பக்கங்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2022

ஓ.பி.சி. பிரிவினர்க்கு 27% ஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு திராவிடம் பெற்று தந்த உரிமை சாசனம்!

 

முகப்புக் கட்டுரை : ஓ.பி.சி. பிரிவினர்க்கு 27% ஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு திராவிடம் பெற்று தந்த உரிமை சாசனம்!

ஆகஸ்ட் 16-31,2021

மஞ்சை வசந்தன்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவைப் பயன்படுத்தி, மருத்துவக் கல்வி வசதிகள் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ளவர்கள் மருத்துவர்களாவதற்கு உதவும் வகையில், உச்சநீதிமன்றம், ‘மருத்துவக் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் மத்திய தொகுப்பு’ என்ற ஒன்றை உருவாக்கி, தங்களுக்குள்ள மொத்த மருத்துவப் படிப்புக்கான இடங்களில் _ எம்.பி.பி.எஸ். போன்ற பட்டப் படிப்புக்கான 15 சதவிகிதமும், மேல் பட்டப் படிப்புக்கான (எம்.டி., எம்.எஸ். போன்றவை) 50 சதவிகிதமும் (முதலில் 25 சதவிகிதம், பிறகு 50 சதவிகிதம்) ஆண்டுதோறும் தரவேண்டும் என்ற ஓர் ஆணையைப் பிறப்பித்து, அது அமலில் இருந்து வருகிறது.

அவ்வாறு ஒன்றியத் தொகுப்பின் மூலம் பெறப்பட்ட இடங்களை ஒன்றிய அரசு _ ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று ஆணையிட்டது உச்சநீதிமன்றம்.

ஒன்றிய அரசின் தவறான முடிவு!

ஒன்றிய அரசு, ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை, முழுமையாகச் செய்யாமல்,  ஆதிதிராவிடர், பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.,) என்ற பிரிவுக்கு மட்டும் அமல்படுத்திவிட்டு (அதையும் முழுமையாகப் பின்பற்றி யுள்ளார்களா என்பது கேள்வி) ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு அளிக்காமலே, இதை நடைமுறைப்படுத்தி, உயர்ஜாதியினரே எஞ்சிய எல்லா மருத்துவ இடங்களையும் ஏகபோகமாக அனுபவித்த கொடுமை தொடர்ந்தது!

சலோனா குமாரி என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மருத்துவர் _ இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இந்த அநீதிக்குப் பரிகாரம் தேட, அப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது! (2015).

திராவிடர் கழக அறிக்கை

இதற்கிடையில் எத்தனையோ சம்பவங்கள் _ சட்டப் பிரச்சினைகள் வந்ததோடு, ‘நீட்’ தேர்வு என்று திணிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வு வந்த பிறகு _ 2016இல் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் திருத்தப்பட்டது. (பிரிவு 10_ஞி கொண்டு வரப்பட்டது.) அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிக்கை (ழிஷீtவீயீவீநீணீtவீஷீஸீ) 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ‘தேசிய மருத்துவ ஆணையச் சட்டம்’ 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது.

அதன்படி இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின்கீழ் தரப்பட்ட தொடர் அறிக்கையில் (21.12.2010) _ இடஒதுக்கீடு அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங்களின்படியே தொடரும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

அப்படி இருந்தாலும் இதைச் செயல்படுத்தாமல் _ பிற்படுத்தப்பட்ட சமூக மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடே _ ஒன்றியத் தொகுப்பில் தராத கொடுமை தொடர்ந்து வந்தது.

இதை திராவிடர் கழகம் (‘விடுதலை’யில்) முதன்முதலில் அறிக்கையாக வெளியிட்டது. இந்தச் சமூக அநீதியை அம்பலப்படுத்தியது! (8.5.2020, 16.5.2020).

சமூக அநீதிக்கு எதிராக ஒன்றாக திரண்ட தமிழ்நாடு!

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிலையில், தி.மு.க.வின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் அறிக்கை வெளியிட்டு, அனைத்து ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளும் (பா.ஜ.க. தவிர), சமூக அமைப்புகளும் ஓரணியில் திரண்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தச் சமூக அநீதிக்குப் பரிகாரம் தேட வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு அந்நாளைய தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி இராமமூர்த்தி ஆகியோர் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது!

தி.மு.க.வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர்களும், தி.க.வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் தியாகராஜன் அவர்களும், அதுபோல பல அரசியல் கட்சியினரும் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்தனர்.

ஆளுங்கட்சியாக அப்போது அ.தி.மு.க.வும், தமிழ்நாடு அரசும்கூட இறுதியில் இணைந்தனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு

இதனிடையே உச்சநீதிமன்றம்தான் இது சம்பந்தமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தது என்றும், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே சலோனாகுமாரி வழக்கு என்ற பிற்படுத்தப்பட்டவரின் வழக்கு விசாரணையில் இருப்பதால், அதன் முடிவுக்குப் பிறகே இதுபற்றி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றும் பல எதிர்வாதங்களை வைத்தனர்.

உயர்நீதிமன்றத்தின் விசாரணையைத் தடுக்கும் வகையில், இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் விசாரித்துத் தீர்ப்பளிக்கக் கூடாது என்பதாகவும் ஒன்றிய அரசுத் துறைகள் சார்பாக, மெடிக்கல் கவுன்சில் சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

உடனே தி.மு.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஆர்.வில்சன், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே இது சம்பந்தமாக மாணவர் ஒருவர் சார்பாக போட்டிருந்த வழக்கு விசாரணையில், இதைக் கூறியவுடன், ‘’உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளைத் தொடர்ந்து விசாரிக்க எந்த ஆட்சேபணையும் இல்லை’’ என்று தெளிவுபடுத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஏ.பி.சாஹி, ஜஸ்டீஸ் செந்தில்குமார், ஜஸ்டீஸ் இராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த இடஒதுக்கீட்டு வழக்கினை விசாரணைக்கு எடுத்து, தொடர்ந்து பல மணிநேர வாதங்களை அனுமதித்துக் கேட்டு, காலம் தாழ்த்தாமல், 27ஆம் தேதி தீர்ப்பு என்றும் அறிவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

27.7.2020 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் தீர்ப்பு வெளிவந்தது. 171 பக்கங்கள் கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில்,

ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை, இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பாக தெரிவித்த எதிர்தரப்பு வாதங்களை இந்நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே மாநில அரசின் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் அமலில் இருப்பதால் ளிஙிசி என்ற பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற கோரிக்கையைப் புறந்தள்ள முடியாது என்றும், உச்சநீதிமன்றம்தான் இடஒதுக்கீடு சம்பந்தமாக முடிவு செய்ய முடியும் என்ற ஒன்றிய அரசுத் துறைகளின் வாதங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்றும், ஏற்கெனவே ‘நீட்’ தேர்வில், இட ஒதுக்கீடு – மெடிக்கல் கவுன்சில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அபயநாத் வழக்கு போன்றவற்றிலும், ராஜேஸ்வரன், ஜெயக்குமார் வழக்குகளிலும்,  முன்பு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டியும், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தர அரசமைப்புச் சட்டப்படியும் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பு கூறினர்- இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்னொரு முக்கிய கருத்தைத் தெளிவுபடுத்தி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட முடியாத ஒன்று என்று திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டிருக்கிறது!

இது சம்பந்தமாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல வந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15 விழுக்காடு, 7.5 விழுக்காடு, உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (ணிகீஷி) 10 விழுக்காடு, மாற்றுத் திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு என்று வரும் போது மொத்தக் கூட்டலில், 50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பது – இனி எடுபடக் கூடிய வாதமாகாது என்பது தெளிவாகி விட்டது.

காலதாமதம் செய்யாமல்…

இத்தீர்ப்பின்படி, ஒன்றிய அரசு, மூன்று மாதத்திற்குள் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சம்பந்தமாக ஒரு கமிட்டி அமைத்து முடிவு செய்ய வேண்டும். சமூகநீதியை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு மனம் வைத்தால், ஒரு வாரத்திற்குள் செய்ய முடியும் என்பதை 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வரலாறே நன்கு உணர்த்தும். எனவே, காலதாமதம் செய்யாமல், அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றம், அதன் முதல் அமர்வில் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க, சமூகநீதியின் மைல்கல் போன்ற இந்தத் தீர்ப்பு அந்நீதிபதிகளின் ஆழ்ந்த சட்டப் புலமைக்கும், சமூகநீதியின்பால் உள்ள நியாயங்களின் நேர்மையையும் சட்டப்படி விளக்கியிருக்கிறது.

69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதே சரியானது _ சட்டப்படியானது!

மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் _அவர்களே ஒப்புக் கொண்டபடி ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை _ தமிழ்நாட்டில் 1993 ஆண்டு 9ஆம் அட்டவணைப் பாதுகாப்பில் சட்டமாகி, அமலில் உள்ளபடி 69 சதவிகிதப்படி இடங்களை பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கூறியது. ஒரு கமிட்டி அமைத்து மூன்று மாதங்களில் தர ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது. வரும் 2021ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத ஒன்றிய அரசு

அதற்குப் பிறகு ஒன்றிய அரசின் மருத்துவ சுகாதாரத் துறை ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறி, பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை ஏற்க மறுத்தே வந்தது.

ஒரு கட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு என்றும் தயங்காது கூறியது.

தி.மு.க.வின் அவமதிப்பு வழக்கு!

எனவே, தி.மு.க. நீதிமன்ற அவமதிப்பு  வழக்கைத் தொடுத்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒரு மாதத்திற்குள் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை பதில் அளிக்கவேண்டும் என்று கண்டிப்பான ஆணை வெளியிட்டது. அதன் பின்னும் மதிக்கவில்லை. மறுமுறை மேலும் அவகாசம் கேட்டபோது, மீண்டும் ஒரு மாதம் அவகாசம் தந்து, அதற்குள் முடிவு தெரிவிக்க கண்டிப்பான உத்தரவு போட்டது நீதிமன்றம்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள், டில்லியில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்துப் பேசி, வற்புறுத்திய கோரிக்கைகளில் இதுவும் முக்கிய இடம்பெற்றது.

இதனை நாடாளுமன்றத் தி.மு.க. உறுப்பினர்களும், அதன் தலைவர்

டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவையில் அதன் தலைவர் திருச்சி சிவா, மூத்த வழக்குரைஞர் வில்சன் போன்றவர்களும் வலியுறுத்தினர்.

ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 26ஆம் தேதி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும். அதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவிகித இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

27 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் 1500 ஓ.பி.சி. மாணவர்களும், முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 2500 ஓ.பி.சி. மாணவர்களும் பயன்பெறுவர். அது போன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் 550 மாணவர்களும், முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 1000 மாணவர்களும் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு – தமிழ்நாடு பெரியார் மண்தான் என்பது மீண்டும் நிரூபணம்’’  – தமிழர் தலைவர் கி.வீரமணி பெருமிதம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை முழுமையாக செயல்படுத்தியதாகாது என்றாலும்கூட, மூடப்பட்ட சமூகநீதிக் கதவு பிற்படுத்தப்பட்டோருக்கு கொஞ்சம் திறக்கப்பட்டிருக்கிறது – முழுமையாக அல்ல என்றாலும், இது முதற்கட்ட வெற்றி. இதன் பலன் இந்தியாவிலுள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் அனுபவிக்கக் கூடிய திராவிட இயக்க அருங் கொடையாகக் (தந்தை பெரியாரால் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்த கொடைபோல) கொள்ளலாம்! ஒன்றிய அரசுக்கும் நன்றி!

மூடப்பட்ட கதவு திறக்கப்பட்டுள்ளது, தொடங்கப்படாத புதுக்கணக்கு பிற்படுத்தப் பட்டவர்களுக்குத் தொடங்கப்பட்டுள்ளது!

சமூகநீதியின் ஒரு களத்தில் ஒரு பகுதி வெற்றி!

சமூகநீதிப் போராட்டக் களத்தில்  தொடர்ந்து நின்று போராட வேண்டியவர்களே நாம்!

இதற்குக் காரணமான அத்துணை கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் குறிப்பாக தி.மு.க., தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகள் எல்லோருக்கும் நன்றி!

கிடைத்த இடங்களைவிட பறிபோன இடங்களை எண்ணினால் நெஞ்சம் பதறுகிறது. அதுகுறித்து தனியே பிறகு எழுதுவோம்!

தமிழ்நாடு அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைவருக்கும் நமது பாராட்டுகள்! என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை:

“மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூகநீதிப் போராட்டத்தின் முதல் வெற்றி. ஆனாலும் 69% இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோ ருக்கான 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் உறுதியான நிலைப்பாடு.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் தொடர்ந்து வலியுறுத்தியும் -_ போராடியும் வந்த தி.மு.க.வின் தலைமையில் இந்த முறை ஆட்சி அமைந்தவுடன் முதன்முதலில் பிரதமரை நான் நேரில் சந்தித்தபோதும் இக்கோரிக்கையை வலியுறுத்தினேன்.

தி.மு.க. தொடர்ந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

ஏற்கெனவே பல ஆண்டுகளாக இந்த இட ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு பின்பற்றாத காரணத்தால் ஏறக்குறைய 10 ஆயிரம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்பை அகில இந்திய அளவில் இழந்தார்கள். அதில் தமிழ்நாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இப்போது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த இட ஒதுக்கீட்டின்படி நாடு முழுவதும் 1500 எம்.பி.பி.எஸ் இடங்களும், 2500 பேருக்கு முதுநிலை மருத்துவ இடங்களும் கிடைக்கும் என்று அறிவித்துள்ள நிலையில், 2021_-22ஆம் கல்வியாண்டில் இருந்து ஆக மொத்தம் 4000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கப் போவதை தி.மு.க.வின் சட்ட ரீதியான சமூக நீதிப் போராட்டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத்திருக்கிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் இந்த முதல் வெற்றியில் தமிழ்நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப் பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது அழுத்தமான உறுதியான கோரிக்கையாகும்.

அத்தகைய முழுமையான சமூக நீதியை அடையும் வரை தி.மு.க.வின் தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சமூக நீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தை தி.மு.க.வும், இந்த அரசும் தொடர்ந்து நடத்தும். “சமூக நீதியே மக்கள் நீதியாகும்.’’ இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆல் இந்தியா ஓ.பி.சி. ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி

தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு விசாரணையில் இடஒதுக்கீடு குறித்து முடிவு சொல்லவில்லையென்றால் ‘நீட்’ தேர்வையே  இந்த ஆண்டு தடை செய்யவேண்டி இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது ஒன்றிய அரசு வழக்குரைஞர் வாய்மூடி மவுனமாகத்தானே இருந்தார்!

அதே சமயம் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என உச்சநீதிமன்றத்தை நாடியது தி.மு.க. தி.மு.க.வை உயர்நீதிமன்றத்தை அணுகச் சொன்னது உச்சநீதிமன்றம். இடஒதுக்கீடு இல்லையென்றால் ‘நீட்’டுக்கே தடைவிதிப்போம் என உயர்நீதிமன்றம் எச்சரித்தது.

கடிதத்துக்கு மேல் கடிதம் கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வலியுறுத்தலுக்கு மேல் வலியுறுத்தல் என மாறி மாறிக் கொடுத்த அழுத்தத்துக்குப் பலன் இல்லையென்றாலும் நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கைக்குக் கிடைத்த பலன் இது. தமிழ்நாட்டின் விடாமுயற்சி “நீதி வெல்லும்; சமூகநீதி வாழும்’’ என நிரூபித்துள்ளது.

பா.ஜ.க. அரசின் பசப்பு!

இடஒதுக்கீட்டுக்குத் தொடர்ந்து குழிபறித்து மெல்ல மெல்ல புதைத்துவரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு 27% இடஒதுக்கீட்டுக்கு உரிமை கொண்டாடுவது உலக மகா மோசடி மட்டுமல்ல, பசப்பு வேலையாகும்.

மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்றிய ஒரே காரணத்துக்காக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்.

அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டை ஒழித்துவரும் கட்சி பா.ஜ.க.

மருத்துவப் படிப்பில் 27% இடஒதுக்கீட்டுக்கு தொடர்ந்து தடையாய் நின்றதோடு, நீதிமன்றத் தீர்ப்பைக் கூட உதாசீனப்படுத்தி, ஒதுக்கித் தள்ளிய பா.ஜ.க. அரசு, நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த பின் அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி அறிவிப்பு செய்த கபட அரசு. சந்தடி சாக்கில் உயர்ஜாதி ஏழைகளுக்கு என்று 10% ஒதுக்கிக் கொண்ட வஞ்சக அரசு அது. ஆனால், பார்ப்பனத் தாளிகைகள் 27% இடஒதுக்கீட்டை மோடி அரசின் சாதனையென்று அசல் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்கின்றன.

இது பிற்படுத்தப்பட்டோரின் உரிமை சாசனம்!

தமிழ்நாட்டுக்கும், சமூகநீதிக்கும் கிடைத்த வெற்றி இது என்றாலும், முழு வெற்றி அல்ல. இது மறைக்கப்படக் கூடாத உண்மையாகும்!

69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி, தமிழ்நாட்டுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு தருவதற்குப் பதில், 50 சதவிகிதப்படியே _ 27 விழுக்காடுதான் தர ஒப்புக் கொண்டுள்ளார்கள்!

இதன் பலன் இந்தியா முழுமையிலும் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் திராவிட இயக்கம் பெற்றுத் தந்த உரிமை சாசனம் இது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக