பக்கங்கள்

புதன், 26 மே, 2021

102 ஆவது சட்டப்பிரிவில் 342-ஏ பிரிவு கூறுவது என்ன?


காணொலியில் தமிழர் தலைவர்  விளக்கம்

சென்னை, மே 21 102 ஆவது சட்டப் பிரிவில் 342-ஏ பிரிவு கூறுவது என்ன? என்பதற்கு விளக்கத்தைக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இட ஒதுக்கீடுக்கு ஆபத்து

கடந்த 13.5.2021 மாலை 7 மணியளவில் ‘‘இட ஒதுக்கீடுக்கு ஆபத்து'' என்ற  தலைப்பில் நடை பெற்ற காணொலி கருத்தரங்கத்தில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் தொடக்கவுரையாற்ற,  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அப்படியில்லை அது. மராத்தா பிரச்சினை என்பது ஒரு பகுதியில்தான். அதைவிட மிக முக்கிய மான பகுதி - மாநிலங்களுக்கு (‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு' இட ஒதுக் கீட்டைத் தர உரிமை இல்லை) உரிமையில்லை - அதை முடிவு செய்யவேண்டியது மத்திய அரசு என்று சொல்லுவதற்குரிய அளவிற்கு, 102 ஆவது அரசமைப்புச் சட்டப் பிரிவில், 342-ஏ ஆவது பிரிவை உருவாக்கியிருக்கிறார்கள்.

சட்ட ரீதியாக உங்களுக்கு சொல்கிறேன். புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். இது அறிவார்ந்த அரங்கம் என்பதால், அதைச் சொல்கிறேன்.

 Article 342A in The Constitution of India

(102 ஆவது அரசமைப்புச் சட்டப் பிரிவின்மூலம்)

Socially and educationally backward classes

(1) The President may with respect to any State or Union territory, and where it is a State, after consultation with the Governor thereof, by public notification, specify the socially and educationally backward classes which shall for the purposes of this Constitution be deemed to be socially and educationally backward classes in relation to that State or Union territory, as the case may be. (2) Parliament may by law include in or exclude from the Central List of socially and educationally backward classes specified in a notification issued under clause (1) any socially and educationally backward class, but save as aforesaid a notification issued under the said clause shall not be varied by any subsequent notification. 

அதாவது அந்த அதிகாரம் மாநிலங்களுக்கு என இருந்தது அப்படியே தூக்கி எடுத்தால், இப்பொழுது மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இருக்கிறது.

ஆனால், இப்போது மத்திய அரசு எல்லாவற்றையும் தன் வசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் சொன் னது போல், பரிந்துரை செய்யலாம். இதில் மாநிலங் கள் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் வழக்கு ரைஞரான கே.கே.வேணுகோபால் எழுந்து சொல் கிறார்; மாநில உரிமைகள் பறிக்கப்படவில்லை என்று.

ஆனால், சட்டத்தில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியமானதாகும். தனி நபர் கருத்து நிற்காது.

அரசமைப்புச் சட்டப் பிரிவான 366 ஆவது பிரிவு

அரசமைப்புச் சட்டப் பிரிவான 366 ஆவது பிரிவில் - வரையறைகள் என்று இருக்கிறது.

Article 366 in The Constitution of India

விளக்கங்கள் (Definitions) கூறப்படுகின்றன.

In this Constitution, unless the context otherwise requires, the following expressions have the meanings hereby respectively assigned to them, that is to say.

அதில், 26-சி என்ற உட்பிரிவில்,

26C “socially and educationally backward classes”  இதுதான் 15(4)இல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுதான் முதல் அரசமைப்புச் சட்டத்தில் இருப்பது - இதுதான் அம்பேத்கர் கொண்டு வந்தது - இதுதான் நேரு கொண்டு வந்தது - இதனால் தான் கம்யூனல் ஜி.ஓ. ரத்தானதற்குப் பிறகு, அந்தத் தீய விளைவுகளில் இருந்து காப்பாற்றப்பட்டது. படிப்பு, கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

இதே வார்த்தையை 340-லிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லி, அதற்கு விளக்கங்களையெல்லாம் சொன்னார்கள். அதில் பொருளாதாரத்தைப் போடக் கூடாது என்று தவிர்த்துவிட்டுத்தான் இரண்டே வார்த் தையைப் போட்டார்கள். “socially and educationally backward classes” என்று அவர்கள் அடையாளம் கண்டார்கள். அதில் ஸ்டேட் என்று வருகின்றபொழுது, மாநில அரசுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்ததை அறவே நீக்கிய ஒரு நிலையை உண்டாக்கி விட்டார்கள்.

26-சி என்ற உட்பிரிவில்,

26C) “socially and educationally backward classes” means such backward classes as are so deemed under article 342A for the purposes of this Constitution;

ஆக, இதன்படி பார்த்தால், 342-ஏ பிரிவின்படி பார்த்தால், இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவின்படி பார்த்தால், மத்திய அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதுதான்  backward classes என்பதை இனி முடிவு செய்யும் உரிமை உள்ளது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 342 எப்படி பயன் படுத்தப்பட்டு இருக்கிறது?

ஆகவே, மத்திய அரசுக்குத்தான் அந்த உரிமை என்று இந்த வாக்கியத்தைத்தான் மராத்தா தீர்ப்பில். 5 நீதிபதிகள் எடுத்துக்காட்டி, மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. மத்திய அரசுக்குத்தான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 342 எப்படி பயன் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

ஆக, மராத்தா வழக்கின் தீர்ப்பு மகாராட்டிரத்தை பாதிப்பது மட்டுமல்ல; எல்லா மாநிலங்களையும் பாதிக்கக் கூடியதாகும்.

மாநிலங்களுக்கு இருக்கின்ற உரிமையே கிடை யாது என்று எடுத்துச் சொல்லி, நீதிபதிகள் ஆணி அடிக்கிறார்கள் தீர்ப்பில்.

எனவே, இந்தத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய தீர்ப்பாகும்.

ஏனென்றால், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் இருப்பது என்ன?

‘‘ஸ்டேட்'' என்பதற்கு என்ன அர்த்தம்?

In this Part, 12  என்று வருகின்ற நேரத்தில், அவர்கள் பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தை மிக முக்கியமான ஒரு சொல். அந்த சொல்லையும் சட்ட ரீதியாகப் பயன்படுத்தலாம்.

இது கொஞ்சம் நுணுக்கமானது. ஆகவே, அதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைச் சுட்டிக்காட்டினால்,

In this Part, unless the context otherwise requires, "State" includes the Government and Parliament of India and the Government and the Legislature of each of the States and all local or other authorities within the territory of India.

இந்தக் குறிப்பிட்ட பகுதி - பொத்தாம் பொதுவில் அதில் இருக்கிறது. குறிப்பிட்ட பகுதி என்று இதில் இருக்கிறது. இரண்டையும் வித்தியாசப்படுத்த வேண் டும். சட்ட நுணுக்கமான பகுதிகள். இதற்குமேல் போக வேண்டிய அவசியமில்லை.

ஆகவே நண்பர்களே, 342-A என்கிற பிரிவை உள்ளே தள்ளுகிறார்கள்.

மாநில அரசுகள்தானே அடையாளம் காண முடி யும்; மாநில அரசுகளிடம்தானே நீண்ட காலமாக பட்டியல் வரலாறு உண்டு. மத்திய அரசிடம் பட்டியல் வரலாறு இல்லையே!

மாநில அதிகாரத்தைப் பறித்திருக்கிறார்கள்

ஆனால், மராத்தா வழக்கில் 5 நீதிபதிகள், socially and educationally  என்று சொல்லக்கூடியதை மத்திய அரசாங்கம் தான் நிர்ணயிக்க முடியும் என்று 366 பிரிவின் உட்பிரிவான 26-சியைப் பயன் படுத்தி இருக்கிறார்கள். மாநில அதிகாரத்தைப் பறித்திருக்கிறார்கள்.

இங்கேதான் ஆபத்து இருக்கிறது!

ஆகவே, மாநில அரசுகள் முன்வந்து, வலி யுறுத்தி, இதற்கான திருத்தத்தை வலியுறுத்தி பதிவு செய்யவேண்டும். அதை வலியுறுத்தி சட்டத் திருத் தத்தை நிறைவேற்றினாலொழிய ஆபத்து எப்போதும் உண்டு. எதிர்காலத்தில் எந்த நேரத்திலும், எல்லா பட்டியலும் அவர்கள் வசம் போய்விடும். இப்பொழுதே போய்விட்டது - அதற்கான அறிகுறிதான் இது. மாநில அரசாங்கங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று சொல்லக்கூடிய நிலை.

அதற்கடுத்து நண்பர்களே, அடுத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு வருவோம்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு எல்லாம் இருக்கிறது. 30 சதவிகிதம், 20 சதவிகிதம்; 18 சதவிகிதம்; 1 சதவிகிதம். இப்பொழுது அண்மைக்காலத்தில் 10.5 சதவிகிதம்; அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு ஒதுக் கீடுகள் உள்ளன.

எல்லா இட ஒதுக்கீடுகளிலும் வேலை வாய்ப்புகள், கல்வி இவை அத்தனையும் பறிபோகக்கூடிய ஆபத்து ஏற்படலாம்; ஆனால், உடனடியாக வராது. என்றாலும் வராது என்று நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது.

ஆங்கிலத்தில், சட்ட ரீதியாக சொல்லும்பொழுது ஒரு கருத்தைச் சொல்லுவார்கள்.

‘‘By Way of Abundant Caution'', we say this

‘‘போதிய மிகுந்த முன்னெச்சரிக்கைக்காக'' இதை எடுத்துச் சொல்கிறோம்.

கவனத்தோடும் கவலையோடும் இதை எடுத்துச் சொல்லவேண்டும்.

27 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்துவிட்ட ஒன்று!

அதுபோன்று 69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில், 27 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்துவிட்ட ஒன்று.

அதற்கு ஆபத்து ஒன்றும் எளிதில் வர முடியாது.

ஆனால், நம்மூரில் சிலர் இருக்கிறார்கள்; அவர் களுக்கு ஆரம்பத்தில் இருந்தே 69 சதவிகித இட ஒதுக்கீடு கண்களை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. எப்படியாவது இதை ஒழித்துவிட வேண்டும் என்று.

வழக்கு, வழக்கு என்று எத்தனை வழக்குகளைச் சந்திப்பது - எவ்வளவு காலத்திற்குச் சந்திப்பது.

69 சதவிகித இட ஒதுக்கீட்டின் வரலாற்றைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், தோழர் கரு ணாநிதி அவர்கள் அருமையாகப் பதிவு செய்திருக் கிறார். ‘‘69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?'' என்ற தலைப்பில் தமிழில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்த நூலை முழு வதுமாகப் படித்தீர்கள் என்றால், இட ஒதுக்கீடு வரலாறுகளையெல்லாம் தெரிந்துகொள்ளலாம். ஆங் கிலத்திலும் அந்த நூல் வெளிவந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்கள் முன்னுரையையும் எழுதியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, எப்படி இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் மிக பாதுகாப்பாக இருக்கிறது என்பதை விளக்கு வதற்கு, அப்போதேகூட மிகத் தெளிவான ஒரு துண்டறிக்கையைக்கூட நாம் வெளியிட்டு இருக் கிறோம். அந்தத் துண்டறிக்கையையும்கூட நம்மு டைய கருணாநிதி அவர்கள், இந்த புத்தகத்தில் இணைத்திருக்கிறார்.

ஆனால், குறிப்பிட்ட சிலர், இந்த இட ஒதுக்கீடு நீடிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து என்று சொல்வதில் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள்.

ஒன்று, கவலையோடு அதைப் பார்க்கக் கூடிய வர்கள்; அது நியாயமான கவலையாகும். பொறுப் பானவர்கள் அவர்கள்.

அடுத்து இன்னொரு சாரார், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் சொல்வது, மற்றவர்களை எல்லாம் பலகீனப்படுத்துவதற்கும், நம்பிக்கையை இழக்கக் கூடிய அளவிற்கு செய்வதுமான ஒரு தொடர் பிரச்சாரப் புழுதி!

இதில் நம்பிக்கை இழக்கக்கூடிய அளவிற்கு இல்லை. இருந்தாலும், நான் முன்பே சொன்னதுபோல்,

‘By Way of Abundant Caution, we say this’

போதிய மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இதை எடுத்துச் சொல்லவேண்டும். கவனத்தோடு, கவலை யோடு இதை எடுத்துச் சொல்லவேண்டும்.

ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியின் கருத்து

‘9 ஆவது அட்டவணை பாதுகாப்பு' என்று சொன்னோம் அல்லவா - அதற்கு இப்பொழுதுகூட ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி கருத்து ஒன்றைச் சொல்கிறார்.

‘‘9 ஆவது அட்டவணை பாதுகாப்பிற்காக வழங்கப் பட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யலாம்'' என்று சொல்கிறார்.

அது எவ்வளவு தூரம் சரியானது என்பது முதல் கேள்வி.

ஆனால், வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இந்த 9 ஆவது அட்டவணை ஏன் வந்தது? எப்படி வந்தது? இதுவே ஆராய்ச்சிக்குரிய தனித் தலைப்பாகவே பேசக்கூடிய விஷயமாகும்.

முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கே அவசியம் ஏற்பட்டுத்தான், அதன் விளைவாக 9 ஆவது அட்டவணை பின்னாளில் வந்தது.

நிலச் சீர்திருத்த சட்டங்களை, நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்து, ஜமீன்தாரி ஒழிப்பு முறையை கொண்டு வந்தார் பிரதமர் நேரு அவர்கள்.

அதை எதிர்த்து அடிக்கடி நீதிமன்றம் சென்றார்கள். அப்பொழுது நீதிமன்றங்களுக்குத் தேவையில்லாத, சமூகநீதி பிரச்சினைகளையெல்லாம், ஒரு புரட்சிகரமான சிந்தனைகளையெல்லாம் தடுத்துவிடுகின்றன என்று அந்த அதிகாரத்தை எடுத்து, தனியே சில விஷயங்கள் நீதிமன்றங்களுக்குப் போகவேண்டிய அவசியமில்லை.

திராவிடர் கழகத்திற்கே உண்டு - நமக்கே உண்டு!

நாடாளுமன்றத்தில் மக்களுடைய கருத்துகள் வந்ததே - காலங்காலமாக இருந்த அநீதிகளைப் போக்குவதற்காக உருவாகும் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நிலச் சீர்திருத்த சட்டங்களுக்காக உருவானது. முதன் முறையாக, சமூகநீதிச் சட்டத்தையும் அதில் இணைக்கலாம் என்று காட்டிய பெருமை திராவிடர் கழகத்திற்கே உண்டு - நமக்கே உண்டு.

அந்த முறையில் இடம்பெற்றதுதான் - ‘‘சமூகநீதி காத்த வீராங்கனை'' என்று நம்மால் போற்றப்பட்ட, செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டு வந்து, நம்முடைய கருத்தை ஏற்று, வாதாடி அவர்கள் நிறைவேற்றிய - 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்ற 9 ஆவது அட்டவணை தக்கப் பாதுகாப்புடன் கூடியது.

மராத்தா வழக்கில் ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அது என்னவென்றால்,

அந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் சொல் கிறார், ‘‘69 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கையும் இணைத்து நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும்'' என்று.

ஆனால், நீதிபதிகள் சொன்னார்கள், ‘‘69 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த வழக்கில் இணைத்து வாதாட வேண்டிய அவசியமில்லை. அது  9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் இருக்கிறது. ஆகவே, அதையும் சேர்த்து விசாரிக்கவேண்டிய அவசிய மில்லை'' என்றார்கள்.

விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளாமல் நிறைவேற்றக் கூடிய ஆபத்து இருக்கிறது

என்றாலும்,  342-A - வரையறை  - மத்திய அரசு - இவற்றை இன்றைக்குத் தொலைநோக்கோடு பார்க்க வேண்டும். நேரிடையாக எப்பொழுதும் அவர்கள் வருவதில்லை. மறைமுகமாகத்தான் வருவார்கள்; அதுவும் நாம் ஏமாந்த நேரத்தில், கரோனா காலகட்டம் போன்ற காலகட்டத்தில் - நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை இருக்கின்றது என்கிற காரணத்தினால், விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளாமல் நிறைவேற்றக் கூடிய ஆபத்து இருக்கிறது.

ஆகவேதான், எச்சரிக்கை செய்யவேண்டும் என்ற அளவில், இதைத் தெளிவாக எடுத்துச் சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே, இந்த கொயல்கோ என்ற ஒன்று இருக்கிறது. அதில் 9 ஆவது அட்டவணைக்கு ஆபத்து வரும் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பேசுகிறார்கள்.

அந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்துப் பார்த் தால்கூட, 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு பெற்ற 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அவ்வளவு சீக்கிரம் நகர்த்திவிட முடியாது. சட்ட வலிமை இருக்கிறது இதற்கு. அந்தத் தீர்ப்பின்படி பார்த்தாலும்!

இதுவரையில் பல தீர்ப்புகள், பல வழக்குகள் வந்தி ருக்கின்றன. அப்படி வந்திருக்கின்ற நிலையில், 9 ஆவது அட்டவணை பாதுகாப்பினை எதிர்த்து ஏராளமான வழக்குகள் வந்தாலும்கூட, 284 சட்டங்கள் - 9ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் வந்திருக்கின்றன. இது வரையில் எதுவுமே சேலஞ்ச் ஆகவில்லை.

‘‘கொயல்கோ தீர்ப்புப்படி'' பார்த்தால்கூட

அப்படியே வந்தாலும் - எப்படிப்பட்ட வழக்கு அதில் வர முடியும்? அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்திற்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய - அதைப்பற்றிய பிரச்சினை இருந்தால்தான், அந்த வழக்கையே எடுக்க முடியும். 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புப்படி - ‘‘கொயல்கோ தீர்ப்புப்படி'' பார்த்தால்கூட - அது இதற்கு வராது. இதுதான் தெளிவான ஒரு வாதம்.

எனவே, அந்த ஆபத்து என்பது ரிமோட்- தொலைதூரத்தில் உள்ளது. ஆனாலும், அது அருகில் கொண்டுவரக் கூடிய சூழல்கள் உருவாக்கப்படலாம்.

எனவே, மாநில உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.

அந்த அடிப்படையிலே உள்ளே நுழைந்துவிட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வரக்கூடாது.

இன்னொன்றையும் அந்த ஓய்வு பெற்ற நீதிபதி சொல்கிறார்,

‘‘69 சதவிகித இட ஒதுக்கீடு - சயிண்டிபிக் டேட்டா வோடு வரவில்லை'' என்கிறார்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக சட்டத்தை உருவாக்கும்பொழுதே, சட்டத்தின் காரண காரிய வழிமுறையை தெளிவாகப் போட்டிருக்கிறார்கள்.

80 விழுக்காட்டினருக்கு மேலே இருக்கின்ற பிற் படுத்தப்பட்டவர்களுக்குத்தான் 50 விழுக்காடுதான். இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று விளக்கப்பட்டது நீதிமன்றத்திலும்.

வெறும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல இந்த சட்டம். எஸ்.சி., எஸ்.டி., ஆகியோரையும் சேர்த் ததுதான்!

‘தாழ்த்தப்பட்டவர்கள்' என்கிற சொல்லை நான் பயன்படுத்துவது யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல.

என்னைப் பிற்படுத்தப்பட்டவன் ஆக்கியது யார்?

ஒருவர் சொல்கிறார், ‘‘ஆகா, எனக்கு அந்த சொல் லைப் பார்த்து இவர்மீது கோபம் வருகிறது'' என்கிறார்.

கோபம் வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தச் சொல். ஆனால், யார்மீது உங்களுக்குக் கோபம் வருகிறது. இதைச் சுட்டிக்காட்டுபவரின் மேல் உங்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, இதை செய்தவன்மேல் கோபம் வரவில்லையே! அதற்கு யார் மூலகாரணமாக இருக்கிறானோ அவன்மேல் அல்லவா உங்களுக்குக் கோபம் வரவேண்டும். அந்தக் கோபத்தை உருவாக்கவேண்டும்.

‘பிற்படுத்தப்பட்டவன்' என்று நான் சொல்லும் பொழுது, என்னைப் பிற்படுத்தப்பட்டவன் ஆக்கியது யார்?

‘‘என்னை வரிசையிலிருந்து கீழே தள்ளியவன் யார்?''

‘‘என்னை அடித்தளத்திற்குக் கொண்டு சென்றவன் யார்?''

‘‘என்னைத் தாழ்த்தியவன் யார்?''

அவனை நான் தேடுகிறேன் என்றுதானே சொல்ல வேண்டும்?

அதுதான் உண்மையான கோபத்திற்கு அடை யாளம்; அதுதான் சமத்துவத்திற்கு அடையாளம் - வழிவகுக்கும்.

எனவேதான் நண்பர்களே,

இதில் சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், மிக ஆழமாக, தெளிவாக,

69 சதவிகித இட ஒதுக்கீட்டில்,

எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., எல்லா பிரிவினரும் இருக்கிறார்கள். இப்பொழுது உள் ஒதுக்கீடு உள்பட.

இதில் கை வைத்து ஆட்டினால், எல்லாமே போய்விடும்.

ஆகையால்தான் அவன் என்ன செய்கிறான், இதை தனியாக எடுக்கவேண்டாம் - மாநிலங்களுக்கே உரிமையில்லை; மத்திய அரசாங்கத்திற்குத்தான் உரிமை என்று ஆக்கிவிட்டால், பிறகு இதை சுலபமாக ஒழித்துவிடலாம் என்கிற பெரிய திட்டம். அதன் மூலமாக கோளாறு ஏற்படுத்த  ஒரு வழிமுறையை ஏற்படுத்துகிறார்கள்.

அந்த ஆபத்து உடனடியாக வராது.

‘‘சயிண்டிபிக்காக'' இதில் ஒன்றையும் சேர்க்கவில்லை என்கிற வாதத்தை வைக்கிறார்கள் எங்கே பார்த்தாலும்.

யார் சொன்னது?

அந்த சட்டத்தை எழுதும்பொழுதே, ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஆட்சியில், 80 விழுக்காட்டிற்கு மேல் இருக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்; மூத்த வழக்குரைஞர் பராசரன் வாதம் செய்திருக்கிறார். மூத்த வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். கபாடியா என்ற தலைமை நீதிபதி தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் அதையே சொல்வது, மீண்டும் மீண்டும் அதை உருவாக்குவது - ஊடகங்களுடைய உதவி - உயர்ஜாதிக்காரர்களின் ஆதிக்கத்தை வைத்துத்தான்.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்,

இரண்டு பேர் பேசிக் கொள்கிறார்கள்;

‘‘என்னங்க, நல்லா இருக்கீங்களா?''

‘‘நன்றாகத்தானே இருக்கிறேன்.''

“இல்லையே, ஆள் மிகவும் டல்லாக இருக்கிறீர்களே''

‘‘இல்லையே!''

‘‘முகம் எல்லாம் சோர்வாக இருக்கிறதே, முன்பு போல் உங்களுடைய உருவம் இல்லையே” என்று நான்கு பேர் தொடர்ந்து ஒருவரை கேட்டால்,

நன்றாக இருப்பவனும்கூட, கடைசியில் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவான்.

ஒடுக்க முறை - ஒரு போர் முறை

அதுபோன்று மனோதத்துவ ரீதியான ‘Whispering Campaign'  ஒடுக்கு முறை - ஒரு போர் முறை - இதை உயர்ஜாதிக்காரர்களும், ஊடகங்களும் செய்வதில் வல்லாதி வல்லவர்கள் - அவாள்!

ஆகவே, அதை மிக சாமர்த்தியமாக செய்து வருகிறார்கள்.

‘‘சயிண்டிபிக்காக'' எந்த ஆதாரமும் இல்லை என்று யார் சொன்னது?

50 சதவிகித்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்பதற்குத்தான் அப்படி ஆதாரம் இல்லையே தவிர, 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு நிச்சயம் ஆதாரம் உண்டு.

அம்பாசங்கர் கமிசன் என்று இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிசன்

இரண்டாவதாக, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டபொழுதே, அதிகமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேள்விப் பட்டபொழுதே, நீங்கள் புள்ளி விவரத்தை எடுங்கள் என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அம்பாசங்கர் கமிசன் என்று இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிசன் அமைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்திற்கே சென்று, அது முடிவு செய்யப்பட்ட விஷயம். அதை உச்சநீதிமன்றம் மாறுபட்ட கருத்து கூறவில்லை!

சட்ட நிபுணர்கள் சிந்திக்கவேண்டிய விஷயம் இது. நான் ஒரு சாதாரண வழக்குரைஞர் என்கிற முறையில், சட்டம் படித்தவன் என்ற முறையில் என்னுடைய கருத்தை வைக்கிறேன்.

ஒருமுறை முடிவு செய்த விஷயத்தை - மீண்டும் மீண்டும் வேறு ஒரு ரூபத்தில் கொண்டு வருகிறார்கள். (Res Judicata)

ஆகவே நண்பர்களே!

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு உடனடியான ஆபத்து இல்லை. உடனடியாக என்பதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.

ஆனால், ஆபத்து வராது  என்று நாம் உறுதியாக, அசதியாக, அசமந்தமாக, அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

எனவேதான், போதிய எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

எல்லாவற்றையும்விட, மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. கூட்டாட்சித் தத்துவத்தினுடைய உரிமைகளை, கபளீகரம் செய்யக்கூடிய பேரபாயம் இந்தத் தீர்ப்பின் மூலமாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலமாகவும் அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற 342-ஏ பிரிவும், அதற்கு விளக்கம் சொல்கின்ற 366 ஆவது பிரிவின் உட்பிரிவான 26-சி என்பதில் இருக்கக்கூடிய வரையறை பிரிவும் இருப்பது இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும் என்பதை, மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்களாக நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை வலியுறுத்தவேண்டும். சட்ட அறிஞர்களும் வலியுறுத்தவேண்டும்.

நீதியரசர் போன்றவர்களும், நீதிபதிகளும், ஓய்வு பெற்றவர் களும், அறிஞர்களும் ஆங்காங்கே கருத்தரங்கங்களை நடத்தி, மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை உருவாக்கவேண்டும்.

“Eternal Vigilance is the price for our liberty” என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு.

எப்பொழுதும் கவனமாக இருப்பதுதான், சுதந்திரத்தை எப்போதும் பாதுகாப்பதற்கு ஒரு சரியான விலையாகும் என்பதுதான் அதனுடைய தத்துவம்.

சமூகநீதியை உயிரினும் - மேலாகப் பாதுகாப்போம்!

ஆகவே, அதன்படி இருக்கவேண்டும் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!!

பாதுகாப்போம், பாதுகாப்போம்

சமூகநீதியை உயிரினும்

மேலாகப் பாதுகாப்போம்!

அது நம் தலைவர்கள் நமக்குத் தந்த சொத்து

அதை ஒருபோதும் அழித்துவிட முடியாது

வேடிக்கை பார்க்க மாட்டோம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக