பக்கங்கள்

திங்கள், 30 நவம்பர், 2015

ஏற்றத்தாழ்வுகள் நீங்கினால் தான் புதிய சமுதாயம் படைக்க முடியும்


பெங்களூரு, நவ.18 ஏற்றத்தாழ்வுகள் நீங்கி னால் தான் புதிய சமு தாயத்தை படைக்க முடியும் என்று கர்நாடக மேல்-சபையில் சித்தராமையா கூறினார்.
கர்நாடக மேல்-சபை அரங்கத்திற்குள் அம்பேத்கர் மற்றும் பசவண்ணர் ஆகியோரின் உருவப்படங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு, அவர்களின் உருவப்படங்களை திறந்து வைத்து பேசியதாவது:-
12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணர், ஜாதி முறைக்கு எதிராக போரா டினார். 20-ம் நூற்றாண் டில் அம்பேத்கர் சமத்துவ சமுதாயத்தை படைப் பதற்காக போராடினார். இந்த 2 தலைவர்களும் ஜாதி முறைக்கு எதிர்ப்பு, சமத்துவம், சமூகநீதிக்காக போராடிய மகான்கள் ஆவார்கள். ஜாதியற்ற நிலையை உருவாக்க நாம் எவ்வளவு முயற்சி செய் தாலும், இந்த சமுதாயத்தில் ஜாதி என்கிற வேர் ஆழ மாக வேரூன்றி உள்ளது.
ஜாதிகளை அவ்வளவு எளிதாக ஒழிக்க முடியாது. சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஏற்றத் தாழ்வுகளை நீக்க நாம் இணைந்து பாடுபட வேண்டும். இந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கினால் தான் புதிய சமுதாயம் படைக்க முடியும். 12-ஆம் நூற்றாண்டில் அனுபவ மண்டபத்தை தொடங்கி ஜனநாயகத்திற்கான விதையை விதைத்தவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பசவண்ணர் தான் தொடங்கிய அமைப் புக்கு ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த அல்லம் பிரபுவை தலைவராக நியமனம் செய்தார். ஏழை-பணக்காரர், ஜாதி பாகு பாடு இல்லாமல் அனை வருக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும் என்று அம்பேத்கரும், பசவண்ணரும் போராடி னார்கள். அவர்களின் கொள்கைகள் மற்றவர் களுக்கு வழிகாட்டி ஆகும்.
இவ்வாறு சித்த ராமையா பேசினார்.
-விடுதலை,18.11.15

வெள்ளி, 27 நவம்பர், 2015

மக்கள் தொகை பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சிதான் அமல்படுத்தியது



ஓர் அரசாங்கத்தின் சாதனை என்பது என்ன? சப்பாத்தி போடுவதா, இட்லி போடுவதா, எங்கோ ஒரு தட்பவெப்ப நிலையில் வளர்ந்த ஆட்டை வாங்கிவந்து நம் தலையில் கட்டுவதா, வரிசையில் நின்று வாங்கிய வேகத்தில் சித்தூருக்குக் கொண்டுபோய் தெருவில் நின்று கூவி விற்கும் அளவுக்கு மோசமான கிரைண்டர் மிக்ஸி கொடுப்பதா, கட்சி மூலமாகச் செய்ய வேண்டி யதை எல்லாம் ஆட்சி மூலமாகச் செய்துகொண்டு. 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே! என்று நடந்துகொள்வதா?

எது ஆட்சி? ஒர் ஆட்சி, எப்படி இருக்க வேண்டும்? இரட்டையாட்சிமுறைப்படி சென்னை மாகாணத்தில் 1920இல் நடந்த முதல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த நீதிக்கட்சி நடத்தியதே. அதுதான் ஆட்சி. மாளிகையில் மன்னன் இருந்தாலும் மண் குடிசையில் மனசு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் கையில் ஆட்சி இருந்தால் அந்த ஆட்சி காசு பார்ப்பதாக மட்டும் இல்லாமல் மக்கள் மாசு துடைப்பதாக அமையும்.

ஏழைகளைப் பற்றி அறிய ஏழையாகப் பிறந்திருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. ஒடுக்கப்பட்டவர் களது துன்பம் உணர ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந் திருக்க வேண்டும் என்பது விதி அல்ல.... ‘ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண்தான் புரிந்துகொள்ள முடியும்’ என்பதைப் போல பிற்போக்குவாதம் எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் ஆட்சியில் ஒரு பெண்ணே, அதுவும் டி.எஸ்.பி. அதிகாரத்தில் இருந்த பெண்ணே தற்கொலை செய்து கொண்டு செத்துப்போகும் தலைஎழுத்து இருப்பதை எந்தக் கோயிலில் போய்ச் சொல்வது? வாழும் நிலத்தின் மணத்தையும் குளத்தையும் இதயத்துக்கும் மூளைக்கும் எவனொருவன் கொண்டு செல்கிறானோ அவனால்தான் எல்லார் துன்பங்களையும் உணர முடியும் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியது வேப்பமரம் அல்ல, வள்ளலார்தான். அருட் பெருஞ் ஜோதிக்கு மட்டும்தான் தனிப்பெரும் கருணை இருக்க வேண்டுமா என்ன? அது எல்லா ஆட்சியாளர் களுக்கும் இருக்க வேண்டியது. நீதிக் கட்சியில் இருந்தவர்கள் ஏழைகள் அல்ல. அன்றாடச் சாப்பாட்டுக்கு அலைந்த கூலிகள் அல்ல. வறுமையின் வாசலைத் தொட்டவர்கள் அல்ல. நெசவுத் தொழிலும் தோல் பதனிடும் தொழிலும் வைத்திருந்து தனக்குச் சொந்தமான இடங்களைப் போய்ப் பார்க்க சாரட் வண்டியில் பயணப்பட்டவர் சர்.பிட்டிதியாகராயர். தரவாட் மாதவன் நாயரும், நடேசனாரும் சொந்தக்காசை கட்சிக்குச் செலவழிக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற மருத்துவர்கள்.

அந்தக் கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் யார்? பனகல் ராஜா பி.ராமராய நிங்கார், பொப்பிலி ராஜா ராமகிருஷ்ண ரங்காராவ், வெங்கடகிரி மகாராஜா வேணுகோட்டி கோவிந்த கிருஷ்ணா யகேந்திரருல, லாரு பகதூர் டெலப்ரோல் ஜமீன்தார் ராஜா ரங்காராவ், ஊத்துக்குளி ஜமீன்தார் எம்.ஆர்.காளிங்கராயர், சிங்கம்பட்டி ஜமீன்தார், செல்லம்பள்ளி ராஜா ரீமந் ராஜா. ராமநாதபுரம் ராஜா ராஜேஸ்வர சேதிபதி என்கிற முத்துராமலிங்க சேதுபதி, சூனாம்பேடு ஜமீன்தார் சி.அருணாசல முதலியார். ராஜாசர் அண்ணாமலை செட்டியார், ராஜாசர் முத்தையா செட்டியார், விருதுநகர் வி.வி.ராமசாமி, ஆயக்குடி ஜமீன்தார், மீனாம்பள்ளி ஜமீன்தார் கே.சி.எம். வெங்கடாசல ரெட்டியார்... என்று ஜமீன்தார்களும், ராஜாக்களும், நிலச்சுவான்தார் பண்ணை களும், பணக்காரர்களும் பங்கெடுத்த கட்சி, நீதிக்கட்சி. ஆட்சியில் உட்கார்ந்தவர்களும் இவர்கள்தான்.

அரசாங்க ஆவணங்களின் கிடங்கில் 1921 முதல் 1926 வரை நீதிக்கட்சி ஆட்சியால்நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை, சட்டங்களை, விதிமுறைகளை எடுத்துப் பார்த்தால் இந்தப் பணக்கார ஜமீன்தார்கள் எல்லாம் சேர்ந்து பாவப்பட்ட மக்களின் கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றி இருப்பதை உணர முடியும்.

“தென்னிந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் ஒவ்வொன்றும் கல்வி, சமூகவியல், பொருளியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துறைகளில் முன்னேற்றம் அடையச் செய்தலே நமது கட்சியின் லட்சியம்' என்று டி.எம்.நாயர் போட்டுக்கொடுத்த பாதையில் பயணித்தது அந்தக் கட்சி. கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்துச் சமூகத்தினருக்கும் அவர்களது மக்கள்தொகை பிரதிநிதித்துவத்தின் அடிப் படையில் சம வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதை நீதிக் கட்சி ஆட்சிதான் அமல்படுத்தியது. ஆனாலும் இது நீதிக் கட்சியின் கண்டுபிடிப்பு அல்ல.
1854-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி பிரிட்டிஷ் அரசு, சென்னை மாகாணத்தில் இருந்த மாவட்ட கலெக்டர்களுக்கு ஒர் உத்தரவைப் பிறப்பித்தது. அரசாங்கத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது அனைத்துச் சாதியில் இருந்தும் பரவலாக எடுக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவின் மய்யக்கரு. உத்தரவு போட்டது பிரிட்டிஷ் அரசு. ஆனால், அதனை இங்கிருந்தவர்கள் அமல்படுத்தவிடாமல் தடுத்துக் கொண்டு இருந்தார்கள். இந்த ஆணையை உடைத்தது நீதிக் கட்சி ஆட்சி. 1921 செப்டம்பர் 21-ஆம் நாளும், 1922 மே 15-ஆம் நாளும் பிறப்பிக்கப்பட்ட வகுப்புரிமை தீர்மானங்களே அதுவரை அரசு நிர்வாகத்துக்குள் போகாமல் தடுக்கப்பட்ட வர்களுக்கு வாசலைத் திறந்தது.

அந்தக் காலத்தில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை என்பது அந்தந்த கல்லூரி முதல்வர்களின் விருப்பமாக இருந்தது. சாதி பார்த்து, நிறம் பார்த்து, உறவு பார்த்து, யாரையும் சேர்க்கலாம், தடுக்கலாம். முதன்முதலாக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தேர்வுக்குழு போட்டு அந்தக் குழுவே மாணவர்களைத் தேர்வு செய்யும் சட்டம் கொண்டு வந்ததும் நீதிக் கட்சிதான். மருத்துவம் முழுக்க முழுக்க அய்ரோப்பியர் வசம் இருந்தது. அதில் இந்தியர்களைப் புகுத்தும் சட்டத்தை நீதிக் கட்சியே எடுத்துவந்தது.மருத்துவம் படிப்பவர்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விநோதமான விதி இருந்தது. அதனை நீதிக் கட்சி நீக்கியது. சித்த மருத்துவத்துக்கு கல்வி நிலையம் உருவாக்கியதும் நீதிக் கட்சி ஆட்சியே.

சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துத் தண்ணீர் எடுக்கும் கிணறுகளிலும் பொதுச் சத்திரத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பஞ்சமர்களுக்கும் உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பட்டியலின மக்களின் தலைவர் எம்.சி.ராஜா 1919-ல் தீர்மானம் கொண்டு வந்தபோது, அன்றைய உள்துறை அமைச்சர் சர் சைக்ஸ் தோதுண்டா மறுத்தார். இதில் அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது' என்று கை விரித்தார். மத விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று கவர்னர் வில்லிங்டன் தட்டிக் கழித்தார். இதே மாதிரியான தீர்மானத்தை பீதாபுரம் மகாராஜாவும், பட்டிவீரன்பட்டி டபிள்யூ பி.ஏ.சௌந்தரபாண்டியனும் கொண்டு வந்தார்கள் இரட்டைமலை சீனிவாசன் இதே தீர்மானத்தை எடுத்து வந்தார். நீதிக் கட்சி ஆட்சியின் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர், சமத்துவ சமுதாயத்தை உருவாக்க எந்தத் தீர்மானத்தையும் கொண்டுவரலாம் என்றார். 1924-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் நாள் இது தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.
பஞ்சமர் என்ற சொல்லை நீக்கி. ஆதிதிராவிடர் என்ற பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் களுக்கு வேளாண்மை செய்வதற்காக நிலம் ஒதுக்கும் முடிவை மாவட்ட கலெக்டர்கள் எடுக்கலாம் நிலங்களைப் பெறுபவர்கள் ஆதிதிராவிடர்களுக்கு மட்டுமே விற்கலாம் என்றும் ஒரு பள்ளிக் கூடத்துக்கான இடத்தை கையகப் படுத்தும்போது அது ஆதிதிராவிட மற்றும் இதர மக்கள் வந்து செல்லும் இடத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றும் பெண்களுக்குக் கழிப்பறை கட்ட எந்த நிலத்தைக் கைப்பற்றலாம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியது நீதிக் கட்சி ஆட்சி.

கோயில்களையும், அறநிலையங்களையும் ஒழுங்குப் படுத்தும் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்ததும் நீதிக் கட்சி ஆட்சியே. இது நீதிக் கட்சியின் சிந்தனையில் உதித்தது அல்ல. மதுரையில் இருந்து செயல்பட்டு வந்த தரும இரட்சண சபை அல்லது அறக்கட்டளை பாதுகாப்புச் சங்கம் என்ற இயக்கம் 1907ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்த கருத்து இது. பெரும்பாலும் பிராமண வழக்கறிஞர்கள் உறுப்பினராக இந்த அமைப்பில் இருந்ததாக அந்தக் காலத்து மெட்ராஸ் மெயில் பத்திரிகை சொல்கிறது. இவர்களது கோரிக்கையைத் தான் நீதிக் கட்சி செயல்படுத்தியது. இந்தச் சட்ட முன்வடிவை உருவாக்கிக் கொடுத்தவர் அன்றைய சட்டமன்ற சிறப்பு உறுப்பினராக இருந்த என்கோபால்சாமி அய்யங்கார் இவர் பிற்காலத்தில் நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதி சர்.டி.சதாசிவ அய்யர் இருந்தார்.

சென்னை பப்ளிக் சர்விஸ் கமிஷனை உருவாக்கியதும், கட்டாயக் கல்வியை சட்டம் ஆக்கியதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதும், நீதிபதிகளில் தகுதிவாய்ந்த இஸ்லாமியரை நியமிக்க வேண்டும் என்றதும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக் கட்டணம் கட்டினால் போதும் என்றதும் லேபர் கமிஷனின் எல்லையை விரிவு படுத்தியதும், தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் சமூகத்தினருக்குப் பள்ளிகள் திறந்ததும். எனச் சொல்லிக்கொண்டே போகலாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி குப்பத்தில் குடிப்பழக்கம் அதிகமாக இருந்தது என்பதால், அங்கிருந்த தொழிலாளர்களுக்கு சிற்றுண்டிச் சாலை அமைத்துக் கொடுத்து அவர்கள் மனதை சிறு தொழில் பக்கம் திருப்பிய ஆட்சியையும் தீபாவளிக்கு டாஸ்மாக் இலக்கை ஆண்டுதோறும் அதிகப்படுத்திக் கொண்டு போகும்.ஆட்சியையும் நினைத்துப்பார்க்கும் போது  எங்கே தொடங்கி எங்கே வந்து நிற்கிறோம் என்ற குற்ற உணர்ச்சிதான் மனதைப் பிடித்து ஆட்டுகிறது.

அன்றைய ஜமீன்தார்கள் சாமானியர்களைப் பற்றி யோசித்தார்கள். இன்றைய சாமானியர்கள் அமைச்சர்கள் ஆனதும் ஜமீன்தார் துரைத்தனத்துடன் நடந்துகொள் கிறார்கள்.
திருநின்றவூரில் பிரேமா  மெடிக்கல் ஷாப் வைத்திருந்த பி.வி.ரமணா இன்று பால்வளத் துறை அமைச்சர் சக்தி முருகன் ரோடுவேஸ் வைத்து மணல் லாரி ஒட்டிக்கொண்டிருந்த தோப்பு வெங்கடாசலம், இன்று சுற்றுச்சூழல் அமைச்சர். சேலம் எடப்பாடியில் வெல்ல மூட்டைகள் வியாபாரம் பார்த்து வந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர். ஒரத்தநாடு பன்னீர் சைக்கிள் கடை நண்பர்கள் உதவியால் தேர்தலில் நின்ற ஆர்.வைத்தி லிங்கம் விட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை அமைச்சர். மதுரை தியாகராயர் கல்லூரியில் படித்துக்கொண்டே மதுரை பேருந்து நிலையத்தில் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில் பகுதி நேர வேலைபார்த்து வந்த ஆர்.பி.உதயகுமார் வருவாய்த் துறை அமைச்சர்.

இப்படி எல்லோருமே அடித்தட்டில் இருந்து வந்தவர்கள். இது கேவலம் அல்ல. சாமானியர்கள், அதிகாரத்தைப் பிடிப்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை அழகு. அப்படிக் கைப்பற்றுபவர்கள் கால் நிற்கும் தரையை மறந்து தலை முட்டும் கனத்தோடு வலம் வருவது நல்லாட்சியின் இலக்கணமா, பொல்லாட்சியின் இலக்கணமா?
- நன்றி ஜீனியர் விகடன் (25.11.2015)
-விடுதலை,20.11.15

நீதிக்கட்சி தமிழுக்கு என்ன செய்தது?


திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் தமிழுக்கு என்ன செய்துவிட்டது என்று கேள்வி எழுப்பு வோர்க்கூட நாட்டில் முளைத்திருக்கிறார்கள். ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும் அல்லது கெட்ட நோக்கம் இருக்கவேண்டும்.
1857 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சென்னைப் பல் கலைக் கழகத்தில் தமிழுக்கு இடம் கிடைக்கச் செய் வதற்குக்கூட திராவிடர் இயக்கம்தான் காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், பி.ஏ. படிப்பதாக இருந்தாலும், இண்டர்மீடியட் படிப்பதாக இருந்தாலும், ஒரு செம்மொழி கட்டாயம் படித்திருக்கவேண்டும் என்ற போர்வையில் சமஸ்கிருதம் கட்டாயப் படிப்பாகி விட்டது.
தமிழ் - சமஸ்கிருதம் என்பதை மய்யப்படுத்தி சென்னைப் பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமே நீண்ட காலம் நடந்து வந்தது.
இதுபற்றி கு.நம்பி ஆரூரான் எழுதிய தமிழ் மறு மலர்ச்சியும் திராவிடத் தேசியமும் (மொழி பெயர்ப்பு, க.திருநாவுக்கரசு, ப.ஆனைமுத்து கிருஷ்ணன்) எனும் ஆய்வு நூல் அரிய தகவல்களைத் திரட்டித் தந்துள்ளது.
இந்த 1916-1917 காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் முளைத் தெழுந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே மொழியியல் அடிப்படையில் தொடர்ந்து பேசப்பட்டு வந்ததால், மூண்டெழுந்த திராவிட இன உணர்வை ஒருமுகப்படுத்தி வெளிப்படுத்த இது ஒரு வாய்க்காலாகப் பயன்பட்டது. சமஸ்கிருத ஆதரவாளர்களுக்கும், தாய் மொழிப் போராளிகளுக்கும் இடையே எழுந்த கருத்து மோதல்கள் - ஜாதி இனப் பூசல்களாக அடையாளப் படுத்தப்பட்டன.
பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியுடனும், பார்ப்பனர் அல்லாதார் தமிழ், பிற மாநிலத் தாய் மொழிகளுடனும் இணைத்துப் பேசப்பட்டார்கள்.
பி.ஏ. பட்டப் படிப்பில் கட்டுரைப் பாடமும், பி.ஏ. ஆனர்ஸ் படிப்புத் தொகுதியில் திராவிட மொழிகளைப் பயிலும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தரவேண்டும் என வேண்டி, வைஸ்ராய்க்கு ஒரு விண்ணப்பம் எழுதி அளிக்கவேண்டும் என்று 1918 இல் சென்னைத் திராவிட சங்கம் ஏற்பாடு செய்தது. அய்.சி.எஸ். தேர்விற்கான பாடத் திட்டத்தில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக வைக்கப்பட வேண்டுமென்று இலண்டனில் உள்ள இம்பீரியல் கவுன்சில் நிர்வாகத்திற்கு வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அளிக்க இருக்கும் விண்ணப் பத்தில் திராவிட மொழிகளையும் சேர்க்கவேண்டும் என்று சென்னைத் திராவிட சங்கம் வைஸ்ராய்மூலம் ஒரு கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வந்தன. பின் னாளில் பனகல் அரசர் என்று அறியப்பட்ட பி.இராமராய நிங்கர் திராவிட சங்கத்தின் அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டு பேசுகையில், பார்ப்பனர் அல்லாத மக்களுக்குத் திராவிட மொழிகள்தான் முதன்மையானவை. சமஸ் கிருதத்தை ஏற்பதில் பல வகையான சமயம் சமூகம் சார்ந்த சங்கடங்களும், சிக்கல்களும் உள்ளன (மேற்கண்ட நூல் பக்கம் 138).
சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பி.ஆர்.சுந்தரம் அய்யர் இண்டர் மீடியட் தேர்வில் இரண்டாம் மொழி பாடத்துக்கான (தாய் மொழியில் - அதாவது தமிழில்) கட்டுரைத் தாளை நீக்கிவிடவேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு ஆதரவாக 22  வாக்குகளும், எதிர்த்து 15 வாக்குகளும் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. பல்கலைக் கழகம் அமைத்த ஆய்வுக் குழுவின் அறிக் கையைக் குறிப்பிட்டு, சமஸ்கிருதக் கல்வியை ஊக்குவிப் பதற்காக இண்டர்மீடியட் வகுப்பில் தாய்மொழிக் கட்டு ரைத் தாளைத் தேர்விலிருந்து நீக்கவேண்டும் என்று கடுமையாக வாதிட்டார்.
தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய சி.ஜோதிராவ் இந்தியாவின் இலக்கியம், தத்துவம், சமயம் ஆகிய எல்லாமே சமஸ்கிருதத்தோடு பின்னிப் பிணைந்து கிடக் கின்றன. சமஸ்கிருத மொழியறிவு இல்லாமல் இவற்றை யெல்லாம் எப்படிக் கற்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
இப்படிப் பச்சையாக தமிழ் - சமஸ்கிருதப் போராட்டம் - பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாக அந்தக் காலத்தில் நடந்து வந்திருக்கிறது.
நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு - தமிழின் கை ஓங்கியது.
1923 இல் நீதிக்கட்சி ஆட்சி இயற்றிய சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் - சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் அமைப்பையே புரட்டிப் போட்டு, பல்கலைக் கழக சிண்டிகேட்டின் நடவடிக்கைகளை மேலாய்வு செய்யும் அதிகாரத்தையும் வழங்கியது. உண்மையில் இதுதான் திருப்புமுனையாகும்.
நீதிக்கட்சித் தலைவர்கள் ஆர்.வெங்கட் ரத்தினம் நாயுடு, என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் இப்படிப் பல பார்ப்பனர் அல்லாத அறிஞர் பெருமக்கள் போராடிப் போராடித்தான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம்பெற வழிவகுத்தார்கள்.
தமிழில் வித்வான் பட்டம் பெறுவதற்குக்கூட சமஸ் கிருதம் படிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது என்றால், அக்கால நிலையைப் புரிந்துகொள்ளலாமே!
மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300. தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயம் முதலியாருக்கோ மாதச் சம்பளம் ரூ.81. என்ன கொடுமை இது! இதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் - மாற்றி அமைத்தவர் நீதிக்கட்சி முதலமைச்சர் பனகல் அரசர்.
இந்த வரலாறுகளை எல்லாம் தெரிந்துகொள்ளாமல் தமிழுக்கு நீதிக்கட்சி என்ன செய்தது - திராவிடர் இயக்கம் என்ன செய்தது - பெரியார் என்ன செய்தார் என்று கேட்பது அறியாமை அல்லது அழுக்காறாகத்தான் இருக்க முடியும்.
-விடுதலை,25.11.15

நீதிக்கட்சி முதலாளிகளுக்கானதா?


நீதிக்கட்சியா - அது மிட்டா மிராசுதார், ஜமீன்தார்கள், முதலாளிகளின் கட்சி, உயர்ஜாதிக் கட்சி என்று சகட்டு மேனிக்குக் குற்றப் பத்திரிகை படிப்போர் உண்டு.
பார்ப்பனர்களின் ஏகபோகத்தில் இருந்து வந்த கல்வி, வேலை வாய்ப்புகளில் கை வைத்ததாலும், குறிப்பாகக் கல்வியில் தாழ்த்தப்பட்டோருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புக் கொடுத்ததாலும், தீண்டாமை அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பார்ப்பனீய வருணதரும அமைப்பின் வேரில் திராவகத்தை ஊற்றியதாலும், பொதுக் கிணறு, பொதுக் குளம், பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் புழங்க இருந்த தடை நீக்கப்பட்டதாலும், தடை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று நீதிக்கட்சி சட்ட ரீதியாகப் பல ஏற்பாடுகளைச் செய்ததாலும் நீதிக்கட்சியின்மீது எதையாவது தூக்கிப் போட்டு பழி சுமத்தவேண்டும் என்ற வெறியில் கிளப்பி விடப்பட்ட உண்மைக்கு மாறான அழிபழி இது என்பதுதான் உண்மை.
நீதிக்கட்சியில்  நிலச் சுவன்தாரர்கள், மிட்டா மிராசுதாரர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் உண்மைதான்; ஆனால், அவர்கள் யாருக்காகப் பாடுபட்டார்கள்? அவர்கள் நடத்திய மாநாட்டின் தீர்மானங்கள் என்ன? ஆட்சியில் நிறைவேற்றிய சட்டங்கள் என்ன? திட்டங்கள் என்ன? என்பதை அறிவு நாணயத்தோடு திறந்த கண்களோடு எடை போட்டுப் பார்க்கவேண்டாமா?
நீதிக்கட்சித் தலைவர்கள் பொதுவாழ்வில் தங்கள் சொத்துக்களை இழந்தவர்கள் ஆயிற்றே!
அவர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இனாம்தாரர் ஒழிப்புச் சட்டம், லேவாதேவி சட்டம், கோவில் சொத்துக்களை தேவஸ்தான நிதிகளை பொதுநலப் பணிகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்கிற சட்டங்கள் எவற்றை அடிப் படையாகக் கொண்டவை? தொழிலாளர்கள் நலன்களுக் காகவே நான்கு சட்டங்கள் இயற்றப்பட்டன. தொழிலாளிகளின் வேலை நேரம், அவர்களுக்கு ஓய்வு, பெண் தொழிலாளர்களின் குழந்தைகளைக் கவனிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டனவே! பணியின்போது ஊனமடைந்த தொழிலாளர்களுக்கு உதவி நிதி தருவதுபற்றி 1923 ஆம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்களுக் கான தொழிற்சங்கம் அமைப்பதற்கான சட்டம் 1926 இல் நீதிக்கட்சி ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.
நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. நீதிக்கட்சியின் முதலமைச்சரவை (1920-1923)யின் சாதனைப் பட்டியல் ஒரு தனி ஆணையின் (எண்.116) வாயிலாகவே வெளிப்படுத்தப்பட்டது.
பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உள்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள், தாழ்த்தப்பட் டோருக்கு வீட்டுமனைக் குடியிருப்புகளும் அமைத்துத் தரப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குக் கல்விக் கூடங்கள், தாழ்த்தப்பட்டவர் முன்னேற்ற வளர்ச்சிக்கும், அவை செயல்பாட்டுக்கும் தனி அலுவலர் நியமிக்கப்பட்டார். பின்னர் தனி அலுவலர் என்பது லேபர் கமிஷனர் என்று மாற்றி அழைக்கப்பட்டார்.
தாழ்த்தப்பட்டவர் என்ற அமைப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்று தொகுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது; குறவர்களை எல்லா வகைகளிலும் சீர்திருத்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீனவர் நலனுக்காகவும் கமிஷனர்கள் அமைக்கப்பட்டனர். வாடகைதாரர் குடியிருப் புச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. பி அண்ட் சி மில் வேலை நிறுத்தத்தின் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தஞ்சை கள்ளர் மகாசங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அய்ந்து பள்ளிகள் தஞ்சை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன.
அதைவிட முக்கியமானது நீதிக்கட்சிக்குத் தந்தை பெரியார் அனுப்பி வைத்த திட்டங்களை ஏற்றுக்கொண்டதாகும்.
ஈரோடு வேலைத் திட்டம் என்பது புகழ்பெற்ற ஒன்றாகும். தந்தை பெரியார் சோவியத்து ருசியா சென்று வந்த பிறகு ஈரோட்டில் தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி ம.சிங்கார வேலர், சுயமரியாதை இயக்கத் தோழர்களால் (1932 டிசம்பர் 28, 29) கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட திட்டம் அது.
அத்திட்டத்தை காங்கிரசுக்கும், நீதிக்கட்சிக்கும் தந்தை பெரியார் அனுப்பி வைத்தார். காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வில்லை. அதேநேரத்தில் நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது.
14.11.1935 அன்று சென்னை தியாகராயர் மண்டபத்தில் கூடிய நீதிக்கட்சியின் நிர்வாகக் குழு ஈரோடு வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. பொப்பிலி ராஜாவே அதனை முன்மொழிந்தார். அவற்றில் சில:
1. பொதுஜன தேவைக்கும், சவுகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள், போக்குவரவு சாத னங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படி செய்யவேண்டும்.
2. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக் கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அதன்மூலம் விவசாயி களின் கஷ்டத்தையும், சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
3. மதங்கள் என்பவைகள் எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும் படி செய்வதுடன் அரசியலில் - அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும், குறிப்பும் பெறாமல் இருக்கவேண்டும். ஜாதிக்கென்றோ மதத்திற்கென்றோ எவ்வித சலுகையோ, உயர்வு தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலி ருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக்கூடாது.
4. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து அச்சட்டங்களினால் அமுலில் கொண்டுவரக் கூடியவைகளை சட்ட சபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்துகொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளை கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
(பகுத்தறிவு, 23.9.1934)
பொதுவுடைமை மணம் வீசும் மேற்கண்ட திட்டங்களை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டதே! தொழிலாளர்கள், தாழ்த்தப் பட்டவர்கள்மீது அக்கறை செலுத்தி - செயல்பட்டதே - செயல்படுத்தியதே - இதற்குப் பின்பும் நீதிக்கட்சி ஜமீன்தாரர் கள், உயர்ஜாதியினருக்கான கட்சி என்று எவரேனும் சொன் னால், அவர்களின் கருத்தில் ஊனம் என்று கருதவேண்டும் அல்லது பார்ப்பனர்களின் எடுபிடிகள் என்றும் கூறவேண்டும்.
-விடுதலை,00.11.15

நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டவர்களும்


சுயமரியாதை இயக்கத்தின் 90ஆம் ஆண்டு, நீதிக்கட்சியின் நூறாம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் எடுத்தாலும் எடுத்தது. சிலர் இடுப்பு வேட்டி அவிழ்வதுகூடத் தெரியாமல் அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
அதுவும் இந்து ஏடு தி டைம்ஸ் ஆப் இந்தியா ஜூனியர் விகடன் ஏடுகள், இதழ்கள்கூட நீதிக்கட்சி பற்றிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சிகள் எல்லாம் இந்த இயக்கங்கள் குறித்து விவாதம் செய்வது. - தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனைக் கண்டுபொறுக்காமல் தினமலர் ஏடு (22.11.2015) தாழ்த்தப்பட்டோரை உயர்த்த நீதிக்கட்சி என்ன செய்தது? என்று கட்டுரை ஒன்றை வெளியிட்டு, அற்ப மகிழ்ச்சியில் மிதக்கிறது.
அந்தக் கட்டுரையில்கூட நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர் களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று குறிப்பிட முடிய வில்லை. நீதிக்கட்சிக்கு முன் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு எதை எதையெல்லாம் செய்து கொண்டனர், முயற்சி செய்தனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதே தவிர, நீதிக்கட்சியின் மீது குற்றஞ்சாட்ட முடியவில்லை.
தாழ்த்தப்பட்டோரை உயர்த்த நீதிக்கட்சி என்ன செய்தது? என்று கட்டுரையின் தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறதே தவிர எவ்வளவோ முயன்றும் நீதிக்கட்சியின்மீது குறை கூறிக் கல்லை எறிய முடியவில்லை.
முடியாததுதான் காரணம், நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறது. லேபர் டிபார்ட்டுமென்ட் என்று தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்காகவே உருவாக்கி செயல்பட்டது. நீதிக்கட்சி ஆட்சியில் சாலைகள், கிணறுகள், குளங்களை தாழ்த்தப் பட்டோர் புழங்க முக்கிய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 வரையுள்ள போர்ட் ஸெய்ன்ட்ஜார்ஜ் கெஜெட் 1.A.
பாகத்தின் ஸப்ளிமென்டாய் பிரசுரிக்கப்பட்ட விளம்பரமானது திருத்தப்பட்டு 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். 28 வரையுள்ள மேற்படி கெஜட்டில் பின் வருமாறு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
போர்ட் ஸெய்ன்ட்ஜார்ஜ், 1924. ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி (2660 ஆம் L&M
கவர்ன்மென்ட் உத்தரவு
நி. 1009-1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி சட்ட நிரூபண சபையார் சபை கூடின போது, அடியிற்கண்டபடி தீர்மானம் செய்தார்கள்.
இந்தத் தீர்மானமானது ராவ்பஹதூர் ஆர். சிறீநிவாசன் அவர்களால் சபைக்குக்கொண்டுவரப்பட்டது.
1. (9) இந்த சபையார் கவர்மென்ட்டாருக்கு அடியிற் கண்டபடி சிபாரிசு செய்கிறார்கள்; அதாவது:-
(a) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் அல்லது கிராமத்திலுள்ள எந்தப்பொது ரஸ்தா, தெரு அல்லது கால்வழி மார்க்கமாகவா யினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லை யென்பதும்,
{b) இந்த தேசத்திலுள்ள ஜாதி இந்துக்கள் எம்மாதிரி யாகவும் எவ்வளவு மட்டிலும் யாதொரு சர்க்கார் ஆபிஸை சேர்ந்த வளவுக்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொது ஜனங்கள் வழக்கமாய்க் கூடும் இடங்களை உபயோகிக்கலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டுவருகிற இடங்கள், கட்டிடங்கள் ஆகிய இவைகளுக்குள் போக லாமோ அம்மாதிரியாகவும், அவ்வளவு மட் டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், கவர்ன்மென்டாரின் கொள்கையாகு மென்று அவர்கள் ஸ்பஷ்டமாய் ஒப்புக்கொண்டு அந்தப் படி பிரசித்தப்படுத்தவேண்டும்.
இந்தத் தீர்மானத்தை கவர்ன்மென்டார் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இது சகல பிரதேச அதிகார சபைகளுக்கும், இலாகா தலைவர்களுக்கும் சங்கதி தெரியும் பொருட்டும் அவர்கள் இதை அனுசரித்து நடந்துகொள்ளும் பொருட்டும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சமர் என்ற சொல் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது; பள்ளிகளில் கட்டாயம் தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும், இல்லையெனில் மான்யம் நிறுத்தப்பட வேண்டும், மான்யம் பெறுவதற்கு ஒரு நிபந்தனையாக இது வைக்கப்பட்டு இருந்தது.
1936ஆம் ஆண்டில் 9614 பள்ளிகளில் இப்படி மற்ற மாணவர்களோடு, ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த  இருபால் மாணவர்களோடு படிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தகங்கள், உடைகள் வாங்குவதற்கும் தொழிலாளர் நலத்துறை மூலமாக ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மான்ய உதவி அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் தனியார்ப் பள்ளிகளில் சேரும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்ட வேண்டும் என்றிருந்த விதிகூட மாற்றப்பட்டு, முழுச் சம்பளத்தையும் அரசே தனியார்ப் பள்ளிகளுக்கு வழங்கிட வழி செய்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் ஆதி திராவிட மாணவர்கள் தேர்வுக்கென்று கட்டணம் செலுத்த தேவை யில்லை;  தேர்வு எழுதினாலே போதும் என்கிற அளவுக்கு அவர்களின் கல்விக்குத் தாராள மனப்பான்மை காட்டப்பட்டு, இவை அல்லாமல் உதவித் தொகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
கல்லூரியில் சேர்ந்து படிக்க முன்வரும் அம்மாணவர் களுக்கு ஸ்காலர்ஷிப்புகள் வழங்கும் திட்டமும் ஏற்படுத்தப் பட்டது. சில படிப்புகளுக்கு ஸ்டைபன்டுகள் (Stipends) படிப்பதற்கு ஆகும் செலவில் பெரும்பகுதி வழங்குவதற்கும் வழி செய்யப்பட்டது. அவர்களில் ஆசிரியர்களாக வர விரும்பினால் பயிற்சி பெறுவதற்கு இந்த ஸ்டைபென்ட் திட்டம் மூலம் வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது.
ஆதி திராவிட மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் கட்டப்பட்டன. 1936இல் முதற் கட்டமாக இந்தவகையில் 5 விடுதிகள் உருவாக்கப்பட்டன.
அந்தக் கால கட்டங்களில் உயர் ஜாதியினர் நடத்தும் உணவு விடுதிகளின் உள்ளே சென்று உட்கார்ந்து சமமாகச் சாப்பிட முடியாது; வேண்டும் என்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிச் செல்லலாம் என்ற கொடுமை! அந்தச் சூழலில் இத்தகு விடுதிகள் எத்தகைய பயனை அளிப்பதாக அமைந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தாலே எளிதில் விளங்குமே!
1935ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களில் கல்விக்காக நீதிக்கட்சி ஆட்சி ரூ.52 லட்சம் ஒதுக்கியது என்றால் சாதாரணமா?
வீட்டுமனை இலவசப் பட்டாக்கள் வழங்கப்பட்டன; 1935 மார்ச்சு 31ஆம் தேதி முடிய இவ்வகையில் 35,069 பட்டாக்கள் வழங்கப்பட்டன.
வீடு கட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. அவர்களில் பல வகைப்பட்ட  தேவைகளுக் குக் கடன் வழங்குவதற்காக 2776 கூட்டுறவு சங்கங்கள் உரு வாக்கப்பட்டன என்றால் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொண்டிருந்த அக்கறை எத்தகையது என்பது விளங்குமே.
வேலை வாய்ப்பில் 12 இடங்கள் இருந்தால் அதில் ஓரிடம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர் ஒருவர் (மயிலை சின்னதம்பிராஜா) அமைச்சராக முதன் முதலில் வந்ததும் நீதிக்கட்சி ஆட்சியில்தான்.
இன்னும் எத்தனை எத்தனையோ வளர்ச்சிப் பணிகளை ஆதி திராவிட மக்களுக்குச் செய்திருக்க, வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்ற பாணியில் எழுதுவதை தினமலர்கள் நிறுத்திக் கொள்ளட்டும்!
-விடுதலை,24.11.15,தலையங்கம்

பரோடா பெண்கள் முன்னேற்றம் புதிய சட்டவிபரம்


பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருத்தப்பட்ட அந்தப் புதிய சட்டப்படி ஒரு இந்து பொதுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள்.
விதவைகளின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணி விட்டிருக்கிறதென்று சொல்லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும்தான் கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது.
இந்தச் சட்டப்படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப்போல் ஒரு சமபங்காளி ஆகி விடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும் படி கேட்பதற்குக்கூட இந்தச் சட்டத்தினால் உரிமை ஏற்பட்டிருக்கிறது.
புருஷனுடைய சொத்து அவர்தானே சம்பாதித்த தனி சொத்தாயிருந்தால் பழைய சட்டப்படி அவருடைய மகனுக்கும், பேரனுக்கும், பேரன் மகனுக்கும்தான் கிடைக்கும். இந்த வாரிசுகள் இல்லாமலிருந்தால் மாத்திரம் விதவைக்குக் கிடைக்கும். இப்போது இந்தப் புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போல வே விதவையான பெண்ணுக்கும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற் படுத்தப்பட்டிருக்கிறது.
விதவையான ஒரு மருமகளுக்கும், தாய்க் கிழவிக்கு அதாவது மாமியாருக்கு அடுத்தபடியான அந்தஸ்து ஏற்படுகிறது. இதற்கு முன்னெல்லாம் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டால் அதன்பின் அவளுடைய தகப்பன் குடும்பத்தில் அவளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
புருஷன் வீட்டில் சாப்பாட்டுக்குக் கஷ்டமாயிருந்தாலும்கூட அவளுடைய தகப்பன் குடும்பத்திலிருந்து சம்ரட்சணை பெற அவளுக்கு உரிமை இருந்ததில்லை. இதனால் பல பெண்கள் கஷ்டம் அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.
இந்தப் புதிய சட்டப்படி இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. எப்படியெனில் புருஷன் இறந்த பின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்குச் சம்ரட்சணை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும்போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும்போதும் தகப்பன் குடும்பத் தாரே அவளுடைய ஜீவனத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.
கலியாணமாகாத பெண்ணுக்கு இதுவரையில் சம்ரட்சணையும் கலியாணச் செலவும்தான் கொடுக்கப் பட்டு வந்தது. சொத்து பாகப் பிரிவினைக் காலத்தில் இவ்விரண்டுக்கும் பதிலாக சகோதரனுடைய பங்கில் நாலில் ஒரு பாகம் கொடுக்கப்படுவதும் உண்டு, ஆனால் சொத்து பங்கு போட்டுக் கொடுக்கும்படி கேட்க உரிமை கிடையாது.
இந்தப் புதிய சட்டப்படி அவள் தன் பாகத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடும்படி கேட்கலாம். இதனால் கலியாணமாகாத பெண்களுக்கு அதிக சுதந்தரமும், சுயாதீனமும் ஏற்பட்டிருக்கிறது.
சீதன விஷயமான பாத்தியதையைப் பற்றி பழைய சட்டத்திலிருந்த சில சிக்கல்களும் நீக்கப்பட்டிருக் கின்றன.
முந்தின சட்டப்படி பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துக்களை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம்-விற்பனை செய்ய முடியாது. இப்போது பெண்கள் 12,000 ரூபாய் வரையில் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ, அல்லது வேறுவிதமாக வினியோகிக்கவோ மேற்படி புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது.
இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங் களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்.
- புரட்சி - கட்டுரை - 04.02.1934
-விடுதலை,21.11.15

தற்காலம் நமக்கு வேண்டியதென்ன?


தற்காலம் நமது நாட்டிற்கு வேண்டியது. வர்ணாசிரமமாகிற மக்களுக்குள் (ஆண்டானடிமை உயர்ந்தோன், தாழ்ந்தோன் வேறுபாடுகளை விருத்தி செய்கிற) வெறியைக் கிளப்ப மக்களுக்குள் பரப்பி வர வேண்டுமா? அல்லது மக்கள் யாவரும் பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்கின்ற சமத்துவக் கொள்கைகளைக் கிளப்பி அவைகளை மக்களுக்குள் பரப்பி வரவேண்டுமா?
ஆகிய இந்த இரண்டு கேள்வி களைப் பற்றி நமது மக்கள் நிலைமையையும், அந்ததையும் பற்றியும் யோசித்து தற்காலம் இவ்வித வேறுபாடுகளை ஒழித்து வந்திருக்கிற அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் அந்ததையும் கவனித்துப் பார்த்தால் நம் நாட்டின் மக்களுக்கு இத்தருணத்திற்கு வேண்டியது எது என்பது விளங்காமற் போகாது.
ஆகையால் வர்ணாசிரமம் ஒழிந்த சமத்துவக் கொள்கை யாகிற நன்மருந்தே இன்றியமையாத சாதனமாகும்.
ஏனெனில். நம் நாட்டு மக்களை வெகு காலமாகப் பிடித்து அடிமை, அறியாமையாகிய கொடிய நோய்வாய்ப்படுத்தி உருவழித்து வரும் சமயம், ஜாதி, ஆச்சிரமம் முதலியவைகளுக்கு தற்காலிகத்திற்கேற்ப உய்விக்கக் கூடியது அம்மருந்தேயாகும்.
உதாரணமாக வர்ணாசிரம பேதமில்லாத (பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லாத) கிறிதவ, முகம்மதிய, புத்த என்கிறவை களுக்குட்பட்ட ஜன சமுகத்தார் இன்றைக்கும் அரசாட்சி புரிந்து வருவதும் வேற்றுமைக்குட்பட்ட நம்மவர்கள் வேற்றுமைக்குட் படாத முன் சொன்னவர்களால் ஆளப்படுவோர்களாக வாழ்விலும், பேச்சிலும், எழுத்திலும் நடத்தை அனுபவம் முதலியவைகளிலும் சுதந்திரங்களை இழந்து அடிமைகளாகவும் அறியாமையில் சூழப்பட்டவர்களுமாக வாழ்ந்து வருவது நிதர்சனமாகப் பார்த்து வருகிறோம்.
இன்னமும் சொல்லப் போனால் உலகத்தில் சிறந்து மேம்பாடடைந்து வரும் வளர்ச்சிக்கு ஆதாரமாயுள்ள நாகரிக முதிர்ச்சியின் பயனாய் ஏற்பட்டிருக்கிற மதமொழிப்பு என்னுங் கொள்கையினால் மதமென்பதே யில்லாமல் ஒரு தேசத்தில் (ரஷ்யாவில்) பார்த்தால் மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு இல்லை என்பதோடு ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடு கூட ஒழிந்து யாவரும் சமமென்பதைக் காண்கிறோம்.
இப்படியாக மேன்மேலும் நாகரிகம் விருத்தியாகி அதன் மூலம் மக்கள் விடுதலையடைந்து சமுகம் விருத்தியடைந்து வரும் இக்காலத்திலும் அவ்வித விருத்திகளுக்கு முள்வேலி இட்டது போலுள்ளதற் கேற்றபடியாகிற வர்ணாசிரம தர்மம் இருக்க வேண்டு மென்றும் அதன்பயனாக ஒரு சிலர் கொடுமைக்குள் ளாக்கப்பட்டுவிட்டார்கள்,
அவர்களை உத்தரிக்க மீண்டும் அவ்வித வர்ணா சிரமத்துக்குட்பட்ட ரீதியாக ஆதரிக்க வேண்டும், அதற்காக நிதி திரட்ட வேண்டு மென்றும், அந்நிதிக்கு எவரும் தங்களாலியன்ற வைகளை என்னிடம் தாருங்கள் என்றும் சொல்லி சர்வ வல்லமையுள்ள வதுவென்று சொல்லப்படு கின்றதே உருவெடுத்து வந்தது என்று வைத்துக் கொண்டாலும் அப்படிப்பட்ட ஒரு பெரியார் எவரா யினும் அவரை நம்நாடு தற்போதிருக்குமிவ்வித நிலைமைகளிலும் வரவேற்கலாமா? அல்லது பகிஷ்கரிக்கலாமா? வென்பதை நமது நேயர்களுக்கே யோசித்துப் பார்க்கும்படி விட்டுவிடுகிறோம்.
இன்னமும் நாம்தான் இவ்விதம் யோசிக்கிறோமாவென்றால் வர்ணாசிரமங்களை நிலைநாட்டி வைப்பதற்கென்றே பரம்பரையாக இருந்து வருபவர்களுக்கெல்லாம் குரு அதாவது ஜகத்குரு சங்கராச்சாரியாரும்கூட இத்தகைய பெரியாரின் தன்மையைக் கண்டித்து வருகிறார். - உதாரணமாக,
பூரி சங்கராச்சாரியார், தேவகோட்டையில் சில வாரங்களுக்கு முன்பு பேசியிருப்பதை வாசகர் கூர்ந்து கவனிக்க வேண்டு கிறோம்.
அதாவது காந்தி ஒரு இந்துவாக இருந்து கொண்டு தீண்டாமை யொழிப்பு பேச உரிமையில்லை யென்று வேதங்களில் 259 ஆதா ரங்கள் இருப்பதாகவும், விக்கிரக ஆராதனை யொழிப்புக் காரரான ஆர்ய சமாஜத்தாரையும் அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், வடஇந்தியாவில் ஆரிய சமாஜிகள் ஆதிதிராவிடர்களுக்கு ஆலய பிரவேசம் வேண்டுமென பலத்த பிரச்சாரம் செய்கிறார்களென்றும்,
மத்தியில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் நான் சொல்லுகிறேன், என் அபிப்பிராயம், அப்படித்தான் செய்ய வேண்டுமென்பதுதான் வீரர்கள் வழக்கமென்றும் இயேசு கிறிது, மகம்மது முதலியவர்கள் அப்படித்தான் செய்தார்களென்றும், ஆனால் காந்தியோ வருணாசிரமம் உண்டு,
ஆதி திராவிடருக்குக் கோவில் பிரவேச உரிமையும் வேண்டும் என்று சொல்லுவது வீரர் வாழ்க்கை யாகாதென்றும், அவர் சூழ்ச்சி செய்து மக்களை ஏய்க்கப் பார்க்கிறார் என்றும், அதற்கு ஏமாறக்கூடாதென்றும், கூறி மேலும் குறிப்பிட்டதாவது நாஸ்திக தலைவர்கள் பலரை எனக்கு நேரில் தெரியும்.
அவர்களுக்கு வேதத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொள்கையைப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். பூரி சங்கராச்சாரியார் அவர்கள் நேர்மையை நான் போற்றுகிறேன். ஆனால் காந்தியோ சூழ்ச்சி செய்கிறார் என்பதாகும்.
மற்றும் இப்பெரியார் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உத்தரிக்கப் போகிறார்களோ, அத்திருக்குலத்தடியார்களையே ஹரிஜனங்களென்று சொல்லப்பட்டவர்கள்கூட சென்னையிலும், கொச்சி, திருவாங்கூர் முதலிய மலையாள நாடுகளிலும் விருதுநகர் போன்ற இடங்களிலும் இன்னும் மற்ற பிரதேசங்களிலுள்ளவர்கள் ஆங்காங்கே கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து எங்களை உத்தரிக்கத் தாங்கள் வேண்டுவதில்லை. எண்ணாயிரம், பதினாயிரம், லட்சம் கையெழுத்திட்ட அறிக்கைப் பத்திரங்களையும் அப்பெரியார் முன் சமர்ப்பிக்கப்பட்டும் வந்திருக்கிறது.
இது மட்டுமல்ல இன்னும் இப்பெரியாருக்கு இவர் செல்லுமிடங்களிலெல்லாம் பகிஷ்காரங்களும் நிகழுமென் பதற்கு அநேக அறிகுறிகளும் காணப்படுகின்றன.
நம் நாட்டிற்கு இவ்விதமாக அவசியப்பட்டிருக்கிற இப்பெரியார் பின் எதற்காக இங்கெல்லாம் விஜயம் செய்கிறார்? யார் யார் பெயரால் யார் யாரைப் பிழைக்க வைக்கப் பார்க்கிறார்? இவ்விதச் சுற்றுப் பிரயாணங்களாலும் நிதி திரட்டல், முடிச்சு வாங்கல் களாலும் யாருடைய முன்னேற்றம் விருத்தி? யாருடைய முன்னேற்றம் பாழ்? லாபம் யாருக்கு?
நஷ்டம் யாருக்கு? என்பவைகளும் நம் நாட்டு மக்களுக்கு நிலைமைக்கு வேண்டுவது யாது? என்பவைகளைச் சிந்தித்து ஏற்ற வழிகளில் அவரவர்கள் கடமைகளைச் செய்ய முற்பட வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
- புரட்சி - தலையங்கம் - 04.02.1934
-விடுதலை,21.11.15

திங்கள், 16 நவம்பர், 2015

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா?

- திராவிடப் புரட்சி
பதிப்பக உரிமையாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டவருமான பத்ரி சேஷாத்திரி, “The angst of the Tamil bramin: Live and let live” : (தமிழ்ப் பார்ப்பனரின் சோகம் : வாழு வாழவிடு) என்ற தலைப்பில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் 08.12.2014 அன்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். எழுதியுள்ளார் என்று சொல்லுவதை விட எழுத்தில் புலம்பியுள்ளார்.
இந்தப் புலம்பல்களை பத்ரி சேஷாத்திரி என்ற தனி மனிதரின் புலம்பலாக சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கட்டுரையின் தலைப்பு சொல்லுவதைப்போல இதை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களின் புலம்பல்களாகக் கருதி, அதே கோணத்தில் புலம்பல்களை அணுகி, அது தொடர்பாக ஆராய்ந்து, இந்தப் புலம்பல்களில் நியாயமுள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.
ஆண்டவர்களின் வரலாறு மட்டுமே சொல்லித் தரப்படும் சூழலில், ஆண்டவர்கள் வரலாறு என்றால், கடவுள்கள் மற்றும் மன்னர்களின் வரலாறு மட்டுமே சொல்லித் தரப்பட்ட புதிய தலைமுறைக்கு, தங்கள் முன்னோரின் அடிமை வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்கள் மானத்தையும், அறிவையும் ஊட்டியதன் விளைவாக, இன்றைய பார்ப்பனரல்லாத தாத்தாக்களுக்கு ஓரளவிற்கு அடிமைப்பட்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அதே சமயத்தில், பதிப்பகம் நடத்தும் பத்ரி சேஷாத்திரி போன்றோருக்கு அடிமைப்படுத்திய வரலாறு தெரியாமல் இருக்காது என்றாலும், பத்ரி சேஷாத்திரி போன்றோரின் புலம்பல்கள் குறித்து நாம் ஆராய்ந்து விளக்கம் தரும்போது, பார்ப்பனரல்லாத புதிய தலைமுறைக்கும் சில செய்திகள் சென்று சேரும் வாய்ப்பிருக்கிறது.
பார்ப்பனர்களின் சார்பாகப் புலம்பியுள்ள பத்ரி சேஷாத்திரியின் புலம்பல்கள் கீழ்வருமாறு.:
1. தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருந்தாலும், எதார்த்தத்தில் நாடு முழுவதும் பெருமளவில் அதிகாரமில்லாமல் இருக்கிறார்கள். அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலை. 2. சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்குப் பார்ப்பனர்கள் அரசாங்கத்தில் பெருமளவில் இருந்தனர். ஆனால், நீதிக்கட்சியும், திராவிடர் இயக்கங்களும் கொண்டுவந்த இடஒதுக்கீடு முறையால், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு வேலைகள் ஆகியவற்றில் முழுமையாக பார்ப்பனர்கள் விலக்கப்பட்டு விட்டார்கள். ஒரு காலத்தில் கணிசமான அளவில் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களாக இருந்தனர், தற்போது மிகவும் குறைந்துவிட்டனர். தமிழகத்தில் சரியான வாய்ப்பு இல்லாததால் பாம்பே, டில்லி போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றனர். 3. அரசியல் அதிகாரத்தில் இருந்து முழுமையாக பார்ப்பனர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். பார்ப்பனர்கள் அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், எல்லாவற்றிற்கும் பார்ப்பன சதி என்று குற்றம் சாட்டுகின்றன திராவிடக் கட்சிகள். தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு என்பதே அரசியல். மோடி பார்ப்பனியவாதி, ஜெயலலிதா பார்ப்பனியவாதி, மத்திய அரசு சமஸ்கிருதத்தையோ இந்தியையோ வளர்க்க முயன்றால் அதுவும் பார்ப்பனியம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக காங்கிரசோ பி.ஜே.பி.யோ இருந்தால் அதையும் பார்ப்பனியம் என்கிறார்கள்.
4. தமிழ்த் திரைப்படங்கள்கூட பார்ப்பனர்--களைத் தவறாகச் சித்தரிப்பது வழமையான ஒன்று. அண்மையில் வெளியான ஜீவா என்ற திரைப்படத்தின் கருவாக இருப்பது, பார்ப்பனர் அல்லாத கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி பார்ப்பன சதியால் தடுக்கப்படுகிறது என்பதே.
5. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதோருக்குக் கல்வி மறுக்கப்பட்டது, மற்ற சலுகைகள் மறுக்கப்பட்டது என்று சொல்லப்படும் கூற்றினால், இப்போது நடக்கும் எல்லா-வற்றிற்கும் ஒப்புதல் வழங்கியது போல ஆகிவிட்டது. இந்தக் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் தேவையில்லை, எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை என்பதே நிலை.
6.    அரசியலில் ஒதுக்கப்படும், சமூகத்தால் வெறுக்கப்படும் தமிழ்ப் பார்ப்பனர்கள், தமிழக சமூகவெளியில் பாதுகாப்பாக உணர்வதற்கும், தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கும் என்ன செய்வது? இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சமணர்கள் எப்படி தங்கள் நமபிக்கைகளை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, வழக்கங்களை, மொழியைப் பாதுகாக்கிறார்-களோ அதுபோன்ற நிலை தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும் வேண்டும். மொத்தத்தில் தமிழ்நாடு பார்ப்பனர்கள் மீதுள்ள அரசியல் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவைதான் அந்தப் புலம்பல்கள். இது-போன்ற புலம்பல்கள் புதிதல்ல வரலாற்றைத் தேடிப் படிப்பவர்களுக்கு. இஸ்லாமியர்களால் தங்கள் ஆதிக்கம் குறைக்கப்பட்ட போது ஒலித்த பார்ப்பனர்களின் புலம்பல் ஒலி வீர கம்பராய சரிதத்தில் கேட்கிறது. தமிழை சென்னைப் பல்கலைக்கழகத்தில் போதிக்கவேண்டும் என்று தமிழுணர்வாளர்கள் குரல் எழுப்பியபோது,  வி.எஸ். சீனிவாச சாஸ்திரியின் புலம்பல்கள் சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் ஒலித்தது. திராவிடர் இயக்கத்தின் செயல்பாடுகளால் பார்ப்பனரல்லாதோரும் உயரத் தொடங்கிய-போது, ஹிந்துவின் புலம்பல் குரல் ஒலித்தது. திராவிட இயக்கம் வலுவாக ஆட்சியில் அமர்ந்த பிறகு, சோவின் புலம்பல் குரல் ஒலித்தது வெறுக்கத்தக்கதா பிராமணியம் என்று. தமிழகப் பிராமணர்கள் யூதர்களைப் போல அடக்கு-முறைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள், அவர்களால் தமிழகத்தில் இயல்பாக வசிக்க முடியவில்லை என்று அசோகமித்திரனின் புலம்பல் ஒலி ஒலித்தது. ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின்படி இயங்கும் மத்திய அரசின் செயல்பாடுகளைப் பார்த்து பார்ப்பனியம் என்று தமிழக மக்கள் பேசத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பத்ரி சேஷாத்திரியின் புலம்பல் ஒலி வந்திருக்கிறது.
புலம்பல்களைப் படிக்கும் பார்ப்பனர்களுக்கு தங்கள் மனசாட்சியின் புலம்பல்களாகத் தோன்றும். வரலாற்றை அறியாத பார்ப்பனரல்லாதோருக்கோ அடக் கொடுமையே! என்ன பரிதாபம்? என்று தோன்றும். ஆனால் இந்தப் புலம்பல்களில் நியாயம் இருக்கிறதா? உண்மை இருக்கிறதா? என்றால் அதுதான் கொஞ்சமும் இல்லை.
உண்மைக்குப் புறம்பாகவா புலம்பியிருப்பார் ஊடகத் துறையில் இருக்கும் சமூக ஆர்வலரான பத்ரி சேஷாத்திரி? என்று பலருக்குள்ளும் ஒரு கேள்வி எழும். அதற்கான விடைகளைத்தான் நாம் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.
புலம்பலின் தொடக்கத்தில் உள்ள கர்வத்தைக் கவனியுங்கள். தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருக்கிறார்களாம். தாங்கள் உச்சியில் இருக்கிறோம் என்ற எண்ணம்தானே எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்பதை இன்றும் சிந்திக்க மறுக்கும் மனநிலை வெளிப்படுகிறது இதில். எதார்த்தத்தில் நாடு முழுவதும் பெருமளவில் பார்ப்பனர்கள் அதிகாரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது உண்மையா? அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலை என்பது உண்மையா?
கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தற்போதைய பி.ஜே.பி ஆட்சியிலும் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்களில் எத்தனை பேர் பார்ப்பனர்கள்? மூன்றரை சதவிகிதம் இருக்கக்கூடிய பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே சதவிகித அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் பெருமளவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். இந்தியாவின் ஜனாதிபதியே ஒரு பார்ப்பனர்-தானே. அமைச்சரவை மட்டுமா? அதிகார வர்க்கத்தில் உள்ள அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ் உட்பட மத்திய அரசுப் பணிகளில் பெருமளவில் அதிகாரம் செலுத்துவது பார்ப்பனர்கள்தானே. கடந்த தி.மு.க. ஆட்சியில், மாநில அரசின் செயலாளர்களாக இருந்தவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்-தானே.
இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலகத்தின் அதிகார மய்யமாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தானே. அ.தி.மு.க. என்ற ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே தன்னைப் பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக்கொண்ட ஒரு பார்ப்பனர்தானே. உண்மை இவ்வாறு இருக்க, அதிகாரம் இல்லை என்று போலியாகப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது? இட ஒதுக்கீடு முறையால் பார்ப்பனர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது போன்ற இந்தப் புலம்பல் உண்மையா? இதை நாம் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
(தொடரும்)
பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -2
இடஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கு அநீதியா?
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதைப் படிப்பவர்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆங்கில மருத்துவப் படிப்பிற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? எந்தத் தொடர்புமில்லாத நிலையில் ஏன் அப்படி ஒரு நிலை இருந்தது? யாரால் அந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சமஸ்கிருத மொழி தெரியாத பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பறிக்கும் சதி இதில் அப்பட்டமாகத் தெரிகிறதா இல்லையா?. ஆங்கிலேயர் ஆண்ட போதே இந்த நிலை என்பதைப் பார்க்கும் போது, ஆங்கிலேயரிடம் பார்ப்பனர்களுக்கு இருந்த செல்வாக்கு தெரிகிறதா இல்லையா? சிறிதளவு ஆட்சி அதிகாரம் பார்ப்பனரல்லாத இயக்கமான நீதிக் கட்சியின் கைகளுக்குச் சென்றபோது, மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்கி, அனைவரும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பளித்தார்கள். இது தவறா? இதனால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் அதிக இடம் கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டதே என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
1918ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு வித்வான் தேர்வுக்கு சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க முடிவு செய்தது. சமஸ்கிருத அறிவு இல்லாத ஒருவரை திராவிட மொழிப் புலமை இருப்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்கள். பல்கலைக்கழகத் திட்டப்படி, இரண்டு திராவிட மொழிகளைத் தெரிவு செய்து படிக்கலாம் என்ற விதி இருந்தும், ஒரு திராவிட மொழியும் சமஸ்கிருதமும் சேர்த்துப் படிக்க மட்டுமே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திராவிட மொழிப் படிப்பைத் தெரிவு செய்த குற்றத்துக்காக திராவிட மாணவர்கள் சமஸ்கிருதம் பயில வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிலையெல்லாம் மாறி பார்ப்பனரல்லாதவர்கள் கல்வி பெற வாய்ப்பளித்தது திராவிடர்களின் இயக்கமான நீதிக் கட்சி. இதில் என்ன தவறு இருக்கிறது? மூன்றரை சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் மட்டுமே படித்து அறிவு பெற அதிகம் வாய்ப்பிருந்த நிலை மாறிவிட்டது குறித்துப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் புலம்பியிருக்கிறார் பத்ரி சேஷாத்திரி. எனவே, பலரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சில ஆதாரங்களை அட்டவணை 1இல் காணலாம். இதுதான் 1901ஆம் ஆண்டின் நிலை. இந்நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்தது நீதிக்கட்சி.  கல்வியில் இந்த நிலை என்றால், வேலைவாய்ப்பு எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரம் அட்டவணை 2இல் தரப்பட்டுள்ளது.
சுமார் மூன்றரை சதவிகிதம் இருந்த பார்ப் பனர்கள், கல்வியையும், அரசுப் பணிகளையும் மொத்தக் குத்தகை எடுத்தது போல இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான வாய்ப்பை திராவிடர் இயக்கமாம் ஜஸ்டிஸ் கட்சி எப்படி வழங்கியது என்பதற்குச் சான்று,  ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும், கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அநேக இடங்களில் அமலில் கொண்டுவந்து இருக்கிறார்கள். 5 வயது முதல் 12வயது வரை ஒவ்வொரு குழந்தையையும் கண்டிப்பாய்ப் படிக்க வைக்க வேண்டும். இல்லா விட்டால் பெற்றோருக்குத் தண்டனை என்று சட்டமும் செய்து இருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் இலட்சக்கணக்கான பிள்ளைகளில் 100க்கு  99 பேர் பார்ப்பனர் அல்லாதோர் என்று குடிஅரசில் (26.10.1926) செய்தி வந்துள்ளது. மேற்கண்ட செய்தி பல தகவல்களை நமக்குத் தருகிறது. இன்றைக்கு வரலாறு தெரியாமல் திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் பார்ப்பனரல்லாத இளைய தலைமுறை யின் கேள்விக்குமான பதிலும் இதில் அடங்கி யிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிப் போய் வேலை செய்யும் நிலை வந்துவிட்டதே,  இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கங்கள் தானே என்று புலம்புகிறார் பத்ரி சேஷாத்திரி. இது உண்மையா?
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர் மனியின் கை ஓங்கியிருந்த போது, ஜெர்மனி தான் வெல்லும் என்ற நிலை இருந்தபோது, தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றார்கள் என்பதுதானே வரலாற்றில் பதிவாகி யிருக்கும் செய்தி. ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளச் சொல்லி திராவிட இயக்கமா வலியுறுத்தியது?
சுயநலம், சந்தர்ப்பவாதம் நிரம்பிய பார்ப் பனர்கள் தங்கள் வசதிக்காக, உயர்வுக்காக இடம் மாறிச் சென்று பிழைப்பது இன்று நேற்றா நடக் கிறது? இந்தியா முழுவதும் பார்ப்பனர்கள் வசிப் பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாமே பிழைப் பதற்காக இடம் பெயரும் அவர்களின் இயல்பான குணத்தை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த இடப் பெயர்வை ஏதோ எழுபதுகளில்தான் முதன்முதலில் நடந்தது போல நீலிக் கண்ணீர் வடிப்பது நியாயமா?
பார்ப்பனர்களைத் தவிர்த்து வேறு ஜாதியைச் சேர்ந்த யாரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் பணிபுரியாமலா இருக்கிறார்கள்?
பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்கவா இடம் பெயர்ந்து சென்றனர்? இல்லையே. தங்கள் வசதிக்காகச் சென்றனர்.
பத்ரி சேஷாத்திரி மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டுள்ள பலருக்குமான கேள்விகள் பின்வருமாறு :
  • மாதச் சம்பளம் வாங்காத பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
  • மாதச் சம்பளம் வாங்காத மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
  • தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
  • தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
  • ஏசி அறையில் வேலை பார்க்கும் பார்ப்பனர் கள் எத்தனை சதவிகிதம்?
  • ஏசி அறையில் வேலை பார்க்கும் மற்ற சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
  • உடல் உழைப்பில் ஈடுபடும் பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
  • உடல் உழைப்பில் ஈடுபடும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
  • மூட்டை தூக்கியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் போல கூலித் தொழில் செய்யும் பார்ப்பனர்களை எங்காவது கண்டதுண்டா?
இவற்றுக்குப் பதில் சொல்ல முடியுமா?
இவற்றிற்கான பதில்களில் அடங்கியிருக்கிறது புலம்பல்களில் உள்ள நியாயமற்ற தன்மை. நாற்று நட்டாயா? களை பறித்தாயா? என்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம் போல பாரப்பனரல்லாதவர்கள் கேள்வி கள் கேட்டால், தலை குனிந்து நிற்க வேண்டி யிருக்கும் பார்ப்பனர்கள்.
வண்டி இழுக்காமல், வயலில் வேலை செய்யாமல், கல் உடைக்காமல், மண் சுமக்காமல், சிரைக்காமல், தைக்காமல், லாரி ஓட்டாமல், தெருப் பெருக்காமல், மலம் அல்லாமல், மரம் ஏறாமல், மீன் பிடிக்காமல், விறகு வெட்டாமல், மூட்டை தூக்காமல், அப்படி இல்லாமல், இப்படி இல்லாமல், மொத்தத்தில் உடல் நோவாமல், அழுக்குப் படியாமல், இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாமர்த்தியம் உள்ள பார்ப்பனர்கள், முட்டி மோதி முன்னேற முயற்சிக்கும் மற்ற ஜாதி மக்களைப் பார்த்துப் பொறாமை கொள்வது எந்த விதத்தில் நியாயம்? நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இடஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. இடஒதுக்கீடு என்பது போடப்படும் பிச்சை அல்ல, பெறப்படும் உரிமை. இடஒதுக்கீடு என்ற முறை இல்லையென்றால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தால் குற்றங்கள் பெருகும், சட்டம் ஒழுங்கு சீர் கெடும். ஒரு நாள் பிரச்சினைகள் முற்றும், புரட்சி வெடிக்கும். புரட்சி வெடித்தால், சுரண்டிக் கொழுப்பவர்களின் தலைகள் கொய்து எறியப்படும், ஆதிக்கம் புரிபவர்கள் அழித்தொழிக்கப்-படுவார்கள். நாடே சிதறுண்டு போகும்.
இது வெறும் கருத்தல்ல, இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானவர்களுக்கான எச்சரிக்கை! மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்க முயன்றால், அது பார்ப்பனர்களின் சதியா? என்று கேட்கிறார் பத்ரி சேஷாத்திரி. பார்ப்பனர்களின் சமஸ்கிருதத் திணிப்பு குறித்து தனியாக நீண்டதொரு கட்டுரையே எழுதக் கூடிய அளவிற்கு வரலாற்றுச் செய்திகளும் ஆதாரங்களும் நிறையவே இருக்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எங்கும் பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை, அந்த மொழிக்குத் தொடர்பே இல்லாத திராவிட மொழியான தமிழ் மொழியைப் பேசும் மக்கள் மீது திணித்தால், அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
சமஸ்கிருதம் சீனர்களின் மொழியென்றால், அதைச் சீனர்களின் சதி என்றழைக்கலாம், அது பார்ப்பனர்களின் மொழி என்பதால், அதைப் பார்ப்பனர்களின் சதி என்றுதானே சொல்லு வார்கள். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாராவது அவர்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிப்பார்களா? அப்படித் திணிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? எனவே அதைப் பார்ப்பனர்களின் சதி என்று கருதுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
சமஸ் கிருதம் பார்ப்பனர்களின் மொழியல்ல, அது இந்தியர்களின் மொழி, கடவுளின் மொழி என்றெல்லாம் சொல்லி பத்ரி சேஷாத்திரி தப்பிக்க முடியாது. காரணம், கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்பனர்களும் மற்றவர்களைப் போல தங்கள் மொழியைப் பாதுகாக்கும் நிலை வேண்டும்   என்று விருப்பத்தைத் தெரிவித்துள் ளார். உங்கள் மொழியை உங்கள் வீட்டிற்குள் நீங்கள் பேசிக்கொள்ளுங்கள், அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், உங்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள் என்றுதானே சொல்லுகிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறது?
- திராவிடப்புரட்சி
பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -3
விடுதலைப்புலிகள் : பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?
விடுதலைப் புலிகளுக்கு எதிராக காங்கிரசோ பி.ஜே.பி.யோ இருந்தால், அதுவும் பார்ப்பனியமா? என்று கேட்கிறார் பத்ரி சேஷாத்திரி. நாம் இந்தியா முழுவதுமுள்ள பார்ப்பனர்களின் நிலை குறித்து ஆராய வேண்டாம், நாமறிந்த தமிழகப் பார்ப்பனர்களின் நிலைப்பாடு குறித்து கொஞ்சம் பார்ப்போம். சுப்பிரமணியன் சாமி, மணிசங்கர் அய்யர், ஜெயலலிதா ஆகிய மூவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதிகள்.
விடுதலைப் புலிகள் விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு என்ன? துக்ளக், ஹிந்து, தினமலர், தினமணி இவை பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகைகள். விடுதலைப் புலிகள் விஷயத்தில் இதன் முதலாளிகளின் நிலைப்பாடு என்ன? விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அல்லது தமிழீழத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கருத்தை வெளியிட்டிருக்-கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த எந்தப் பார்ப்பனச் சமூகப் பிரமுகராவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தோ அல்லது தனித் தமிழீழத்தை ஆதரித்தோ இதுவரைப் பேசியதுண்டா? தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் இந்த விஷயத்தில் எந்தவிதமான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களோடு பழகும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பார்ப்பனர்களின் நிலைப்பாட்டைப் பாராட்டி புகழவா செய்வார்கள் தமிழீழ ஆதரவாளர்கள்?
அண்மையில் வெளியான ஜீவா என்ற திரைப்படத்தின் கருவாக இருப்பது பார்ப்பனர் அல்லாத கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி பார்ப்பன சதியால் தடுக்கப்படுகிறது என்பதே என்று வருத்தப்பட்டிருக்கிறார் பத்ரி சேஷாத்திரி. வெங்கட்ராமன், சிறீகாந்த், ரவீந்திர அஷ்வின், சடகோபன் ரமேஷ், டபிள்யு.வி.ராமன், சிவராம கிருஷ்ணன், ஹேமங் பதானி, லக்ஷ்மிபதி பாலாஜி, பத்ரிநாத், முரளி கார்த்திக், தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், முரளி விஜய் என தமிழ்நாட்டில் இருந்து  இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வான பார்ப்பனர்களின் நீண்டதொரு பட்டியலே உள்ளது.
வெறும் மூன்றரை சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் எப்படிப் பெரும்பான்மை இடத்தைப் பெற முடிகிறது? என்று சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதானே. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? இந்த உள்ளங்கை நெல்லிக்கனியைக் கருவாக வைத்துப் படம் எடுத்து உலகிற்குப் பறைசாற்றியது கண்டு பொறுக்கமுடியாமல் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனர்-களால் பார்ப்பனரல்லாதோருக்குக் கல்வி மறுக்கப்பட்டது, மற்ற சலுகைகள் மறுக்கப்-பட்டது என்று சொல்லப்படும் கூற்றை நிரூபிக்க  எந்த ஆதாரமும் தேவையில்லை, எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை என்பதே நிலை என்று புலம்பி இருக்கிறார் பத்ரி சேஷாத்திரி. இதை அண்டப் புளுகு என்பதா? ஆகாசப் புளுகு என்பதா? ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதா? அயோக்கியத்தனம் என்பதா? மக்கள் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் பலர் அதிகம்  படிப்பதில்லை என்று கருதியோ, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தனது கட்டுரையைப் படிப்பவர்களுக்கு திராவிடர் இயக்கத் தோற்றப் பின்னணி குறித்துத் தெரியாது என்று நம்பியோ, ஆதாரம் எதுவும் இல்லை என்பதைப் போன்று கூசாமல் எழுதியுள்ளார். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால், தொடர் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டு, வெள்ளையர் ஆட்சியில் கிடைத்த சிறிய சுதந்திர இடைவெளியைப் பயன்படுத்தி, தன்னெழுச்சியாகப் பீறிட்டு வெடித்துக் கிளம்பியதே பார்ப்பனரல்லா-தோருக்கான திராவிடர் இயக்கம். பார்ப்பனர்களின் ஆதிக்கமும், அதனால் திராவிட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், தமிழக வரலாறு முழுவதும் பரவி இருக்கின்றது. தமிழ் மன்னனான கரிகால் சோழனைச் சதி செய்து கொன்ற பார்ப்பனர்களின் வரலாறு உட்பட, தங்கள் ஆதிக்கத்தை நிலை-நாட்டுவதற்காக விஜயநகரப் பேரரசை மதுரை மீது படையெடுக்க வைத்து நாயக்கர் ஆட்சி ஏற்பட வழிகோலியது உட்பட, நாயக்கர் ஆட்சியைப் பயன்படுத்தி பார்ப்பனர்களின் ஆதிக்கம் மீண்டும் உச்சிக்குச் சென்றது உட்பட, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் ஆதிக்கம் செலுத்தியது உட்பட, ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. தற்போது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டு-தலுடன் கூடிய பி.ஜே.பி அரசைப் பயன்படுத்துவதும்கூட வரலாற்றில் பதிவாகிக்-கொண்டுதான் இருக்கிறது.
உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற தலைப்பில், பத்ரி சேஷாத்திரியின் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட நூலில் உள்ள இட்டுக்கட்டிய தகவல்களை உடைத்து எறியும் வகையில்,  உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் பதிலடி நூல் வெளியிடப்பட்டதே. ஆதாரம் இல்லாமலா எழுதப்பட்டது அவரது நூல்? ஆதாரம் இல்லாமல் பேசுவது பெரியாரியவாதிகளுக்கு வழக்கம் இல்லை. அது பெரியாரிடம் இருந்து கற்றுக்கொண்ட நற்பண்பு. அதை நாம் பத்ரி சேஷாத்ரியிடம் எதிர்பார்க்க முடியாது.
இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சமணர்கள் போல பார்ப்பனர்களை மற்றவர்கள் கருத வேண்டும் என்று விரும்புகிறார் பத்ரி சேஷாத்திரி. விரும்புவதில் தவறில்லை, ஆனால் அதற்கான முயற்சியில் அவர்கள்தானே ஈடுபட வேண்டும். மற்ற ஜாதிகளைப் போல என்று ஒப்பிடாமல், மற்ற மதங்களைப்போல என்று தனது ஜாதியை மதங்களோடு கவனமாக ஒப்பிடுகிறார் பத்ரி சேஷாத்திரி. இதுவும் ஒருவகையில் சரிதான். இந்து மதத்தைப் பார்ப்பன மதம் என்று திராவிடர் இயக்கம் சொன்னது. அதை இப்போது பத்ரி சேஷாத்திரி மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார். மற்ற மதங்களை ஒப்பிடுபவர், அந்த மதங்களைப் போல, பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்காமல், யார் வேண்டுமானாலும் தகுதி அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களில் கடவுளுக்குப் பூஜை செய்யலாம் என்ற நிலையைப் பார்ப்பனர்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதை ஏனோ வகையாக மறந்துவிடுகிறார்.
அரசியலில் ஒதுக்கப்படும், சமூகத்தால் வெறுக்கப்படும் தமிழ்ப் பார்ப்பனர்கள், தமிழகச் சமூகவெளியில் பாதுகாப்பாக உணர்வதற்கும், தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கும் என்ன செய்வது? என்று ஆதங்கத்தோடு கேள்வியை எழுப்புகிறார்.
அதற்கான சில ஆலோசனைகள் பின்வருமாறு:
பிராமணர் என்ற சொல்லை முதலில் கைவிட வேண்டும். பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலமாக மற்றவர்களைப் பிறப்பால் தாழ்ந்தவர்கள், இரண்டாம் நிலையில், மூன்றாம் நிலையில், நான்காம் நிலையில் உள்ளவர்கள் என்று நிறுவ முயலும் செயல் நிறுத்தப்பட வேண்டும்.
பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
கோவில்களில் அனைத்து ஜாதியினரும் பூஜை செய்வதைத் தடுக்க முயற்சிக்கக் கூடாது.
தங்கள் மொழியான சமஸ்கிருதத்தை மற்ற மொழி பேசுபவர்கள் மீது திணிக்கக் கூடாது. அப்படி யாராவது திணிக்க முயற்சித்தால், அதைக் கண்டித்துத் தடுக்க முயல வேண்டும்.
நாங்கள் இந்தத் தொழில்களைச் செய்யமாட்டோம் என்று திமிரோடு அடம் பிடிக்காமல், எல்லாத் தொழில்களிலும் மற்றவர்களோடு சேர்ந்து ஈடுபட வேண்டும்.
பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் வாடகைக்கு வீடு கொடுப்போம், விற்பனை செய்வோம் என்று அராஜகம் செய்யக்கூடாது. அப்படி இருப்பவர்களை, விளம்பரம் செய்பவர்-களைத் திருத்த முயல வேண்டும்.
ஜாதியைக் காட்டும் புற அடையாளங்-களைத் துறக்க வேண்டும்.
மற்றவர்களைப் போல அந்த அந்த வட்டார மொழியைப் பேச வேண்டும், ஜாதிக்கென வைத்திருக்கும் தனிப் பேச்சு வழக்கை மறக்க வேண்டும்.
கிராஸ் பெல்ட் என்றாலே டேஞ்சரஸ் என்று பேசிக்கொள்ளும் நிலையை மாற்றும் வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்-கொள்ள வேண்டும்.
கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி, நாடறிய கலப்புத் திருமண முகாம்களை நடத்த முன்வர வேண்டும்.
ஜாதியை ஒழித்து அனைவரும் சமம் என்ற நிலையை ஏற்படுத்த களமிறங்கிப் போராட வேண்டும். தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களை அதற்குப் பயன்படுத்த வேண்டும்.
மொத்தத்தில் விலகி விலகிச் செல்லாமல், நாமும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து, தனித்த பழக்க வழக்கங்களை விட்டொழித்து, மனிதராய் - மாந்த நேயத்தைக் காப்பவர்களாக வாழத் தொடங்க வேண்டும்.
இதனால் பார்ப்பனர் என்ற ஜாதி அடையாளம் காணாமல் போகலாம். கடந்த நூறு நூற்றைம்பது ஆண்டுகளில் எத்தனையோ ஜாதிகள் அடையாளம் இல்லாமல் காணாமல் கரைந்து போய்விட்டன. அப்படிக் கரைந்து காணாமல் போவதில் தவறில்லை. தற்போது உள்ள தகவல் தொடர்பு வசதியால், பார்ப்பனர்கள் என்றொரு ஜாதி இருந்தது. அந்த ஜாதியைச் சேர்ந்த மக்கள் செய்த மகத்தான செயல்கள் மூலமாக, ஜாதி என்பதே ஒழிந்தது என்று வரலாறு பாராட்டோடு பதிவு செய்யும். பார்ப்பனர்கள் மீதான கசப்பான நினைவுகள் மாறி இனிமையான நினைவுகளை வருங்கால சந்ததியினர் அசைபோடுவார்கள்.
பார்ப்பனர்களுக்கு எதிரானது அல்ல திராவிடர் இயக்கம். ஆனால், பார்ப்பனர் என்ற சிந்தனை இருக்கும்வரை அதைத் தொடர்ந்து எதிர்க்கும் திராவிடர் இயக்கம். சிறுபான்மை மதங்களை ஒடுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கை போன்றதல்ல திராவிடர் இயக்கத்தின் கொள்கை. பெரியாரின் மாந்தநேயக் கொள்கையைக் கொண்டது திராவிடர் இயக்கம். எல்லோரும் மனிதர்களாக, மனித நேயத்தோடு, ஏற்ற தாழ்வில்லாமல் வாழவேண்டும் என்பதே திராவிடர் இயக்கத்தின் கொள்கை.
இதன் காரணமாகத்-தான், இயக்கம் தொடங்கி நூறாண்டுகள் ஆகியும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி கிட்டத்தட்ட அய்ம்பது ஆண்டுகள் ஆகியும், இன்று வரை, திராவிடர் இயக்கக் கொள்கைக்கு நேர்எதிராக உள்ள பார்ப்பனர்கள் யாரும் கொல்லப்படவில்லை. மற்ற மாநிலங்களில் மதவெறி பிடித்து கூட்டம் கூட்டமாகக் கொன்றது போன்ற நிகழ்வுகள் பார்ப்பனர்-களுக்கு எதிராக தமிழகத்தில் நிகழவில்லை என்பதைப் பார்ப்பனர்கள் நேர்மையோடும் நன்றியோடும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தப்பட்டுக் கிடக்கும், தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்கள், குப்பை அள்ளுபவர்களாக, மலம் அள்ளுபவர்களாக, சாக்கடையில் இறங்கிச் சுத்தம் செய்பவர்களாக, இரத்தம் தோய்ந்த மருத்துவமனைத் துணிகளை சுத்தம் செய்பவர்களாக, பிணவறையில் பிணத்தை அறுப்பவர்களாக, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவர்களாக, இன்னும் பல மற்றவர்கள் செய்யத் துணியாத பணிகளைச் செய்து வருகின்றனர். யாரும் செய்யத் துணியாத, செய்யத் தயங்கும் பணிகளைச் செய்யும் இவர்களுக்கான கூலி மிகச் சொற்பமானதே.
இதை வைத்து இவர்கள் குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கின்றது. மோசமான சூழலில், சுகாதாரமற்ற சேரிப்பகுதியில் வாழ்கிறார்கள். மோசமான புறச் சூழலில் பிறந்து வளரும் இவர்களின் வாரிசுகள் பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளைப் போல வாழமுடியுமா? வளர முடியுமா? வாழ்வில் உயர முடியுமா? என்பதைச் சமூகத்தில் இன்றும் உயர்ந்த நிலையில் உள்ள பார்ப்பனர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வர்ணாசிரம முறையால் உருவாக்கப்பட்ட சமூக ஏற்ற தாழ்வினால் அழுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாமல் வாடும் குடும்பங்கள் ஏராளம் இருக்கும் போது,  அதிகாரம் பறிபோய்விட்டதே என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது? என்பதை நேர்மையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதே வர்ணாசிரம முறையால் சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பார்ப்பனர்கள் சமூக ஏற்றத் தாழ்வைப் போக்க உருவான திராவிடர் இயக்கத்தைக் குறை சொல்லிக்-கொண்டு புலம்பித் திரிவதை நிறுத்திக்கொண்டு, செய்த தவறுகள் மற்றும் செய்துகொண்டிருக்கும் தவறுகளை உணர்ந்து, இனியாவது பார்ப்பனர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். பிராமணர்கள் என்று தங்களைக் கருதிக்கொண்டு வாழ்பவர்கள், தாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான் என்றுணர்ந்து மாற ஆரம்பித்தால், சமூகத்தில் மாபெரும் மாறுதல் நிகழும்! பார்ப்பனர்கள் மீதான வெறுப்பை மற்றவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் பத்ரி சேஷாத்திரி போன்ற அனைவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ள முயலவேண்டும்!
மற்றவர்களின் உறவினர்களாக மாற முயற்சி செய்யுங்கள்!  மகிழ்ச்சியோடு உறவினராக தயாராக இருக்கிறார்கள் மற்றவர்கள்!
- திராவிடப்புரட்சி
-உண்மை இதழ்,1-15,16-31.1.,1-15.2.2015