பக்கங்கள்

வியாழன், 16 மே, 2019

சாதியற்றோர் சான்றிதழ்… புரட்சியா… பொறியா? – தோழர் ஓவியா


அரசியல் சமுதாயம் சாதியொழிப்பு முகாம்கள் இப்படி எங்கு திரும்பினாலும் சாதியாகவே இருக்கும் ஒரு சமுதாயத்தில் இந்தச் சாதியமைப்பை வெறுக்கும் ஒரு தனிநபர் நான் சாதியற்றவர் என்று கத்திக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பது மிக மிக இயல்பானது.  நிச்சயமாக அப்படி ஒரு வெறி நமக்கு வரத்தான் செய்யும்.  அப்படியொரு மனநிலையின் வெளிப் பாடுதானோ என்னவோ தோழர் சிநேகா தான் சாதியற்றோர் என்கின்ற சான்றிதழைப் பெற்றது.

ஆனந்தகிருஷ்ணன் – மணிமொழி தம்பதியரின் மூத்த மகள் நான். காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா எனப் பெயரிட்டனர்.  அம்மாவின் முதல் எழுத்தை முதலிலும், அடுத்தது அப்பாவின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா ஆனேன்….

இது சிநேகா அவர்கள் தன்னைப் பற்றி கூறியிருக்கும் வரிகள்.  ஓர் ஆழமான கருத்தியலுக்குச் சொந்தக்காரர் என்பதை இவ்வரிகள் நமக்கு பறைசாற்றுகின்றன.  மேலும் ஒரு கொள்கைப் பாரம்பரியம் உள்ள குடும்பத்தின் வழித்தோன்றல் என்பதும் தெளிவாகிறது. இவரை இப்படியொரு சாதியற்றோர் சான்றிதழ பெறத் தூண்டியது எதுவென அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

முதல் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம்  முதலில் நான் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர்…..

இப்படி தான் தொடங்கியது என் முதல் பிரச்சாரம்….

பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் இல்லை….என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் அவ்வண்ணமே வளர்த்தனர்…. என் இணையர் கி.பார்த்திபராஜா உடனான என் இணை ஏற்பு விழா சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம்…. ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி எனப் பெயரிட்டு எங்கள் மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்க்கிறோம்…..சாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் இந்த அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம்….

வாழ்வில் சாதி தன்னை வெளிப்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் அதனை மறுத்தும் அதற்கு எதிரிடையான வினைகள் புரிந்தும் தனது ஆழமான சாதி எதிர்ப்பு உணர்வை  சமுதாயத்தில் பதிவு செய்பவராக அவர் இருந்திருக்கிறார்.  இருக்கிறார். இந்த இடம் வரை அவருடைய வாழ்க்கையும் என்னைப் போன்ற சுயமரியாதை இயக்க திராவிட இயக்கக் குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பலரது வாழ்க்கையும் ஒன்று பட்டு நிற்கின்றன.  தனது அகவாழ்வில் இதனை விட தீவிரமான சாதி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த பலரையும் நாங்கள் சந்தித்தே இருக்கிறோம்.

தனது சாதித் தொழிலை செய்ய மறுத்தவர்கள். தனது சாதித் தொழிலை பிற சாதியினர் செய்வதற்கு ஏதுவான வேலைகள் செய்ய முற்பட்டவர்கள். சாதி மறுப்புத் திருமணத்திற்காக கொடுப்பதற்கரிய விலை பலவற்றை கொடுத்தவர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு போகும்…. அது மட்டுமல்ல அவ்வாறு செய்ய முடியாத நிலையில் உக்கி உருக்குலைந்தோரையும் நான் பார்த்திருக்கிறேன்.  என் தாத்தா முத்துச்சாமி அவர்களின் நண்பர் பெயர் மணி.  சைக்கிள் கடை வைத்திருந்தார்.  ஏழ்மை அவருக்கு நிரந்தர நண்பனாக இருந்தது.  பெண்ணுக்குச் சாதி மறுப்புச் சுயமரியாதைத் திருமணம் செய்ய ஆசை. வெறும் கொள்கையை வைத்துக் கொண்டு நின்ற அவரிடம் பெண் எடுக்கும் அளவுக்குக் கொள்கைவாதிகள் கிடைக்கவில்லை. தனது சொந்த சாதியில் கோவிலில் திருமணம். பத்திரிகை கொடுக்க வந்தவர் அழுதார். கோவில்ல வைக்கிறதையாவது நிறுத்தலாம்னு பார்த்தேன்.  முடியலை என்று சொன்னவரால் மேலே பேச முடியவில்லை.  நான் அப்போது சிறுமி.  அவரின் கண்ணீர் என் நினைவுகளில் பதிந்து போனது. 

தெருக்களில் பள்ளிக் கூடத்தில் இப்படி கால் வைத்த இடத்திலெல்லாம் படைச்ச சாமியை இல்லைன்னு சொல்ற…. நீ எப்படி நல்லாயிருக்கப் போறேன்னு இந்த சமுதாயம் பலவாறாகக் கேட்ட கேள்விகளிலும் கேள்வி என்கின்ற பெயரில் ஏவப்பட்ட ஏச்சுக்களையும் கடந்து சீரணித்துதான் எங்களைப் போன்றோரின் வாழ்க்கை நின்று கொண்டிருக்கிறது.  நான் படித்த பள்ளிக் கூடத்தில் அதன் பொது அசெம்பிளியில் கடவுள் எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்து என்னை ஆட்கொள்ள வேண்டுமென்று ஜெபித்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.  ஆனால் அவர்களின் கடவுளுக்கு அவர்கள் பிரார்த்தனை இன்னும் கேட்கவேயில்லை.  பாவம் அந்த ஆசிரியர்கள் எனக்காக எத்தனை முறை ஜெபித்தார்கள்?

இந்தச் சமுதாயத்தில் சாதியை,

மதத்தை எப்படி மறுப்பது?

இந்தச் சமுதாயத்தில் சாதியை மதத்தை எப்படி மறுப்பது?   வாழும் முறையிலேயே சாதியை மறுக்கும் புது வாழ்க்கை நெறி தந்தவர் பெரியார்.  பொட்டு வைக்கவில்லை … கிறித்துவரா என்பார்கள்  இல்லை என்போம்.  இஸ்லாமியரா என்பார்கள் இல்லை என்போம்.  இப்போதுதான் பள்ளிக் கூடத்தில் மட்டும் கேட்கிறார்கள்.  அப்போதெல்லாம் பேருந்துக்குக் காத்திருக்கையில் கூட கேட்பார்கள். பேருந்தில் அமர்ந்திருக்கும் போதும் கேட்பார்கள்.  யார் வேண்டுமானாலும் கேட்பார்கள்.  நீ யார் கேட்பதற்கு என்று யாரையும் நாங்கள் திருப்பிக் கேட்டதில்லை.  அந்தக் கேள்விக்குக் காத்திருப்பவர்கள் போல் பதிலளிப்போம்.  மதம் இல்லை என்று சொல்வோம்.  ஆம் மதமறுப்புப் பிரச்சாரத்தை நெற்றியிலேயே வைத்திருக்கிறோம் நாங்கள்.

பொட்டு, பூ, நகை துறக்கச் சொன்னார் பெரியார்.  துறந்த இடங்களிலெல்லாம் கேள்விகள் வந்தன.  மதமறுப்பு சான்றிதழாய் வாழ்ந்தோம் வாழ்கிறோம் நாங்கள். தாலி கட்டவில்லையே அப்ப உன்னைக் கல்யாணமானவன்னு நாங்க எடுத்துக்க வேண்டிய அவசியமில்லையேன்னு கேட்டவனையெல்லாம் எதிர்கொண்டுதான் நீ கட்டாத தாலியை நான் ஏண்டா கட்டணும்னு கேட்டோம்.  எங்களைக் காப்பாத்த தாலி வேண்டாண்டா செருப்பு போதும்னு சொன்னோம்.  பொறுக்கி மட்டுமல்ல போலீசும் அதே கேள்வியைத்தான் கேட்டது.  இப்போது பிரபலமாக இருக்கும் எங்கள் தோழர்களில் ஒரு தம்பதியர் ஒருமுறை இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்கு போய்விட்டு வந்து போலீஸ் ஸ்டேசன்ல போய் உட்காரும்படி ஆகி விட்டது.  தாலி இல்லைன்னா கணவன் மனைவின்னு எப்படி நம்புறதுன்னு கேட்டார் அந்தக் காவல்துறை அதிகாரி……ஒருமுறை இன்னொரு தோழர் ஒருவர் அலுத்துப் போய் சரி அண்ணன் தங்கச்சின்னு சொல்றேன். அதையாவது நம்பு. அதுக்கு தாலி வேணாம்ல. ஆளை விடு என்றார். 

இந்தக் கதையெல்லாம் எதுக்குன்னு கேட்கிறீங்களா…?   சாதியும் மதமும் அதற்கு எதிர்மறையாய் மாத்தி வாழ்ந்து காட்டி தீர்க்க வேண்டிய சமுதாய நோய்கள். நான் மேலே குறிப்பிட்ட சூழல்கள் மாறியிருக்கலாம். ஆனால் முடிந்து போய் விடவில்லை. சரி.  இப்போது மறுபடியும் சிநேகாவிடம் வருவோம். அவரின் புரிதல் என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ்… என்று தொடங்கியிருக்கிறார்.  அப்படியென்றால்…?  இந்த இடத்தில் சாதிச் சான்றிதழ் பற்றி நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.  சாதி சான்றிதழ் சாதி ஒழிப்பு இயக்கத்தவரால் தோற்றுவிக்கப் பட்டது.  அது சாதியொழிப்புப் பணிக்கு ஆதாரமானதே யொழிய சாதி அமைப்பின்  ஆதாரமுமல்ல அடையாளமுமல்ல.   சாதி அமைப்பின்  அடையாளம் என்கின்ற முத்திரையை அதற்குத் தருவது பேராபத்து. 

சரி. இந்தச் சான்றிதழால் இவர் என்ன சமூகச் செயற்பாட்டை ஏற்படுத்த நினைக்கிறார் என்பதும் நமக்குப் புரியவில்லை.  அடுத்து இந்தச் சான்றிதழ் என்ன அடிப்படையில் வழங்கப் பட்டது சாதியற்றோர் என்கின்ற வார்த்தைக்கான வரையறை என்ன என்பதும் வெளிப் படுத்தப் படவில்லை.  சாதியை மறுப்போர் அல்லது பள்ளியில் சாதி சொல்ல விரும்பாதவர்கள் சாதியற்றவர்கள் என்று வகுக்கப் பட்டால்..  முடிந்தது கதை.  பிறகு அம்பேக்கர் சிலைக்கு அடியில் உட்கார்ந்து நாம் அழத்தான் வேண்டும்.

சட்டப்படி பள்ளியில் சாதி சொல்ல விரும்பாதவர்கள் சான்றிதழில் சாதியற்றோர்தான்.  அவர்கள் தாராளமாக சாதியில்லாமல் பள்ளியில் சேர முடியும்.  தனியார் பள்ளிகள் இதனைக் கடைப் பிடிக்க மறுக்கிறார்கள்.  நாம் என்ன செய்ய வேண்டும்.  யார் சட்டப்படி நடக்கவில்லையோ அவர்களைத் திருத்த வேண்டும்.  அதை விட்டு விட்டு சாதியற்றோர் என்கின்ற சான்றிதழ் எதற்கு?

இதில் மதமற்றோர் என்பதையும் சாதியற்றோர் என்பதும் இருவேறு விசயங்கள்.  இதெல்லாம் இருக்கட்டும் சாதியில்லை என்பது முற்போக்குதானே?   எதுக்கு இவ்வளவு பஞ்சாயத்து?  நல்லது நடக்க விடமாட்டீங்களா என்கின்ற ரேஞ்சுக்கு பேசத் தொடங்கிடாதீங்க.  கமலகாசன் பாராட்டு ….சார்பதிவாளர் பிரியங்கா பங்கஜம் வழங்கிய சான்றிதழ்….. சாதி ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஒரு புரட்சியின் தொடக்கம் என்றுரைத்திருக்கும் மோடி…. கொஞ்சம் நிதானமாக விவாதிக்கலாமே?

சாதியற்றோர் சான்றிதழ் என்கின்ற விசயத்தில் சாதியற்றோர் சான்றிதழ் சாதிச் சான்றிதழை வில்லனாக நிறுத்துகிறதேயல்லாமல் சாதியமைப்பை அல்ல என்பது சற்று ஆழ்ந்து உள்வாங்கி புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகவே இருக்கிறது.  இதனை சென்ற கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தோம். இருப்பினும் சாதியற்றோர் சான்றிதழை முற்போக்கு நடவடிக்கை என்கின்ற புரிதலில் இருப்பவர்களுக்காக இந்த கட்டுரை தொடர்கிறது.

வரலாறு முக்கியம்…

இந்தியாவின் அனைத்து உயர் பதவிகளையும் பார்ப்பனர்களே ஆக்ரமித்திருந்ததைப் பார்த்த வெள்ளையர்கள் இது சமூக நீதியன்று எனக் கருதத் தலைப்பட்டனர்.  அதே நேரத்தில் வெள்ளையர் தொடர்பு, இராணுவத்தில் இடம் பெற்றமை, பாரம்பரியமாக பார்ப்பனர்களுக்கு அடுத்த செல்வாக்கு நிலையிலிருந்ததால் கல்வியோடு தொடர்பிலிருந்தவர்கள், வெள்ளையர்களின் ஆங்கிலக் கல்வியை அடையும் வாய்ப்பிலிருந்தவர்கள் இந்நிலை மாற்றப் பட வேண்டும் என முனைந்து பணி செய்யலாயினர்.    இவ்வாறாக ஆங்கிலேயர்களே இது அநீதி என உணர்ந்தமையிலும், பார்ப்பனரல்லாத கல்வியாளர்கள் குறிப்பாக ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் தங்கள் சமுதாயத்தின் தாழ்நிலையை மாற்ற உறுதியேற்றமையிலும் கருக் கொண்டதுதான் சாதி எதிர்ப்புப் போர். 

சாதி அமைப்பு தன்னை கட்டமைக்கும் போது முதலில் காவு வாங்கியது பார்ப்பனரல்லாத மக்களின் அறிவு பெறும் உரிமையைத்தான்.  எனவேதான், கல்வி பெறுதலை தமது மக்களின் விடுதலைக்கான முதற்படியாக  பார்ப்பனரல்லாத மக்களின் தலைவர்கள் கருத்த் தலைப்பட்டனர். அன்றைய மன்னர்களில் சிலரும் கூட கல்வி பார்ப்பனரல்லாத மக்களுக்கு செனறு சேர வேண்டுமென்பதில் அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுத்தனர்.  இவர்களனைவருடையபார்வையிலும் அடிப்படையாக இருந்த்து சாதி ரீதியான அடையாளமேயாகும்.  சாதிய அடையாளத்தை வைத்துதான் இங்கு அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் தொடங்க பெற்றன.  இங்கு ஒரு மனிதனின் சாதி அடையாளம் என்பது அவன் வாழ்நிலையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.  சாதியமைப்பை மாற்ற வேண்டும் சாதியை ஒழிக்க வேண்டும் என உறுதியேற்கும் எவரும் முதலில் ஊன்றிப் பார்த்துணர வேண்டிய உண்மையாக இந்நிலை இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வகுப்புவாரி உரிமை இங்கு வென்றெடுக்கப் படுகிறது.  ஆங்கிலேயர் ஆட்சியில் பெற்றெடுத்த இந்த உரிமை சுதந்திர இந்தியா உருவாக்கப்பட்டு அதன் அரசியல் சட்டம் எழுதப்பட்டவுடன் கேள்விக்குட்படுத்தப்படும் முதல் விசயமாக மாறுகிறது.  இன்றைய இளைஞர்கள் வரலாற்றின் இந்த இடங்களை மிக இலேசாக புரட்டி விட்டுப் போய் விடக் கூடாது.  இந்தியாவுக்கு விடுதலை கேட்டவர்கள் விடுதலைக்கு போராடியவர்கள் அந்த போராட்டத்தை விரைவுபடுத்திய காரணிகள் இவற்றையெல்லாம் நாளைய நமது பள்ளிகளின் பாடப் புத்தகங்களில் புதிய அத்தியாயங்களாக எழத வேண்டும்.  அதன்பின் தமிழகத்தில் பெரியாரின் போராட்டம் அகில இந்திய அளவில் கல்வி வேலைவாய்ப்பில் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளை அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்த்து.  அந்த வகையில் அனைத்து சாதிப் பிரிவினர்களுக்கும் கல்வியையும் அதிகாரத்தையும் பிரித்துக் கொடுக்கும் வகுப்புவாரி உரிமையை சுதந்திர இந்தியாவில் நாம் இழந்தே விட்டோம் எனினும் போராட்டத்தின் வாயிலாக பட்டியல் அடிப்படையிலான பிற்படுத்தப் பட்டோர் தாழ்த்தப் பட்டோர் மலைவாழ் மக்கள் என்கின்ற பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளும் உரிமையை பெற்றோம்.  இதன் தவிர்க்க இயலாத விளைவாக இட ஒதுக்கீடு  பெறும் மக்கள் இடஒதுக்கீடு பெறாத மக்கள் என்கின்ற பிரிவுகளாக மக்கள் பிரிந்து போனார்கள்.   இட ஒதுக்கீட்டின் மீது பகையுணர்வே வளர்ப்பதற்கு இந்த பிரிவு நிலையே ஏதுவாயிற்று.  வகுப்புவாரி உரிமை இருந்திருந்தால் இது சாத்தியப் பட்டிருக்காது.  

இந்த நாட்டில் கருத்துருவாக்கத்தின் தலைமை அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பனர் வசமே இருந்து வருகிறது. அரசு அரசு சார்ந்த செய்தி நிறுவனங்கள், அரசு சாராத செய்தி நிறுவனங்கள், கலை இலக்கியம்,  திரைப்படம், ஊடகங்கள் இவை அனைத்தும் அவர்களின் தலைமை அல்லது ஆலோசனை அல்லது நிர்வாகத்திலேயே இன்று வரை இயங்கி வருகிறது.  அதனை இன்று வரை அவர்கள் முழுமையாக பயன்படுத்தியும் வருகிறார்கள்.  பெண்கள் படிப்பதை அவர்கள் முதலில் விரும்பவில்லை.  ஆனால் பெண் கல்வி அவர்கள் தடையை மீறி வளர்கிறது எனத் தெரிந்தவுடன் படித்த பெண்ணை வில்லியாக சமுதாயத்தின் பொதுப் புத்தியில் ஏற்றினார்கள்.  அதே போல்தான் இட ஒதுக்கீடு சட்ட அங்கீகாரம் பெறுவதைத் தடுக்க முடியாத நிலையில் மக்களின் பொதுப் புத்தியை இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திருப்பவும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களை தாழ்வுணர்வு கொள்ளவுதற்குமான வேலைகளை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நிலை பெற்றவுடன் அவர்கள் வெறி உச்சத்திற்கு ஏறியது.  அதன் விளைவுதான் பாலச்சந்தர், கமலகாசன் போன்றோர் உருவாக்கிய ‘உன்னால் முடியும் தம்பி’, ‘ஒரே ஒரு கிராமத்திலே’,  ‘வானமே எல்லை’.  போன்ற திரைப்படங்கள் இந்த மண்ணில் வெளி வந்தன.  பின்னாட்களில் இதன் தொடர்ச்சியாக ‘ஜெண்டில்மேன்’ வெளி வந்த்து.  இது தவிர எண்ணற்ற சிறுகதைகள், கட்டுரைகள் பள்ளிக் கூடத்தில் சாதி கேட்பது குறித்து நீலிக் கண்ணீர் வடிக்க தொடங்கின.  மேடைப் பேச்சு என்றாலே பள்ளி மாணவர்கள் சாதி சொல்ல வேண்டிய நிலை குறித்த கண்டனம் என்பதாக மாறிப் போனது.  பிறந்த வீட்டிலிருந்து சுடுகாடு வரை சாதி பார்த்துக் கொண்டேயிருக்கும் ஒரு சமுதாயம் பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்கப் படுவதற்காக கோபம் கொண்டெழுந்ததாய் நடித்த நடிப்பு இருக்கிறதே அது சிந்தித்துப் பார்த்தால்தான் எவ்வளவு கேவலமானது என்று புரியும்.   ஆனால் மேலே குறிப்பிட்டது போல் இந்த வாதத்தை தாங்கிப் பிடித்து பரப்ப இடஒதுக்கீடு பெறாத பிரிவினர் முழுமூச்சாக வேலை பார்த்தனர்.  இவர்களின் இந்த கூட்டுச் செயற்பாட்டின் விளைவாக விடுதலைக்கான வாசலாக உருவாக்கப் பட்ட ‘சாதிச் சான்றிதழ்’ சாதிஅமைப்பின் அடையாளமாக மாற்றி சித்தரிக்கப் பட்டது.  இது பொய் சித்திரம் மட்டுமல்ல.  இது ஒரு சதி யாகும்.

சாதி கேட்டதால் கமலகாசன் தன்னுடைய பிள்ளைகைளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து படிக்க வைக்கிறார் என்கின்ற செய்தி பெரிய புரட்சிகரமான செய்தியாக அன்னாட்களில் பேசப்பட்டது.  ஊடகங்கள் இதனை ஒரு செய்தியாக வடிவமைத்தன.  உண்மையில் பிள்ளை களை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக சாதி போட வேண்டும் என்பதாக அன்றும் சரி இன்றும் சரி எந்த சட்டமும் இல்லை.  இல்லாத ஒன்றை எதிர்ப்பதாக பாவனை காட்டி அப்படியொரு நம்பிக்கையை பள்ளி நடத்துபவர்களுக்கே உருவாக்கி விட்டார்கள் இவர்கள்.  இந்த பொய் புரட்டுகளுக்கு மத்தியில் நாம் எப்படி இதனை எதிர்கொள்வது என்கின்ற கேள்வி இப்போது எழுப்ப்ப் பட வேண்டும்.

முதலில் நமக்கு அடிப்படையான சிந்தனைத் தெளிவு அவசியம்.  பள்ளிக் கூடங்கள் தொடங்கி மருத்துவமனை ஆரம்ப சுகாதார மய்யங்கள் இப்படி பல இடங்களில் சாதி கேட்கப் படுகிறது.  ஆமாம்.  அதனாலென்ன? சாதி அங்குதான் அந்தக் கேள்வியால்தான் உருவாகிறதா?  சமுதாயத்தில் இருக்கிற சாதியைத்தானே அவர்கள் கேட்கிறார்கள்.  சரி அடுத்த கேள்விக்கு வாருங்கள் அவர்கள் எதற்காக்க் கேட்கிறார்கள்?  பள்ளிக் கூடத்தில்/ கல்விக் கூடங்களில் ஒவ்வொருவரின் சாதிக்குரிய எண்ணிக்கையில் மாணவர்களை நிரப்புவதற்காக்க் கேட்கிறார்கள்.  மருத்துவமனை போன்ற இடங்களில் எதற்குக் கேட்கிறார்கள்?  ஒவ்வொரு சாதிச் சமுதாயமும் எந்த அளவுக்கு சுகாதார வசதிகளைப் பெறும் வாய்ப்பிலிருக்கிறது என்பதையும் பிற்படுத்தப்பட்ட தன்மையின் அளவுகளை மதிப்பிடுவதற்காகவும் கேட்கிறார்கள்.  இதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டியதுதானே சாதி ஒழிப்பாளரின் கடமையாக இருக்க முடியும்?  இவர்களுடன் முரண்படுவதற்கு என்ன இருக்கிறது?    எனவே சமுதாயத்தில் நம்மிடம் சாதி கேட்கும் போது எங்களுக்கு சாதியில்லை என்று சொல்கின்ற அதே வேளையில் அரசுத் தரப்பு ஆவணங்களுக்காக அந்தக் கேள்வி கேட்கப்படும் வேளையில் சாதிச் சான்றிதழுடன் அதனை தெரிவிக்க வேண்டியதே சரியான செயற்பாடாகும்.

இதில் சாதி மறுப்பு திருமணத்தில் அதாவது இரண்டு வேறு சாதிகளையுடைய பெற்றேருக்கு பிறந்த குழந்தைகள் அதில் பிற்படுத்தப் பட்ட சாதியை தனதாக தேர்வு செய்யலாம்.  இந்த இடத்தில் இந்த கட்டுரையாளராகிய எனது அனுபவங்களை கோடிடிலாமென நினைக்கிறேன்.  எனது தாத்தா பாட்டி காலத்திலிருந்து சுயமரியாதைத் திருமண வழி அமைந்த எங்கள் குடும்பத்தில் பல சாதிகள் கலந்து விட்ட நிலையில் இவ்வாறு கேட்கப் பட்ட இடங்களில் நான் எனக்கு சாதியில்லை என்று பதில் தந்திருக்கிறேன்.  ஆனால் அதனை கொள்கை அடிப்படையில் என்று நான் வாதிட்டதில்லை.  மாறாக எனது குடும்பத்தில் இப்படி பல்வேறு சாதிகள் கலந்திருப்பதால் எந்தவொன்றையும் நான் போட இயலாது என எடுத்துச் சொல்லியே மறுத்திருக்கிறேன்.  அதே நேரத்தில் எனது பேத்தி மற்றும் பேரனுக்கு எனது வாழ்க்கைத் துணைவர் சாதியை போட்டிருக்கிறோம்.  எங்களுடைய இந்த நடவடிக்கையில் கொள்கை அடிப்படையில் எந்த முரண்பாடுமில்லை என்கின்ற தெளிவு எங்கள் குடும்பத்தாருக்கு இருக்கிறது.

இந்த நிலையில்தான்…. சாதிச் சான்றிதழுக்கு எதிராக்க் கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்த பொதுப் புத்தியின் ஆதரவை நம்பிதான் இன்று ஆட்சியாளர்கள் சாதி ஒதுக்கீட்டுக்கு வெளியே அதற்கு எதிரான 10 சதவீத ஒதுக்கீட்டை அறிமுகப் படுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.  நான் சாதியற்றவர் என்று ஒருவர் சான்றிதழ் வாங்குவது என்கின்ற செயற்பாட்டை அது எந்தக் களத்தில் நடைபெறுகிறது என்று பொருத்திப் பார்க்கும் போதே அதன் உண்மையான சமூக விளைவுகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.  கமலகாசன் உடனே தனது வரவேற்பைத் தெரிவித்தது சாதாரணமாக புறக்கணிக்கக் கூடிய ஒன்றல்ல.

நாம் சொல்ல விரும்புவதெல்லாம், சாதியற்றவராக இருப்பது வாழ்ந்து காட்டும் முறையில் இருக்கிறதேயொழிய அதற்கு சான்றிதழ் தேவையில்லை என்பதுடன் இந்த நடவடிக்கை சாதியின் அடிப்படையிலான உரிமைப் பகிர்வு என்கின்ற சமுதாய மாற்ற இயக்கத்திற்கு எதிர்வினையேயாற்றும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  முரண்களுக்குள் பொதிந்திருக்கும் உண்மையை அறிவதே சமூக அறிவியலாகும்.  

- கைத்தடி மாத இதழ், 7.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக