பக்கங்கள்

கிரிமிலேயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிமிலேயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 பிப்ரவரி, 2019

கிரிமிலேயர் என்னும் கிருமியை ஒழிப்போம்







மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 7.8.1990 அன்று பிறப்பித்தார். இதனை எதிர்த்து, தமிழகம், தென் மாநிலங்கள் தவிர்த்து, வட மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. இட ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து உயர்ஜாதியினர் வழக்கு தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தடையை பெற்றனர்.


அடுத்து வந்த பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசில், ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை 25.9.1991-அன்று பிறப்பித்தது. இந்த ஆணையும், உச்ச நீதிமன்ற வழக்கில் சேர்க்கப்பட்டது.


இறுதியாக, இந்த இரு வழக்கிற்கும் சேர்த்து, உச்ச நீதிமன்றம், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு 16.11.1992 அன்று தீர்ப்பினை அளித்தது. வி.பி.சிங் பிறப்பித்த ஆணை செல்லும்; பி.வி.நரசிம்மராவ் பிறப்பித்த பொருளாதார முறையிலான இடஒதுக்கீடு ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.


இத்துடன் நில்லாமல், 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை கண்டறிந்து (கிரீமிலேயர்), அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த ஆணையின்படி, பிற்படுத்தப் பட்டோரில் முன்னேறியவர் பற்றி கண்டறிய, மத்திய அரசு 22.2.1993 அன்று, நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.


பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) யார் யார் என்று பட்டியலிட்டு, குழு தனது அறிக்கையை 10.3.1993 அன்று மத்திய அரசுக்கு அளித்தது.


நிபுணர் குழுவின் அறிக்கையை, மக்களவை-யில் 16.3.1993 அன்றும், மாநிலங்களவையில் 17.3.1993 அன்றும் அரசு வைத்தது. குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்-டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் 8.9.1993 தேதியிட்ட ஆணையின் மூலம் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.



நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையிலான குழு பரிந்துரைத்த கிரிமிலேயர் பட்டியல் என்ன?


நிபுணர் குழு தனது பரிந்துரையில் கீழ்காணும் பதவி வகிப்பவர்களை, ஆறு பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் கிரிமிலேயர் என பரிந்துரைத்தது.


1. அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள பதவிகள்:


குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், மத்திய, மாநில அரசு சர்வீஸ் கமிசன் ஆணையர்கள், மத்திய தணிக்கைத் துறை தலைவர் உள்ளிட்ட பதவிகள். இதில், கவர்னர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கிடையாது.


2. சேவைத் துறை:


மத்திய, மாநில அரசில், குரூப் ஏ பதவிகள்


கணவன்  மனைவி இருவரும் குரூப் பி பதவிகள்


பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு, மத்திய அரசுக்கு ஈடான பதவி எது என கண்டறியும்வரை, வருமான* அடிப்படையில்.


3. ராணுவத்தில் கலோனல் பதவியில் உள்ளவர்கள்


4. வணிகர்கள், தொழில் சார்ந்த பிரிவினர், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில்முறை நிர்வாகத்தவர்கள்.


5. சொத்து வைத்திருப்போர்


6. ஆண்டு வருமானம்* ரூ.1 லட்சம் உள்ளவர்கள் மற்றும் செல்வம் வைத்திருப்போர்


(*வருமானம் என்பதில், மாதச் சம்பள வருமானமும், விவசாய வருமானமும் விலக்கு அளிக்கப்பட்டது)


மத்திய அரசின் ஆணை 8.9.1993-இன் படி, மேற்கொண்ட பட்டியலில் உள்ளோர், கிரீமிலேயர் என அறிவிக்கப்பட்டு, அவர்களது பிள்ளைகளுக்கு, ஓபிசி (பிற்படுத்தப்பட்டோர்) சான்றிதழ் கிடையாது. ஏனையோர்க்கு ஓபிசி சான்றிதழ் பெற வழிவகை செய்தது. இந்த ஆணையின் அடிப்படையில் 8.9.1993 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் பணிகளில் சேர்ந்திட ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பெரும்பிரிவினர் இந்த ஆணையின் காரணமாக பாதிக்கப்பட்டனர்.


இந்த நிலையில், 8.9.1993 அரசின் ஆணைக்கு, விளக்கம் அளிக்கிறோம் என்ற பெயரில், மத்திய பணியாளர் நல அமைச்சகம், 14.10.2004 அன்று ஒரு விளக்க ஆணையை பிறப்பித்தது. இதில், பொதுத்துறையில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் பற்றி குழப்பமான விளக்கத்தை அளித்தது.


மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. (குடிமைப்பணி தேர்வு) நடத்திய தேர்வில் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோர் சிலருக்கு, 2015-ஆம் ஆண்டு பணிக்கான ஆணையை, மத்திய பணியாளர் நலத் துறை வழங்க மறுத்தது. காரணம், அவர்களது பெற்றோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் உள்ளதாலும், அவர்களது மாத வருமானம், நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பை (2015இ-ல் ரூ.6 லட்சம்) மீறுவதாலும், அவர்களுக்கு பணி வழங்க முடியாது என கூறியது.


ஆனால், அதே துறையின் 8.9.1993- தேதியிட்ட ஆணையில், வருமான வரம்பை கணக்கிடும்-போது, மாத வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடப்-பட்டுள்ளதை, அதே துறையே ஏற்க மறுத்தது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டில், தேர்வு பெற்ற 25 பேருக்கு பணி வழங்கப்படவில்லை.


பாதிக்கப்பட்டோர், சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். 12.1.2017 அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு, உடனடியாக பதவி வழங்க வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறைக்கு ஆணையிட்டது. இதே தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றமும், 31.8.2017 அன்று அளித்தது. ஆனால், வழக்கை உச்ச  நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, தடையாணை பெற்றது மத்திய அரசு.


டில்லி உயர் நீதிமன்றத்திலும், பாதிக்கப்-பட்டோர் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு சாதகமாக, 22.3.2018 அன்று தீர்ப்பளித்தது.


ஆனால், இந்த தீர்ப்பையும், மத்திய அரசு ஏற்கவில்லை.


இதனிடையே, 2016, 2017, 2018 ஆண்டுகளில், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கு (ஏறக்குறைய நூறு பேர்), அவர்களது பெற்றோரின் மாதச் சம்பளத்தை கணக்கில் எடுத்து, இன்றளவும் பணி வழங்காமல், மத்திய அரசு சமூக அநீதியை செய்து வருகிறது. தனது தவறான வழிமுறையை நியாயப்படுத்தும் விதமாக, மத்திய பணியாளர் நலத் துறை, 6.10.2017 அன்று ஓர் ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் பெரும்-பான்மையோர், கிரீமிலேயர் என அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.


இதனை எதிர்த்து, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்க கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.  திராவிடர் கழகமும் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. சமூக, அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று கோரிக்கை வைத்துள்ளது.




இந்த கோரிக்கையின் அடிப்படையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடனடியாக அறிக்கை வெளியிட்டதோடு, 9.11.2018 அன்று, கிரீமிலேயர் எனும் கிருமி ஒழிப்பு மாநாட்டையும் நடத்தியுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


தற்போது, பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு, இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட முடிவு செய்து, பொதுமக்கள் கருத்தை அறிந்திட பத்திரிகையில் செய்தியும் வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் 6.10.2017 தேதியிட்ட கிரீமிலேயர் தொடர்பான ஆணை திரும்பப் பெற வேண்டும் என்பது அவசரம்; அவசியம்.


1. அரசியல் அமைப்பு சட்டத்தின் 340-ஆவது பிரிவில் சமூக ரீதியாக, கல்விரீதியாக (Socially and educationally) என்று தான் உள்ளது. அதனைப் பின்பற்றி, முதல் அரசியல் சட்ட திருத்தம் 15(4) கொண்டுவந்த போது, அதே வார்த்தைதான் கையாளப்பட்டது.


2. பொருளாதார அடிப்படையில் என்பதை நாடாளுமன்றம் ஏற்கவில்லை. சில உறுப்பினர்கள், பொருளாதார அளவுகோல் வேண்டும் என்ற நிலையில், நாடாளுமன்றத்தில் 1.6.1951 அன்று  வாக்கெடுப்பு நடந்து 245-5 என்ற வாக்கில் அன்றே தோற்கடிக்கப்பட்டது.


3. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல.


4. முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காகா கலேல்கர் தலைமையில், 30.3.1955 அறிக்கை அளித்தது. அதில் பொருளாதார அளவுகோல் இல்லை.


5. மண்டல் குழு பரிந்துரை 31.12.1980 அன்று அளிக்கப்பட்டது. அதிலும், பொருளாதார அளவுகோல் இல்லை.


6. வசந்தகுமார் கர்னாடகா வழக்கில் (8.5.1985) தீர்ப்பளித்த நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி கூறியதாவது:


பொதுப்போட்டியில், சமூகத்தின் கிரீமிலேயராக உள்ளவர்கள், பல இடங்களை கைப்பற்றுவது தவறு இல்லை என்றால், இட ஒதுக்கீட்டு இடங்களில், அதே போன்று, பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய சிலர் கைப்பற்றுவது எப்படி தவறாகும்? என்று கேட்டார்.


7. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.பி.சாவண்ட் அவர்கள், கிரீமிலேயர் பற்றி கூறுகையில், அரசியலமைப்பில் ஒதுக்கீடு "வகுப்புகளுக்கு" (Classes) வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு (Individuals)  அல்ல.


அரசு நிர்வாகத்தில், இந்த பிரிவுகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது என்று சொன்னார்.


8. சமூகரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்-பட்டோர் யார் என்பதை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க்கு உள்ள பட்டியல் போன்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்-பட வேண்டும். அதுவே, கிரீமிலேயர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும் என மேனாள்  நீதிபதி ஏ.கே.ராஜன் கூறுகிறார்.


9. 24.7.1998 அன்று நாடாளுமன்றத்தில், கிரீமிலேயர் தொடர்பாக, தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உறுப்பினர் ஜி.எம்.பானட்வாலா, இன அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு இருக்குமானால், அதற்கான தீர்வும், இன அடிப்படையில் தான் இருக்கவேண்டும் என அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


கிரீமிலேயர் ஆபத்து!


1992 இல் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றான 16(4) படி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை, அந்நாள் பிரதமர் திரு. வி.பி.சிங் போட்ட ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட (இந்திரா சகானி வழக்கு) வழக்கில் 9 நீதிபதிகள் அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பையொட்டியே பெரிதும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றாலும், இதில் கிரீமிலேயர் (Creamy layer) என்ற வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித் திருப்பது, ஒரு கையால் கொடுத்ததை மறு கையால் பறித்துக் கொள்ளுவது போன்றதொரு அநீதியை ஏற்படுத்தியுள்ளது!


பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வருமானம் அதிகமுள்ள மேல் தட்டினைப் பிரித்து, அவர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராகக் கருதாமல் செய்யும் இந்த தீர்ப்பு அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும் (Unconstitutional)..


உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இதனை எழுப்புவதன் உள்நோக்கமே, இப்படி ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியை வைத்தால், அதனால் காலியாகும் இடங்களை தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் என்பதுதானே!


உயர்ஜாதியினர் அபகரிக்கத் திட்டம்


Carry Forward  என்ற முறை அமலில் இல்லை. அதாவது இந்த ஆண்டு தகுதி உள்ளவர்கள் வராததால், காலியாகும் இடங்களை அப்படியே அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் முறை கிடையாது என்பதால், அது பொதுப் போட்டிக்குச் செல்லும். அதனைத் தாங்களே அபகரிக்கலாம் என்பதால்தானே!


பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்றம், கிரீமிலேயரை அறிமுகப்படுத்துவது ஏன்?


அரசமைப்புச் சட்டத்தில் பொருளாதார அடிப்படைக்கு இடம் இல்லை என்று கூறிவிட்டு இப்படிச் சொன்னதே மிகப் பெரிய தவறு. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இந்த சமுதாயக் கொடுமையை அனுபவித்தறியாதவர் களான அல்லது தங்களுக்கே உரிய உயர்ஜாதி தத்துவத்தின் வியூக அடிப்படையில்தான், தெருக்கதவு வழியாக நுழைக்க முடியாததை, கொல்லைப்புற வழியாக அந்த நான்கு உயர்ஜாதி நீதிபதிகளும் புகுத்தி விட்டார்கள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டு ஆணைகளில் எது செல்லும், எது செல்லாது என்று மட்டும் கூறவேண்டிய வர்கள், எதை எதையோ வழக்குக்குச் சிறிதும் சம்பந்தமில்லாதவற்றை வலிய போய்த் தேடி ஏதோ இட ஒதுக்கீட்டிற்கே இதுதான் கடைசி தீர்ப்பு என்பது போலக் காட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். எருதின் புண் அதனைக் கொத்தும் காக்கைகளுக்கு எப்படித் தெரியும்?


எனவே, மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கையில், கிரீமிலேயர் என்ற காரணம் காட்டி, அவர்கள் வெற்றி பெற்றும் பதவி தராமலிருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதம்; சமூக அநீதியும் ஆகும்!


தேர்வு எழுத அனுமதித்து விட்டு பணி நியமனத்தின்போது குறுக்கிடுவதா?


அவர்கள் தேர்வு எழுது முன்னர், அக்காரணத்தைக் காட்டி, அவர்களது மனுக்களை நிராகரிக்காமல், அவர்களைத் தேர்வு எழுதவிட்டு, அவர்கள் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் _ இப்படி கிரீமிலேயர் _ அதிக வருமானம் உள்ள பெற்றோர்களைக் கொண்டவர்கள் என்று காரணம் காட்டித் தடுப்பது இயற்கை நீதி (Natural Justice) என்பதற்கேகூட விரோதமான ஒன்றாகும்!


இது ஒருபுறமிருக்க, கிரீமிலேயர், கிரீமிலேயர் என்பது நீ சதா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென்றே _ இவர்களை பதவிக்கு வராமல் தடுக்க வைக்கப்பட்ட கண்ணி வெடிகள் ஆகும்.


இந்திரா சஹானி வழக்கில்  சம்பந்தம் இல்லாமல்..


இந்திரா சஹானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தீர்ப்பு எழுதிய 5 நீதிபதிகளை _ வழக்கிற்கே சிறிதும் சம்பந்தமில்லாத கிரீமிலேயர் என்பதை தனியே, யாரும் கேட்காமலேயே கேள்வியும் நானே பதிலும் நானே என்பதுபோல வலிய புகுத்தப்பட்டது தானே இந்தக் கிரீமிலேயர்?


பொருளாதார அளவுகோல் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்த அன்றைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் முடிவு செல்லாது என்று தெளிவாக அதே தீர்ப்பில் கூறி விட்டு கொல்லைப்புற வழியாகப் புகுத்தல் போல, இந்த கிரீமிலேயர் நுழைக்கப்படுவது ஏன்? ஏன்?


கிரீமிலேயர் ஆதரவாளர்களுக்குச் சில கேள்விகள்


கிரீமிலேயர் என்று வற்புறுத்துவோர், அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகட்டும், ஆதிக்க ஜாதியாய் இருந்து கொண்டு, ஊடகங்களை தங்களது அஸ்திரங்களாக ஆக்கி மற்றவர்கள்மீது எய்தி இன்புறும் எவராயினும், அவர்களை நோக்கி சில நியாயமான கேள்விகளை முன் வைக்கிறோம். அவர்கள் இந்த கிரீமிலேயர் பற்றி பதில் கூறி விளக்க வேண்டும்.


இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட _ பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றிலாவது கிரீமிலேயர் (பொருளாதார அடிப்படை) கூறப்பட்டுள்ளதா? வற்புறுத்தப்பட்டுள்ளதா?


மண்டல் அறிக்கையில் பொருளாதார அளவுகோல் உண்டா?


மண்டல் கமிஷன் என்ற இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனின் பரிந்துரைகளில் ஏதாவது ஒன்றிலாவது கிரீமிலேயர் என்ற சொற்றொடரோ, கருத்துரையோ, பரிந்துரையோ உள்ளதா?


சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தலைமையிலான அரசு தனது (மத்திய) அரசு சார்பில் செயல்படுத்திய ஆணை (Official Memorandum) யிலாவது இந்த கிரீமிலேயர் மூலம் வடிகட்டல் நடத்தப்பட்ட பிறகே, நியமனம் என்று கூறப்பட்டதா?


அரசமைப்புச் சட்டத்தில் தான் உண்டா?


அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் 1951இல் (First Amendment)  பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் போன்றவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப் பட்டதில், Socially Educationally என்ற சொற்றொடர் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்களை அடையாளப்படுத்தப் பயன் படுத்தப்பட்டன; 'Econamically' என்பது நீண்ட விவாதத்திற்குப் பின், அதில் சேர்க்க மறுக்கப்பட்டது என்பதும் உண்மை அல்லவா?


மேல் அடுக்கான திறந்த _ பொதுப் போட்டி _ தொகுதிக்கும் கிரீமிலேயர் இல்லை.


அடியில் உள்ள S.C., S.T., என்ற தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கான தொகுதியிலும் கிரீமிலேயர் இல்லை. அப்படியிருக்க கிரீமிலேயர் என்ற மறைமுகமாக பொருளாதார அளவுகோல் ஏன் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு மட்டும் அடிப்படையாக இருக்க வேண்டும்? இப்படி நாம் கேட்பதனால் அவர்களுக்கும் கிரீமிலேயர் வேண்டும் என்பது அல்ல. யாருக்கும் கூடாது என்பதே!


52 சதவீத மக்களுக்கு 27 சதவீதம் தானே!


பிற்படுத்தப்பட்டோரில் உள்ள _ மண்டல் பரிந்துரைப்படி _ 52 விழுக்காட்டில், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 27சதவிகிதம் தானே. அதாவது பாதி அளவுதான்! இதிலும் கிரீமிலேயர் என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம்? இது சமூகநீதிக்கு விரோத மானதல்லவா. அது மட்டுமல்ல. 27 சதவீதத்திலும் இதுவரை 12 சதவீதத்துக்கு மேல் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலை! பிற்படுத்தப்பட்டோரில் உள்ள வசதி படைத்தோரை இந்த இடஒதுக்கீடுகளை அனுபவிக்காமல் தடுக்கவே, பிற்படுத்தப்-பட்டோரில் உள்ள ஏழைகளைக் காப்பாற்றவே இந்த வடிகட்டல் என்பது அத்தரப்பு வாதமானால், நாம் ஒன்றைக்  கேட்கிறோம். பதில் கூறட்டும்!


எந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்  பாதிக்கப்பட்டு, ஆட்சியாளரிடமோ, நீதிமன்றங்களிடமோ முறையிட்டு, அதன்பின் ஆட்சியாளரோ, நீதிமன்றங்களோ ஆணையிட்டு, புள்ளி விவரப்படி மேல் தட்டு வர்க்கத்தினரே அத்தனை இடங்களையும் கபளீகரம் செய்து விட்டனர் என்று கண்டறியப்பட்டதனால், இப்படி கிரீமிலேயர் அளவுகோல் புகுத்தப்பட்டதா? இல்லையே!


தேசிய பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்தின் நன்முயற்சி


இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது _ வற்புறுத்தியதுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. (இந்த ஆணையத்திற்குச் சட்ட ரீதியான அந்தஸ்து  _ இதுவரை கொடுக்கப்படாததும் ஓர வஞ்சனை, பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவா?)


ஆண்டுக்கு ஆண்டு வருமானம் கூடுவதும், குறைவதும் உண்டு. இது சரியான அளவுகோல் ஆகாது என்ற காரணத்தால்தான், அரசியல் சட்டப்பிரிவு, 1951இல் ஏற்பட்ட நாடளுமன்றக் குழு விவாதம் இவைகளில் எல்லாம் 'Econamically' என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட்டது; ஏனெனில் அது குழப்பம் உருவாக்கக் கூடியது. நிலையானவற்றை அளவுகோலாகக் கொள்வதுதானே அறிவுடைமை! மாறி மாறி வரும் நிலையற்றதை அளவுகோலாகக் கொள்வது அறிவுடைமையா?


ஆளுவோர் சிந்திக்கட்டும். கிரீமிலேயர் முறை _ அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்ற ஓர வஞ்சனை ஒழியட்டும் _ அணி திரள்வீர்! 


 



குழப்பம் தரும் கிரீமிலேயர் அளவுகள்!

மத்திய அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு முழுமையானதாக இல்லை. ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளவர்கள் கிரீமிலேயர்களாக, அதாவது வசதி படைத்தவர்களாக, கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இந்த அநீதி ஒருபுறமிருக்க, கிரீமிலேயர்களை கணக்கிடுவதில் மத்திய அரசு இழைக்கும் பெரும் அநீதி காரணமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகளின்படி மத்திய, மாநில அரசுகளில் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. மத்திய, மாநில அரசுகளின் சி மற்றும் டி பிரிவு பணிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கிடப்படாது; அதேநேரத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படும்.
அதன்படி பார்த்தால், சி மற்றும் டி தொகுதி பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பெற்றோர் இருவரும் இப்பணிகளில் இருந்து ரூ.1.30 லட்சம் மாத வருவாய் ஈட்டினாலும் கூட அவர்களின் வாரிசுகள் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள்; ஆனால், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பெற்றோர் இருவரும் தலா ரூ.35,000 மாத வருவாய் ஈட்டினாலே அவர்களின் வாரிசுகள் கிரிமீலேயராகக் கருதப்பட்டு ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில் தான் 2017-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 பேருக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட முன்னணி வரிசை பணிகள் மறுக்கப்பட்டுள்ளன. இவர்களின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதால் அவர்களின் வருமானமும் கணக்கில் சேர்க்கப்பட்டு, 29 பேரும் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டிருக்கிறது. சமூக நீதியை இதைவிடக் கொடூரமாக யாராலும் படுகொலை செய்ய முடியாது.

-  உண்மை இதழ், 16-30.11.18

சனி, 3 நவம்பர், 2018

பிற்படுத்தப்பட்டோருக்கு கேடு விளைவிக்கும் சமூகநீதிக்கு எதிரான ஆணை பிறப்பிப்பதா?

வைகோ சீற்றம்!




சென்னை, நவ.2 அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக, பொருளாதார ரீதியாக பிற் படுத்தப்பட்டோரைப்பிரித்திடும் கிரீமி லேயர் எனும் சமூக அநீதியை முற்றி லுமாக நீக்கிடக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

8.09.1993 ஆம் ஆண்டு மத்திய பணி யாளர் நல அமைச்சகம், ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான தகுதியுள்ளோரை வரை யறைப்படுத்தும் ஆணையில், வருமான கணக்கீட்டில் மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் சேர்க்கக்கூடாது என்றுகூறப்பட்டுள்ளது.இதன் அடிப் படையில் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினருக்கு சமூக நீதி அமைச்ச கத்தின் இணைச் செயலாளர் 26.04.2002 அன்று எழுதிய கடிதத்தில், கிரீமிலேயர் முறையை நிர்ணயிக்க மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக் கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பணியாளர் நல அமைச்சகம் 15.11.1993 அன்று வெளியிட்ட ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில் பிரிவு ஜி-1இல் ஆண்டு வருமானம் பற்றிய குறிப்பில், சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து ஏனைய வருமானம் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

முதல்வர் கலைஞரின் ஆணை


டாக்டர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் 24.04.2000 தேதியிட்ட ஆணையில், மத்திய அரசின் பணிகளுக் காக ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கு வருமான வரம்பு கணக்கிடும்போது, மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெளிவாக ஆணை பிறப்பித்தது. மீண்டும் இதே கருத்தை வெளியிட்டு, 20.07.2011 அன்று கலைஞரின் அரசு ஆணை பிறப்பித்தது.

ஆந்திர அரசும், மேற்கு வங்க அரசும் தமிழகத்தைப் பின்பற்றி கிரீமிலேயர் தொடர்பாக மாதச் சம்பளத்தைக் கணக் கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தெளிவான ஆணை கள், விளக்கங்களின் அடிப்படையில் ஓ.பி.சி. சான்றிதழை அந்தந்த மாநில அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், 2016, 2017 மற்றும் நடப்பு ஆண்டிலும் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமு தாய மாணவர்கள் சிலருக்கு அவர்களது பெற்றோர் பொதுத்துறையில் பணியில் உள்ளார்கள் என்றும், அவர்களது ஆண்டு சம்பள வருமானம், அதிகம் உள்ளது என்றும் தெரிவித்து, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற பதவிகளுக்கான ஒதுக்கீடு மறுக்கப்பட்டு உள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு 2018 வரை சற்றேறக்குறைய நூறு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பதவி ஒதுக்கீடு அளிக்கப்படாமல் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடி மைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர் களுக்கு பதவி ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய பணியாளர் நலத்துறை மிகப் பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

மத்திய அரசின் பணியாளர் நல அமைச்சகம் 06.10.2017 அன்று வெளி யிட்டுள்ள ஆணையின் மூலம், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) என வரையறை செய்துள்ளதுதான் இந்த அநீதிக்குக் காரணம்.

இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கில் பிற்படுத்தப்பட்டோர் தங்களது பிள்ளைகளுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற முடியாத நிலைமையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இந்த அநீதிக்கு எதிராக தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், டில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பதவி ஒதுக்கீடு வழங்கிட உத்தரவிட்டும், இன்றுவரை பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு பதவி ஒதுக்கீடு செய்திடாமல் அநீதியை இழைத்து வருகிறது மத்திய அரசு.

சமூக நீதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகம் 06.10.2017 தேதியிட்ட ஆணையின் மூலம் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தி உள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதச் சம்பளம் பெறும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

கல்வி ரீதியாகவும், சமுக ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்திட அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கு தொடர்ந்து மத்திய அரசு அநீதி இழைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகத்தின் 06.10.2017 தேதியிட்ட ஆணை எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றும் நிலையை உருவாக்கி உள்ளது.

பிரதமர் தலையிடட்டும்


மிக முக்கியமான இப்பிரச்சினையில் மத்திய பணியாளர் நலத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் உடனடியாக தலையிட்டு, 06.10.2017 நாளிட்ட மத்திய பணியாளர் நல அமைச்சக ஆணையை திரும்பப் பெறவும், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை மீட்டுத் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அரசியல் சட்டத்தில் எங்கும் இடம்பெறாத பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோரைப் பிரித்திடும் கிரீமிலேயர் - பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர் - எனும் சமூக அநீதியை முற்றிலுமாக நீக்குவதே பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய சமூக நீதியை வழங்கிடும். அதற்கு உரிய வகையில் அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

- விடுதலை நாளேடு, 2.11.18

வெள்ளி, 19 அக்டோபர், 2018

பிற்படுத்தப்பட்டவருக்குப் பேரிடி!

கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில்  எடுக்கக்கூடாது என்ற


ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே!




பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசாணையை மாற்றியது - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி - ஆணை மாற்றப்படவேண்டும் என்று  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

மத்திய அரசின் பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017 அன்று வெளியிட்டுள்ள ஆணையின்மூலம், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் "அனைவரும்'' முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) என வரையறை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கில் பிற்படுத்தப்பட் டோர் தங்களது பிள்ளைகளுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற முடியாத இக்கட்டான நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

குடிமைப் பணி தேர்வில் அநீதி


கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடிமைப்பணி தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, பதவி ஒதுக்கீடு அளிப்பதில், மத்திய பணியாளர் நலத் துறை, மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

தொடர்ந்து 2016, 2017 மற்றும் நடப்பு ஆண்டிலும், இதேபோல், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிற் படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் சிலருக்கு, அவர்களது பெற்றோர் பொதுத் துறையில் பணியில் உள்ளார்கள் என்றும், அவர்களது ஆண்டு சம்பள வருமானம் அதிகம் உள்ளதால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. 2015 முதல் நடப்பு ஆண்டு 2018 வரை சற்றேறக்குறைய நூறு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பதவி ஒதுக்கீடு அளிக்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாத சம்பளத்தை கிரீமிலேயரில் இணைக்கக் கூடாது.


1. 8.9.1993 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட ஆணையில், ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான தகுதியுள்ளோரை, வரையறைப்படுத்தும் ஆணையில், வருமான கணக்கீட்டில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய  வருமானம் சேர்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினருக்கு சமூகநீதி அமைச்சகத்தின் இணை செயலாளர் 25.4.2002 அன்று எழுதிய கடிதத்தில் கிரீமிலேயர் முறையை நிர்ணயிக்க மாத சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

2. மத்திய பணியாளர் நல அமைச்சர் 15.11.1993 அன்று வெளியிட்ட ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை இணைத்துள்ளது. இப்படிவத்தில் பிரிவு ஜி-1 இல் ஆண்டு வருமானம் பற்றிய குறிப்பில், சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, ஏனைய வருமானம் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் சரியான ஆணை


3. டாக்டர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் 24.4.2000 தேதியிட்ட ஆணையில், மத்திய அரசின் பணிகளுக்காக ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கு, வருமான வரம்பு கணக்கிடும்போது, மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெளிவாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் இதே கருத்தை வெளியிட்டு 20.7.2011 அன்று தி.மு.க. ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

4. ஆந்திர அரசும், மேற்கு வங்க அரசும், தமிழகத்தைப் பின்பற்றி, கிரீமிலேயர் தொடர்பாக மாத சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தெளிவான ஆணைகள், விளக்கங் களின் அடிப்படையில் ஓ.பி.சி. சான்றிதழை அந்தந்த மாநில அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

தற்போது பதவி ஒதுக்கப்படாமல் உள்ள அத்தனை மாணவர்களின் ஓ.பி.சி. சான்றிதழையும், நேர்முகத் தேர்வில் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் தேர்வு செய்யப்படாததாகமத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டும்...


பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், டில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். பாதிக்கப்பட்ட மாண வர்கள் அனைவருக்கும் பதவி ஒதுக்கீடு வழங்கிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்று வரை பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாண வர்களுக்குப் பதவி ஒதுக்கீடு செய்திடாமல் அநீதியை இழைத்து வருகிறது மத்திய அரசு. சமூக அநீதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017 தேதியிட்ட ஆணையின்மூலம் அனைத்து மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் பெறும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இத்துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள்கூட இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாது.

கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்குத் தொடர்ந்து மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டு வருவது போதாதென்று, தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகத்தின் 6.10.2017 தேதியிட்ட ஆணை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது.

இம்மாதம் 31 ஆம் தேதி


சென்னையில் மாநாடு


இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருப்பதைத் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் புரிந்து கொண்டு கிளர்ந்தெழ வேண்டும்.

இதுகுறித்து வரும் 31 ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் "கிரீமிலேயர் ஒழிப்பு மாநாடு'' நடைபெற உள்ளது - பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.


சென்னை


19.10.2018


வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது: அரசு சார்பில் கருத்து



புதுடில்லி, ஆக. 17 அரசு பணி களில்எஸ்.சி., எஸ்.டி.வகுப் பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.நாகராஜ் வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது.

2006 ஆ-ம் ஆண்டு வழங்கிய இந்தத் தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்வசதி படைத்தவர்களுக்கு (கிரீமிலே யர்) அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்க தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதி பதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக நடந்து வருகிறது.

2006- ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 11- ஆம் தேதி மறுத்து விட்டது.

இந்நிலையில்அந்தவழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலை மையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜ ரானார். அவர், இட ஒதுக்கீட்டின் பலனைஎஸ்.சி.,எஸ்.டி.வகுப் பினரில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில், அந்த இனத்தினரில் வசதி படைத்தவர்களை விலக்கி வைக்கலாமா? என்ற கேள்விக் குப் பதில் அளித்து வாதாடினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பி னரில் வசதி படைத்தவர்கள் என்பதால் இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது.

அப்படி அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுத்து, எந்தத் தீர்ப்பும் வழங் கப்பட்டது இல்லை.

அந்த வகுப்பினரில் குறிப் பிட்ட சிலர் வசதி படைத்த வர்களாக இருக்கலாம். ஆனால், ஜாதி மற்றும் பின்தங்கிய நிலை இன்னும் அவர்களுடன் சேர்ந்தே இருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் பலனை பெறுவதில் இருந்து எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்குறிப் பிட்ட பிரிவினரை விலக்கி வைக்கலாமாஎன்றகேள்விக் கானபதிலைகுடியரசுத் தலைவரும், நாடாளுமன்றமும் தான் முடிவு செய்ய முடியும். இதில் நீதித்துறையினருக்கு வேலை இல்லை.

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஜாதியில்தான் திருமணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அந்த வகுப்பினரில் நல்ல நிலையில் இருப்பவர்கள்கூட உயர் ஜாதியில் திருமணம் செய்ய முடியாது. இதில் உண்மை நிலை என்னவென்றால், ஒரு சிலர் வசதியான நிலைக்கு வந்து விட்டாலும்கூட, அவர்களது ஜாதியும், பின்தங்கிய நிலையும் அவர்களிடம் இருந்து நீங்கி விடுவது இல்லை. பாகுபாடு பார்க்கும் ஜாதி அமைப்பு நமது தேசத்தின் வாய்ப்புக்கேடானது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

- விடுதலை நாளேடு 17.8 .18