களும், ஹரிஜனங்களும் கிழக்கு கோபுரத்தின் வழியாக ராமேஸ்வரம் கோயிலுக்குள் நுழைய எத்தனித்ததாகவும் சனாதனிகளும் சேர்வைக்காரர்களும் தடுத்துவிட்டதாகவும், பகல் பூஜைகள் வழக்கத்துக்கு முன்னதாகவே நடத்தப்பட்டு, கோயில் கதவுகள் பூட்டப்பட்ட விட்டனவாம். ஆக, தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் அறிவதோடு, அந்த போராட்டங்கள் பெரிதும் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் தொண்டர்களாலேதான் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பெரிய கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் செல்ல தற்போது தடையில்லை என்றாலும், கிராமப்புறக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கான தடையும், அதையொட்டிய தாக்குதல்களும் நடைபெறுகின்றன என்பது கசப்பான உண்மை.
2015 ஆகஸ்ட் மாதம் விழுப்புரம் வட்டம் சங்கராபுரம் அருகில் சேஷசமுத்திரம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு தாழ்த்தப்பட்டோர் தங்கள் சொந்த செலவில் கட்டிய தேரையே இழுத்துச் செல்ல முடியாமல் ஆதிக்க ஜாதியினரால் அத்தேர் எரிக்கப்பட்டு பெரும் கலவரம் நடந்தது, நாமெல்லாம் வெட்கமும் வேதனையையும் படத்தக்கதாகும்!
இறைவன் முன் எல்லோரும் சமம் என்று கூறிக்கொண்டே, ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி, இழித்து, விலக்கி வைப்பது உண்மையான பக்தன் செய்யும் செயலா?
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த நந்தனார் நாயன்மாராக கோயிலுக்குள் வைத்து வணங்கப்படும் நிலையில், தாழ்த்தப்பட்டோரை நுழையாதே என்பது அறியாமையல்லவா? கோயிலுக்குள் கோலோச்சும் ஜாதி வெறி அனைவராலும் அகற்றப்பட வேண்டிய கொடுமையாகும்!
-உண்மை இதழ்,16-31.8.16

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

கிரீமிலேயர் : சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது!

அண்மையில் மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கையில், கிரீமிலேயர் என்ற காரணம் காட்டி, அவர்கள் வெற்றி பெற்றும் பதவி தராமலிருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதம்; சமூக அநீதியும் ஆகும்!


அவர்கள் தேர்வு எழுது முன்னர், அக்காரணத்தைக் காட்டி, அவர்களது மனுக்களை நிராகரிக்காமல், அவர்களைத் தேர்வு எழுதவிட்டு, அவர்கள் வெற்றியும் பெற்றுள்ள நிலையில்- இப்படி கிரீமிலேயர் _- அதிக வருமானம் உள்ள பெற்றோர்களைக் கொண்டவர்கள் என்று காரணம் காட்டித் தடுப்பது இயற்கை நீதி (Natural Justice) என்பதற்கேகூட விரோதமான ஒன்றாகும்!

இது ஒருபுறமிருக்க, கிரீமிலேயர், கிரீமிலேயர் என்பது _- சதா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென்றே- _ இவர்களை பதவிக்கு வராமல் தடுக்க வைக்கப்பட்ட "கண்ணி வெடிகள்" ஆகும்.
கிரீமிலேயர் என்று வற்புறுத்துவோர், அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகட்டும், ஆதிக்க ஜாதியாய் இருந்து கொண்டு, ஊடகங்களை தங்களது "அஸ்திரங்களாக" ஆக்கி மற்றவர்கள்மீது எய்தி இன்புறும் எவராயினும், அவர்களை நோக்கி சில நியாயமான கேள்விகளை முன் வைக்கிறோம். அவர்கள் இந்த 'கிரீமிலேயர்' பற்றி பதில் கூறி விளக்க வேண்டும்.

1. இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீடு  சம்பந்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றிலாவது "கிரீமிலேயர்" (பொருளாதார அடிப்படை) கூறப்பட்டுள்ளதா? வற்புறுத்தப்பட்டுள்ளதா?

2. மண்டல் கமிஷன் என்ற இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனின் பரிந்துரைகளில் ஏதாவது ஒன்றிலாவது 'கிரீமிலேயர்' என்ற சொற்றொடரோ, கருத்துரையோ, பரிந்துரையோ உள்ளதா?

3. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தலைமையிலான அரசு தனது (மத்திய) அரசு சார்பில் செயல்படுத்திய ஆணை (Official Memorandum) யிலாவது இந்த கிரீமிலேயர் மூலம் வடிகட்டல் நடத்தப்பட்ட பிறகே, நியமனம் என்று கூறப்பட்டதா?

4. அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் 1951இல் (First Amendment) பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் போன்றவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டதில்,  Socially and Educationally  என்ற சொற்றொடர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளப்-படுத்தப் பயன்படுத்தப்பட்டன; ‘Economically’ என்பது நீண்ட விவாதத்திற்குப் பின், அதில் சேர்க்க மறுக்கப்பட்டது என்பதும் உண்மை அல்லவா?

5. 'கிரீமிலேயர்' என்ற மறைமுகமாக பொருளாதார அளவுகோல் ஏன் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு மட்டும் அடிப்படையாக இருக்க வேண்டும்?
மேல் அடுக்கான திறந்த _- பொதுப் போட்டி _- தொகுதிக்கும் கிரீமிலேயர் கிடையாது;

அடியில் உள்ள .C., S.T., என்ற தாழ்த்தப்-பட்ட மலைவாழ் மக்களுக்கான தொகுதியிலும் கிரீமிலேயர் புகுத்தப்படவில்லை; கிடையாது.
(இப்படி நாம் கேட்பதனால் அவர்களுக்கும் வைக்க வேண்டும் என்பது நம்முடைய வாதம் அல்ல).

6. பிற்படுத்தப்பட்டோரில் உள்ள _ மண்டல் பரிந்துரைப்படி _ 52 விழுக்காட்டில், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 27சதவிகிதம் தானே. அதாவது பாதி அளவுதான்! இதிலும் 'கிரீமிலேயர்' என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம்? இது சமூகநீதிக்கு விரோதமான-தல்லவா. (27 சதவீதத்திலும் இதுவரை 12 சதவீதத்துக்கு மேல் அவர்களுக்கு அளிக்கப்-படவில்லை என்பது கவனிக்கத்தக்கது)
7. பிற்படுத்தப்பட்டோரில் உள்ள வசதி படைத்தோரை இந்த இடஒதுக்கீடுகளை அனுபவிக்காமல் தடுக்கவே, பிற்படுத்தப்பட்-டோரில் உள்ள ஏழைகளைக் காப்பாற்றவே இந்த வடிகட்டல் என்பது அத்தரப்பு வாதமானால், நாம் ஒன்றைக்  கேட்கிறோம். பதில் கூறட்டும்!

எந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்  பாதிக்கப்பட்டு, ஆட்சியாளரிடமோ, நீதிமன்றங்களிடமோ முறையிட்டு, அதன்பின் ஆட்சியாளரோ, நீதிமன்றங்களோ ஆணை-யிட்டு, புள்ளி விவரப்படி மேல் தட்டு வர்க்கத்தினரே அத்தனை இடங்களையும் கபளீகரம் செய்து விட்டனர் என்று கண்டறியப்பட்டதனால், இப்படி கிரீமிலேயர் அளவுகோல் புகுத்தப்பட்டதா? இல்லையே!
8. விருந்தில் முதல் பந்தியே பரிமாறப்பட-வில்லை; (அதாவது 27 சதவிகிதம் அமுலாகாத நிலையில்) அதற்குள் அவர்களே எல்லா-வற்றையும் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மை-யாகுமா? அடாவடித்தனம் தவிர வேறு என்ன?

9. இந்திரா சஹானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தீர்ப்பு எழுதிய 5 நீதிபதிகளால் - வழக்கிற்கே சிறிதும் சம்பந்தமில்லாத 'கிரீமிலேயர்' என்பதை தனியே, யாரும் கேட்காமலேயே 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்பதுபோல வலிய புகுத்தப்பட்டது தானே இந்தக் கிரீமிலேயர்?

10. பொருளாதார அளவுகோல் அடிப்-படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்த அன்றைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் முடிவு செல்லாது என்று தெளிவாக அதே தீர்ப்பில் கூறி விட்டு கொல்லைப்புற வழியாகப் புகுத்தல் போல, இந்த 'கிரீமிலேயர்' நுழைக்கப்படுவது ஏன்? ஏன்?

இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று "தேசிய பிற்படுத்தப்-பட்டோர் கமிஷன்" அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது _- வற்புறுத்தியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
(இந்த ஆணையத்திற்குச் சட்ட ரீதியான அந்தஸ்து _ - இதுவரை கொடுக்கப்படாததும் ஓர வஞ்சனை, பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவா?)

ஆண்டுக்கு ஆண்டு வருமானம் கூடுவதும், குறைவதும் உண்டு. இது சரியான அளவுகோல் ஆகாது என்ற காரணத்தால்தான், அரசியல் சட்டப்பிரிவு, 1951இல் ஏற்பட்ட நாடளுமன்றக் குழு விவாதம் இவைகளில் எல்லாம் Economically என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட்டது; ஏனெனில் அது குழப்பம் உருவாக்கக் கூடியது. நிலையானவற்றை அளவுகோலாகக் கொள்வது-தானே அறிவுடைமை! மாறி மாறி வரும் நிலையற்றதை அளவுகோலாகக் கொள்வது அறிவுடைமையா?

ஆளுவோர் சிந்திக்கட்டும். கிரீமிலேயர் முறை _- அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்ற ஓர வஞ்சனை ஒழியட்டும் _- அணி திரள்வீர்!

கி.வீரமணி,
ஆசிரியர்
-உண்மை இதழ்,1-15.8.16

செய்ய முடியாத காரியங்களைச் செய்து முடித்தவர் பனகால் அரசர்!

தந்தை பெரியார்
தேடற்கரிய, ஒப்பு உயர்வு அற்ற நமதருமைத் தலைவர் கனம். பனகால் ராஜா சர். ராமராய் நிங்கவாரு திடீரென்று நம்மை விட்டு சனிக்கிழமை இரவு 1 மணிக்கு பிரிந்துவிட்டார் என்கின்ற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே இருக்காது. ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவு பெற்றதால், பெரியதும் திறமையானது மான ஒரு யுத்தம் முளைத்து வெற்றி குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்து திரும்பியபோது சேனாபதி இறந்து போய்விட்டார் என்ற சேதி கிடைக்குமானால் அந்தச் சமயத்தில் அப்போர் வீரர்களின் மனம் எப்படி துடிக்குமோ அதுபோல் நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டிய தில்லை. திரு. ராஜா சாஹேப் அவர்கள் நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும் பான்மையான தலைவர்கள் என்பவர்களைப் போல் கவலையும் பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில் கோவிந்தா போட்டுக் கொண்டு, பாமர மக்களின் அறியாமையை ஆதரவாய்க் கொண்டு, வெறும் வார்த்தைகளை மாத்திரம் அடுக்காகவும், அழகாகவும் பேசுவதும் எழுதுவதும் சமயம், சந்தர்ப்பம், அவசியம் ஆகிய ஒன்றையும் கவனியாமல் சர்க்காரை எதிர்த்தும், கண்டித்தும் பேசுவது போல் காட்டுவதும் ஆகிய காரியங்களாலேயே பெரிய தலைவர் பட்டமும், கீர்த்தியும், பெருமையும் பெற்று வாழக் கூடியதான ஒரு சுலபமான முறையைக் கைக்கொண்டு தலைவரானார் என்று யாரும் சொல்லிவிட முடியாது.
அன்றியும் மற்றொரு விதமாகியும் அதாவது பத்திரிகை-காரர்கள் தயவால் அதாவது, பத்திரிகைக்-காரர்களை திருப்தி செய்து அவர்களது லட்சியங்களுக்கு ஆயுதமாய் இருந்து அவர்களால் கை தூக்கி விடப்பட்டு, தலைவர் ஆனவரும் அன்றியும், மற்றொரு விதமாகவும் அதாவது ஆங்காங்கு கூலி ஆட்கள் பிடித்துக் கூலி கொடுத்து அவர்களைக் கொண்டு நாடு முழுவதும் தங்களை தலைவர்கள் எனக்-கூச்சலிடச் செய்து அதனாலேயே தலைவரான-வரும் அன்று. அன்றியும் பார்ப்பனர்களின் அடிமையாய் இருந்து உலக நலத்தின் பேரால், கலை நலத்தின் பேரால் மோட்ச நலத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால் என்று பார்ப்பன ஆதிக்கத்திற்கும் நலத்திற்கும் ஆளாயிருந்து அவர்களால் தலைவர் பட்டம் பெற்றவரும் அன்று.
மற்றென்னையோவெனில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இழிவாய்க் கருதப்பட்ட மக்கள் அதாவது தீண்டாதார், கீழ்சாதியார், ஈன சாதியார், சூத்திரர் என்பனவாகிய பிறவி இழிவும், பிறவி அடிமைத்தனமும் சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், சமத்துவத் திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும் வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர். அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற சமுகத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரசார கூலிகளுக்கும் விரோதி, இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும் படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும் படியான நிலையில் நெருப்பின் மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகுகஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கண-மாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். நமது தலைவர் பனகால் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்.
அது மாத்திரமல்ல, நமது தலைவரின் தொண்டில் அவருக்கு உற்ற துணையாகவாவது உதவியாகவாவது யாராவது இருந்தார்களா என்று பார்ப்போமானால், ஒருவரைக்கூட உறுதியாய்ச் சொல்லமுடியாது இவருக்கு முன்னைய தலைவர்களான டாக்டர். நாயர், சர். தியாகராயர் ஆகியவர்களுக்கு நமது ராஜா போன்ற உள்ளன்போடு மனப்பூர்வமாய் பின்-பற்றுகின்றவர்கள் அநேகர்கள் இருந்தார்கள். ஆனால் நமது ராஜாவுக்கு யார் இருந்தார்கள்? ஒருவரும் இல்லையே என்று சொல்லுவதுடன் மாத்திரம் நில்லாமல் உள்ளுக்குள்ளாகவே எதிரிகள் சதா குற்றம் சொல்லிக் கொண்டு, பழி சுமத்திக் கொண்டும் அவரது தலைமையைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்து கொண்டும், அவரைச் சுற்றிலும் அவரது சொக்காய்ப் பையிலும் இருந்தார்கள். பின்னை எப்படி ராஜாவுக்கு கட்சியும் ஆள்பலமும் இருந்தது என்று யாராவது கேட்பீர் களானால், அதற்கு பதில், அவருடைய தனி சாமார்த்தியத்தால், புத்திசாலித் தனத்தால், இராஜதந்திரத்தால், சிலரை தான் சொல்லுகின்றபடி கேட்டுத் தீரவேண்டிய நிலையில், வைத்துக் கொண்டிருந்-தார் என்றுதான் சொல்ல வேண்டும். அன்றியும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் எனினும் கூட்டத்தாரில் பனகால் அரசரால் அதிருப்தி அடையாதவர்களோ ஏமாற்றமடையாதவர்-களோ, அவர் மீது வெறுப்புக் கொள்ளாதவர்-களோ ஒருவர் இருவராவது உண்டு என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது! ஏனெனில் அவர் ஒரு அருமையான சாதனத்துக்கு பாடுபட்டதினால் அது ஏதாவது கடுகளவாவது பயன் அளிப்ப தானாலும் அந்தப் பலன் அனுபவிப்பதில் ஏற்படும் சண்டைகளும் போட்டிகளும், அபிப்பிராய பேதங்களும் ராஜா சாஹேபை அநேகருக்கு விரோதியாகவும் அதிருப்தி கொள்ள வேண்டியவராகவும் செய்து விடுகிறது. இந்த நிலையில் அவர் மேல்கொண்ட தொண்டில் ஒரு தனி வீரராய் நின்று போர் புரிந்தார் என்றுதான் சொல்லியாக வேண்டும்.
அப்படியிருந்தாலும் எதிரிகளால் அடிக்கடி அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளை சமாளிப்-பதில் வழிதவறிப்போவது மனிதத் தன்மைக்கு விரோதமாக ஆவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யாமல் ஒரு சுத்த வீரனைப் போலவே நின்று கருமம் ஆற்றியவர். எந்த சமயத்திலும் மனம் கலங்கியோ அல்லது யாருக்காவது பணிந்தோ அல்லது தலை குனிந்தோ நின்றவரல்ல.
உதாரணமாக, அவரது தலைமை வாழ்வு இந்த பத்து வருஷத்திற்கு உள்ளாக மூன்றுவித பரிட்சைக்கும் ஆளாகிற்று. அதாவது ஒரு சமயத்தில், முதல் மூன்று வருஷத்தில் அவருக்கு அதிகாரமும் செல்வாக்கும், அதாவது மந்திரி அதிகாரமும் கட்சி செல்வாக்கும் இருந்தது. இரண்டாவது, மூன்று வருஷத்தில் உள்ளுக்-குள்ளாகவே கட்சி ஏற்பட்டதால் செல்வாக்கு இல்லாத அதிகாரம், அதாவது கட்சி செல்வாக்கில்லாத மந்திரி அதிகாரம் மாத்திரம் இருந்தது. மற்றொரு சமயத்தில் மூன்றாவது மூன்று வருஷத்தில், உள்கலகத்தை எதிரிகள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டதால் அதிகாரமும் செல்வாக்கும் இரண்டும், அதாவது கட்சி செல்வாக்கும் மந்திரி அதிகாரமும் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் முக்காலத்திலும் அவர் செய்ய வேண்டியதை தைரியமாகவும் ஒரே மாதிரியாகவுமே செய்து வந்தார் என்று சொல்லியாக வேண்டுமேயொழிய எப்போதா-வது களைத்துப் போயோ மனமுடைந்து சோர்ந்து விட்டார் என்று சொல்ல முடியாது. மேலும், அதிகாரமும் செல்வாக்கும் இல்லை என்று சொல்லும் படியான மூன்றாவது மூன்று வருஷமான நிகழ்காலத்தில் மந்திரி வேலையுமில்லாமல் கட்சி செல்வாக்கு-மில்லாமல் முன் ஆறு வருஷத்தில் செய்ய முடியாதகாரியங்கள் அநேகம் செய்து முடித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனாலேயே நமது பனகாலரசரின் பெருமையும் சாமார்த்தியமும் விளங்கும்-படியான சம்பவங்கள் நடந்து கொண்டே வந்தன.
(23.12.1928 - குடிஅரசு - தலையங்கத்திலிருந்து)
-உண்மை இதழ்,16-31.7.16

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி - ஓ.தணிகாசலம்

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.  முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் சென்றவர் - முதன்முதலில் சட்டமன்றத் துணைத் தலைவர் என்ற பெருமைகளுக்கு உரியவர்.
நீதிக்கட்சியின் பிரதமர் பனகல் அரசரின் உதவியால் லண்டன் சென்று மருத்துவ மேற்படிப்பை மேற்கொண்டார். சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலேயே அவுஸ் சர்ஜனாகப் பணியாற்றினார். நீதிக்கட்சி ஆட்சியில், சுப்ராயன் பிரதமராக இருந்தபோது 1929 பிப்ரவரி 2ஆம் நாள் பெண்களைக் கோயில்களில் பொட்டுக் கட்டி விடும் தேவதாசி முறை ஒழிப்புக்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்தார். சத்தியமூர்த்தி போன்ற தேசியப் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். தந்தை பெரியாரோ பேராதரவு காட்டினார்.
“தொன்று தொட்டு வருவது தேவதாசி முறை; தேவதாசியாக இருப்பதால் அடுத்த ஜன்மத்தில் மோட்சம் கிடைக்கும்’’ என்றார் சத்தியமூர்த்தி அய்யர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் “இதுவரை எங்கள் சமூகம் மோட்சம் பெற்றது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து மோட்சத்தை அடையலாமே!’’ என்று பதிலடி கொடுத்தார் முத்துலட்சுமி அம்மையார். சத்தியமூர்த்தி அய்யர் வாயடைத்து நின்றார். சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அவர் அடிக்கல் இட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, அடையாறு ஆலமரம் போல ஆதரவு கரங்கள் நீட்டி, ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கிறது. இத்தனை சிறப்புகளுக்கும் உரிய அம்மையார் அவர்கள் 1968 ஆம் ஆண்டு ஜூலை 22 இல் உயிர் நீத்தார்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓ.தணிகாசலம்
ஓ.தணிகாசலம் செட்டியார் 1875ஆம் ஆண்டில் வடசென்னையில் பிறந்தவர். மிகச் சிறந்த வழக்குரைஞர்.
நீதிக்கட்சியின் முக்கிய தலை வராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும், நீதிபதி யாகவும் ஒளி வீசிய பெருமகனார் இவர்.  இவர்தான் முதன்முதலில் 1921இல் வகுப்புரிமை தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். சென்னை தியாகராயர் நகர் பகுதியில் ஒரு தெரு ஓ.தணிகாசலம் (செட்டியார்) என்ற பெயரில் விளங்குகிறது.
1875இல் பிறந்த தலைசிறந்த நீதிக்கட்சித் தமிழரான இவர் 29.7.1929 மறைவுற்றார்.
-உண்மை இதழ்,16-31.7.16