பக்கங்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

சமூகநீதி உரிமையினைக் காப்பாற்றிட போராட்டக் களம் காண தயாராவீர்!



சென்னை, ஆக.25  சமூகநீதி உரிமையினைக் காப்பாற்றிட போராடக் களம் காண தயாராவீர்! என அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்களி டையே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறைகூவல் விடுத்தார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அதிகாரிகள் சங்க அரங்கத் தில் நேற்று (24.8.2019) மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இந்த அமைப்பின் துணைத் தலைவர் வி.என். புருஷோத்தமன் அனைவரையும் வரவேற்றார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று பாராட்டுரை வழங்கி பேசுகையில்:

சமூக நீதிக்கான நடைமுறை வழிமுறையான இடஒதுக்கீட்டிற்கு பெரிய ஆபத்து; இடஒதுக்கீடு அளவில் உயர்வு அவசியமே; இருப்பதை காப்பாற்ற வேண்டிய உரிமை வேட்கை பெருகிட வேண்டும். சமூக நீதிக்கான விதி முறையின் வாசல் சாத்தப்படும் அபாயம் ஆர்.எஸ்.எஸ்.யின் அறிவிப்புகளால் வெளிக் கிளம்புகிறது. சமூகநீதி உரிமையினைக் காப்பாற்றிட போராடக் களம் காண வேண்டும். தயாராவீர்! என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் தலைவர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. அனு மந்தராவ் தலைமை வகித்து உரையாற்றினார். தி.மு.க. மாநிலங்களவை உறுப் பினர்  டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் ஏற்புரையாற்றினர். செயல் தலைவர் ஜே. பார்த்தசாரதி சிறப்புரையாற்றினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த கோரிக்கைகளான - மண்டல் குழு பரிந்துரைப்படி 52 விழுக்காடு இடஒதுக்கீடு, கிரிமிலேயர் முறை ஒழிப்பு, பதவி உயர்வு மற்றும் தனியார் துறையில் இடஒதுக்கீடு, மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் ஜாதிவாரி 2021-இல் கணக்கீடு, நேரடி நியமன செயலாளர் பதவிக்கு நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு, குரூப் பி.சி பதவிகளில் அந்தந்த மாநிலத்தவர்க்கே முன்னுரிமை உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றிய குறிப் புரையை இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி விவரித்துப் பேசினார். அமைப்புச் செயலாளர் இராம. வேம்பையன் நன்றி கூறினார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்கள் - ஏர் இந்தியா, பால்மர் லாரி, பாரத கனரக தொழிற்சாலை, பாங்க் ஆப் பரோடா, மக்கள் கணக்கெடுப்பு துறை, சி.பி.சி.எல், இ.எஸ்.அய்.சி., ஆவடி கனரகத் தொழிற்சாலை, அய்.சி.எப், சென்னை அய்.அய்.டி. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அய்.சி.எம்.ஆர். சென்னை உரத் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம், சேலம் உருக்காலை, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களைச்  சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் திரளாக கலந்து கொண் டனர். அதன் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக பொருளாளர் வீ. குமசேரன், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், பெரியார் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தைய்யன், முனைவர் மங்களமுருகேசன், தாம்பரம் சிவசாமி, தளபதி பாண் டியன், அரும்பாக்கம் சா. தாமோதரன், ஆவடி கழக மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், விடுதலை  நகர் ஜெயராமன், காங்கிரஸ் கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் க. பலராமன் மற்றும் பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

-  விடுதலை நாளேடு, 25.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக