பக்கங்கள்

திங்கள், 28 நவம்பர், 2016

சாரதா சட்டம்

20.07.1930- குடிஅரசிலிருந்து....

சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4ஆவது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது.

என்னவெனில் ராஜாங்க சபையில் அட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண்களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டு களுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.

இந்தப் பிரேரேணை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.

சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற் கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்பனர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக்கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொருவருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச்சாலைகளும் அழித்து பொசுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும்.

மூடனுடைய மனசாட்சி முட்டாள்தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப்பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும். 

தந்தை பெரியார் பொன்மொழிகள்

4 இந்தியாவில் ஏழை மக்களுக்காகத் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மை யையும் ஒழிக்கச் சம்மதிக்கவில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது.
-விடுதவை,26.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக