பக்கங்கள்

வெள்ளி, 29 ஜூன், 2018

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்



 


இன்றைய தினம் இந்தியா தேசத்தில் இந்திய மக்களுக் குள் இருந்துவரும் ஜாதி மத பேதங்களுக்குத் தகுந்தபடியான பிரதிநிதித்துவம் ஏற்படக்கூடாது என்பதே தான் இந்திய காங்கிரஸ் கொள்கையாகவும், தீவிர தேசியமாகவும் இருந்து வருகின்றது. அன்றியும் இந்தப்படி சொல்லுகின்றவர்கள்தான் தேசியவாதிகளாகக் கூடும்.

நம்மைப் பொறுத்தவரையிலும், ஜாதி, மத வகுப்புப்படி மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்று சொல்லுவதாலேயே தீவிர தேசியவாதிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்படாமல்  வகுப்புவாதிகள், தேசத் துரோகிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்பட்டுவிட்டது. ஆனபோதிலும் 'ஜாதி, மதம், வகுப்பு ஆகியவைகளை அடியோடு அழிக்கவேண்டும்' என்று சொல்லுகின்ற 'ஜாதி மதத்துரோக' லிஸ்டிலும் நமது பெயர் மாத்திரமேதான் இருக்கின்றதேயொழிய மற்றபடியான 'தீவிர தேசியவாதிகள்' பெயரெல்லாம் ஜாதி, மத வகுப்பைக் காப்பாற்றும் லிஸ்டி லேயே தான் பதியப்பட்டிருக் கின்றன! இதில் இருந்து பகுத் தறிவுள்ள மக்கள் ஜாதி, மத வகுப்புவாதிகள் யார்? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். ஆனாலும் சொந்த அறிவே சிறிதும் இல்லாத பாமரமக்கள் நம்மைக் குறை கூறாமல் இருக்கமாட்டார்கள். இந்த நாட்டில் நாமறிய சுமார் 20 வருஷ காலமாகவே பிராமணர்கள் மகாநாடு, வருணா சிரம மகாநாடு, கிறிஸ்துவர் மகாநாடு, முஸ்லிம்கள் மகாநாடு, சைவர் மகாநாடு, வைணவர் மகாநாடு, ஆரிய தர்ம பரீட் சித்து மகாநாடு, மற்றும் சத்திரியர், வைசியர், பார்ப்பனரல் லாதார், பறையர், சக்கிலியர், வண்ணார், நாவிதர், நாயக்கர், பள்ளர்கள், வணியவைசியர்கள், வேளாளர், படையாட்சி, வேடுவர், கோமுட்டி வைசியர், நாட்டுக்கோட்டை, வைசியர், அகமுடையர், உடையார், நாடார், மறவர், கள்ளர், வீரசைவர், தேவாங்கர், இராஜபுத்திரர், சாலியர்,  மராட்டியர், கைக் கோளர் சௌராஷ்டிரர்கள், குலிஜியர்கள், குயவர்கள், கோனார் முதலிய பல முக்கிய வகுப்புக்காரர்களின் தனித் தனி மகாநாடுகளும், மற்றும் இவற்றுள் நூற்றுக்கணக்கான உட்பிரிவு வகுப்புகள் மகாநாடுகளும் நடைபெற்ற வண்ண மாகவே இருந்து வருகின்றன.

மற்றும் தேசிய கொள்கைகள் என்பவைகள் எல்லாம் ஜாதி, மத வகுப்புகளை காப்பாற்று வதிலும், அவற்றின் பரம்பரை உரிமைகளைக் காப்பாற்றுவதிலும், பழக்கவழக்கங் களைக் காப்பாற்றுவதிலும் தவற மாட்டோமென்று அந்த வகுப்பாருக்கு உறுதி கொடுப்பதாகவே தான் தீர்மானித் திருக்கின்றன. சர்க்காரார் கணக்கிலும் ஜாதிக்கொரு கலமும், மதத்திற்கொரு கலமும், வகுப்புக்கொரு கலமும், போடப் பட்டு அதை அனுசரித்தே சிவில் கிரிமினல் சட்டங்களும், ஆட்சியும் நடத்தப்பட்டு வருகின்றன. வியாபாரத் துறை யிலும் ஜாதி வகுப்புகள் ஆதிக்கமும், விவசாயத் துறையிலும் ஜாதி, மத வகுப்புகள் ஆதிக்கமும் இருந்து வருவதோடு சமுகத் துறையிலும் ஜாதி, மத வகுப்பு ஆதிக்கம் தலைசிறந்தே விளங்குகின்றன.

உதாரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு இராஜகோபாலாச்சாரியார் அவர்களே தலைவர் ஹோதாவில் 'எவனாவது கள் குடித்தால் அவனை ஜாதியை விட்டும் வகுப்பை விட்டும் பகிஷ்காரம் செய்து அதாவது அவனுக்கு நீர், நெருப்பு, பூமி ஆகியவை யாரும் கொடுக் காமல் கொடுமைப்படுத்துவதான ஜாதி வகுப்பு கட்டுப் பாட்டைப் பலப்படுத்துங்கள்' என்று அறிக்கை விட்டிருக் கின்றார்.

இந்த மாதிரியான முறையில் தேசியம் முதல் காந்தியம் வரை ஜாதி மத வகுப்பு பிரிவினைகளுக்கு இரும்புப் பூண் கள் போடப் பட்டது போல் உறுதிப்படுத்தி, கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும், இவை சுலபத்தில் ஒழிக்கப்பட யாராலும் சம்மதிக்க முடியாது என்பதிலும் எவரும் எவ்வித சந்தேகமும் கொள்ள முடியாது. ஒரு பறையர் ஒரு பொதுத்தெருவில் நடந்தால் இன்ன தண்டனை. ஒரு வாணிய வைசியர் ஒரு பொது கோவிலுக் குள் போனால் இன்ன தண்டனை. ஒரு நாடார் சத்திரியர், ஒரு பொதுக் குளத்தில் தண்ணீர் மொண்டால் இன்ன தண்டனை என் கின்ற பினல் கோட் சட்டமும், அதற்காக இன்ன நஷ்டம் கொடுக்க வேண்டும் என்கின்ற சிவில் கோட் சட்டமும், கிராம முன்சீப் கோட் முதல் பிரிவிகவுன்சில் வரை செல வாணி ஆகிக் கொண்டுதான் இருக்கின்றது.

அன்றியும் இதற்கு விரோதமாய் பேசுபவன் ஒவ்வொரு வனும் ஒவ்வொரு ஜாதிமத வகுப்புக்கும் விரோதியா கின்றானே யொழிய, அவன் சமரசக்காரனாவதில்லை. இவை மாத்திரமல்லாமல். பொதுரோட்டில் ஒரு இந்து மேளம் அடித்தால் மகமதியர்கள் கத்தியால் குத்துகிறார்கள். பொதுத்தெருவில் ஒரு மகமதியர் மாட்டைப் பிடித்துக் கொண்டு போனால் இந்துக்கள் அவரைக் கத்தியால் வெட்டுகிறார்கள் சீக்கியரும், முகமதியரும் தங்களை ஒருவருக்கொருவர் ஜன்ம விரோதிகள் என்ற சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறார்கள். பிராமணருக்கும் சூத்திரருக்கும் இருக்கும் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த நிலைமையில் உள்ள மக்களுக்கு ஜாதிப்படியோ, மதப்படியோ, வகுப்புப்படியோ பிரதிநிதித்துவம் மாத்திரம் கூடாதாம்!

ஏனெனில், அது தேசியத்திற்கு விரோதமாகிவிடுமாம்! ஆனால், அப்படிப்பட்ட ஜாதிமத வகுப்புகளை என்றும் நிலையாய் இருக்கும்படி காப்பாற்றுவது மாத்திரம் தேசியமும். அதற்காகவே திரு. காந்திக்கும் காங்கிரசுக்கும் சுயராஜ்யம் வேண்டுமாம். இந்த நிலைமையுள்ள இதன் யோக்கியதை ஒருபுறம் இருக்க பொதுஜனங்களுக்கு அளிக்கப்படும் (பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கும் முறை) நிலைமையைப் பற்றி சிறிது யோசிப்போம்.

ஓட்டானது கல்வியைப் பொறுத்ததகாவும், பணத்தைப் பொறுத்ததாகவும், வரும்படியைப் பொறுத்ததாகவும் இருக்க வேண்டும் என்ற அளவில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவில் உள்ள மற்ற எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும் எந்த வகுப்புக்கும் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் இருந்தாலும் பஞ்சமர், ஆதிதிராவிடர், தீண்டபடாதார் என்கின்ற 7 கோடி மக்களில் கல்வியோ, சொத்தோ, குறிப் பிட்ட வரும்படியோ 1000ல் ஒருவருக்காவது இருக்கின்றதா என்று பார்த்தாலே அதன் இல்லாமை உண்மை நன்றாய் விளங்கும்.

பார்ப்பனர்களுக்கு 100க்கு 100 பேர் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் எல்லாமும் அல்லது ஏதாவது ஒன் றும் உடையவர்கள். ஆகவேதான் இருப்பார்கள். ஆதலால் அவர்கள் எல்லோருமே எப்படியும் எந்தத் தொகுதியிலும் ஓட்டர்களாகி விடுவார்கள். மற்றபடி மேல் ஜாதிக்காரர் என்பவர்களிலும் அரைவாசிப் பேராவது ஓட்டர்களாக ஆகிவிடுவார்கள்.

நடு ஜாதிக்காரர் என்பவர்கள் அரைக்கால்வாசிப் பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள்.  மற்றும் சில கீழ்ஜாதிக்காரர் என்பவர்களும் வீசம் வாசிப் பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள், ஆனால், பறையர், சக்கிலியர், பள்ளர், முதலிய தீண்டாத வகுப்பார் என்பவர்களில் முந்திரிப் பெயராவது அதாவது 300ல் ஒரு பாகம் பெயர்களாவது ஓட்டராக இருக்கமுடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நிற்க, மற்றொரு விதத்திலாவது அதாவது அவர்களுக் கென்று சில தானங்களை பொதுத் தேர்தலில் ஒதுக்கி வைத் தாலும் உண்மையான பறையரோ, சக்கிலியரோ வர முடியுமா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். பறை யனிலேயே பட்டை நாமம், துளசிமணி போட்டுக்கொண்டு 'மற்ற பறையனைத் தொட்டால் தீட்டு' என்று கருதுகிறவனும், விபூதி உத்ராட்சம் போட்டுக் கொண்டு பறத்தெருவுகளுக்குள் போய் வந்தால் குளிக்கின்றவனும் தனது சொந்தநலத்திற்குச் சமுகத்தை விற்பவனும் தான் வரமுடியுமே யொழிய இவற்றிற்குச் சௌகரியமில்லாதவன் வரமுடியுமா? என்று பாருங்கள். ஒருக்காலும் முடியாது. ஏனெனில், உண்மை யாகவே தங்கள் சமுகம் முன்னேற வேண்டும் என்று கருதுகின்றவனையும், தன்னை ஏன் மற்றவர்கள் பறையன் என்று சொல்லுகின்றார்கள் என்று கருதுகின்றவனையும் மற்ற ஜாதியார்கள் (மேல் ஜாதியார்கள்) தெரிந்தெடுக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள். மற்றபடி கிராமங்களிலோ அங்குள்ள மிராசுதாரர்கள்  தங்கள் குதிரைக்காரனையும், நாய்க்குப் பதிலாய் இருக்கும் அடிமையையும் மாத்திரம்தான் தெரிந்தெடுத்ததாய் சடங்கு செய்து, அவனைத் தங்கள் கைத்தடி முனையிலேயே வைத்திருப்பார்களே யொழிய தங்களுடன் சரிசமமாய் உட்கார நினைப்பவனைக் கிராமத்தி லேயே வைத்திருக்க மாட்டார்கள்.

இவை நிற்க, 21 வயது வந்த ஆண்களுக்கெல்லாம் ஓட்டு உரிமை கொடுப்பதாய் வைத்துக் கொண்டாலும், அந்த அந்த கிராமத்து மிராசுதாரன் சொன்னபடிதான் ஆசாமிகள் அபேட்சகர்களாக நிற்கவும், ஓட்டர்கள் ஓட்டுகள் போடவும் முடியுமே அல்லாமல், மற்றபடி பிரதிநிதித்துவத்திற்குத் தகுந்தவர்கள் ஒரு நாளும் வரமுடியவே முடியாது.

ஆகவே, மற்ற ஜாதி மத வகுப்பார் இடம் நம்பிக்கை இல்லை என்று கருதுகின்ற எந்த சிறுவகுப்புக்காரர்களாயிருந்தாலும், அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கும் படியாகவும், அந்த பிரதிநிதித்துவத்தை அவர்களே சகல உரிமைகளுடன்  தெரிந் தெடுத்துக் கொள்ள தகுந்ததாக வுமேதான் சுயராஜ்ய ஆட்சி முறை ஏற்படுத்தப்படவேண்டும். அப்படிக்கில்லையானால் ஒரு பொது வான, அதாவது இந்திய ஜாதி மத வகுப்பு வித்தியாசத்தில் கட்டுப் படாத ஒரு கூட்டத்தின் ஆட்சியில்தான் விட வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அதை விட்டு விட்டு 'என் ஜாதி உயர்வையும் அனுபவத்தையும் விடமாட்டேன். ஆனால், நான் கீழ் ஜாதி என்று வதைத்து, கொடுமைப்படுத்திக்  கொண்டிருக்கின்றவனுக்கு நான்தான் தர்ம கர்த்தாவாய் இருப்பேன்' என்றால் அது வடிகட்டின அயோக்கியதனமேயாகும்.

நிற்க. திரு. காந்தியவர்கள், 'முகமதியருக்கும் சீக்கிய ருக்கும் மாத்திரம்தான் தனிப் பிரதிநிதித்துவம் தனித்தொகுதி மூலமாய் வேண்டுமானாலும் கொடுக்க சம்மதிப்பேன். ஆனால், தீண்டாதார் என்கின்ற வகுப்புக்குமாத்திரம் கொடுக்க மாட்டேன்' என்று சொல்லுவதும், திரு. மாளவியா அவர்கள், அதற்கும் ஆமாம்சாமி போடுவதும் என்றால், இதில் கடுகளவாவது நீதியோ அல்லது நல்ல எண்ணமோ இருக்கின்றதா என்று பார்க்கும்படி வாசகர்களைக் கேட்கி றோம்.

சாயபு வாய் வார்த்தை வாயில் இருக்க, முதலில் கையை நீட்டி விடுகிறார். உடனே  ஆயிரக்கணக்கான சாயபுகள் மேல்விழுந்து நசுக்கிவிடுகின்றார்கள். அவர்களிடத்தில் அவ்வளவு கட்டுத்திட்டமும், வீரமும் இருக்கின்றது. ஆதலால் அவர்களுக்குப் பதில் பேசாமல் 'கொடுப்பதற்குள் என்ன சாயபு அவசரம்' என்று மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கின்றது. அதுபோலவே சீக்கியர்களும் வாய்வார்த்தை வாயிலிருக்க கிருபானை (கத்தியை) எடுத்துக் கொள்ளு கிறார்கள்.

அன்றியும், சீக்கியப்பூச்சாண்டி, காட்டி சாயபை ஏமாற்ற வேண்டியும் இருக்கின்றது. ஆதலால் சீக்கியர் எண்ணிக்கை லட்சக்கணக்குள் இருந்தாலும், அவர்களுக்குத் தனித் தேர்தல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், தீண்டாத ஜாதியார் என்பவர்களோ ஏழு கோடி பேர் இருந்தாலும் அவர்களுக்கு மானம் இல்லாமல், மனி தத்தன்மை நினைத்துப்பார்ப்பதற்கில்லாமல் வீரம் என் பதற்கு அர்த்தமே தெரியமுடியாமல், உதைத்த காலுக்கு முத்தம் இடும் மிருகத்தன்மையில் அடக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆதலாலும், அவர்கள் இன்னும் மேல் ஜாதியார்களுக்கு உழைத்துப் போடவேண்டிய அடிமை களாயிருக்கவேண்டியிருப்பதால், அவர்களை முன் னேற்றமடைய விடமுடியாதென்று சொல்லி அவர் களுக்குத் தனித்தேர்தல், தனிப் பிரதிநிதித்துவம் காங்கிரசும், காந்தியும், மாளவியாவும் மறுக்க வேண்டியதாகிவிட்டது.

ஆகவே, காங்கிரசின் - திரு.காந்தியின், திரு.மாளவி யாவின் தேசபக்தியும், தேசியமும் வகுப்புப் பிரதிநிதித்து வத்தை எதிர்ப்பதல்லாமல் வேறு கொள்கை ஒன்றும் முக் கியமானதல்லவென்றே சொல்லுவோம்.

தவிர சர்க்காரார் தான் ஜாதிமத வகுப்பு பேதங்களால் ஜனங்களைப் பிரித்து விட்டு, சுயராஜ்யம் கொடுக்காமல், சூழ்ச்சி செய்கின்றார்கள் என்று திரு.காந்தியும், கிளிப்பிள்ளை தேச பக்தர்களும் அடிக்கடி சொல்வதுண்டு. ஜாதி மத வகுப்புகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்ததா? அல்லது இந்தியஇராம இராஜ்யம் பிரித்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும், முலீம்கள் விஷயத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவதலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காக தேசிய முஸ்லிம் என்றும் தேசத்துரோக முஸ்லிம் என்றும் பிரித்து வைத்து, நீங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். உங்கள் பங்கைக் கொடுக்கத் தடையில்லை என்று  சொல்லுவது திரு. காந்தியா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமா? என்று கேட்கின்றோம்.

திரு. காந்தி அவர்களின் சட்டைப்பையின் டிக்கட் பாக்கட்டில் இருக்கும் திரு. அன்சாரியைத் தவிர தேசிய முஸ்லிம் தலைவரோ, தொண்டரோ, பின்பற்றுபவரோ வேறு முஸ்லிம் யார்? என்று கேட்கின்றோம்.

அப்படித்தான் இருந்தாலும் 8 கோடி முஸ்லிம்களில் எத்தனை கோடிப் பேர்கள் 'தேசிய முஸ்லிம்கள்?' எத்தனை கோடிப் பேர்கள் 'தேசத்துரோக முஸ்லிம்கள்' என்று சொல்லக் கூடும்? என்று கேட்கின்றோம். ஏழைகளுக்காக, திக்கற்றவர்களுக்காக, வாயில்லாப்பூச்சிகளான கிராமவாசி களுக்காக, சிறுபான்மையோருக்காக, தாழ்த்தப்பட்ட வருக் காகத்தான் நான் பாடுபடுகின்றேன். அவர்கள் பிரதிநிதியாகத்தான் நான் வட்ட மேஜை மகாநாட்டிற்கு வந்து இருக்கின்றேன் என்று பல்லவி பாடி மந்திரம் ஜபிக்கும் திரு. காந்தியர்வர்கள் உண்மையில் யாருடைய பிரதிநிதியாய் சீமை சென்றிருக்கிறார்? என்பதைச் சற்று கவனித்துப் பாருங்கள்.

ஆகவே, வரப்போகும் சுயராஜ்ஜியத்தில் எவ்வளவு சிறிய சுதந்திரம் கிடைத்தாலும், எவ்வளவு பெரிய சுதந்திரம் கிடைத்தாலும் அது இந்தியாவில் உள்ள இருக்க வேண்டிய எல்லா ஜாதி மத வகுப்புக்கும் சரியான பிரதிநிதித்துவமாய் இருக்கக் கூடியதாய் இருந்தால்தான், இந்திய மக்களால் ஒப்புக்கொள்ளக் கூடியதாகும். இல்லாதவரை எதிர்க்க வேண்டியதாகும்.

குடிஅரசு - தலையங்கம் - 11.10.1931

 

- விடுதலை நாளேடு,  24.6.18

வியாழன், 28 ஜூன், 2018

குஜராத்தில் அரங்கேறிய தீண்டாமைக் கொடுமை குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட மணமகனை கீழே இறக்கிவிட்ட ஜாதி வெறியர்கள்!



 


அகமதாபாத், ஜூன் 20 திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது, குதிரை யில் பவனி வந்த தாழ்த்தப்பட்ட மணமகனை, சாதி வெறியர்கள் கீழே இறக்கி விட்டு அவமானப் படுத்திய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் சோலங்கி (27). இவர் அங்குள்ள பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் வர்ஷா என்பவருக்கும் திரு மணம் நிச்சயிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இந்நிலையில், திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பாக பிரசாந்த் தனது வீட்டி லிருந்து மணப்பெண் வீட்டுக்கு காரில் சென்றார். பின்னர், அங்கிருந்து திருமணம் நடக்கும் இடத்துக்கு செல்ல அவர்களது உறவினர்கள் அலங் கரிக்கப்பட்ட குதிரை ஒன்றை ஏற்பாடு செய்து, மணமகன் பிரசாந்தை அதில் ஏற்றியுள்ளனர்.

அவரும் மகிழ்ச்சியுடன் குதிரையில் பவனி வந்துள்ளார்.அப்போது வழியில், ஜாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்தஒரு கும்பல், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பிரசாந்த் எப்படி குதிரையில் வரலாம் என்று கேட்டுத் தகராறு செய்து, பிரசாந்த்தை குதிரையில் இருந்து இறக்கி விட்டு அவமானப் படுத்தியுள்ளனர்.

மணமேடைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த பிரசாந்த், ஜாதி வெறியர்களின் இந்த அராஜகத்தால் மிகவும் மனமுடைந்து போனார். பின்னர் ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மணமகனை குதிரை யிலிருந்து இறக்கி விட்டசம்பவத்திற்கு கடும்கண்டனங்கள் எழுந்துள் ளன.இதே குஜராத் தில், சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல, குதிரையில் சென்றதற்காக பிரதீப் ரத்தோட் என்ற தாழ்த்தப்பட்ட சிறுவனை ஜாதிவெறியர்கள் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 - விடுதலை நாளேடு, 20.6.18

செவ்வாய், 26 ஜூன், 2018

கல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்

1935ஆம் ஆண்டுகளில் கல்வித்துறையில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்தை கண்டித்து ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியான கட்டுரை.



விருதுநகர் மகாநாட்டில் தோழர்கள் சி.டி. நாயகம் அவர்களும், ஈ.வெ.ரா. அவர்களும் சர்க்கார் உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் உபாத்தியாயர் நியமனம் செய்யப்படும் விஷயங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கையாளும்படி சர்க்கார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்தப்படி நியமனம் செய்யாத பள்ளிக்கூடங்களுக்குச் சர்க்கார் உதவித் தொகை கொடுக்கக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை கல்வி மந்திரி அவர்கள் வேண்டுகோளின் பேரிலும், மகாநாட்டுத் தலைவர்  தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் வேண்டுகோளின் பேரிலும் வாபீஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், இன்று பார்ப்பனர்கள் ஆதிக்கம் உள்ள பள்ளிக் கூடங்களில் அநேகமாக பியூன், வாசல் கூட்டி தவிர மற்றெல்லோரும்  பார்ப்பனர்களாகவே நியமிக்கப்பட்டிருப்பதும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள பள்ளிக் கூடங்களிலும் 100-க்கு 75, 90 பார்ப்பனர்களாக நியமிக்கப்பட்டிருப்பதும் யாரும் மறுக்க முடியாது.

சென்னையில் பார்ப்பன பிரமுகர்களான தோழர்கள் சர். சிவசாமி அய்யர், சர். சி.பி. இராமசாமி அய்யர், சர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், வெங்கிட்டராம சாஸ்திரியார், சீனிவாச சாஸ்திரியார் ஆகியவர்கள் நிர்வாகஸ்தராய் இருக்கும் பள்ளிக்கூடங்களிலேயே பார்ப்பனரல்லார் என்கின்ற காரணத்துக்காகவே தோழர் எஸ். குஞ்சிதம் பி.ஏ.,எல்.டி.யை வேலையில் இருந்து எடுத்துவிட்டதும், மற்றும் இரண்டு பார்ப்பனரல்லாத பெண்களை வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டதும் அவைகளுக்குப் பதிலாக பார்ப்பனர்களை நியமித்துக் கொண்டதுமான காரியங்கள் நடந்தது என்றால் மற்ற பள்ளிக்கூடங்களில் பார்ப்பனரல்லாத உபாத்தி மார்களுக்கு இருந்துவரும் தொல்லைகளைக் குறிப்பிட வேண்டுமா? என்று கேட்கின்றோம்.

இது ஒரு புறமிருக்க, சென்ற வாரம் கோபி செட்டிப்பாளையம் டைமெண்ட் ஜுபிளி அய்ஸ்கூல் நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

அந்தப் பள்ளிக்கூடம் பெரிதும் பார்ப்பனரல்லாதார் பணத்திலேயே கட்டப்பட்டதாகும். அதன் ஆஸ்டலும் 100-க்கு 60 பாகம் பார்ப்பனரல்லாதார் பணமாகும். அதில் படிக்கின்றவர்கள் 100-க்கு 90 பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் ஆகும். அப்படி இருந்தும் அதன் உபாத்தியாயர்கள் 16 பேர்களில் 14 பேர்கள் பார்ப்பனர்கள்.
இந்த நிலையில் ஒரு எல்.டி. உபாத்தியாயர் வேலைக்கு அந்த ஊர்க்காரரும், அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவரும், அந்தப் பள்ளிக்கூடத்தில் 100-க்கு 75 பேர்களாக படிக்கும் வேளாளக் கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவரும் அந்தப் பள்ளிக்கூடத்தின் மூலமாகவே எல்.டி. பரீட்சைக்கு அனுப்பப்பட்டவருமான ஒருவர் ஒரு விண்ணப்பம் போட்டிருந்தார் மற்றும் ஒரு பார்ப்பனரும் விண்ணப்பம் போட்டிருந்தார், இந்நிலையில் சர்க்கார் அதிகாரிகளுடைய பிரவேசத்தின் பயனாய் அந்த உத்தியோகம் ஒரு பார்ப்பனருக்கே போய்விட்டது.

சம்பளமும் பேனா போன வரையில் நீட்டி 80 ஆக்கி அங்கேயே செய்யப்பட்டு விட்டது.

பார்ப்பனரல்லாத வக்கீல் ஒருவர் பார்ப்பன முனிசீப்புக்கு பயந்து கொண்டு மீட்டிங்குக்கே வரவில்லையாம். இரண்டொரு பார்ப்பன ரல்லாத மெம்பர்கள் அதிகாரிகளுக்குப் பயந்து கொண்டு பார்ப்பன உபாத்தி யாயருக்கே அனுகூலமாய் இருந்தார்களாம்.

ஒரு பார்ப்பனரல்லாத மெம்பரும், பொது உலகில் பிரபலஸ்தருமான தோழர் ஒருவர் இது என்ன பார்ப்பன ஆதிக்கமா? என்று கூப்பாடு போட்டும், ஒன்றையும் லட்சியம் செய்யாமல் அதிகார செல்வாக்கினாலேயே காரியத்தை சாதித்துக் கொண்டார்களாம்.

இனியும் எத்தனையோ பள்ளிக்கூடங்களில் இதைவிட மோசமாக எவ்வளவோ காரியங்கள் நடைபெறுகின்றன. ஆகவே, படிப்பு விஷயத்தில் நேர்மை வேண்டும் என்று கருதினால், கண்டிப்பாக உபாத்தியாயர்கள் விஷயத்தில் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்புவாரி கணக்குப்படி உபாத்தியாயர் நியமனம் செய்தாக வேண்டும்.

அந்தப்படி இல்லாத வரை சர்க்கார் கிராண்டை நிறுத்திவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

ஈரோடு அய்ஸ்கூல் சமீபகாலம் வரை 50, 60 வருஷ காலமாகவே பார்ப்பன ஆதிக்கமாய் இருந்து ஏதோ சமீப காலத்தில் 2, 4 பார்ப்பன ரல்லாத உபாத்தியாயர்கள் நியமிக்கப்பட நேர்ந்தும் கல்வி இலாகாவில் உள்ள பார்ப்பன அதிகாரிகளால் எவ்வளவோ கஷ்டத்துக்கு உள்ளாக வேண்டி இருந்தது. பள்ளிக்கூட ‘ரெக்கக்நேஷனை’ வித்திட்றா செய்து கொள்ளுவதற்காகக்கூட அதிகார தோரணையில் உத்தரவுகள் அனுப்பப்பட்டது.

அவ்வளவோடு அல்லாமல் நீதி இலாகாவிலும் பார்ப்பன நீதிபதிகளால் பார்ப்பன உபாத்தியாயர்களுக்கு நஷ்டம் கொடுக்க தீர்ப்புக் கூறப்பட்டது.

பள்ளிக்கூட உதவித் தொகைகள் நியாயமாய் கொடுக்கப்படாமல் மறுக்கப்பட்டது. இன்னும் நடந்த கஷ்டங்கள் சொல்ல முடியாது. கடைசியாக நிர்வாகத்திலும் கட்சி, பிரதிக் கட்சிகள் உண்டாக்கப்பட்டது. இவ்வளவு கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகிக் கொண்டு ஒன்று, இரண்டு பார்ப்பனரல்லாதாரை நியமிக்கக் கூடியதாய் இருந்தால், மற்றபடி இவ்வளவு கஷ்டத்தையும் சகித்துக் கொள்ள யார் சம்மதிப்பார்கள் என்பதை வாசகர்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பள்ளிக்கூட கமிட்டி மெம்பர் சாதாரண வியாபாரிகள், கிராம மிராசுதாரர்கள் ஆகியவர் களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் ஒரு முனிசீப்புக்கும், ஒரு டிப்டி கலெக்டருக்கும், ஒரு வக்கீலுக்கும் பயப்படாமல் இருக்கும்படியான நிலையில் இன்று ஆட்சி நிர்வாகம் இல்லை.

ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர், சப். இன்ஸ்பெக்டர் எவ்வளவோ காரியத்தைச் செய்து எப்படிப்பட்டவர்களுக்கும் தொல்லையை விளைவித்து விடுகிறார்கள் என்றால், பெரிய அதிகாரிகள் மனஸ்தாபத்துக்கு இந்த ஆசாமிகள் எப்படி பாத்திரமாக முடியும்?

மதுரை தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் தானமாகக் கொடுத்து 100க்கு 50 உபாத்தியாயர்களாவது பார்ப்பன ரல்லாதாராய் இருக்கட்டும் என்று கெஞ்சினார். அதற்கே சம்மதிக்காத வன்நெஞ்சக் கூட்டம் சும்மா ஒரு வாத்தியாரை நியமிக்க சம்மதிக்கக் கூடும் என்று எந்தப் பைத்தியக்காரனும் நினைக்க முடியாது என்பதோடு, காரியத்தில் சுலபத்தில் நடக்கக்கூடிய காரியமும் அல்ல என்போம். ஆதலால் தனிப்பட்டவர்கள் நிர்வாகத்திலுள்ள பள்ளிக் கூடங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி உபாத்தி யாயர்கள் நியமனம் செய்யப்படும்படியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நிற்க எல்.டி.டிரெய்னிங்குக்கு உபாத்தியாயர்களை எடுப்பதில் 4, 5 வருஷங்களுக்காவது பார்ப்பனர்களுக்கு இடமில்லாமல் செய்து பார்ப்பனரல்லா உபாத்தியாயர்களையே சேர்க்கும்படி செய்ய வேண்டும் என்றும், பார்ப்பனரல்லாத பெண்களுக்குத் தாராளமாய் இடம் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம். இந்தப்படி செய்ய முடியாவிட்டால் எல்.டி. வகுப்புக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைப்படியாவது அமர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

- ‘குடிஅரசு’ - கட்டுரை - 19.05.1935
(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.5.18