பக்கங்கள்

செவ்வாய், 23 ஜனவரி, 2018

இதுதான் இந்துத்துவம்!(கல்வியில்)


ராஜஸ்தான் மாநிலப் பள்ளிகளில் ‘சொல்வழக்கு’என்றபாடம்நாட்டுப் புறக் கதைகள் என்ற பிரிவில் உள்ளது. ‘புனிதத்தலம்‘ உள்ள மலை யடிவாரத்தில் ஒரே ஒரு வீடு, அங்கு ஒரு ஏழைப் பார்ப்பனப் பெண் மலைக்குத் தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தார். உணவு சுவையில்லாமல் இருந்தாலும், தூய்மையான மன தோடு, தெய்வீக அச்சத்துடன் அவர் உணவு வழங்கி வந்தார். அப்பகுதியில் வீடுகளோ அல்லது வேறு எந்த வசதிகளோ கிடையாது. ஆகவே, அனைவரும் அவர் வீட்டில் சாப்பிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துச் சென்றனர். அந்தப் பார்ப்பனப் பெண்ணுக்கு செல்வமும், புகழும் அதிகரித்தது.

அந்த மலைக்கு அப்பால் ஒரு செருப்பு தைக்கும் குடும்பம் வசித்து வந்தது. அவர்களின் நட வடிக்கையால் ஊரார் அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டதால் அவர் களை யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில் பார்ப்பனப் பெண் முதுமையின் காரணமாகஇறந்துவிட்டார்.அந்த மூதாட்டி செத்துப் போன தகவல் எப்படியோ செருப்பு தைக்கும் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்குத் தெரிந்துவிட, அவள் வந்து அந்த மூதாட்டியின் இடத்தைப் பிடித்துக்கொண்டார். அவர் பக்தர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தார். அந்த செருப்பு தைப்பவர் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்து உணவையும் சுவையாக செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஆகையால், இவருக்கும் அந்த பார்ப்பனப் பெண்ணிற்குக் கிடைத்த மரியாதை அனைத்தும் கிடைத்தது. கோவிலுக்கு வரும் அனைவரும் இந்தப் பெண்ணும் பார்ப்பனர் என்றே நினைத்துக் கொண்டனர்.

ஒரு நாள் இமயமலையிலிருந்து வேதம் படித்த ஒரு மதகுரு அங்கே வருகை புரிந்தார். அவருக்கும் இவர் சாப்பாடு செய்து கொடுத்தார். அந்த மதகுரு இவரின் சாப்பாட்டுச் சுவையில்லயித்துவிட்டார்.மனதாரப் பாராட்டி இவ்வளவு சுவையான சாப்பாடு எப்படிச் செய்கிறீர்? இதற்கு முன்பு இருந்தவர் இப்படிச் செய்ததில்லையே என்று கேட்க, அந்தப் பெண்ணும், ‘‘நான் கீரைக்கட்டைப் பிரிக்க முன்பிருந்த பெண் போல பல்லால் கடித்துப் பிரிக்க மாட்டேன்; அது பக்தர்களுக்கு எச்சிலைப் பரிமாற்றி அவர்களை இழிவுபடுத்திவிடும். ஆகையால், நான் கீரைக்கட்டைப் பிரிக்க இதோ இந்தக் கத்தியைப் பயன்படுத்துகிறேன்’’ என்று கூறினார்.

அப்பெண்ணிடம் இருந்த அந்தக் கத்தி செருப்பு தைப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ‘ரப்பி’ எனப்படும் கத்தி ஆகும்.

உடனே அந்த மதகுரு அவரைப் பார்த்து நீ யார்? நீ பார்ப்பனத்தியா இல்லையா? என்று கேட்க,

அவரும், மன்னிக்க வேண்டும், நான் செருப்பு தைக்கும் குடும்பத் தைச் சேர்ந்தவள். இங்கு வருப வர்களுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லாத காரணத்தால், நான் உணவு சமைத்துக்கொடுக்கும் வேலையை செய்தேன் என்று கூறினார்.

உடனே அந்த மதகுரு, அந்த செருப்பு தைக்கும் பெண்ணை, பார்ப்பனத்தி என்று பொய் சொல்லி பக்தர்களை ஏமாற்றினார் என்று குற்றம் சாட்டி, ஊரார் முன் நிறுத்தி தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.

ராஜஸ்தானில் பி.ஜே.பி. ஆட்சி: அங்குதான் இப்படிப்பட்ட பாடம்.  பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு - இதற்குப் பெயர்தான் இந்துத்துவா என்பது! - ஜாதி வெறியின் மறுவடிவம்தானே இந்துத்துவா!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 27.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக