பக்கங்கள்

வெள்ளி, 2 மார்ச், 2018

திருப்பதியிலும் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகர் ஆக்கப்பட உள்ளனர்! தமிழக அரசே உடனே அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குக!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களும் அர்ச்சகர் ஆகும் வகையில் 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. விரைவில் 200 அர்ச்சகர்களை பணியிலமர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

அனைத்து ஜாதியினரையும்  அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு திருப்பதி கோவிலில் பணி புரிய சுமார் 200 பேர்களுக்கு கோவில் விதிகள், மந்திரங்கள் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆவார்கள்.

தேவஸ்தான அதிகாரி கூறுகிறார்

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில் சிங்கால் கூறியதாவது:

‘‘அர்ச்சகராக பார்ப்பனர் அல்லாதோரை நியமிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு வந்ததால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.   தற்போது அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு சம்மதம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சுமார் 200 பேரைத் தேர்ந்தெடுத்து அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளித்தது.   அவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர்  ஆவார்கள்.  அவர்கள் இப்போது பயிற்சி முடிந்து பணிபுரியத் தயாராக உள்ளனர்.  விரைவில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

கேரளாவைப் பாரீர்!

கேரளாவில் உள்ள பல கோவில்களை உள்ளடக்கிய திருவாங்கூர் தேவஸ்தானம் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ளது. இதில் 6 பேர் தற்போது கேரள கோவில்களில் பணி செய்து வருகின்றனர்; பிற்படுத்தப்பட்டவர்கள் 30 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகின்றனர்.

கருநாடகாவில்...

கருநாடக அரசும் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் புதிய சட்டவரைவை விரைவில் கொண்டுவர உள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். திருப்பதி கோவிலில் தேவஸ்தான பயிற்சி மய்யம்  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு பயிற்சி அளித்து விரைவில் அவர்களுக்குப் பணி ஆணை வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகாராட்டிரத்தில் பெண்கள் அர்ச்சகர்கள்

இன்னும் சொல்லப்போனால், மகாராட்டிர மாநில பாந்தார்பூரில் 900 ஆண்டுப் பழைமையான ருக்மணி அம்மன் கோவிலில் இப்பொழுது பெண் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கோவிலில் அன்றாடப் பூஜைகள் செய்ய பெண் அர்ச்சகர்கள் மற்றும் உயர் வகுப்பினர் அல்லாத இதர பிரிவினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது (2016). 129 பெண்கள் விண்ணப்பம் செய்ததில், 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அர்ச்சகர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 900 ஆண்டுப் பரம்பரை மரபு இதன்மூலம் உடைக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாடு அரசு செயல்படட்டும்!

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு _- அனைத்து ஜாதியினரையும் அர்ச்சர்களாக நியமனம் செய்வதில் எந்தத் தடையும் இல்லை _ இல்லவே இல்லை!

திருப்பதி கோவிலிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, அர்ச்சகர்களாக நியமிக்க முன்வந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்குத் தடுமாற்றம் ஏன்? தயக்கம்தான் ஏன்?

மேலும் தாமதம் இன்றி தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுமாக!

கி.வீரமணி,
ஆசிரியர்

- உண்மை இதழ்,16-31.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக