பக்கங்கள்

திங்கள், 24 அக்டோபர், 2022

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு! - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

தமிழர் தலைவர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

டிசம்பர் 1-15,2021

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு!

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆண்டாண்டு காலமாக வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்பட்ட மக்களை, கை தூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு என்பது.

இடஒதுக்கீடுக்கு என்று ஒரு வரலாறு உண்டு, மகாராட்டிரத்தில் ஜோதிபா பூலே, சாகுமகராஜ் என்று தொடங்குகிறது.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்று கேட்கின்றனர். ஆம், ஜாதி இருக்கும் வரை _ ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்கப்பட முடியாததுதான். அந்த ஜாதிதான் கல்வி உரிமையை மறுத்தது _ இதுவும் கூட ஒரு தடுப்பூசி அணுகுமுறைதான்.

ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர், ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரட்டுமே!

ஒரே தேசம் _ ஒரே மொழி _ ஒரே கலாச்சாரம் என்பவர்கள், எல்லோரும் ஒரே ஜாதி _ ஒரே நிலை _ சரி சமம் என்று சட்டம் செய்யட்டுமே! அப்படி சட்டம் செய்தால், செயல்பாடுக்கு வந்தால் இழப்புகள் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூற நாங்கள் தயார்தான் என்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

ஏதோ இப்போதல்ல _ இதற்கு முன்பே கூட சொல்லித்தான் வருகிறார். ஆனாலும் எதிர்த் தரப்பிலிருந்து பதிலைத்தான் காணோம்!

இன்றைய தினம் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கோட்பாடாக இருக்கக்கூடிய சமூக நீதியை, இடஒதுக்கீட்டை, அதன் நோக்கத்தை அதற்கான அடிப்படை வேரினையே வெட்டும் வேலையில் பார்ப்பன _ ஆதிக்கக் கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க. அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்படி செய்து கொண்டு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையா?

இடஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸின் ஏடான ‘பஞ்சான்யா’வுக்கு ‘அவுட்லுக்’ (20.9.2015) ஏட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அளித்த பேட்டியில் கூறியது என்ன?

“இந்தியா போன்ற மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும் போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால், இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்கிற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடாகும். கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்கிற பெயரில் கலாச்சாரக் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் பெரும்பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தி விடும்.

இந்த நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார். ஆகவே, வளர்ச்சிக்காக தியாகம் செய்யத் துணிச்சலும் இருக்கும் மக்களை அரசு வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான், இதுபோன்ற இடஒதுக்கீட்டுத் தேவைக்காகப் போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை உள்ள இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். அரசு குழு ஒன்றையமைத்து இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் கூறிய இந்தக் கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் (22.9.2015) வெளியிட்ட அறிக்கை என்னவோ அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

ஆசிரியர் சொன்னது என்ன?

“ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து வருகிற ஆபத்திற்கு ஒரு முன்னோட்டமாகும். பின்னாளில் அவர்கள் சிந்திப்பது என்ன வென்றால், இப்பொழுது இருக்கின்ற அடிப்படை அளவுகோலை அகற்றிவிட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் _ இவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படை என்கிற முறையில் இட ஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு அந்தக் கமிட்டி அமைக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது.

இந்தத் துறையில் மட்டுமல்ல, கல்வித்துறையிலும் கூட தனியாக ஒரு வாரியம் அமைத்து, கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டு ஆழம் பார்க்கிறார்கள்.

எனவே, இந்தக் காலகட்டத்தில், காலம் காலமாக நம்முடைய நாட்டில் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும், திராவிடர் கழக இயக்கமும் மிகப்பெரிய அளவில் போராடி வெற்றி கண்ட, பாதுகாத்த இடஒதுக்கீடு, சமூக நீதி என்பதற்குப் பெரிய அறைகூவல் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’’ என்று ஆறு ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொலை நோக்கோடு சொன்னதுதானே இப்பொழுது நடந்திருக்கிறது?

இடஒதுக்கீடு – உள் ஒதுக்கீட்டின் பலன் என்ன?

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு (29.5.2009) உள் ஒதுக்கீடு வழங்கிய அதன் பலன் என்ன தெரியுமா?

இந்த உள்ஒதுக்கீடு வருவதற்கு முன் அருந்ததியர்த் தோழர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் வெறும் 13;  2009இல் கிடைத்த இடங்களோ 29. 2009_2010இல் கிடைத்த இடங்களோ 56. நான்கரை மடங்கு அதிகம். அதே போல பொறியியல் கல்லூரிகளில் 2007_2008இல் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 44, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பின் 2009_2010இல் கிடைத்த இடங்கள் 1165, பார்ப்பனர்கள் ஆத்திரப்படுவதற்கும், இடஒதுக்கீட்டை ஒழிக்கக் கூப்பாடு போடுவதற்கும் இதுதான் காரணம்!

மதரீதியாக இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுடன் சேர்த்து சலுகை வழங்குவதால் ஏற்கெனவே உள்ள ஹிந்துக்களின் அந்தப் பிரிவினருக்கே பாதிப்பு ஏற்படும். தற்போது சலுகை பெற்ற பிரிவிலும் கூட வறுமையில் உழல்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு வருமான அடிப்படையில் சலுகை வழங்குவதன் மூலம் சிறுபான்மை மதத்தினர் உள்பட அனைத்து பிரிவினரும் பயன்பெற வசதி செய்யப்படும் என்பது பிஜேபியின் தேர்தல் அறிக்கை (2016).

வருமானஅடிப்படையில் இடஒதுக்கீடு என்று கூறியுள்ளது சட்டவிரோதமாக ஒன்றைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, ஆட்சிக்கு வந்தபின் அந்த சட்டவிரோதத்தைச் செயல்படுத்தியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இது சட்ட விரோத அரசே!

இந்தியாவின்அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் என்பது இடஒதுக்கீட்டுக்காகவே கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம் தமிழ்நாடுதான் _ தந்தை பெரியார்தான்.

1928 முதல் சென்னை மாநிலத்தில் இருந்து வந்த இடஒதுக்கீடு செல்லாது என்று ‘சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்புக் கூறிய காரணத்தால் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.

தமிழ்நாட்டின் போராட்டத்தை எடுத்துக் காட்டித்தான் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு காட்டினார்.

அந்தத் திருத்தம் என்ன சொல்லுகிறது?

சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுப்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட உறுதி செய்தது. அப்பொழுதே கூட பொருளாதார ரீதியாக என்ற அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்று ஜன சங்க நிறுவனரான தீனதயாள் உபாத்தியாயா ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் பொருளாதாரத்துக்கு ஆதரவாக அய்ந்து வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கிற அளவுகோலின்படிதான் இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

1951ஆம் ஆண்டில் பொருளாதார அளவு கோலைக் கொண்டு வர முயற்சி செய்தவர்கள் இப்பொழுது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் காரணத்தால், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஒரு சட்டத்திருத்தம் (திருத்த எண்.103) கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் செல்லாது என்று ஏற்கெனவே பலமுறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததே!

பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியோர்க்கு என்று 10 விழுக்காடு இடஒதுக்கீடு செய்த போது உச்சநீதிமன்றம் செல்லாது என்று நிராகரித்து விட்டதே!

2016ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் உள்ள பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு வழங்கி அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது, பா.ஜ.க. ஆளும் குஜராத். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு குஜராத் சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதே. ராஜஸ்தான் மாநிலம் கொண்டு வந்த பொருளாதார அடிப்படைச் சட்டமும் நீதிமன்றத்தால் செல்லாது என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசே, சட்டத்துக்கு விரோதமாகவும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது _ பச்சையான சட்ட விரோதம் _ நீதிமன்ற விரோதம் தானே!

5.5.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியது என்ன?

மகாராட்டிர மாநிலத்தில் ‘மராத்தா’ பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 16 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது என்று கூறப்பட்டது. அத்தீர்ப்பில் 50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லாது என்றும், பிற்படுத்தப்-பட்டோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உண்டே தவிர, மாநில அரசுக்குக் கிடையாது என்றும் கூறப்பட்டது.

இந்தச் சட்டம் கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. “செலக்ட்’’ கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பூபேந்திர யாதவ் எம்.பி. ஆவார். அந்தக் கமிட்டியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (திமுக), டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), நவநீதிகிருஷ்ணன் (அஇஅதிமுக) மற்றும் பிற மாநிலத்தினரும் இடம் பெற்றிருந்தனர். அந்தக் கமிட்டியில் கருத்துச் சொல்ல திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். எழுத்துப்பூர்வமாகவே கழகத்தின் கருத்துகளை எடுத்துக் கூறி நேரிலும் விளக்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது. மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்ற சட்டத்தின் பிரிவு (342A) மாநில உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்று முதன்முதலில் ஆணி அடித்ததுபோல் கூறியவர் திராவிடர் கழகத் தலைவர்தான். ஆனாலும் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

மகாராட்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பு _ இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது.

50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சகானி வழக்கில் கூறப்பட்டதையும் மகாராட்டிரா வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மண்டல் குழு வழக்கை _ ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியபோது, ஜஸ்டிஸ் திரு.இரத்தினவேல் பாண்டியன் தனித்தன்மையாக தனித்த தீர்ப்பை எழுதினார்.

பாலாஜி எதிர் மாநில அரசு வழக்கில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஜெத்மலானி கூறியது என்ன? 50 சதவிகிதத்திற்கு மேல் போகக் கூடாது என்று நீதிமன்றம் சொன்னது தீர்ப்பின் வரிகள் அல்ல, வெறும் கருத்துதான் (Obiter- Dicta); இதற்குச் சட்ட வலிமை கிடையாது என்றாரே! என்று ஜஸ்டிஸ் இரத்தினவேல் பாண்டியன் மணடல் குழு வழக்கில் தன் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி என்ன கூறியுள்ளார்? (வசந்த குமார் வழக்கில்), 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியதற்கு என்ன அளவுகோல்? விஞ்ஞானபூர்வமானதா? புள்ளி விவர தரவுகள் உண்டா? என்று கேட்டாரே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 12ஆம் பிரிவு என்ன கூறுகிறது? ‘ஸ்டேட்ஸ்’ என்றால் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு மூன்றையும் தான் குறிக்கும்.

1928ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோரை முடிவு செய்தது மாநில அரசுதான் _ மாநிலத்துக்கு மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும், தன்மையும் மாறுபடுகிறது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோரை மாநில அரசு தானே முடிவு செய்ய முடியும்? மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு என்று வருகிற போது அந்தந்த மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அடிப்படையில்-தானே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இங்கே மத்திய அரசு எங்கே இருக்கிறது? இன்னும் சொல்லப் போனால் மாநில அரசுக்குத்தான் மக்கள் உண்டு; மத்திய அரசுக்கு நேரிடையாக மக்கள் கிடையாதே!

மகாராட்டிரத்தில் தானே நடந்திருக்கிறது _ நமக்கு என்ன என்று அலட்சியமாக இருக்க முடியுமா? கடைசி வீட்டில்தானே தீ பிடித்திருக்கிறது _ நம் வீட்டுக்கு ஆபத்தில்லையே என்று கைகட்டி நிற்க முடியுமா? அந்தத் தீ நம் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?

அதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்றால் எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தத்-தானே செய்யும்!

(தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளுள் ஒருவரான நாகேஸ்வர ராவ் _ அதிமுக அரசு சார்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் ஆவார்).

தமிழ்நாட்டில் முசுலிம்களுக்கும், அருந்ததியர்க்கும், உள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இந்த நிலையில் யாருக்கோ வந்தது என்று அலட்சியமாக இல்லாமல் சமூக நீதிக் களத்தில் _ பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து, நாம்தான் வெகு மக்கள் _ ஜனநாயகம் என்பது பெரும்பாலோரால் ஆளப்படுவது என்பதைக் கணக்கில் கொண்டு களத்தில் நிற்க வேண்டும்.

திராவிடர் கழகத்தின் முயற்சியால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வினைத் திட்பத்தால் 69 சதவிகித இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டுள்ளது. ஒன்பதாவது அட்டவணையில் வைத்துப் பாதுகாக்கவும் படுகிறது.

கருநாடக மாநிலத்தில் உள்ள 73 விழுக்காடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பு என்ன கூறுகிறது?

“தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் அரசுப் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் (தமிழ்நாடு அரசு) 1993இன்படி வழங்கி வருகிறது. இது அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணையின் கீழ் கொண்டு வந்துள்ளதால், இது நீதிமன்ற மறு ஆய்விற்கு அப்பாற்பட்டது ஆகும் (ஜூலை 2010) என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.’’

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு இத்தனை சதவீதம்தான் _ இத்தனை சதவிகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு என்ன பதில்? (ஒரு முறை ராம் ஜெத்மலானி இடஒதுக்கீட்டுக்காக வாதாடிய-போது நீதிபதி 100 சதவிகிதம் கூட இடஒதுக்கீடு கேட்பீர்களா என்று கேட்டபோது “Why Not?” என்று பதிலடி கொடுத்ததுண்டே!).

அரசமைப்புச் சட்டம் 15(4), 16(4) என்பது அடிப்படை உரிமையாகும். இதில் கை வைக்க எந்த நீதிமன்றத்துக்கும் உரிமை கிடையாது. ஆனால் நீதிமன்றங்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இப்பொழுது எந்த அளவுக்கு நீதிமன்றம் சென்றுள்ளது? நீதிமன்றம் தலையிட முடியாது _ கூடாது என்பதற்காகவே அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணை உருவாக்கப் பட்டது. இப்போது அதிலும் தலையிடுவோம் என்று உச்சநீதிமன்றம் சொல்லுகிறது என்றால் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டாமா?

நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, உச்சநீதிமன்றம் செல்லாது என்று கூறியது. நீதிமன்றத்தின் இத்தகைய தலையீட்டைத் தவிர்க்கவே ஒன்பதாம் அட்டவணை கொண்டு வரப்பட்டது. இந்த அட்டவணையின் கீழ் 284 சட்டங்கள் உண்டு. ஆனால், சமூக நீதியும் இதில் முதன்முதல் இடம் பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் கழகமே! இதுவரை இந்தச் சட்டங்களுக்கு எதிர் வினை என்பது வந்ததே கிடையாது.

9ஆம் அட்டவணை நீதிமன்ற அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது. அதிலும் தலையிட முடியும் என்று கூறியுள்ள நிலையில் மற்றொரு அட்டவணை கொண்டு வரப்பட வேண்டும் என்பது திராவிடர் கழகத் தலைவரின் கருத்தாகும்.

80 சதவிகித மக்களுக்கு _ 69 சதவீத இடஒதுக்கீடு என்பதற்கு ஆதாரம் உண்டு. ஆனால் 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்பதற்கு ஆதாரங்களோ _ தரவுகளோ கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 16(4) என்ன கூறுகிறது? மற்ற (முன்னேறியவர்களோடு சமமான நிலை அடையும் அளவுக்கு) (Adequately) இடஒதுக்கீட்டின் அளவு இருக்கலாம் என்று கூறுகிறது. இதனைக் கண்டறியும் உரிமை அரசுகளுக்கு உரியதே தவிர நீதிமன்றங்களுக்கு அறவே கிடையாது. Adequate என்ற இலத்தீன் சொல்லுக்கு Till it is equalised மற்றவர்களோடு சமநிலை அடைகிற அளவுக்கு என்று பொருள். இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குரிய இடஒதுக்கீடு விகிதாசாரம் அளவுக்கு இடங்கள் இதுவரை பூர்த்தியாகவில்லை என்பது கவனத்துக்கு உரியதாகும்.

இடஒதுக்கீடு குறித்து நீதிபதிகள் தெரிவித்து வரும் கருத்து குறித்து நோபல் அறிஞர் அமர்த்தியா சென் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

“இடஒதுக்கீடு அளித்தால் தகுதி, திறமை குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கை-யோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படை-யில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்-பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டுமொத்தப் போக்கினையும் பார்க்க வேண்டும். அதுபோல்தான் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பலன்களை நோக்க வேண்டும். நீதிமன்ற அடிப்படையில் இதற்கு மிக எளிதான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்கவேண்டும்’’ என்று நோபல் அறிஞர் அமர்த்தியா சென் சொன்னார். அதுவும் எங்கு எந்த இடத்தில் சொன்னார் என்பதுதான் கைதட்டிச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சென்னை அய்.அய்.டி.யில் (22.12.2009) தான் சொன்னார் என்பது நினைவிருக்கட்டும்!

மக்கள் நலனுக்காக தந்தை பெரியார் நீதிமன்றங்களை விமர்சித்ததுண்டு _ திராவிடர் கழகம் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட எரித்ததுண்டு.

மக்களுக்குத் தேவையானவற்றை முடிவு செய்வது அரசுகளே _ நீதிமன்றங்கள் அல்ல.

இப்பொழுது சமூகநீதிக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்றங்களும், இத்திசையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும்.

குறிப்பு: சமூகநீதி _ இட ஒதுக்கீடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் காணொலியில் (மே 2021) ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்டது இக்கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக