பக்கங்கள்

வெள்ளி, 19 அக்டோபர், 2018

பரோடாவில் ஆலயப்பிரவேசம்

06.11.1932 - குடிஅரசிலிருந்து....


சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமஸ் தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றே யென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப் பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனு தாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது.

தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர்.

இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர். பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரை யாக்கினர். அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்எண்ணெய் ஊற்றி, குடிதண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங் கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை உபயோகிக் காமல் விட்டு விட வில்லை. அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த  உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமுகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாம லிருக்க முடியாது.

இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும்

கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டுகிறோம். இதற்கு முன் போர் சமதானத்திலும் இவ்வாறே தாழ்த்தப்பட்ட சமுகத் தார்க்கும் கோயில் பிரவேசம் அளித்தி ருக்கின்றனர்.

அதைப்பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத் தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டு கிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்ட சபையில், தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதாக தீர்மானம் நிறைவேறியிருக்கின்றது. சென்னை அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை அனுசரித்தும் பரோடா, போர் பந்தர் முதலிய சமதானங்கள் செய்திருக்கும் உத்தரவு களைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம்.

சுதேச சமஸ்தானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாண பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்பு கிறோம். அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பின ருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பின ருக்கும் நீதி புரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங் களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.

- விடுதலை நாளேடு, 13.10.18

பிற்படுத்தப்பட்டவருக்குப் பேரிடி!

கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில்  எடுக்கக்கூடாது என்ற


ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே!




பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசாணையை மாற்றியது - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி - ஆணை மாற்றப்படவேண்டும் என்று  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

மத்திய அரசின் பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017 அன்று வெளியிட்டுள்ள ஆணையின்மூலம், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் "அனைவரும்'' முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) என வரையறை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கில் பிற்படுத்தப்பட் டோர் தங்களது பிள்ளைகளுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற முடியாத இக்கட்டான நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

குடிமைப் பணி தேர்வில் அநீதி


கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடிமைப்பணி தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, பதவி ஒதுக்கீடு அளிப்பதில், மத்திய பணியாளர் நலத் துறை, மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

தொடர்ந்து 2016, 2017 மற்றும் நடப்பு ஆண்டிலும், இதேபோல், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிற் படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் சிலருக்கு, அவர்களது பெற்றோர் பொதுத் துறையில் பணியில் உள்ளார்கள் என்றும், அவர்களது ஆண்டு சம்பள வருமானம் அதிகம் உள்ளதால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. 2015 முதல் நடப்பு ஆண்டு 2018 வரை சற்றேறக்குறைய நூறு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பதவி ஒதுக்கீடு அளிக்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாத சம்பளத்தை கிரீமிலேயரில் இணைக்கக் கூடாது.


1. 8.9.1993 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட ஆணையில், ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான தகுதியுள்ளோரை, வரையறைப்படுத்தும் ஆணையில், வருமான கணக்கீட்டில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய  வருமானம் சேர்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினருக்கு சமூகநீதி அமைச்சகத்தின் இணை செயலாளர் 25.4.2002 அன்று எழுதிய கடிதத்தில் கிரீமிலேயர் முறையை நிர்ணயிக்க மாத சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

2. மத்திய பணியாளர் நல அமைச்சர் 15.11.1993 அன்று வெளியிட்ட ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை இணைத்துள்ளது. இப்படிவத்தில் பிரிவு ஜி-1 இல் ஆண்டு வருமானம் பற்றிய குறிப்பில், சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, ஏனைய வருமானம் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் சரியான ஆணை


3. டாக்டர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் 24.4.2000 தேதியிட்ட ஆணையில், மத்திய அரசின் பணிகளுக்காக ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கு, வருமான வரம்பு கணக்கிடும்போது, மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெளிவாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் இதே கருத்தை வெளியிட்டு 20.7.2011 அன்று தி.மு.க. ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

4. ஆந்திர அரசும், மேற்கு வங்க அரசும், தமிழகத்தைப் பின்பற்றி, கிரீமிலேயர் தொடர்பாக மாத சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தெளிவான ஆணைகள், விளக்கங் களின் அடிப்படையில் ஓ.பி.சி. சான்றிதழை அந்தந்த மாநில அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

தற்போது பதவி ஒதுக்கப்படாமல் உள்ள அத்தனை மாணவர்களின் ஓ.பி.சி. சான்றிதழையும், நேர்முகத் தேர்வில் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் தேர்வு செய்யப்படாததாகமத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டும்...


பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், டில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். பாதிக்கப்பட்ட மாண வர்கள் அனைவருக்கும் பதவி ஒதுக்கீடு வழங்கிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்று வரை பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாண வர்களுக்குப் பதவி ஒதுக்கீடு செய்திடாமல் அநீதியை இழைத்து வருகிறது மத்திய அரசு. சமூக அநீதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017 தேதியிட்ட ஆணையின்மூலம் அனைத்து மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் பெறும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இத்துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள்கூட இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாது.

கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்குத் தொடர்ந்து மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டு வருவது போதாதென்று, தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகத்தின் 6.10.2017 தேதியிட்ட ஆணை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது.

இம்மாதம் 31 ஆம் தேதி


சென்னையில் மாநாடு


இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருப்பதைத் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் புரிந்து கொண்டு கிளர்ந்தெழ வேண்டும்.

இதுகுறித்து வரும் 31 ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் "கிரீமிலேயர் ஒழிப்பு மாநாடு'' நடைபெற உள்ளது - பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.


சென்னை


19.10.2018


ஞாயிறு, 14 அக்டோபர், 2018

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - முதல் வெற்றி!

நுண்ணோக்கி

 


காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கைக்கிணங்க தமிழகமெங்குமிருந்து கருஞ்சட்டைப்படை திரள ஆரம்பித்தது. 18_10_69 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000_க்கு மேற்பட்ட வீரர்களை கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை நுழைவுக் கிளர்ச்சிப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள்.

தஞ்சை மாவட்டம், மன்னார்குடி கழகக் கட்டடத்தில் 20_10_69 அன்று தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் கூடி, சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான, கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபால சாமி கோயிலில் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு, கிளர்ச்சிக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.

1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும் என்று தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். 16_11_69 அன்று மாலை 3.30 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூடியது. தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் பற்றி விளக்கினார். அவர்களால் பிரேரேபிக்கப்பட்ட 8 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

“கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் கழகத் தொண்டர்களுக்கு நீதித்துறை சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் இலவசமாக நடத்தித் தர நாங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறோம்’’ என்று நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டு போராட்ட அணியில் சேர்ந்தார்கள்.

17-1-1970 - முதல்வர் கலைஞர் அறிக்கை

ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதி பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக இருக்கலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால், அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பதுபற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல், தகுதியொன்றினால் கணக்கிடப்படக் கூடிய நாள் வந்துவிடுமானால், ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்வோர், ஜாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கு தடையில்லையென்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்.

கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம் ஒருவர் பாதுகாப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு ஜாதி வர்ணம் பூசப்படக்கூடாது. ஆண்டவன் திருமுன்னே ஜாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன் வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று, பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- மு.கருணாநிதி, தமிழக முதலமைச்சர் (17.1.1970)

19-1-1970 - போரின் வெற்றி!

“தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் திரு. கருணாநிதியவர்கள், ஜாதி அடிப்படையில் கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்ட விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளதால், கிளர்ச்சியின் தத்துவத்தை நல்லவண்ணம் புரிந்து செயல்பட முனைந்துள்ள அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், 26_1_70 அன்று நடைபெறவிருந்த கிளர்ச்சி (கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி) ஒத்தி வைக்கப்படுகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கழகத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.

12-3-1970 - கர்ப்பக்கிரகக் கிளர்ச்சி வெற்றி

“தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக் கிரக நுழைவுப் போராட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் போகவும் தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றை அரசு கொண்டு வரும்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் 12_3_70 அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

30-11-1970 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது

அர்ச்சகர் தொழிலுரிமையைப் பார்ப்பனர் மட்டுமே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருவதை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தி வந்த கொள்கையைப் பின்பற்றி, அர்ச்சகர் தொழிலுக்கு பார்ப்பனரல்லாத பிற வகுப்பினரும் பயிற்சி பெற்று நியமனம் பெறலாம் என்பதற்கு வழி செய்யும் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் 30_11_70 அன்று அறநிலைய அமைச்சர் தாக்கல் செய்தார்.

