பக்கங்கள்

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 அக்டோபர், 2022

நீட்டாக ஒழிப்பதுதான் நீட்டா - நுழைவுத் தேர்வு கடந்து வந்த பாதை!

 

சிந்தனைக் களம் : நீட்டாக ஒழிப்பதுதான் நீட்டா

அக்டோபர் 1-15,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

நுழைவுத் தேர்வு கடந்து வந்த பாதை!

¨ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு (Entrance Test) நடத்தும் யோசனையை எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்தபோது, மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹெண்டே சட்டமன்ற மேலவையில் கூறினார். இது விபரீத யோசனை, – கைவிட வேண்டும் என்று அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டார். (‘விடுதலை’ 23.3.1982) இதன் காரணமாக அப்போது நுழைவுத் தேர்வு திட்டம் கைவிடப்பட்டது.

¨           நுழைவுத் தேர்வை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியது. (சென்னை, பெரியார் திடல், 20.3.1984)

¨           இவ்வளவையும் மீறி எம்.ஜி.ஆர். அரசு நுழைவுத் தேர்வைத் திணித்தது. (தமிழ்நாடு செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழர் பண்பாட்டு செய்தி வெளியீட்டுப் பிரிவு) செய்தி வெளியீடு எண்: 322 நாள்: 30.5.1984)

               இதனை எதிர்த்து முதலாவதாகப் போர்ச்சங்கு ஊதியவர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (‘விடுதலை’ 8.6.1984)

               1982இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டி முறியடித்தது. இப்பொழுது மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டினார்கள். (25.3.1984)

¨           17.6.1984 அன்று தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்களால் எம்.ஜி.ஆர் அரசு திணித்த நுழைவுத் தேர்வு ஆணை கொளுத்தப்பட்டது.

¨           எம்.ஜி.ஆர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வு செல்வி ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தபோது ரத்து செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்கள் குழு அமைத்து அவர்கள் அளித்த கருத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் 2.1.2006 அன்று கூறியிருந்தார். அதனை ஏற்று இருந்தால் தீர்ப்பு நமக்குப் பாதகமாக இருந்திருக்காது.

¨           கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கூறிய கருத்தின் அடிப்படையில் கல்வியாளர் டாக்டர் எம்.ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. (7.7.2006)

      

         அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர். அதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றனர்.

               கல்வி நிலையங்களில் பரிந்துரை அடிப்படையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டதால், அதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்கிறது என்று தீர்ப்புக் கூறியது. (27.4.2007)

               பின் உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றமும் அதே தீர்ப்பைக் கூறுகிறது.

               இதன் காரணமாக 2007-_2008ஆம் கல்வி ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு இல்லாநிலையில் +2 மதிப்பெண் அடிப்படையில் 69 விழுக்காடு இடங்கள் நிரப்பப்பட்டன.

               இந்த  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத் குமார் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் இப்பொழுதும் கூடக் கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கவையாகும்!

¨           “நுழைவுத் தேர்வை நடத்தினாலும், முழு சமநிலை என்பதும், கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட “கோன் பனேகா குரோர்பதி’’ நிகழ்ச்சியில் அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை ‘டிக்’ செய்யும் வாய்ப்புள்ளது’’ என்று குறிப்பிட்டனர் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

               இதே கருத்தை அதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பாகவே திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எம்.ஜி.ஆர் நுழைவுத் தேர்வைத் திணித்தபோதே கூறியது இங்கே நினைவூட்டத்தக்கதாகும்! (‘விடுதலை’ 8.6.1984)

¨           இந்த இடத்தில் இன்னொரு புள்ளிவிவரம் முக்கியமானது. கண்மூடித்தன தகுதி _- திறமையாளர்களின் கண்களைத் திறக்கச் செய்வதாகும். நுழைவுத் தேர்வு எம்.ஜி.ஆர் ஆட்சியில் திணித்தபோது குறிப்பாக 2004-_2005இல் நடந்தது என்ன? மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தவர் 5 லட்சம் மாணவர்கள். அதில் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர். கிராம மாணவர்கள் பெற்ற இடம் வெறும் 227தான். இந்தப் பாதிப்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுதான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது.

எடுத்துக்காட்டாக, நுழைவுத் தேர்வு இல்லாத காலகட்டத்தில் 2009-2010இல் திறந்த போட்டியில் பெற்ற விவரம்:

மொத்த இடங்கள்    460

இதில் பிற்படுத்தப்பட்டோர்            300

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்        72

தாழ்த்தப்பட்டோர்   18

முசுலிம்கள்  16

முன்னேறியோர்      54

 

200க்கு 200 மதிப்பெண் பெற்றோர்               8

இதில் பிற்படுத்தப்பட்டோர்            7

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்        1

 

2012 – 2013ஆம் ஆண்டு நிலவரம்

திறந்த போட்டியில் மொத்த இடங்கள்  742

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்              678

200க்கு 200 பெற்றோர்            16 பேர்

பிற்படுத்தப்பட்டோர்            10

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்        1

தாழ்த்தப்பட்டோர்   2

அருந்ததியர் 1

முன்னேறியோர்      2

 

2016-2017ஆம் ஆண்டு புள்ளி விவரம்

திறந்த போட்டி இடங்கள்  884

பிற்படுத்தப்பட்டோர்            599

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்        159

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்   32

தாழ்த்தப்பட்டோர்   23

மலைவாழ் மக்கள் 1

அருந்ததியர் 2

முன்னேறியோர்      68

இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? நுழைவுத் தேர்வு இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தால் அது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் என்பதைத்தானே இந்தப் புள்ளி விவரம் தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிவிக்கிறதே!

புதிய ‘நீட்’ பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் (2017)

தருமபுரி          2016இல்           225 (நீட் இல்லை)

               2017இல்           82 (நீட்)

ஈரோடு             2016இல்           230 (நீட் இல்லை)

               2017இல்           100 (நீட்)

நாமக்கல்        2016இல்           957 (நீட் இல்லை)

               2017இல்           109 (நீட்)

கிருட்டினகிரி              2016இல்           338 (நீட் இல்லை)

               2017இல்           82 (நீட்)

பெரம்பலூர்   2016இல்           81 (நீட் இல்லை)

               2017இல்           23 (நீட்)

திருச்சி             2016இல்           184 (நீட் இல்லை)

               2017இல்           130 (நீட்)

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதி மதிப்பெண்கள்

தாழ்த்தப்பட்டோர்   45%

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்        50%

பிற்படுத்தப்பட்டோர்            55%

முன்னேறியோர்      60%

‘நீட்’ வந்தபின் மாற்றப்பட்ட விவரம்

தாழ்த்தப்பட்டோர் _- மலைவாழ்மக்கள்              65%

மற்றவர்களுக்கு       75%

பிற்படுத்தப்பட்டோரை – முன்னேறிய ஜாதியினரோடு இணைத்து மதிப்பெண் வரையறை செய்யப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு (100 சதவிகிதத்தில்)

மாநிலங்களின் பங்கு           84.4%

மத்திய அரசின் பங்கு           15.6%

குறைந்த முதலீடு; கொள்ளை லாபம் என்பார்களே அது இதுதான்!

கேள்வி: ‘நீட்’ யாரால் கொண்டுவரப்பட்டது? யாரால் நிலைக்க வைக்கப்பட்டது?

2010ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கு ‘நீட்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது (21.12.2010)

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்குத் தொடுத்தது. நீதிமன்றமும் ‘நீட்’டுக்குத் தடை விதித்தது. (18.7.2013) தீர்ப்பு வழங்கிய நீதிபதி திரு.ஜோதிமணி.

100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எல்லா வழக்கு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர், விக்கிரஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19, 25, 26, 29, 30 ஆகிய பிரிவுகளின்படி ‘நீட்’ செல்லாது என்று ஏ.ஆர்.தவேவைத் தவிர மற்ற இரு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர். (18.7.2013) அதற்கு மேல் காங்கிரஸ் அரசு மேல் முறையீடு செய்யவில்லை.

எப்பொழுது மேல் முறையீடு செய்யப்பட்டது என்பதுதான் முக்கியமானது. (பெட்டிச் செய்தி காண்க.)

‘நீட்’ எனும் கொடுவாளுக்கு மரணத்தைத் தழுவியவர்கள்

(2017 முதல் 2021 செப்டம்பர் வரை 17 ‘நீட்’ மரணங்கள்)

1.            அனிதா, அரியலூர்

2.            பிரதீபா, விழுப்புரம்

3.            சுப-ஸ்ரீ, திருச்சி

4.            ஏஞ்சலின், சென்னை

5.            ஹரிஷ்மா,

               புதுக்கோட்டை

6.            மோனிஷா, விழுப்புரம்

7.            வைஸ்யா,

               பட்டுக்கோட்டை

8.            ரிதுஸ்ரீ, தேனி

9.            ஜோதி ஸ்ரீ, மதுரை

10.         துர்கா, மதுரை

11.         ஆதித்யா, தருமபுரி

12.         மோதிலால்,

               திருச்செங்கோடு

13.         விக்னேஷ், அரியலூர்

14.         சுபஸ்ரீ, கோயம்புத்தூர்

15.         தனுஷ், சேலம்

16.         கனிமொழி, அரியலூர்

17.         சவுந்தர்யா, காட்பாடி

18.         அனுசுயா, செங்கல்பட்டு

(16.9.2021) மாலை பலத்த தீக்காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சென்னை கீழ்ப்பாக்கம் கொண்டுவர முயற்சி நடந்துகொண்டு இருக்கிறது.

அரியலூர் அனிதா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் ஒரு தொழிலாளியின் மகள்.

+2 தேர்வில் அப்பெண் பெற்ற மதிப்பெண்கள் என்ன தெரியுமா?

பவுதிகம்         200க்கு 200

இரசாயனம்  199

உயிரியல்      194

கணிதம்          200

கட் ஆஃப்         196.75

முதல் தலைமுறையாகப் படித்த _ காலம் காலமாகக் காலனியில் வாழ ஒதுக்கப்பட்ட பெண் இதைவிட இன்னும் எத்தனை மதிப்பெண் வாங்க வேண்டும்?

+2 தேர்வில் இவ்வளவுப் பெரிய மதிப்பெண் பெற்ற அனிதாவால் ‘நீட்’டில் வெறும் 86 மதிப்பெண்தான் பெற முடிந்தது என்றால், கோளாறு _ குற்றம் எங்கே இருக்கிறது? அனிதாவிடத்திலா? ஆட்சியில் இருக்கும் மனுவாதிகளிடத்திலா?

நெஞ்சம் பதைக்கிறதே! _ இந்த நயவஞ்சகர்கள் இந்தப் படுகொலைக்குக் காரணகர்த்தாக்கள் இல்லையா?

அனிதாவின் நிலை இது என்றால் செஞ்சியையடுத்த குக்கிராமமான பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிபாவின் கதையும் சோகம்தான். பத்தாம் வகுப்பில் 500க்கு 495, +2 தேர்வில் 1200க்கு 1145. ‘நீட்’டிலே பெற்றது வெறும் 39.

‘நீட்’ கொலைகாரக் கருவியா இல்லையா?

திட்டமிட்டு பார்ப்பனீயம் ஏற்பாடு செய்த கொலைகார ஏற்பாடுதானே நீட்?

‘நீட்’டால் யாருக்குப் ப(ல)யன்?

2018ஆம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் 691 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றவர் பிகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி. பிகாரில் படித்த அந்த மாணவி குறைந்த அளவு வருகைப் பதிவுகூட இல்லாத நிலையில், நீட்டுக்காக டில்லியில் இரண்டாண்டுகள் தங்கிப் படித்துத் தம்மை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

வருகைப் பதிவு பற்றி பிரச்னை எழுந்தபோது பிகார் மாநிலக் கல்வி அமைச்சர் கிருஷ்ணானந்த் என்பவர் என்ன சொன்னார் தெரியுமா?

பிகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி ‘நீட்’ தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்து பிகார் மாநிலத்துக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்துள்ளார். அதைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவரது வருகைப் பதிவு குறித்த சர்ச்சை எழுப்புவது தேவையில்லாதது என்று சொன்னாரே பார்க்கலாம்! கல்பனாவின் தந்தை பிகார் மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சியளிக்கும் பேராசிரியர் குழுவின் தலைவராம். எப்படிப் போகிறது பார்த்தீர்களா? பார்ப்பன குலத்தில் பிறந்த பெண்ணாயிற்றே _ சட்டம் வளைந்து கொடுக்காதா? மற்றவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிட்டுமா? கிடைக்கத்தான் விடுவார்களா?

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு – ‘நீட்’டினால் பாதிப்பு யாருக்கு – பலன் யாருக்கு?

2019_2020இல் ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்ற மாணவி கண்டேல்வால். இவரின் தந்தை, தாய், அண்ணன் மூவரும் டாக்டர்கள். அலைன் ‘நீட்’ பயிற்சி வகுப்பில் படித்தவர்.

இரண்டாம் இடம் பிடித்தவர் யார்? பாவிக். தந்தை டில்லி மாநிலக் கல்வித் துறையில் பெரிய அதிகாரி. தாயார் இயற்பியல் பேராசிரியர். இம்மாணவி 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பிறகு ஆகாஷ் ‘நீட்’ தனிப் பயிற்சியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றவர்.

மூன்றாம் இடத்தைப் பிடித்தவர். சுருதி என்ற மாணவி. பெற்றோர் இருவரும் டாக்டர்களே. இவரும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்தான்.

டாக்டர் ஏ.கே.ராஜன் அவர்களின் ஆணையம் என்ன கூறுகிறது? 71 விழுக்காட்டினர் ஒரு முறைக்கு மேல் ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள்தாம்.

ஆகாஷ் என்ற ‘நீட்’ பயிற்சி நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 8 லட்சம், அலைன் நிறுவனம் ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றன.

இதன் பொருள் என்ன? பெற்றோர்கள் நன்கு படித்திருக்க வேண்டும் _ லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி பெறும் வசதி இருக்க வேண்டும்.

‘நீட்’டின் விளைவு எங்கே கொண்டு போய்விடும்?

நீட்டினால் பட்டியலின மக்களும் பிற்படுத்தப்பட்டோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே மருத்துவர்களாகப் பணியாற்றி வந்தவர்களுக்கு  முதுகலைப் பட்டப் படிப்பில் 50 விழுக்காடு அளிக்கப்பட்டது _ ரத்து செய்யப்பட்டதால், எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு, குறிப்பாக பிரைமரி ஹெல்த்சென்டர்களில் (PHC) பணியாற்ற மருத்துவர்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த பேராசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள்.

அரும்பாடுபட்டு, தமிழ்நாட்டில் உயர்ந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வந்த மருத்துவ உதவி கிடைக்காமல் போய்விடும். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு தரைமட்டமாக்கப்பட்டு விடும் என்று நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் கணிப்பு மிகவும் சரியானதே! _ கவலைப்பட வேண்டிய முக்கியக் கருத்தும் ஆகும்.

வசதியும் வாய்ப்பும் படைத்த பல லட்ச ரூபாய் செலவு செய்ய வசதியுள்ள பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தாம், ‘நீட்’ பயிற்சியில் சேர்ந்து வெற்றி பெற முடியும். இப்படிப் படித்து டாக்டர் ஆவோர் தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்பட மாட்டார்கள்.

வெளிநாடுகளுக்குப் பறந்து செல்லுவார்கள்; அல்லது உள்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பெரிய பெரிய மருத்துவமனைகளில் பணியாற்றச் சென்றுவிடுவார்கள். இலட்சக்கணக்கில் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும் அல்லவா?

டாக்டர் படிப்பு என்பது ஒரு சிலருக்கு மட்டும் ஏகபோகமாகும் _ எச்சரிக்கை! எச்சரிக்கை!    

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!


ப.திருமாவேலன்

"புரட்சி என்பது பெரியதாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். என்னைப் போலக் குள்ளமாகவும் இருக்கும்” என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார்!

புரட்சி என்பது பெரும் முழக்கம் கொண்ட தாகவே இதுவரை இருந்திருக்கிறது. முதன் முதலாக அது ‘அமைதி’யாகவே நடந்திருக் கிறது. ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராய் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துகாட்டி இருக்கும் "அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற புரட்சி சத்தமில்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சமயச் சான்றோர்களும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களும் ஒரு சேரப் பாராட்டும் புரட்சிகரச் செய்கை இது.  காவியும் கருப்பும் ஒன்று சேர்ந்து பச்சைக்கொடி காட்டி இருக்கும் பார் போற்றும் புரட்சி இது!

‘யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று சொல்லப்பட்ட மந்திரத்தை கோபுரத்தின் மீதேறிச் சொன்னார் இராமானுசர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னால். இந்திய வைதிகத் தத்துவ மரபுக்கு மூவராகச் சொல்லப்பட்ட ஆதிசங்கரர் - மத்வர் - வரிசையில் மூன்றாமவர் இராமானுசர். ‘யாருக்கும் சொல்லக்கூடாத மந்திரத்தை இப்படி கோபுரத்தின் மீதேறிச் சொன்னால் நரகத்துக்குப் போவாய்’ என்று சபித்தார் திருக்கோட்டியூர் நம்பி. ‘எல்லோரும் முக்தி அடைய நான் நரகம் போவது பாக்கியமே’ என்று சொன்னதால் இராமானுசர், ‘புரட்சித் துறவி’யாக இன்று வரை அடையாளம் காட்டப்படுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரும் ஆயிரம் ஆண்டுகள் நின்று நிலைக்கத்தான் போகிறது; பெரிய கோவில் இருக்கும் வரை இராசராசன் பேர் இருக்கும் என்பதைப் போல!

எல்லா இடங்களிலும் விரட்ட முயற்சிக்கப்படும் ஜாதி ( சாதி என்று எழுதி அதனை தமிழ்ப்படுத்தக் கூடாது என்கிறார் பெரியார்!) கடைசியாக கர்ப்பக்கிரகத்துக்குள் போய் ஒளிந்து கொண்டது. அங்கும் விரட்ட எடுத்த அஸ்திரம்தான், அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் என்பதாகும். சுயமரியாதை இயக்க காலத்தின் முதல் போராட்டமே அதுதான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜே.என். இராமநாதனும், திருவண்ணாமலைக் கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி - மயிலாடுதுறை - திருவானைக்காவல் கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் என்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்தது என்பது 1927-30 ஆகிய ஆண்டுகளில் ஆகும். சுயமரியாதை இயக்கத்தவர் கூட்டம் நடந்தால் கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ எனப் பயந்து கோவில்களைப் பூட்டிய காலம் அது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் பல ஊர்களில் நடந்தன. இது தான் பின்னர் ஆலய நுழைவு மசோதா ஆனது.

1970 ஜனவரி மாதம் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். ஆலயங் களில் ஜாதிபேதம் இருக்கக் கூடாது, அனைவரும் கர்ப்பக்கிரகம் வரை செல்ல வேண்டும், கர்ப்பக்கிரகம் வரை சென்று வழிபாடு செய்வதற்கு ஜாதி ஒரு காரண மாக இருக்கக் கூடாது. அந்த அடிப்படை யில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார். "அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலேயே அவரது எண்ணத்தை நடை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார். ‘அர்ச்சகர் களுக்கென சில சிறப்புத் தகுதிகள் வேண்டும், பயிற்சிகள் வேண்டும், அப்படி பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகர் ஆகலாம்' என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞரின் அறிவிப்பை ஏற்ற தந்தை பெரியார் தனது போராட்டத்தைத் தள்ளி வைத்தார்.

2.12.1970 அன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அர்ச்சகர் சட்டம் நிறை வேற்றப்பட்டது. "இந்து சமய அறக்கட் டளை திருத்த மசோதா” என்று இதற்குப் பெயர். இந்தச் சட்டத்தை ஆதரித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சட்டமேலவையில் பேசினார். ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் 14.3.1972 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. "சட்டம் செல்லுபடியானதே!’’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்திருத் தத்துக்காக அன்றைய ஒன்றிய அரசிடம் பலமுறை முதல்வர் கலைஞர் வலியுறுத்தினார்.

1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். இதற்கிடையே டிசம்பர் 24 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் மறைந்தார்கள். "பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாட வைக்க முடியவில்லை. பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம்’’ என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். "அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார் முதல்வர் கலைஞர்.

2006 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி. 16.5.2006 - அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் ஜாதியின ரும் இந்து சமய திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைப் பிறப்பிப்பது என அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கிறது. இது தந்தை பெரியாரின் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணி என அமைச்சரவை கருதுகிறது.’’ என்று அறிவிக்கப் பட்டது. மீண்டும் நீதிமன்றத்தில் தடை. இறுதித் தீர்ப்பு - 16.12.2015 உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி சட்டத்துக் குத் தடை இல்லை. சடங்கு முறையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டது.

சடங்கு, சம்பிரதாயம் எதையும் மாற்ற வில்லை. உரிய பயிற்சி பெற்ற வர்கள் சடங்கு, சம்பிரதாயம் செய்யலாம் என்பதுதான் இதன் உள்ளடக்கமே. அத்தகைய தகுதியும், திறமையும் பெற்றவர்களைத்தான் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியால் மூடப்பட்ட கதவை, சட்டத்தால் திறந்திருக்கிறார் முதலமைச்சர். அதுவும் சத்தமில்லாமல்!

புரட்சி சில நேரங்களில் இப்படித் தான் அமைதியாகவும் வரும். இந்த அமைதிப் புரட்சி ஆயிரம் ஆண்டு களுக்குப் பேசப்படும். ‘அன்றொரு நாள் கோபுரத்தின் மீதேறி’ என்று சொல் வதைப் போல... ‘கோட்டையின் மீதேறி மு.க.ஸ்டாலின் சட்டம் போட்டார்' என்று சொல்லப்படும்.

அரசியலில் முதலமைச்சர்கள் வரலாம். போகலாம். சமூகத்தில் மாற்றம் செய்பவர்களே, தனித்து பிரித்தெடுத்து வரிசைப்படுத்தப்படு வார்கள். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேர், போய்ச் சேர்ந்துவிட்டது. என்றும் அழியாப் பேர் இது! ஆயிரமாண்டுப் பேர் இது!

நன்றி: 'முரசொலி', 17.8.2021 

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஆகஸ்டு 14: வகுப்புரிமை நாள்


 இந்த நாளில் 1950இல், தந்தை பெரியார், தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, வகுப்புரிமை நாள் என போராட்டம் அறிவித்தார். 1928 முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமை இட ஒதுக்கீடு, 1950இல், உச்ச நீதிமன்றத்தால், செல்லாது என அறிவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நடைமுறைக்கு வந்த அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வகுப்புவாரி உரிமை ஆணை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்திய வரலாற்றில், தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியில் தான், அனைத்து பிரிவு மக்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் சேர்த்து, நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு 1928 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 1950இல் நடைமுறைக்கு வந்ததும், அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டி, வகுப்புவாரி உரிமைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம், வகுப்புவாரி உரிமைஆணையை ரத்து செய்தது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும், உச்சநீதிமன்றமும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

சுதந்திர இந்தியாவில், சமூக நீதிக்குத்தான் முதல் அடி விழுந்தது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தந்தை பெரியார் கண்டனம் செய்ததோடு நில்லாமல், மக்களைத் திரட்டினார். அனைத்து மக்களும், 1950இல் ஆகஸ்டு 14ஆம் நாளை வகுப்புரிமை நாளாக அறிவித்து போராட அழைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், என அனைத்து மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்தின் வலிமையை உணர்ந்த ஒன்றிய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கரும், இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வகுப்புரிமையை நிலை நாட்டவும், அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15 (4) உருவாக்கப்பட்டது. இந்த பிரிவின்படிதான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு, நாடு முழுவதும், கல்வியில் இட ஒதுக்கீடு ஒன்றிய மாநில அரசுகளால் அளிக்கப்படுகிறது.

1950இல் அரசமைப்புச் சட்டம் வந்த போது, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் பிரிவு 16(4) மட்டும்தான் இருந்தது. கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு இல்லை. சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் வகுப்புரிமைக்கான போராட்டத்தின் காரணமாகத்தான், கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு சேர்ந்திட வாய்ப்பு கிட்டியது. இது தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள்.

தற்போது சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் சவாலைச் சந்திக்கும் நிலையில், ஆகஸ்டு 14, 1950இல் பெரியார் நடத்திய வகுப்புரிமை நாள் போராட்டத்தையும், அதன் விளைவாக, இன்றளவும், கல்வியில் இட ஒதுக்கீடு பெறும் இளைய சமுதாயம், இந்த வரலாற்றையும், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும் இந்த நாளில் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

-கோ.கருணாநிதி

பொதுச் செயலாளர், அ.இ.பிற்படுத்தப்பட்டோர்

கூட்டமைப்பு 14.8.2021


ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

இடஒதுக்கீடு வந்த வரலாறு

17.7.10


கல் எல்லாம் மாணிக்கக் கல் அல்ல!


`சமூகநீதியில் கழகம் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.

சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டே வெளியே வந்தார்.

அதே காங்கிரசைக் கொண்டே சமூக நீதிக்காக அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தவும் செய்தார்.

மத்திய அரசுத் துறைகளிலே இடஒதுக்கீடு கிடையாது; 1940-இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டிலேயே இதுகுறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாலும் செயலுக்கு வரவில்லை. ஜனதா அரசு அமைத்த மண்டல் குழு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பரிந்துரை செய்தாலும் (31.12.1980) அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பார்ப்பன ஆதிபத்தியம் அனுமதித்து விடவில்லை.

திராவிடர் கழகம் அதற்காக 42 மாநாடுகளை நடத்தவேண்டியிருந்தது; 14 போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. டில்லி வரை சென்று போராடியது திராவிடர் கழகம் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி தலைமை யில்.

அதன் விளைவாக இந்தியா முழுமையும் உள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமூகநீதியின் ஆணி வேரையே வெட்டும் பொருளாதார அளவுகோலைத் திணித்தார். அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போரிட்டது; இறுதி வெற்றி கழகத்துக்கே! மேலும் ஒரு புதிய வாய்ப்பு யாரும் எதிர்பார்க்காதவகையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்து வந்த 31 விழுக்காட்டை 50 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் என்னும் நிலை உறுதியாயிற்று.

50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடுப் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தன் போக்கில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அதனை எதிர்த்து 69அய் நிலை கொள்ளச் செய்யும் பொறுப்பும் திராவிடர் கழகத்தின் தோள்மீதுதான் விழுந்தது. தமிழர் தலைவர் உருவாக்கிக் கொடுத்த சட்டம்தான் 31 சி பிரிவு என்பது. அது ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டது.

அதனை எதிர்த்தும் ஆதிக்கவாதிகள் உச்சநீதிமன்றம் சென்றனர். 1994 முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆயம் (Bench) சமூக நீதியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. (13.7.2010)

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடரப்படுகிறது. அதனை நிலை நிறுத்த சில யோசனைகளையும் உச்சநீதிமன்றம் தந்திருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் உள்ளது. அதனைக் கலந்து கொண்டு, தக்க புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தந்து வெற்றி பெறும் வைர ஒளி மின்னுகிறது. இதன் மூலம் இந்திய அளவுக்கே நல்வழி காட்டும் பாதை திறந்து விடப்பட்டுள்ளது.

ஒன்றை இந்த நேரத்தில் குறிப்பிடுவது மிக மிக முக்கியம்.

தந்தை பெரியார் இல்லாத கால கட்டத்தில் சமூக நீதித்திசையில் இவ்வளப் பெரிய சாதனை களைச் செய்து வந்தது திராவிடர் கழகம் தான். அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனைகள், சட்டப் பேரறிவு, நுண்மான் நுழைபுலம் இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக இருந்து வருகின்றன.

கல்லெல்லாம் மாணிக்கக் கல் அல்ல

கழகம் எல்லாம் திராவிடர் கழகம் அல்ல.

தலைவர் எல்லாம் தமிழர் தலைவர் வீரமணியும் அல்ல.

தந்தை பெரியார் அவர்கள் தந்த சமூகநீதியா கட்டும்; பகுத்தறிவுக் கொள்கையாகட்டும்; எந்த முற்போக்கு எண்ணங்கள் ஆகட்டும்; அவை எல்லாம் இந்தக் கழகத்தாலும், தலைமையாலும் தான் சாத்தியம் என்பது காலத்தின் கல்வெட்டாகும் நடைமுறை உண்மையுமாகும்.

பெரியார் கொள்கைகளை நாங்களும் சொல்கிறோம் செய்கிறோம் என்று சொல்லக் கூடியவர்களிடத்தில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பார்களாக!

இவர்களால் இவற்றைச் சாதிக்க முடியுமா என்று ஒரு கணம் ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் எது தலைமை? எது கழகம்? சாதிக்கும் சக்தி யாரிடத்தில்? என்பதில் தெளிவு பெற்று விடலாமே!


ஓர் அரிமா நோக்கு

9.10.1987: புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31 (சி) பிரிவின்படி தனிச் சட்டம் இயற்றி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் கருத்து உருவாக்கம்.

16.11.92: டில்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு மண்டல் பரிந்துரை அமல் 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது.

20.11.92: சென்னை பெரியார் திடலில் பொதுச் செயலாளரின் சிறப்புப் பொதுக் கூட்டம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31(சி) பிரிவின்கீழ் தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டுகோள்.

25.8.93: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை 50 சதவிகிதத்துக்குமேல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கூடாது என்று.

26.8.93: இத்தீர்ப்புக்குப் பொதுச் செயலாளர் கண்டனம். 1.9.93: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை ஆணை நகலை எரித்துச் சாம்பலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திராவிடர் கழகம் அனுப்பிய போராட்டம் 15,000 பேர் கைது.

5.11.93: 31 (சி) பிரிவின்கீழ் தனிச் சட்டம் இயற்றக் கோரி பொதுச் செயலாளர் அறிக்கை.

6.11.93: சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு.

9.11.93: தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் அரசியல் சட்டத் திருத்தம் கோரி தீர்மானம்.

16.11.93: தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு.

17.11.93: சென்னையில் பொதுச் செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பு. 31(சி)யின்கீழ் மாதிரி சட்ட முன்வடிவம் தயாரித்து அளிக்கப்பட்டது.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.

26.11.93: தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை கோட்டையில்.

31.12.93: தமிழக சட்டப் பேரவையில் 31(சி) சட்டம் நிறைவேற்றம். (சட்டமன்ற பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நடவடிக்கைகளைத் தமிழர் தலைவர் கவனித்தார்).

7.2.94: தமிழக மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி குடியரசுத் தலைவருக்குத் தந்தி கொடுக்குமாறு பொதுச் செயலாளர் வேண்டுகோள்.

11.3.94: தஞ்சை வல்லத்தில் தமிழக முதலமைச்சருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம்.

7.4.94: டில்லியில் சமூகநீதிக்கான தேசிய கவுன்சில் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு. தமிழக சட்டத்துக்கு ஒப்புதல் தரக் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் டில்லியில் சம்பந்தப்பட்ட தலைவர்கள், மத்திய சமூகநல அமைச்சர் சந்திப்பு வற்புறுத்தல்.

17.5.94: திருச்சியில் செய்தியாளர்களை பொதுச் செயலாளர் சந்தித்தல். குடியரசுத் தலைவர் ஒப்புதல் வற்புறுத்தல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று எச்சரித்தார் பொதுச் செயலாளர்.

14.6.94: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை அகற்றக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பொதுச் செயலாளர் தந்தி.

15.6.94: அனைத்துக் கட்சி தூதுக்குழு சென்று பிரதமரை, குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வருக்கு பொதுச் செயலாளர் வேண்டுகோள்.

23.6.94: சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக சங்கங்களின் கூட்டம்.

25.6.94: முதலமைச்சர் தலைமையில் தூதுக்குழு டில்லி சென்று பிரதமரைச் சந்தித்தல்.

26.6.94: டில்லியில் அனைத்துச் சமூக நீதி சிந்தனை உடைய தலைவர்களைப் பொதுச் செயலாளர் சந்தித்தல்.

16.7.94: ஈரோட்டில் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு.

17.7.94: 69 சதவிகித அடிப்படையில் தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை.

19.7.94: தமிழக தனிச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

28.7.94: சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம்.

2.8.94 - 13.8.94 : குமரி தொடங்கி திருத்தணி _ சென்னை வரை திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி எழுச்சிப் பயணம்.

14.8.94: 9ஆவது அட்டவணையில் சேர்க்கும் சட்ட திருத்தத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கும் பொதுச் செயலாளர் தந்தி.

16.8.94: பொதுச் செயலாளர் கல்கத்தா செல்லுதல்.

17.8.94; 18.8.94; 19.8.94: டில்லியில் மத்திய சமூக நலஅமைச்சர் மற்றும் தேசிய முன்னணித் தலைவர்கள் சந்திப்பு.

17.8.94: உச்சநீதிமன்றத்தின் தவறான ஆணை.

(50 சதவிகித அடிப்படையில் இடஒதுக்கீடு இருந்தால் திறந்த போட்டியில் எத்தனை இடங்கள் கிடைக்க வேண்டுமோ அத்தனை இடங்களைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற ஆணை).

22.8.94: சென்னையில் பொதுச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தல், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களிலும், இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிகள் நியமனஅவசியத்தை வலியுறுத்துதல்.

23.8.94: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சென்னை சிறப்புக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் கண்டனம்.

24.8.94: 25.8.94: மாநிலங்களவையிலும், மக்களவையிலும் 9ஆவது அட்டவணையில் சேர்க்கை.

13.7.2010: தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரலாம் உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் தீர்ப்பு.

- மின்சாரம் அவர்கள் 17-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

'தமிழ் ஓவியா வலைப் பூ' விலிருந்து


புதன், 10 ஜூலை, 2019

உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்னும் புதிய சட்டத்தில் ஒரு சதி இருக்கிறது! - ஆ.ராசா

துரோணாச்சாரியாக இருக்கக்கூடிய உங்கள் மனப்பான்மை மாறட்டும்


நாங்கள் ஏகலைவர்களாக இருக்கமாட்டோம்; இருக்கப்போவதில்லை


மக்களவையில் ஆ.இராசா எம்.பி., முழக்கம்




புதுடில்லி, ஜூலை 3 துரோணாச்சாரிகளாக இருக்கக் கூடிய  உங்கள் (பி.ஜே.பி. ஆட்சி) மனப்பான்மை கட்டாய மாக மாறத்தான் வேண்டும். இனிமேலும் நாங்கள் ஏகலைவர்களாக இருக்கமாட்டோம் - இருக்கப் போவ தில்லை என்றார் மேனாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ஆ.இராசா.

மக்களவையில் 2019 ஜூலை  ஒன்றாம் ஆம் தேதி யன்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலா ளருமான திரு.ஆ.இராசா  அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு:

இந்த மசோதா மீது பேசுவதற்கு என்னை அனுமதித் ததற்காக  நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதாரத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை மேற்கொள்ளும் முயற்சியை தி.மு.க. ஆதரித்துள்ளது என்ற உணர்வில், இந்த மசோதாவின் ஒரு பகுதியை நான் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள  பகுதியினருக்கு இட ஒதுக்கீடு அளிப் பதற்கு  எதிராக பதிவு செய்யப்பட்ட  பல மனுக்கள் உயர் நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன என்பதால், இந்த மசோதா கொண்டு வருவதும் காலம் தாழ்ந்ததே ஆகும். அந்த மனுக்கள் நிலுவையில் இருக்கும் வரை நாங்கள் இந்த மசோதாவை எதிர்ப்போம். ஒன்று இந்த மசோதா நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது இந்த மசோதா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும். முதல் பகுதியில், இந்த மசோதாவில் தெரிவித்துள்ளபடி பொருளாதார நிலையிலும், சமுக அளவிலும் பின்தங்கியுள்ள பகுதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஏன்? இதற்கான காரணத்தை நான் விளக்கிக்  கூறுகிறேன். அரசமைப்பு சட்ட 103, 104 ஆவது திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது நாங்கள் மக்களவையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. இப்போது கால தாமதம் ஆகிவிட்டது. கடந்த மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பு சட்ட திருத்த மசோதாவையே அடிப்படை யாக இந்த மசோதாவும் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த விவகாரம் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது பற்றி சில குறிப்புகளைத் தெரிவிப்பது ஓரளவுக்குப் பொருத்தமானதாகவே இருக்கும் என்று நான் கருது கிறேன்.

எஸ்.எஸ். அலுவாலியா வர்த்தாமான், துர்காபூர்: ஓர் உறுப்பினராக அதற்கு நீங்களும் ஒரு தரப்பாக (Party) இருந்திருப்பதால், அதில் தங்களுக்கு உள்ள ஆர்வ முரண்பாட்டையும் கூறவேண்டும்.

அவைத்தலைவர்: திரு.ஆ.இராசா அவர் கூறுவதற்கு நீங்கள் இடம் தருகிறீர்களா?

ஆ.இராசா  (நீலகிரி): இது ஒன்றும் ஆர்வ முரண் பாடல்ல. இதில் ரகசியம் ஏதுமில்லை. இது ஒரு அரசமைப்பு சட்ட விளக்கமாகும். உங்கள் கேள்விக்கு நான் வருகிறேன். இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதன் மூலம் இந்த அவைக்குக்  கூடுதலான தகவல்களை என்னால் அளிக்க முடிகிறது என்பதற்காக  நான் நண்பர் அலுவாலியாவுக்கு நன்றி கூறவேண்டும்.

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதி யினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு, கடந்த மக்க ளவையில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பு சட்ட திருத் தத்தின் அடிப்படையிலானது என்பதை இந்த மசோதா வின் நோக்கங்களும், காரணங்களும் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அது என்ன மசோதா? அதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அந்த மசோதாவின் நோக்கங் களும், காரணங்களும் கூறுவதாவது: இப்போது பொருளாதார நிலையில் பலவீனமாக இருக்கும் மக்களில் பெரும் பகுதியினருக்கு, அவர்களது நிதிப் பற்றாக்குறை காரணமாக, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில்வதற்கு  இயலாத நிலை இருக்கிறது.''

அந்த மசோதாவின் 2 ஆவது குறிப்பு கூறுவதாவது: அரசமைப்பு சட்டத்தின் 46 ஆவது பிரிவினை நிறை வேற்றும் கண்ணோட்டத்திலும், உயர் கல்வி பெறு வதிலும், அரசு பணி வாய்ப்புகளிலும் ஒரு நியாயமான வாய்ப்பினை பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதி மக்களுக்கு அளிப்பதை உறுதிப்படுத்திக் கொள் வதற்காகவும், இந்திய அரசமைப்பு சட்டத்தினைத் திருத்துவது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.''

அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது பொருளாதார நிலையில் நலிந்த பிரிவினர் கல்வி நிறுவன சேர்க்கையிலும், அரசுப் பணி நியம னத்திலும் ஒரு நியாயமான பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வில்லை என்பது. இரண்டாவது,  இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரசமைப்பு சட்ட 46 ஆவது பிரிவு வகை செய்கிறது என்று அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.

அதன் அடிப்படையில் அந்த சட்டத்தை அவர்கள் கொண்டு வந்தார்கள். அந்த சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வர்ணாசிரம அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை


அய்யா, இட ஒதுக்கீடு என்பது இந்தியர்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்பே இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருந்துள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்க முடியும் என்று வியப் படைந்து சிலர் கேட்கலாம். அந்த இட ஒதுக்கீடு மனிதத் தன்மையற்றதும், மக்களாட்சி நடைமுறைக்கு விரோத மானதும் ஆகும். எவ்வாறு அது மனிதத் தன்மையற்றது, மக்களாட்சி நடைமுறைக்கு எதிரானது என்பதை நான் விளக்குகிறேன்.

மக்கள் சமுகம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்களாகவும், எந்த  வர்ணத் திலும் சேர்க்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.

அனைத்துத் தொழில்களும், பணிகளும் இந்த நான்கு பிரிவினர்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. அதனால், அதுவும் ஒரு இட ஒதுக்கீட்டு நடைமுறையே ஆகும். அந்த இட ஒதுக்கீட்டு  நடைமுறை மனித நேயத்துக்கு எதிரானதும், மனித நேயமே அற்றதும், மக்களாட்சி நடைமுறைக்கு எதிரானதும் ஆகும்.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் முன்னுரை என்ன கூறுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை  இறையாண்மை மிகுந்த, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு  நாடாக உருவாக்கிக் கொள்ள  உறுதியுடன் முடிவு செய் துள்ளோம்.

ஆனால் அரசமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு மனிதநேயம் கொண்டதும், மக்களாட்சி நடைமுறைப் படியானதும் ஆகும். மக்களாட்சி என்பது வெறும் ஒரு அரசின் வடிவம் மட்டுமல்ல. சகமனிதர்கள் மீது மரியாதையையும், பரிவை யும் காட்டுவதற்கு மிகவும் தேவையான ஒரு கருவியாகும்.

எனவே, அந்த உணர்வில்தான் இட ஒதுக்கீடு என்பது இந்தியர்கள் அறியாத ஒன்றல்ல என்று நான் கூறுகிறேன். ஆனால் இதில் உள்ள ஒரே வேறுபாடு, அந்த பழைய இட ஒதுக்கீடு மனித நேயமற்றதும், மக்களாட்சி நடைமுறைக் கும் ஏற்றது அல்ல என்பதும், ஆனால் இந்த இட ஒதுக்கீடு மனித நேயம் மிகுந்ததும், மக்களாட்சி  நடை முறைப்பாடியானதும் ஆகும்.

எங்கள் தந்தை பெரியாரும், தலைவர்களும் பாடுபட்டனர்


அய்யா, தி.மு.க.வின் ஓர் உறுப்பினன் என்ற முறையில்,  எங்கள் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும், அவரது ஆசான் அறிஞர் அண்ணா என்ற சி.என். அண்ணாதுரையும், தமிழ்நாட்டின் தந்தை  என்று போற்றப்படும்  பெரியாரும் 1951 ஆம் ஆண்டில் அரச மைப்பு சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே, இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட முன்னோடிகள் என் பதை இங்கே தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். திராவிட இயக்கத்தின் காரணமாகவே, சமுக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியிருந்த பிரிவு மக்களுக்கு அளிக் கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு சலுகை மறுக்கப்பட்ட  1951 இல் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கான முதல் திருத்தம் வந்தது.

அதற்கும் முன்பே 1927 ஆம் ஆண்டில் எங்கள் திராவிட அரசு ஆட்சியில் இருந்த போது, சமுக அள விலும்,  கல்வியிலும் பின்தங்கியிருந்த பிற்படுத்தப்பட்ட பிரிவு, முஸ்லிம்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்பது இந்த அவையில் உள்ள பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். அதைப் பற்றி அப்போது எவர் ஒருவரும் கனவு கூட கண்டதில்லை.

எனவே, அந்த உணர்வில், அது பழைய மசோதாவோ அல்லது புதிய மசோதாவோ, அதைப் பற்றிய சில செய்திகளைக் கூறுவதற்கு நாங்கள் உரிமை பெற்றுள் ளோம் என்பதை நான் மிகுந்த கர்வத்துடன் கூறிக் கொள்கிறேன். உரிய மரியாதையுடன் அரசமைப்பு சட்டப்படியான தகுதி நிலைநாட்டப்பட வேண்டும். அந்த உணர்வில் மேலும் அய்ந்து அல்லது பத்து நிமிடங்கள் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அய்யா, நான் குறிப்பிட்டது போல இந்த மசோதாவில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, பொருளாதார நிலையில் நலிவடைந்தவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் இரண்டாவதாக அரசமைப்பு சட்ட 46 ஆவது பிரிவும்.

முதலில் அரசமைப்பு சட்ட 46 ஆவது பிரிவிற்கு நான் வருகிறேன். அது கூறுவதாவது: நலிந்த பிரிவு மக்களின், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்பு அக்கறையுடன்  மேம்படுத்தி சமுக அநீதியில் இருந்தும், அனைத்து வடிவங்களிலும் அவர்கள் ஏமாற்றி சுரண்டப்படுவதில் இருந்தும் அரசு  அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த அரசமைப்பு சட்டப் பிரிவில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒரு புதிய சொல்லாடல், பொருளாதார நலன்கள் எனப்படுவதாகும். ஆனால் அரசமைப்பு சட்ட 15 மற்றும் 16 ஆவது பிரிவுகள் சமுக அளவிலும், கல்வியிலும் பின்தங்கி இருக்கும் மக்கள் பிரிவினர் அரசு நியமனங்களிலும், கல்வி நிலைய சேர்க்கையிலும் இட ஒதுக்கீடு பெறுவதற்கு உரிமை பெற்றவர்கள்'' என்று கூறுகின்றன. இன்று இங்கு கொண்டு வரப்பட்டிருக்கும் மசோதா வுக்கு அடிப்படையாகக் காட்டப்படும்  அரசமைப்பு சட்ட 46 ஆவது பிரிவில் பிரிவினர் என்று குறிப்பிடப்பட்டுள்ள போது,  இந்த மசோதாவில்  பகுதியினர் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. பிரிவுக்கும், பகுதிக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அரசமைப்பு சட்ட 14 ஆவது பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி,  சட்டத்தின் வழியாக நாடாளுமன்றத்தினாலோ  அல்லது நீதிமன்றத்தாலோ நியாயமாக வகைப்படுத்துவது செய்யப்பட இயலும். ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்காக பிரிவு சட்டம் இயற்றப்பட முடியாது. பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தெளிவான விளக்கம் இதுதான்.

சமுகரீதியாகவும், கல்வி ரீதியாகவும்...


எனவே இடஒதுக்கீட்டை ஒரு நியாயமான முறையில் வகைப்படுத்துவது என்பது சமுக அளவிலும், கல்வி யிலும் பின்தங்கியவர்கள் என்று வகைப்படுத்துவதே ஆகும்.

பிரிவு சட்டம் என்பது என்ன? பொருளாதார நிலை யில் பலவீனமான பகுதியினர் என்று ஒரு புதிய அளவு கோலை அல்லது ஒரு புதிய மதிப்பீட்டை, அல்லது ஒரு புதிய சொல்லை அவர்கள் இடைச்செருகல் செய்திருக் கின்றனர். (திருமதி.ரமாதேவி அவைத் தலைவர் இருக்கையில்)

அம்மையீர், பொருளாதார நிலையில் இருக்கும் பலவீனமான  பகுதியினருக்கு நாங்கள் ஒன்றும் எதிரிகள் இல்லை. பொருளாதார நலன்கள் என்ற சொற்கள்தான் அரசமைப்பு சட்ட மதிப்பீடுகளிலோ அல்லது அரச மைப்பு சட்ட புத்தகத்திலோ பதிவு செய்யப்பட்டுள்ள சொற்களாகும். அப்படியானால் மேலும் மேலும் படிப்புதவித் தொகைகளைஅவர்கள் வழங்க வேண்டி யிருக்கும்; மேலும் மேலும் கடன்களை அவர்கள் வழங்க வேண்டியிருக்கும்; அத்தகைய பொருளாதார நிலையில் பலவீனமான பகுதியினருக்காக ஒட்டு மொத்த கல்விக் கட்டணங்களும் முழுமையாக ஒதுக்கப்பட்டது என்று அறிவிக்கவும் செய்யலாம்.

ஆனால் இந்த 10 சதவிகித ஒதுக்கீட்டை இட ஒதுக்கீடாகக் கொண்டு வந்ததன் மூலம், உண்மையாகவே  அடக்கி ஒடுக்கப்பட்ட,   பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு வகையில் எல்லை தாண்டி இவர்கள் செயல்பட இருக்கின்றனர் என்றே நான் கருது கிறேன்.

நடந்த நிகழ்வுகளைப் பற்றி  இதுவரை ஒரு மேலோட்டக் கோணத்தில் மட்டும் தான்  நான் கூறி வந்துள்ளேன். அதன் காரணம், இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது ஏதோ ஒருவர் விருப்பப்பட்டு தருவதோ அல்லது தர்மமோ அல்ல.  முன்னர் ஆங்கிலேய ஆட்சியின் போதும் நிலை நிறுத்தப்பட்ட ஓர் உரிமை அது. அதன் தோற்றமோ அல்லது ஆணிவேரோ அல்லது இன்னமும் சரியாகக் கூறுவதானால் இட ஒதுக்கீட்டின் தோற்றம், நடைமுறை மற்றும் மேம்பாடு 1880 ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதற்கான விவரங்களை என்னால் தர முடியும்.

இடஒதுக்கீடு பற்றிய முதல் கலந்துரையாடல், 1880 ஆம் ஆண்டில் வெளிவந்த  கேலண்டர்-மேர் தொகுப் பில் இடம் பெற்றுள்ளது. படிப்பறிவு இல்லாதவர்கள் அல்லது உள்நாட்டு மக்கள் குழுக்களை விவரிக்க பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற சொல் அப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. துவக்கப் பள்ளிகளில் படிப்ப தற்கு நிதி உதவி என்ற முறையில் படிப்புதவித் தொகை பெற உரிமை பெற்றவர்களாக அவர்கள் இருந்தனர். படிப்புதவித் தொகை அளிப்பதற்கு பிற்படுத்தப்பட்ட என்ற சொல் புதிதாக உருவாக்கப் பட்டதுதான் முதல் இட ஒதுக்கீடாகும். பின்னர் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்களே பெரும்பான்மையினராக இருந்த பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பள்ளிகளுக்கு மான்ய உதவி வழங்குவதற்கு 5-1-1885 இல் வெளியான அரசிதழ் எண் 40 வகை செய்திருக்கிறது. அது சென்னை மாகாணத்தால் செய்யப்பட்டது.

இட ஒதுக்கீடு தோன்றிய வரலாறு


பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை, குறிப்பாக தீண்டத் தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்களை மேம் படுத்துவதற்காக தெரிவிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ் போர்ட் சீர்திருத்தங்களில் கோலாப்பூர் மகாராஜா 1917 ஆம் ஆண்டில் ஆர்வம் காட்டினார். பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் என்ற சொல் எங்குமே இடம் பெற்றிருக்கவில்லை. இந்த சொல்  நாடாளுமன் றத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ அல்லது பிராந்திய அரசுகளிலோ  ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட இந்த சொல் எப்போதுமே பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட என்றே இருந்து வந்துள்ளது. அதில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப் பட்ட மக்களும் அடங்குவர்.

பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை அரசு பணிகளை மேற்கொள்ளச் செய்வது பற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை மேதகு மைசூர் மகாராஜாவின் அரசு 1918 ஆம் ஆண்டில் நியமித்தது.  ஒரு கூட்டுத் தேர்வுக் குழு 1920 ஆம் ஆண்டில் அளித்த, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற் படுத்தப்பட்ட பிரிவு மக்களின் கல்வி வாய்ப்பு மேம் பாட்டை வலியுறுத்தும் ஓர் அறிக்கையை இங்கிலாந்து அரசு மறுஆய்வு செய்தது. பின்னர் 1921 இல்  சலுகை காட்டி நியமனம் செய்யும் குழு என்ற அமைப்பு லண்டனில் அரசுப் பணிகளில் போதுமான பிரதி நிதித்துவம் பெறாத பார்ப்பனர் அல்லாத அனைத்து சமுகங்களும் பிற்படுத்தப்பட்ட பிரிவு சமுகங்களே என்று விளக்கம் அளித்துள்ளது. 1925 ஆம் ஆண்டில் சீர்திருத் தங்கள் பற்றிய அமைச்சக அறிக்கை ஒன்று அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் அற்ற பார்ப்பனர் அல்லாத அனைத்து இதர சமுகங்களுமே பிற்படுத் தப்பட்ட சமுகங்களாகும் என்று தெரிவித்துள்ளது.

பின்னர் 1925 ஆம் ஆண்டில் சீர்திருத்தத் துறை அமைச்சக அறிக்கை ஒன்றில், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைப் பற்றிய சீர்திருத்த ஆய்வு ஆணையத்திற்கு இந்த சொல்லாடலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது என்றாலும்,  தீண்டத் தகாதவர்கள் என்று கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவுகளை, பார்ப்பனர் அல்லாத முரண்பட்டவர்களைக்  குறிப்பிடுவதற்கான அதன் பயன்பாட்டைப் பற்றி அமைச்சக அறிக்கை குறிப்பிடுகிறது   என்று கூறப் பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்பதற்கு  ஒடுக்கப்பட்ட பிரிவுகள், பழங்குடிமக்கள், மலைவாழ் மக்கள் மற்றும் குற்றவியல் மரபினர் போன்ற கல்வியில் பின்தங்கியி ருக்கும் ஜாதிகள் அல்லது பிரிவுகள்'' அனைத்துமே பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்று 1928 ஆம் ஆண்டில் ஹார்டோக் குழு விளக்கம் அளித்துள்ளது. பழங்குடி மக்கள் மற்றும் குற்றவியல் மரபினர் மற்றும் பிரிட்டீஷ் இந்தியாவில் வசிக்கும் மக்களில் மிகக் குறைந்த அளவில் முன்னேற்றம் அடைந்துள்ள இதர மக்களையும் சேர்த்து பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் பிரச்சினையை 1929 ஆம் ஆண்டில் இந்திய மத்திய குழு வேறுபடுத்திக் காட்டி யுள்ளது.

1930 இல் பம்பாய் மாகாணத்தில் நியமிக்கப்பட்ட  ஸ்டார்டி குழு, பழங்குடி மக்கள், மலை வாழ் மக்கள் மற்றும் இதர மக்களைப் பற்றி மட்டுமே விவரித்துள்ளது.  பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு என்று எவ்விதக் குறிப்பும் அளிக்காமல், சைமன் குழு 1930 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றில் இடைப்பட்ட ஜாதிகள்  பார்ப்பனர் அல்லாத மக்களின் இயக்கம் என்றே குறிப்பிட்டுள்ளது. மறுபடியும் 1932 ஆம் ஆண்டில் இந்திய வாக்குரிமைக் குழு, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட பிரிவுகள் மற்றும் சூத்திரர்களைப் பற்றிப் பேசியுள்ளது. சமுக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கும் மக்களைக் குறிப்பிடுவதற்கு  பிற்படுத்தப்பட்ட பிரிவு இந்து என்பதே மிகவும் பொருத்தமான பெயராக இருக்கும் என்று அய்க்கிய மாகாண இந்து பிற்படுத்தப்பட்ட பிரிவு சங்கம் அரசுக்கு அளித்த ஒரு விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

பல பார்ப்பனர் அல்லாத சமுகங்களும் சேர்க்கப்பட்ட தால் ஏற்பட்ட, சென்னை மாகாணத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் பெருக்கம் பற்றிய ஒரு செய்தியை  1936 ஆம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியா'' வெளியிட்டு உள்ளது. மறுபடியும் 1937 ஆம் ஆண்டில், பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள பிரிவுகளையும் சேர்த்து பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்ற சொல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் கையாளப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட  பொதுத் துறைஅரசாணை எண் 3437   மூலமாக இந்து பிற்படுத்தப்பட்ட 145 சமுகங் களுக்கு அரசு பணிகளில் தனி இட ஒதுக்கீட்டினை  சென்னை  மாகாண அரசு அளித்துள்ளது.

1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசமைப்பு சட்ட மன்றத்தில் விவாதங்கள் தொடங்கின. அந்த விவாதங் களால் என்ன நிகழ்ந்தது? பிற்படுத்தப்பட்ட பிரிவுகளே மிகுந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று வட இந்திய பிரதிநிதிகள் ஊகித்துக் கொள்வதால், அது தாழ்த்தப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும் ஒன்றாக இருக்கிறது என்று பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்ற பெயருக்கு உத்தரப் பிரதேச மாநிலப் பிரதிநிதி பண்டிட் ஹிருதய நாத் குன்ஸ்ரூ ஒரு விளக்கத்தை அளித்தார். பின்னர் திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு என்ன நடந்தது? ஜாதிகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை நாம் கடைபிடிக்கக்  கூடாது என்று அவர் கூறினார். அதற்கு அரசமைப்பு சட்ட மன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் பதிலளித்தார். உங்களது இரு குறிப்புகளை மறு பரிசீலனை செய்வதற்கான சூத்திரம் ஒன்றை  அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். முதலாவதாக அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் இதுவரை பிரதிநிதித்துவமே பெற்றிராத சில குறிப்பிட்ட சமுகங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான காரணங்கள் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது.

இதுதான் திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த பதிலாகும்.  இவற்றையெல்லாம் இங்கே நான் ஏன் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்? இடஒதுக்கீட்டுக்கான ஆணிவேர் 1880 ஆம் ஆண்டில் இருக்கிறது என்பதால்தான். அரசமைப்பு சட்டத்திற்கான முதல் திருத்தம் 1951 ஆம் ஆண்டில் கொண்டு வரப் பட்டது. கடந்த மக்களவை வரை, ஆங்கிலேய ஆட்சி காலத்து சட்டங்களின் அனைத்து இடங்களிலும், பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவுகள் என்ற சொல் குறிப்பிடப் படவே இல்லை என்பதுடன், அது அரசமைப்பு சட்டத்திலோ அல்லது  ஒடுக்கப்பட்ட பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கான  வேறு இதர நிர்வாக ஆணைகளிலோ  சேர்க்கப்படவில்லை, ஆனால், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதி யினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வகை செய்யும் அரசமைப்பு சட்ட திருத்தம் ஒன்றை திடீரென நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். அதனால்தான் அது ஒரு தேர்வுக் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். இது பற்றி நீதிமன்றங்களில் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் முடிவடையும் வரை பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதியி னருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். பொரு ளாதார நிலையில் பின்தங்கிய பகுதியினர் என்று கூறப்படுவதும்  கூட உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதே ஆகும். (குறுக்கீடுகள்)

பொருளாதார அளவுகோல் நிரந்தரமானதா?


பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதியி னருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை  நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். அதனைப் பற்றிய பகுத்தாய்வுதான் என்ன? அது என்ன நிரந்தமானதா? ஒரே நிலையில் இருப்பதா? அரசமைப்பு சட்ட 14 ஆவது பிரிவின்படி அது நியாயமானதா? அது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள் ளதா,  அல்லது தீய நோக்கத்துடன் கொண்டு வரப் பட்டதா? பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதியினருக்கு அரசமைப்பு சட்டப்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதைப் பற்றி பரிசீலனை செய்ய கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.சின்ஹாவின் தலைமையில் ஓர் ஆணையத்தை நியமித்தது. மிகவும் குறிப்பான ஒரு கேள்வி அது. அதன் காரணங்களும், நோக்கங்களும் மிகவும் தெளிவாக அளிக்கப் பட்டிருந்தன. சமுக நல திட்டங்களை விரிவுபடுத்து வதற்காக மட்டுமே பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் பிரிவுகளை அரசுகள் அடையாளம் காண முடியும். சமுக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவு மக்களுக்கு மட்டுமே  ஓர் ஆக்கபூர்வமான உதவி அளிப்பதே இந்திய சூழலில் இட ஒதுக்கீடு அளிப்பது என்பதாகும், அரசுப் பணி களிலும், கல்வி நிறுவன சேர்க்கையிலும் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பொருளாதார நிலையில் பின்தங்கியிருப் பதை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொள்ள முடியாது  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதிய மசோதாவின் பின்னணியில் ஒரு சதி!


அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தால் கூறப்பட்டது இது. அரசு ஒரு ஆணையத்தை நியமித்தது. முடிவான அறிக்கை ஒன்றை அந்த ஆணையம் அளித்துள்ளது. அந்த அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளாமல் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். சூழ்ச்சி செய்யும் ஒரு முறையில் இந்த மசோதாவை நீங்கள் கொண்டு வருகிறீர்கள். இதில் ஒரு சதி இருக்கிறது  என்று என்னால் கூறமுடியும். அதன் காரணம் மசோதாவின் நகல்கள் கூட இன்னமும் சுற்றுக்கு விடப்படவில்லை. (குறுக்கீடுகள்) மக்களவை அலுவல் பட்டியலிலும் அது இடம் பெற்றிருக்கவில்லை. அலுவல் பட்டியலில் சேர்க்காமலேயே அரசமைப்பு சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வருவது என்பது அரசுக்கு மிகப் பெரிய அவமானத்தையும் வெட்கத்தையும் ஏற்படுத்துவதாகும். முதன் முறையாக, மக்களவை அலுவல் பட்டியலில் இடம் பெறாமலேயே ஓர் அரசமைப்பு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் நடந்த சஹானி வழக்கில், இது போன்றதொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அப்போது பிரதமராக இருந்த திரு பி.வி.நரசிம்மராவ் விரும்பினார். அது உச்ச நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. (குறுக்கீடுகள்) பின்னர் அது பற்றி பொருளாதார அரசியல் வார இதழ்  ஒரு பகுத்தாய்வினை மேற்கொண்டது.

நாடாளுமன்ற விவகார இணை அமைச்சரும், கனரக தொழில் துறை மற்றும் பொதுத்துறை நிறு வனங்களின்  இணை அமைச்சருமான  திரு அர்ஜூன் ராம்மேக்வால்:நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு நீங்கள் சவால் விடுகிறீர்களா?  (குறுக்கீடுகள்)

திரு .ஆ.இராசா (நீலகிரி): நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு நான் சவால் விடவில்லை. இந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வந்த வழிதான் மிகுந்த சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக இருக்கிறது. (குறுக்கீடுகள்). அதனால்தான்  தேர்வுக் குழு ஒன்றுக்கு அது அனுப்பப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். (குறுக்கீடுகள்).

அம்மையீர். இந்த விஷயத்தில் நான் மிகவும் தெளி வாகவும், உறுதியாகவும் இருக்கிறேன். (குறுக்கீடுகள்) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பு சட்ட திருத்தத்துக்கு நான் சவால் விடவில்லை. அந்த திருத்தம் கொண்டு வந்த வழிதான் பல சந்தேகங் களுக்கு பெருமளவில் இடம் கொடுப்பதாக இருக்கிறது என்று தான் நான் கூறுகிறேன்.

எனவே, இந்த காரணங்கள் அனைத்திற்காகவும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதியின ருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதை நான் எதிர்க்கிறேன். உங்களது மனப்பான்மை துரோணரது மனப்பான்மை போல இருக்கிறது அல்லவா? அத்தகைய மனப்பான்மை கட்டாயமாக  மாறத்தான் வேண்டும். இனியும்  நாங்கள் ஏகலைவர்களாக இருக்கப் போவதில்லை என்பதை நாங்கள் கட்டாய மாக மெய்ப்பிப்போம். நன்றி. அம்மையீர்!

- இவ்வாறு ஆ.இராசா தனது உரையில் குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு, 3.7.19