பக்கங்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

முலை வரிக்கு எதிராய் தன் முலையையே அறுத்து கொடுத்த இளம்பெண்


முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள்.
அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள்  மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது.
இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜ்யம்தான். நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.
இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.
தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.
இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கர்ணம் என்று பெயர்.
தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது.
மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.
‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.
நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.
ஒரு வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.
மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்கள் என்று உணர்த்திச் சென்றாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.
பின்னர் இந்தப் போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்க ஜாதியினர். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.
ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது.
முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார்.
அந்த ஊர் மக்கள்  ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரைப் பாராட்டுகின்றார்கள்.
இந்த இடம், இடம்பெறும், சேர்த்தலாதான் முன்னாள் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அவர்களின் சொந்த ஊர்.
இந்த வரலாறு பேணப்பட வேண்டும், அழகி நாங்கிலிக்கு நினைவிடம் ஒன்றும் எழுப்பப்பட வேண்டும் என்பது அந்த மக்களின் வேண்டுகோள்.
- டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7.3.2016

--உண்மை,16-31.5.16

மகன் திருமணத்தில் 18,000 விதவைகளை வாழ்த்தச் சொன்ன தொழிலதிபர்!

குஜராத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு 18 ஆயிரம் விதவைப் பெண்களை வரவழைத்து வாழ்த்த வைத்துள்ளார்.
என்னதான் நாம் 21ஆம் நூற்றாண்டில் இருந்தாலும் பகுத்தறிவும், பெண்ணுரிமையும், விதவை மணமும் பேசப்பட்டாலும் இன்றும் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் விதவைப் பெண்கள் கலந்து கொள்வது விரும்பப்படுவது இல்லை. காரணம் அவர்கள் அபசகுனமாகப் பார்க்கப்படுகிறார்கள். அமங்கலமாக எண்ணப்படுகிறார்கள்.
எனவே, மங்கல நிகழ்வில் விதவைகள் வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் திருமணத்தன்று தனது மகனை வாழ்த்த 18 ஆயிரம் விதவைப் பெண்களை வரவழைத்துள்ளார். குஜராத் மாநிலம் மெஹ்சனாவை சேர்ந்தவர் ஜிதேந்திர பட்டேல். தொழில் அதிபர். ஏழை, எளிய மக்களுக்கு உதவி வரும் அவரை அனைவரும் ஜித்துபாய் என்று அன்போடு அழைக்கிறார்கள். அவரது இளைய மகன் ரவிக்கு கடந்த புதன்கிழமை தேரோலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்து மகனை வாழ்த்துமாறு வடக்கு குஜராத்தில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் விதவைப் பெண்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட விதவைப் பெண்கள் மணமக்களை மனதார வாழ்த்தினர். அவர்களுக்கு ஜித்துபாய், போர்வை, பசுமாடு மற்றும் மரக்கன்றுகளைப் பரிசாக அளித்தார்.
இது குறித்து ஜித்துபாய் கூறுகையில்,   என் மகனை சமூகத்தால் ஒதுக்கப்பட்ட விதவைப் பெண்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். சுபகாரியங்களில் விதவைகள் கலந்து கொள்வது கெட்ட சகுனம் என்று நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கை பொய் என்பதை நான் நிரூபிக்க நினைத்தேன் என்றார்.
ஜித்துபாயின் நல்ல உள்ளத்திற்கும் மனிதநேய மாண்பிற்கும், சிந்தித்த முயற்சிக்கும் நமது பாராட்டுக்கள். பலரும் இவரைப் பின்பற்றினால் மனிதம் மலரும்; பெண்ணிழிவு நீங்கிப் பெண்கள் பெருமை பெறுவர்.
-உண்மை,16-28.2.16