2-12-1970

தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த கர்ப்பகிரக நுழைவுக் கிளர்ச்சியின் மாபெரும் வெற்றியாக அர்ச்சகர் நியமன மசோதா தமிழக சட்டமன்றத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி 2_12_70 அன்று ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. எல்லாக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர்.

திரு. எல்.இளையபெருமாள் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு  (The committee on untouchability, economic and educational development of the Scheduled Castes and connected documents - 1969) மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் தீண்டாமை ஒழிப்புக்கு _ கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டம் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப் பட்டதாகக் கூறப்பட்டது.

சட்டம் செயல்படாமைக்கு என்ன காரணம்?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து சிறீபெரும்புதூர் கோயில் மட எதிராஜ் ஜீயரும், தஞ்சாவூரில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பங்காரு காமாட்சியம்மன் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அல்லூர் கோயில் ஆகியவைகளில் உள்ளோர் உள்ளிட்ட பலர் 12 ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

10-6-1972

சென்னை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் 10_6_72 இரவு 7.30 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்றது.

திராவிடர் கழக பொதுச் செயலாளரும், ‘விடுதலை’ ஆசிரியருமான கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 16_6_72 மாலை 5.30 மணி முதல் தந்தை பெரியார் கட்டளைப்படி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்னால் கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியைத் தொடர்ந்து நாள்தோறும் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியாருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

திராவிடர் கழகத்தின் தலைவராக அன்னை மணியம்மையார் அவர்கள் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களின் மறைவிற்குப் பிறகும் திராவிடர் கழகத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

3.4.1974                தமிழகமெங்கும் அஞ்சலகங்கள் முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார்.

6.5.1974                மத்திய அமைச்சர் ரகுராமய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

31.5.1974              மத்திய நிதி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

24.8.1982              வேண்டுகோள் அறப்போர் 35 கோயில்களின் முன் நடத்தப்பட்டது.

10.5.2000              வேண்டுகோள் அறப்போர் 28 கோயில்களின் முன் நடத்தப்பட்டது.

5.7.2004                மாவட்டத் தலைநகரங்களில் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாநாடுகள் பல நடத்தப்பட்டு வேண்டுகோள்கள் - தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக ஆட்சியின் செயல்முறைகள் யாவை? 19.3.2005

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்தச் சட்டமன்றத் தொடரிலேயே இதற்குச் செயல் வடிவம் கொடுக்க ஆணை பிறப்பித்து வரலாறு படைக்கட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா.

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

1.2.2006

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் மறியல் - 10 ஆயிரம் கழகத் தோழர்கள் கைது.

21.8.2006

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு திருத்தத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. (21.8.2006)

மாற்றுப் பாலம் அமைப்பதாலேயே பாலம் கட்டப்படாது என்று யாரும் சந்தேகப்படவோ அச்சப்படவோ தேவையில்லை - இறுதியில் யார் சிரிப்பார்கள் என்பதே முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை. (22.8.2006)

23.11.2006

நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞரிடம் அளித்தது.

28.2.2007

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பம்

தந்தை பெரியாரின் இறுதி முழக்கமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அரசு அறிவிப்பினை வெளியிட்டது. வைணவ, சைவ பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன.

22.10.2012

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

4.5.2013

04.05.2013 அன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்.

(ஆகஸ்டு 1 (2013) சிறை நிரப்பும் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். அடுத்த கணமே 1081 பேர் கையொப்பமிட்டுப் போராட்டக் களத்திற்குத் வர எழுந்தனர். இதில் பலரும் ரத்தக் கையொப்பமிட்டிருந்தனர்.)

16.12.2015இல் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான தடை நீங்கியது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின் பல அழுத்தங்கள் தந்தார்.

இறுதியில் தமிழக அரசின் அர்ச்கர் பயிற்சி முடித்த 206 பேரில் ஒருவரான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகர் மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை பிப்ரவரி 26, 2018 அன்று மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டத்திற்கு முதல் வெற்றி. பெரியாருக்கும் கலைஞருக்கும் பெரு வெற்றி!

-  உண்மை இதழ், 16-31.8.18