பக்கங்கள்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பிற்பட்டோருக்கு லாபம் பார்ப்பனர்க்கோ கோபம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்.... இயக்க வரலாறான தன்வரலாறு (171)



பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டினை தமிழக அரசு, குறிப்பாக தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள் என்றவுடன் பார்ப்பனக் காகிதப் புலிகள் ஆத்திரத்துடன் உறும ஆரம்பித்து விட்டன!

28.01.1980 அன்று விடுதலையில், “பார்ப்பனக் காகிதப் புலிகளின் பாய்ச்சல்’’ என்ற தலைப்பில் தலையங்கத்தை இரண்டு பகுதிகளாக விளக்கியிருந்தேன்.

பார்ப்பனக் காகிதப் புலிகளான ‘இந்து’, ‘மெயில்’ ஏடுகள் எப்படி 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறித்தும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியது குறித்தும், எழுது-கின்றன என்பதை ஓரளவு முதல் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

மீண்டும் ‘இந்து’, ‘எக்ஸ்பிரஸ்’ ஏடுகளில் தங்கள் குருசேத்திரமான “ஆசிரியர் கடிதங்களை எழுதின. இதனை இரண்டாவது நாள் எழுதியுள்ள (29.01.1980) தலையங்கத்தில் விரிவாக விளக்கியுள்ளேன்’’ அந்தப் பகுதியை அப்படியே இங்கு தருகின்றேன்.

“தான் கொண்ட திட்டத்திலிருந்து திடீரென்று தமிழக அரசு மாறியிருப்பது அரசியல் நெருக்கடியால்தான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ரூ.9 ஆயிரம் வருமான வரம்பு ஆணையை மாற்ற வேண்டிக் கோரி சில கட்சிகள் பெரும் கிளர்ச்சியை நடத்துவதாக அச்சுறுத்தின’’ என்று எழுதியதன் மூலம் கிளர்ச்சிக்கும் அரசியல் நெருக்கடிக்கும் இந்த அரசு அடிபணிந்தது என்று பட்டவர்த்தனமாக இந்து ஏடு சொல்கிறது. மகிழ்ச்சிதான். ‘அவாளுக்கு’ இவ்வாட்சியின்மீது ஏற்பட்டுள்ள திடீர்க் ‘கோபாக்கினி’ ஆவேசத்தின் துவக்கமே இது.

இந்தப் போக்கில் எழுதினால் ஏதோ எழுதுகிறது; இதுதானே “அவாள் பத்திரிகா தர்மம்’’ என்று விட்டுவிடலாம். ஆனால் அடுத்து அது எவ்வளவு ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது தெரியுமா?

“A very large percentage of candidates those qualifications may be no more than that they happen to belong to a particular caste will get selected, while others even with better attainments are in danger of being denied opportunities for no other reason than that they belong to the so called forward classes.”

“ஏராளமான மனுதாரர்கள் இந்த புதிய ஆணை காரணமாக தாங்கள் ஒரு குறிப்பிட்ட (அதாவது பிற்படுத்தப்பட்ட) ஜாதியைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே தகுதி காரணமாக தேர்வு செய்யப்படுவதும், அவர்களைவிட அதிக தகுதிகளை உடையவர்கள் பலருக்கு அவர்கள் முன்னேறிய வகுப்பு என்பதாகச் சொல்லப்படும் ஒரே “பாவத்திற்காக’’, வாய்ப்புக்கள் மறுக்கப்படக்கூடிய அபாயகரமான நிலை ஏற்படவே செய்யும்’’ என்று அபாயச் சங்கு ஊதுகிறது ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’’ ஏடு!

இதன்படி, பிற்படுத்தப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவது ஏதோ ஜாதி என்ற ஒரே தகுதி காரணமாகத்தானாம்!  இதைவிட அண்டப்புளுகு, யோக்கியப் பொறுப்பற்ற புகார் வேறு இருக்க முடியுமா?

மருத்துவக் கல்லூரிகட்கு 60 சதவிகித மார்க் - அதாவது முதல் வகுப்பு மார்க் வாங்கியவராக இருந்தால்தான் பிற்படுத்தப்பட்டவர் ஜாதியில் அவர் பிறந்திருந்தாலும் கூட, மனுவே போட முடியும். அதற்கு அப்புறம் தேர்வு நடக்கையில், தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் முறைப்படி பார்த்தால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிலிருந்து தேர்வுக்கும் முன்னேறிய சமூக மாணவர்களி-லிருந்து செய்யப்படும் தேர்வுக்கும் இடைவெளி மார்க் வெறும் 5 மார்க்குகள்தான். (உதாரணமாக பிற்படுத்தப்பட்டவருக்கு 200க்கு 185 மார்க் என்றால், முன்னேறிய ஜாதியினருக்கு 190 மார்க் என்றுதான் ஓர் அடிப்படை வைத்து தேர்வு செய்கின்றனர்).

அதேபோல், பொறியியல் (எஞ்சினீயரிங்) கல்லூரிகட்கு மனுபோட 70 சதவிகித மார்க்குகள் வாங்கியவர்கள்தான் மனுவே போட முடியும்.

பிற்படுத்தப்பட்டோருக்கும் இதே விதிதானே! அப்படியிருக்கையில் தகுதி (Merrit) எப்படி போய்விடும்? பொய் அழுகை, போலிக்கூப்பாடு போட்டு நீலிக்கண்ணீர் விடும் மவுண்ட்ரோடு மனுபிரான் இந்து கூறட்டுமே!

பிற்படுத்தப்பட்டவர்களையும் ஏதோ ஃபெயில் ஆன மாணவர்களைச் சேர்த்து விடுவது மாதிரி அல்லவா கூறுகிறார்கள். பிற்படுத்தப்-பட்ட மாணவர்களிலும் படிப்புத் தகுதி, உடற்கூறு, விளையாட்டு வீரம், பொது அறிவுக்கூர்மை - இவைகளையெல்லாம் பற்றி ஆராய்ந்துதானே “தேர்வு’’ செய்கின்றனர்!

வெறும் ஜாதி ஒன்றினை மட்டுமே பார்த்து, மற்றவைகளை அலட்சியப்படுத்தி விட்டா தேர்வு நடக்கிறது? பார்ப்பன ஆத்திரம் அவ்வளவு பற்றி எரிகிறது! நோஞ்சான் பிள்ளைகளை முதலில் கவனித்து, கொழுத்தவர்-களைக் காக்க வைப்பது எப்படி தவறானதாகும்?

“ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த “பாவத்திற்காக’’ அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படலாமா? என்று இன்று ஓங்காரக் கூச்சல் இடும் ‘இந்து’க் கூட்டத்தினரே.

“சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகப் பெரும்பாலான மக்களுக்கு கல்வி, உத்தியோக வாய்ப்புக்களை மறுத்து வந்தீர்களே அது எந்த நியாயத்தின் பாற்பட்டது?’’

சூத்திரனுக்குக் கல்வி கூடாது என்பது “ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த “பாவத்திற்காகவே’’ மறுக்கப்பட்ட அந்த தர்மம் தவறு என்று சங்கராச்சாரியிலிருந்து சவுண்டிப் பார்ப்பனர் வரை எவராவது ஒருவர் கூறியிருக்கிறீர்களா?’’

நீங்களும் உங்கள் வம்ச வழிகளும் ஒரு எள் மூக்கு முனை அளவு பாதிக்கப்பட்டால் உடனே “தர்ம நியாயம்’’ பேசக் கிளம்பிவிடுவதுதானே உங்கள் வாடிக்கை வழமை எல்லாம்?

‘சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு வேறு ஒரு நீதி’ என்பது இன்றும் அமலாக வேண்டும் என்றுதான் இந்து கூட்டம் விரும்புகிறது என்பது இவ்வாதத்தின் மூலம் புரியவில்லையா?

இப்போது கேட்கத் துவங்கும் இந்தக் கேள்வியை 5000 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் கேட்டிருந்தால், பார்ப்பனர்களே நீங்கள் யோக்கியர்கள்; ஆனால் எவர் கேட்டார்கள்? கேட்டவர்களை உயிருடன் வாழக்கூட நீங்கள் விட்டது கிடையாதே!

அது மட்டுமா? தந்திரமாக ஒரு அஸ்திரத்தைப் பிரயோகப்படுத்தி சூழ்ச்சி வலையைப் பின்னலாம் என்று இந்து, மெயில் கூட்டம் கணக்குப் போடுகிறது!

பிற்படுத்தப்பட்ட தன்மையே ஒரு நிலைபெற்ற அம்சமாகி விடும் அபாயம் தோன்றுமாம்!

இப்படி கூறும் மகாமகா யோக்கியர்கள் தங்களை ஏன் சிறுபான்மையினர் (Minorities) என்று கூறி அதற்கேற்ற பாதுகாப்பு தேவை என்று துடியாய்த் துடிக்கின்றனர்.

மைனாரிட்டியினர் என்பதற்காக சலுகை எவருக்கு கொடுத்தாலும் அது நிலையாகி அதுவே ஒரு முதலீடு மூலதனமாகும் பேரபாயம் ஏற்பட்டுவிடுமே என்று நாங்கள் சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா?

இடஒதுக்கீடு என்பது மிஞ்சினால் 50 ஆண்டுகால சாதனை; அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது 5 ஆயிரம் ஆண்டுகளாக அல்லவா? அதை மறந்துவிட்டு அல்லது மறந்துவிட்டதுபோல நடித்து வாதம் செய்வது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?

அரசியல் சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு; அது மறுக்கப்படக் கூடாது என்று உரிமைக்குரலை எழுப்பும் பூணூல் பேனாக்கள், கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் குடிமக்கள்தான் என்பதை உணர்ந்து ஒப்புக் கொண்டால் அவர்களது ஏற்றத்திற்கு எதிராக இவ்வளவு சீறிப்பாயத் துவங்குவார்களா? அரசியல் சட்டம் என்பது உங்களுக்கு மட்டும்தானா?

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு சம வாய்ப்புகள் (Equality of Opportunities)   கொடுப்-பது எப்படி என்பதை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.கே.சுப்பாராவ் அவர்கள் ஒரு தீர்ப்பில் மிகவும் ஆழமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்: (AIR 1964 s c 179 at page 189 in para 23)

“Article 14 lays down the General Rule of Equality. Article 16 is an instance of the application of the General Rule with special reference to opportunity or appointments under the state. It says that there shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State. If it stood alone, all the Backward Communities would go to the walls in a society of uneven basic social structure. The said rule of equality will remain only a utopian conception unless a practical content was given to it. Its strict enforcement brings about the very situation it speaks to avoid.



To make my point clear, take the illustration of a Horse Race. Two horses are set down to run a race - one is a first class race horse and other is an ordinary one. Both are made to run from the same starting point. Though theoritically they are given equal opportunity to run the race, in practice, the ordinary horse is not given equal opportunity to compete with the race horse. Indeed that is denied to it, so a handicap may be given either in the nature of extra weight or to start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one. The same difficulty has confronted the makers of the Constitution at the time it was made.

Centuries of calculated oppression and habitual submission reduced a considerable section of our community to a life of serfdom.



It would be well neigh impossible to raise their standards if the doctrine of equal opportunity was strictly enforced in their case. They would not have any chance, if they were made to enter the open field of competition without adventitious aids till such time when they could stand on their own legs. That is why the makers of the Constituion introduced the clause 4 in Article 16. The expressin “Nothing in this Article” is a legislative devise to express its intention in a most emphatic way that the power conferred under the Article is not limited in any way by the main provision but falls outside it. It has not really carved out an exception, but has preserved a power untramelled by the other provisions of Constitution.


இதன் தமிழாக்கம் இதோ:

அரசியல் சட்டம் 14ஆவது பிரிவு சம உரிமை என்னும் பொது விதியைப் பற்றிக் கூறுகிறது. 16ஆவது பிரிவு மேலே கூறப்பட்ட பொதுவிதியை எப்படி கையாளுவது என்பது பற்றி விவரிக்கிறது. அதாவது அது ஒரு மாநிலத்துக்குரிய வாய்ப்பையும், மாநிலஅரசு உத்தியோகங்களை வழங்குவது பற்றியும் குறிப்பாக எடுத்துக் கூறுவதாகும். மாநிலஅரசு வேலையையும், அரசு உத்தியோகத்தையும் வழங்குவதில் குடிமக்களுக்குள் சம உரிமை செறிந்த வாய்ப்பு அளிக்க வேண்டும். அந்த விதியை மாத்திரம் தனியாக விட்டு வைத்திருந்தால் ஏற்றத் தாழ்வுகள் அடிப்படை-யில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் கதி அதோ கதியாகத் தானிருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள விதியை அதற்குரிய இலக்கணப்படி நடைமுறைப் படுத்தப்படாவிட்டால் அதில் அடங்கியுள்ள சம உரிமை என்பது ஒரு கனவாகத்தான் போய்விடும். அந்த விதியை மிகவும் கடுமையாக பிரயோகப்படுத்தினால் அந்த விதி எந்த நிலையைத் தவிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதோ அதே நிலையை உண்டாக்கிவிடும். என்னுடைய கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பந்தய குதிரைகளின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குதிரை ஓட்டப் பந்தயத்தில் தேர்ந்த முதல் தரமான குதிரை மற்றொன்று சாதாரண குதிரை. ஓட்டப் பந்தயத்திற்கு இரண்டு குதிரைகளையும் கொண்டு வந்து நிறுத்துங்கள்.  இரண்டு குதிரைகளையும் ஒரே நேர்கோட்டிலிருந்து ஓட்டத்தை ஆரம்பிக்கச் செய்யுங்கள். தத்துவ ரீதியாகப் பார்த்தால் இரண்டு குதிரைகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டதாகத்தான் தோன்றும். ஆனால், நடைமுறையில் பார்த்தால் சாதாரண குதிரைக்கு ஓட்டப் பந்தயத்தில் தேர்ந்த குதிரையுடன் போட்டியிட சமவாய்ப்பு அளித்ததாக ஆகாது. உண்மையிலேயே அந்த சாதாரண குதிரைக்கு அந்த சமவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த சாதாரண குதிரைக்கு ஒரு சலுகை கொடுக்க வேண்டும். அந்த சலுகை பிரத்தியேக உரிமையாகவோ அல்லது பந்தயக் குதிரையை வெகு தூரத்திலிருந்து ஓடும்படி செய்வதாகவோ இருக்கலாம். அப்படி செய்வதனால் ஒரு உண்மையான பந்தய ஓட்டத்தை ஏற்பாடு செய்ததாக ஏற்படும். இல்லையென்றால் இந்த சமஉரிமை என்ற கருத்து ஒரு நாடகமாகவே போய்விடும். அரசியல் சட்டத்தை உருவாக்கி-யவர்-களுக்கு இதே சங்கடம்தான் ஏற்பட்டது. பல நூற்றாண்டு காலமாக திட்டமிட்டு செய்யப்பட்ட மற்றவர்களை நசுக்கும் மனப்பான்மையும் எதற்கும் அடிபணிந்து செல்லும் பழக்கமும் நமது சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை அடிமைத் தனத்திலிருக்கும்படி செய்துவிட்டது.

அப்பேற்பட்ட மக்களை மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்றால் எல்லோருக்கும் சமஉரிமை என்கின்ற தத்துவத்தைக் கடுமையாக நடைமுறைப் படுத்தினால் அந்த நோக்கம் நிறைவேறாது. அப்படி அமுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களே தங்கள் காலிலே நிற்கும் அளவுக்கு அவர்களுக்கு ஊன்றுகோலை கொடுத்து அவர்களைப் பொதுப் போட்டியில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால் சம உரிமை என்ற தத்துவத்தில் எந்தவித நன்மையும் அவர்களுக்கு ஏற்படாது. இந்தக் கருத்தை மனதில் கொண்டுதான் அரசியல் சட்டம் உருவாக்கியவர்கள் அரசியல் சட்டம் 16ஆவது விதிக்கு 4ஆவது உட்பிரிவை ஏற்படுத்தினார்கள். இதில் குறிப்பிட்ட எதுவும் என்கிற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டம் செய்பவர்களுக்கு அணுசரணையாக மிகவும் வலுவாக இந்தக் கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காகத்தான் இதை நுழைத்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில்தான் சட்டம் செய்யப்படும் உரிமை வழங்கப்பட்டது. இதை எந்த விதத்திலும் பொது விதியினால் கட்டுப்படுத்தவோ அல்லது முடக்கி விடவோ முடியாது.

இது கட்டுப்படுத்தலுக்கு அப்பாற்பட்டு, நிற்பதாகும். அதை இணைத்ததினுடைய எண்ணமே, அதை ஒரு பிரத்தியேக நிலை உடையதாகவே இருக்கக் கூடாது என்பதாகத்-தான். அதனுடைய அடிப்படைக் கருத்தோ அதற்கு ஒரு முழு வலுவை அதாவது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மற்ற விதிகள் எந்த விதத்திலும் அதை பாதிக்க முடியாத அளவு முழு வலிமை உடையதாக்குவதேயாகும்.

சமவாய்ப்பு என்பதற்கு உண்மையான பொருளைப் புரிந்துதான் 50 சதவிகித ஒதுக்கீடு என பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தரப்பட்டுள்ளது.

“Any Special Provision”  என்ற சொற்களுக்கு 15/4 பிரிவிலும் Any Provision for Reservation of such appointments”  என்ற சொற்றொடர்கள் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. சட்டப்படி இந்த இடங்களை உயர்த்துவதற்கு என்பதையே அப்பட்டமாக விளங்குகின்றன.

எனவே ஜஸ்டிஸ் திரு.சுப்பாராவ் அவர்கள் குறிப்பிட்டது போல மட்டக் குதிரையும், பாயும் குதிரையும் ஒரே இடத்தில் புறப்படுவது சரியான பந்தயம் ஆகாது என்று உணர்ந்தே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை துள்ளும் பூணூலார் துல்லியமாய்த் தெரிந்துகொள்ளுவது நல்லது. இதை நாம் பார்ப்பனர்களுக்காக மட்டும் கூறவில்லை; அரை வேக்காடுகளான நம் இனத் தமிழர்களுக்கும் இது விளங்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம்.

தமிழ்நாட்டு அரசியலில் எக்கட்சியினரா-யினும் நீங்கள் உள்ளுக்குள் ஆசையை வளர்த்துத் துடிக்கும் காங்கிரசை மீண்டும் “தனிக்காட்டு ராஜாவாக’’ வலம் வரும் “உலக அதிசயம்’’ அற்புதங்கள் நிகழ்ந்தால் கூட, அப்போதும் இந்த ‘தேவ அசுர’ப் போர் மும்முரமாகுமே தவிர, முடிந்த நிலையாகி-விடாது.

எனவே, சுவரில் எழுதப்பட்ட கொட்டை எழுத்துக்களை (writing on all) பார்க்கத் தவறி விடாதீர்கள்.

பார்ப்பனர்களே, காலம் காலமாக நீங்கள் செய்த மனிதாபிமானமற்ற அதே கொடுமையான தவறை மீண்டும் செய்யாதீர்கள்!

“நீங்கள் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியையும், எந்தத் தலைவரையும் “தத்து எடுத்து’’ அரசியல் நடத்திடலாம் என்று மனப்பால் குடித்து, உங்களின் எதிர்கால வாழ்வுக்கு மண்ணைப் போட்டுக் கொள்ள வேண்டாம் என்று தமிழ்நாட்டு 4 கோடி தமிழர்கள் சார்பில் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.’’ என்று எடுத்துரைத்தேன்.

 

(நினைவுகள் நீளும்)

-உண்மை,1-2.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக