பக்கங்கள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்கள்; அமைச்சரவை ஒப்புதலாம்

சென்னை, ஏப்.17 பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், நாடு முழுவதுமுள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்து வதற்கு, பிரதமர் மோடி தலை மையில் திங்கள்கிழமை நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி, நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த முன்மொழிவை அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கு முன்னர், தேர்தல் ஆணையத்திடம் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி பெற்றது.

தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2,14,766 இடங்கள் உருவாக்கப்படும். இதில், 2019 - 2020 கல்வியாண்டில் 1,19,983 இடங்களும், 2020- - 2021 கல்வியாண்டில் 95,783 இடங்களும் உருவாக்கப்படும்.

10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, மத்திய கல்வி நிறுவனங்களுக்கு ரூ.4,315.5 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவி னருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நிறைவேற்றப் பட்டது. இந்த மசோதாவுக்கு, குடி யரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனவரி 12-ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். இதர பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஏற்கெனவே அளிக்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப் படுகிறது.

- விடுதலை நாளேடு, 17.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக