பக்கங்கள்

செவ்வாய், 13 ஜூன், 2017

ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்)



ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். இவர் சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
1946 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு மிகப்பெரும்பான்மையான தொகுதி களில் வென்றிருந்தாலும் உட்கட்சி பூசல்களால் உடனடியாக முதல்வரை தேர்ந்தெடுக்க முடி யாமல் திணறியது. ராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனரான பிரகாசத்தை முதல்வராக்கினார். ஆனால் அவர் பதவியேற்ற ஓராண்டிற்குள் நீதிக் கட்சியினர் கொண்டுவந்த பல்வேறு சட்டங்களை திரிக்கும் வேலைகளில் ஈடுபட்டார். இதைக் காமராஜர் கடுமையாக எதிர்த்தார்.காமராஜருக்கு பெரும்பான்மையான காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு இருந்த காரணத்தால் தீர்மானம் கொண்டுவந்து பிரகாசத்தை நீக்கி அவருக்கு பதிலாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை மார்ச் 23, 1947 இல் தமிழக முதல்வராக்கினார்.  சுதந்திரத்திற்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்  முதலமைச்சர் என்ற பெருமையும் இவர் பெற்றார்.
3 ஆண்டுகள் பதவியில் இருந்த ஓமந்தூரார் அவருக்கு முந்தைய பார்ப்பனரான முதல்வர் பிரகாசத்தால் சீர்குலைந்த நிர்வாகத்தை தன்னுடைய திறமையான ஆளுமையால் சீர்செய்தார். முக்கியமாக அரசு துறையில் இருந்த ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தது மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. நீதிக்கட்சி கொண்டுவந்த தேவதாசி ஒழிப்புச் சட்டம், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு உறுதிச் சட்டம் போன்றவற்றை தீவிரமாக அமல்படுத்தினார்.
முக்கியமாக மடங்கள் மற்றும் கோவில்களின் சொத்துக்களை பார்ப்பனர் மற்றும் மடாதிபதிகள் தங்களது சொத்துக்களாக பாவித்து வந்ததை சட்டமியற்றி தடுத்தார்.  தாழ்த்தப்பட்டவர்கள் கோவில் நுழைவை கட்டுப்படுத்தும் பிரகாசத்தின் ஆணையை நீக்கி மெட்ராஸ் கோவில் நுழைவு உறுதிச்சட்டம் - 1947 கொண்டு வந்தார். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த பார்ப்பனரான பிரகாசம் கோவில் நுழைவில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தார். அதன்படி, தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் நுழையலாமென்றும் அதற்கென சிலவழிமுறைகளையும் உருவாக்கியிருந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று குறிப்பிட்ட நேரம் மற்றும் வெகுஜனபூசைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் போன்ற விதிகளை ஓமந்தூரார் நீக்கி அனைத்து கோவில்களிலும் எந்த நேரத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் நுழையலாம் என்று உறுதி செய்யும் விதமாக சட்டமியற்றினார் (Madras Temple Entry Authorization Act 1947).. இந்த சட்டத்தின் படி இன்றுவரை தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வது உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் தேவதாசி சட்டத்திலும் சில தந்திரங்கள் செய்யப்பட்டிருந்தது. அதாவது விருப்பப்பட்ட பெண்கள் தேவதாசிகளாக மாறுவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று இருந்ததை மாற்றி நிரந்தர தேவதாசி ஒழிப்புச் சட்டம் (The Devadasi Dedication Abolition Act of 1947)கொண்டுவந்தார் (9.10.1947). இந்த சட்டத்தின் படி தேவதாசியாக மாறும்படி வற்புறுத்துவோருக்கு அபராதம், சிறைவாசம் என்று தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்து அந்த முறையை முற்றிலுமாக ஒழித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் பார்ப்பனர்களின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். தன்னுடைய இறுதி காலத்தில் அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். இவர் வள்ளலார் பள்ளி, அனாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பலநிறுவனங்களை தொடங்கினார். 25.8.1970 இல் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
இவர் ஆட்சிக் காலத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தமிழர் சிதம்பரம் நாகபூஷணம் சோமசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ராஜாஜி அவர்கள், பார்ப்பனர் ஒருவரை அந்த இடத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். பிரதமர் நேரு அவர்களும் அதற்கு உடன்பட்டு, சென்னை மாநில முதலமைச்சர் ஓமந்தூராரை வற்புறுத்தியபோது, ‘இந்தாருங்கள் என் ராஜினாமா’ என்று சொல்லவே, வேறு வழியின்றி பிரதமர் நேருவும், ஓமந்தூராரின் முடிவுக்குக் கட்டுப்பட நேர்ந்தது.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை தாடியில்லாத ராமசாமி  நாயக்கர் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.

-விடுதலை,11.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக