பக்கங்கள்

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

தாழ்த்தப்பட்ட சகோதரரின் சவம்கூட மரியாதையோடு எரியூட்டப்படக் கூடாதா?

வேலூர் நிகழ்விற்குத் தமிழர் தலைவர் கண்டனம்




வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள நாராயணகுப்பம் என்ற ஊரில் தாழ்த்தப் பட்ட  சமூக சகோதரர்களில் ஒருவரான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது சவத்தை அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் எரியூட்ட எடுத்துச் செல்ல முடியாதபடி, அச்சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பாதையையும் மற்றவர்கள் ஆக்கிரமித்து, சவங் களை சுமந்து சென்று எரியூட்ட வழி இல்லாமல் செய்ததால், தொட்டில் ஒன்று கட்டி, 20 அடி உயரமுள்ள கட்டப்பட்ட பாலத்திலிருந்து அச் சவங்களைத் தொட்டிலிலிருந்து இறக்கி, பிறகு இறுதி நிகழ்வுகள் செய்தார்கள். இது சில மாதங் களாகவே தொடருகின்றது என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய செய்தியாகும்!

பெரியாரின் திராவிட மண்ணிலா?


இந்த 21 ஆம் நூற்றாண்டில், அதுவும் தமிழ் நாட்டில் - பெரியாரின் திராவிட மண்ணிலா இப்படிப்பட்ட அநாகரிக ஆக்கிரமிப்புகள்.

வாழும்போதுதான் கொடுமை என்றால், இறந்த பிறகாவது எம் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் கண்ணியமாக - பிரச்சினையின்றி எரியூட்டப்பட வேண்டாமா?

வேலூர் மாவட்ட நிர்வாகம் இதனை உட னடியாக சரி செய்தாகவேண்டும். வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதன்மீது உடனடி யாக நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உறுதி கூறியுள்ளது ஆறுதலானதும், மிகவும் வரவேற்கத்தக்கதும் ஆகும்.

வேலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று சந்தித்து, விரைந்து பரிகாரம் காணுமாறு கூறிட, தலைமைக் கழகம் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

இதுபோல் சுடுகாட்டுக் கொடுமைகளை எதிர்த்து மனிதநேய போராட்டம்  - அறப்போரில் ஈடுபட கழகம் தயங்காது - தலைமை அனுமதி பெற்று ஈடுபடவேண்டும். இது மிகமிக முக்கியம், அவசரம்!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்


22.8.2019

சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக