பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு


(இயக்க வரலாறான தன்வரலாறு - 200)

அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு

 

 

20ஆம் நூற்றாண்டில் இன அழிப்பு, நூல் அழிப்பு வரலாற்றில் மிகப்பெரும் வன்முறையாக, நிகழ்வாக கருதப்படுவது யாழ் நூலக எரிப்பு வன்செயலாகும். இந்நூலகம் கரு.கே.எம்.செல்லப்பா என்பவரால் 11.11.1933இல் அவரது வீட்டில் உருவாக்கப்பட்டது. அவர் தமது வீட்டில் இருந்த சில புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. பின்னர் 1936ஆம் ஆண்டு யாழ் நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டு புதிய இடத்தில் அமைக்கப்பட்டது.

1959ஆம் ஆண்டில் திராவிடக் கட்டிடக் கலையைத் தழுவி இரண்டு மாடி அழகிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதில் பல அரிய தமிழ் இலக்கிய நூல்கள் சேகரிக்கப்பட்டன. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக உருப்பெற்றது.

இலங்கையில் ஏற்பட்ட இனவெறியின்  ஒரு பேரழிவாக 1981ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் இரவு, சிங்கள வெறியர்களால் எரிக்கப்பட்டது. ஏறத்தாழ 97,000 அரிய தமிழ் இலக்கிய, இலக்கண மற்றும் பல்துறை நூல்கள் எரிக்கப்பட்டன. இந்த வன்முறை கும்பலின் பின்னணியில் அன்றைய இலங்கை அமைச்சர் திசநாயக்கா உள்ளிட்ட சிங்கள அரசியல்வாதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண மேயர் எனக்கு எழுதியிருந்தார். கடிதத்தில், தீக்கிரையாக்கப்பட்ட யாழ் பொது நூலகத்தை ஏராளமான பொருட்செலவில் புதிப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அம்முயற்சிக்கு உதவும்படியும், புத்தகங்கள் அனுப்பும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன், தோழர்கள் தங்களிடமுள்ள பயனுள்ள அரிய நூல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றும், அவற்றைச் சேகரித்து கழகத்தின் சார்பில் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தத் தேவையற்ற முறையில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து அதனை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை முன்னிட்டு 18.11.1982 அன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையில் டிசம்பர் மாதத்தில், தலைநகர் சென்னையில் ஒரு மாநாடு நடத்தப்படுவதை தெரிவித்து ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள படித்த, உத்தியோகத் திலுள்ள நன்றியுள்ள தமிழர்களுக்கு நமது வேண்டுகோள் என்னவென்றால், பிரமாண்டமான இம்மாநாட்டினை நடத்த நாம் திட்டமிட்டு இறங்கியுள்ள இவ்வேளையில் தாராளமாக பொருளுதவி முதல் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்திட முனைப்புடன் முன்வர வேண்டும்! என்று கேட்டுக் கொண்டேன். சென்னை சைதாப்பேட்டையில் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் 25.11.1982 அன்று திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் வீரமர்த்தினி  -_ சைதை தென்றல் திருமணம் என்னுடைய தலைமையிலும், தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்  அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவில் நான் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன். விழாவில் தென்சென்னை திராவிடர் கழகத் தலைவர் எஸ்.பி.தட்சிணாமூர்த்தி, தென்சென்னை திராவிடர் கழகத் தோழர்கள் எம்.பி.பாலு மற்றும் பி.சம்பந்தம், திருவேங்கடம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

27.11.1982 அன்று விடுதலையின் முதல் பக்கத்தில் தமிழக அரசும் மண்டல் குழு பரிந்துரைகளும் என்ற தலைப்பில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அதில், 25.11.1982 அன்று தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் அலுவலர் மேம்பாட்டுக் கழகத்தினைத் துவக்கி வைத்து தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் திரு.எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் மத்திய அரசு இந்த பரிந்துரையை அமல்படுத்த முன்வர வேண்டும் என்றும் வற்புறுத்தியிருந்தார்.

மண்டல் கமிஷன் 27 சதவீதம் இடஒதுக்கீடு தேவை என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு இப்போது 50 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தி வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசின் 50 சதவீதம் இடஒதுக்கீடு  இதன் காரணமாக பாதிக்கப்படக் கூடாது என்று தமிழ்நாடு மத்திய அரசிடம் வலியுறுத்தி யுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களது இந்தப் பிரகடனம் _ தமிழக அரசின் பிரகடனக் கொள்கை நிலை என்றே நாம் கொள்கிறோம். அப்படி நாம் கருதுவது சரி என்றால், தமிழக அரசின் நிலையை நாம் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

27.11.1982 அன்று தஞ்சை_வல்லம், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கில் திராவிடர் கழகத்தின் சார்பில், சுயமரியாதை குடும்பங்களின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெகுசிறப்பாக நடந்த நிகழ்ச்சியில், விழாவில் அனைவரையும் வரவேற்று அன்றைய கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர்கள் உலகில் எங்கெங்கோ வாழ்கிறார்கள். அதுவும் மற்றவர்களுக்கு உதவக்கூடிய அளவுக்கு சிறப்புடன் பல நிலைகளில் உயர்ந்து வாழ்கிறார்கள்.

இங்கே சொந்த நாட்டில் உள்ள தமிழர்கள்தான் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறோம். உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். எந்தெந்த நாட்டில் எல்லாம் தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்று ஓர் ஆய்வுகூட நாம் நடத்தலாம்.

அய்யாவின் சிந்தனை எல்லோர்க்கும்தானே அவரின் உழைப்பு அனைவருக்கும்தானே. துக்ளக் ஆசிரியர் சோ என்னிடம் பேட்டி கேட்ட போதுகூட நான் சொன்னேன்; ஒரு கேள்வியின்போது நீங்கள் என்னையும் முஸ்லீம்களையும் முட்டிவிடுகின்றீர்கள் என்று.

கருத்துகளால் வேறு படுகிறோம் என்பதல்ல, ஒவ்வொருவரும் சிந்திக் கின்றோம்; எனவே, இந்தப் பிரச்சினை _ இது கருத்துத் திணிப்பல்ல. நாம் அனைவரும் இன உணர்வுடன் ஒரு குடும்பம் என்ற நிலைபெற வேண்டும். அய்யா _ மனிதாபிமானத்தை வலியுறுத்தினார். நமது இயக்கமே மனிதாபிமான இயக்கம்தான்; எல்லோரையும் நேசிப்பது உண்மையானால் இனமானம், இன உணர்வு பேசுவது முரண்பாடல்லவா? என்று சிலர் கேட்கின்றனர். முரண்பாடாகத்தான் தோணும். ஒரு தெருவில் எல்லோரும் ஒன்றாக இருக்கின்றோம், உண்மைதான். அதற்காக நான் என் வீட்டுக் கதவைச் சாத்தக்கூடாதா? அப்படி சாத்தினால் தப்பா? அல்லது சண்டை என்று அர்த்தமா?

கதவு இருக்கிறது சாத்துகிறேன். எப்ப நான் கதவை சாத்தாமல் இருப்பேன் என்றால் எப்போது கதவே இல்லை என்கிற நிலை வருகிறதோ அப்போது. என் வீட்டிலும் கதவு இருக்கிறது. அதுவரை கதவைச் சாத்துவது அவசியம்தானே! இவ்வாறு குறிப்பிட்டேன்.

05.12.1982 அன்று சென்னை சாலி கிராமத்தில் விடுதலை இல்லத்தைத் திறந்து வைத்து உரையாற்றினேன். நண்பர் கவிஞர் வைர.சிகாமணி இல்லத் திறப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

இயக்கத்திற்கு விடுதலை இல்லம் என்று பெயர் சூட்டியிருப்பதைவிட இன்று இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய குட்டிமணிதான் இந்த இல்லத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பதுதான் இந்த இல்லத்தின் சிறப்பு.

தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும் ஒன்று சேரவிடாமல் தடுக்கும் சூதுகளையும் சூழ்ச்சிகளையும் முறியடிக்கவும், இரு கரங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கப்பட வேண்டியதை வலியுறுத்தியும் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு தலைநகர் சென்னையில் 11.12.1982 மற்றும் 12.12.1982 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு என்பதை விளக்கி இதில் பிற்படுத்தப்பட்ட _ தாழ்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்க வசதியாக 11.12.1982 அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்தது. 10.12.1982 நாளிட்ட விடுதலையில் இதனை வரவேற்று நன்றி தெரிவித்து அறிக்கை எழுதினேன். சென்னை பெரியார் திடலில், 11, 12.12.1982 ஆகிய இரு நாட்களும் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் _ பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு வெகுவிமரிசையாக முதல் நாள் மாநாடு எழுச்சியுடன் துவங்கியது. மகத்தான ஊர்வலமொன்று கடற்கரை சீரணி அரங்கிலிருந்து _ கழக தொழிலாளர் அணிச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் தி.இராமதாஸ் தலைமையில் புறப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் ஊர்வலத்தில் அணி வகுத்தனர். கழகத்தின் பல்வேறு அணியினரும், ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி வந்தனர். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மாநாட்டில் பங்கேற்ற காட்சியைத்தான் இங்கு காண முடிந்தது. மராட்டியம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், அசாம், கோவா, கேரளா, உ.பி., டில்லி, பீகார் மாநிலங்களிலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றதோடு தமிழ்நாட்டில் தந்தை பெரியார் உருவாக்கிய ஒடுக்கப்பட்டோர் இயக்கம் எப்படி வலிமை பெற்றிருக்கிறது என்பதை நேரிலே கண்டு உணர்ச்சி பெற்று அவர்கள் மாநிலங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். கருஞ்சட்டைப் படையினரும், அரசு ஊழியர்களும் அணிவகுத்து வந்த காட்சியைக் கண்ட வடமாநிலத் தலைவர்கள் மிகவும் வியந்து பாராட்டினர்.

மாநாட்டில் பேசிய சந்திரஜித் யாதவ் அவர்கள் _ இப்படிப்பட்ட ஓர் எழுச்சியை _ பேரணியை இப்போதுதான் நான் முதல்முறையாகப் பார்த்தேன் என்று கூறியபோது, திடல் முழுவதும் நிரம்பியிருந்த மக்கள் இடிமுழக்கம் போல் கரவொலி எழுப்பினர்.

மேனாள் பீகார் முதலமைச்சரும், தாழ்த்தப்பட்டோர் நலக் கமிஷனருமான பாஸ்வான் சாஸ்திரி அவர்கள் உடல் நலமில்லாத நிலையிலும் இரண்டு நாள் மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்தப் பிரச்சினைக்கு உயிரே போனாலும் பரவாயில்லை என்று என்னிடத்தில் அவர் கூறினார். இன்றைக்கு இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் _ பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினைகளுக்கு இருக்கும் ஒரே தீர்வு பெரியார் காட்டிய வழிதான் ஒரே வழி என்று அவர் பிரகடனப்படுத்தினார்.

அடுத்துப் பேசிய, தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஒன்றியத் தலைவரும் முன்னாள் டில்லி முதலமைச்சரும் மாநாட்டுத்  தலைவரும் பிரம் பிரகாஷ் பேசுகையில், காந்தியை இந்த நாட்டின் தந்தை என்று சொன்னார்கள். நான் சொல்கிறேன்; தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் இயக்கத்தின் தந்தை, தந்தை பெரியார்; அவர்தான் இந்தியாவின் மார்க்ஸ்; அவர்தான் இந்த நாட்டில் சுரண்டப்படும் மக்களுக்கான தத்துவ போதகர் என்று பூரிப்போடும் உணர்ச்சியோடும் பிரகடனப்படுத்தினார்.

ஜனதா ஆட்சிக் காலத்தில் தந்தை பெரியார் தபால்தலை வெளியிடுவதற்குக் காரணமாக இருந்த, அப்போதைய மத்திய தபால்துறை அமைச்சர் பிரிஜ்லால்வர்மா பங்கேற்று உயர்ஜாதிக்காரர்களின் மிரட்டல்களை முறியடித்துதான் தபால்தலைக் கொண்டு வந்ததை பெருமையோடு நினைவு கூர்ந்தார்.

மண்டல் கமிஷன் உறுப்பினர் சுப்ரமண்யம் பேசுகையில், சட்டரீதியாக அமைக்கப்பட்ட இந்தக் கமிஷனின் பரிந்துரையை அமல் செய்ய வேண்டியதுதான் சட்டரீதியான ஓர் அரசின் கடமை என்பதை எடுத்துக்காட்டி, அதற்குப் பெரியாரின் மண்தான் வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நாடாளுமன்ற தி.மு.க. துணைத் தலைவர் சி.டி.தண்டபாணி பேசுகையில், இதுபோன்ற மாநாடுகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப் பட்டோரும் சூத்திரர்கள்; சூத்திரர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் வலியுறுத்திய கருத்து என்பதை தெளிவுப்படுத்தினார்.

அடுத்துப் பேசிய பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்ப்பூரிதாகூர் ஆற்றிய ஆங்கில உரையைக் கேட்டபோது, தந்தை பெரியாரின் கொள்கை வீச்சுகள் இந்தியா முழுமைக்கும் சக்தியோடு ஊடுருவி நிற்கிறது என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தலைவர் பெரியார் என்று குறிப்பிட்ட அவர் பார்ப்பனர்கள் முதலமைச்சர்களாக இருக்கும் வரை இந்த நாட்டில் இடஒதுக்கீடு கிடைக்காது. பார்ப்பனர் ஒருவர் பிரதமராக இருக்கும்வரை மத்திய அரசில் இடஒதுக்கீடு கொண்டுவர மாட்டார்கள்; இன்றைக்கு ஒடுக்கப் பட்டோருக்கு மிகப்பெரிய எதிரி பார்ப்பனீயம் தான்; எனவே பார்ப்பனீயத்தை ஒழித்துக்கட்டத் தயாராவீர் என அவர் அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநிலத் தலைவர் அப்துல் சமது எம்.பி. தமது அழகிய தமிழால் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து சந்திரஜித் யாதவ், வெங்கலக் குரலில் ஆற்றிய எழுச்சி முழக்கம், கூட்டத்தைக் கவர்ந்து இழுத்தது. பெரியார் கருத்துக்கள்தான் எங்கள் வடமாநிலங்களுக்குத் தேவை என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை முன்மொழியுமாறு மாநாட்டுத் தலைவர் பிரேம்பிரகாஷ் கேட்டுக்கொள்ள, நான் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தேன். நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி எழுச்சி உரையாற்றினேன்.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் பஸ்வான் தீர்மானத்தை வழிமொழிந்து சிங்கமாக கர்ஜித்தார். தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டி அடிக்க முடியும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் அஜித்குமார் அவர்களும், ஆந்திர மாநில இ.காங்கிரஸ் மேலவை கொறடா சக்கரபாணி அவர்களும் தீர்மானத்தை வழிமொழிந்து உரையாற்றினர்.

இறுதியில் நிறைவு உரையாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார். வடமாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் குரல் கொடுக்க நாங்கள் நிச்சயம் வருவோம் என்று உறுதியளித்தார்.

வர இருக்கும் தேர்தல்களில், மண்டல் குழு பரிந்துரைகளை தேர்தல் அறிக்கை மூலமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கே ஓட்டளிக்க வேண்டும் என்ற முடிவை ஒடுக்கப்பட்ட சமுதாயம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசிடம் வாதாடி போதுமான கால அவகாசம் கொடுத்தபிறகும், போராட்டம் நடக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் போராட்ட அணியில் தி.மு.கழகம் நிற்கும் என்றும் கலைஞர் பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிய செயலாளர் ஜெய்பால்சிங் கஷ்யப் நன்றி தெரிவித்து, உணர்ச்சி உரை நிகழ்த்தினார்.

இந்தியாவில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட சமுதாயம் தந்தை பெரியார் கொள்கை வழிக்கு வரத் துடிக்கிறது. தந்தை பெரியார் கொள்கைதான் இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான ஒரே வழி; பெரியாரின் தத்துவங்கள் _ பார்ப்பனர்களின் கட்டுப்பாடான இருட்டடிப்புகளை மீறி நாடெங்கும் ஒளிவீச ஆரம்பித்துவிட்டது என்ற உண்மையை _ நாட்டுக்கு இந்த மாநாடு உணர்த்திவிட்டது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்கு வழிகோலும் மாநாடாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கையையும் உணர்ச்சியையும் ஊட்டும் மாநாடாகவும் இந்த மாநாடு அமைந்தது மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

19.12.1982 அன்று திராவிடர் இயக்கத்தின் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மணிவிழா நிகழ்ச்சி பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. திடல் முழுவதும் மக்கள் கடல் வழிகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே இருந்தது. 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பேராசிரியர் அவர்கள்,  தந்தை பெரியார் _ அம்மா, பேரறிஞர் அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கலைஞர், பேராசிரியர் மற்றும் தி.மு.க. தோழர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்தனர். நான் அவர்கள் அனைவரையும் வரவேற்று தந்தை பெரியார் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை சுற்றிக் காண்பித்தேன். பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் எனக்கு, சால்வை போர்த்தி பகுத்தறிவாளர் டைரி, பேனா வழங்கினார்.

அப்பொழுது என்னுடன் விடுதலை நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம், வடஆற்காடு மாவட்டக் கழக செயலாளர் ஏ.டி.கோபால் மற்றும் பல கழகத் தோழர்கள் உடனிருந்தார். மணிவிழாவில் ஏற்புரை ஆற்றிய பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், தமிழர் சமுதாய உணர்வுகளைக் காப்பதே என் வாழ்நாள் லட்சியம் என்று கூறினார். மேலும் பேசுகையில், எனக்கு வழிகாட்டுவதற்கு இனி வேறு ஒருவன் வரமுடியாது. எனக்கு அறிவூட்டுவதற்கு இன்னொரு ஆசான் தமிழகத்தில் அல்ல; உலகத்திலேயே பிறக்க முடியாது. எனக்கு நெறி கற்றுத் தருவதற்கும் ஓர் அரசியல்வாதி கிடையாது. தந்தை பெரியாரிடத்தில் பயிற்சி பெற்று _ தன்மானம் பெற்றேன். மானமுள்ள மனிதனாக ஆனேன். அண்ணாவிடத்தில் அரசியல் தொண்டனாக ஆனேன். வள்ளுவரிடத்தில் திருக்குறள் பயின்றேன். எனது உள்ளத்தில் ஓரளவுக்கு தெளிவுபெற்றேன் என்று குறிப்பிட்டார்கள்.

விழாவில் நான் உரையாற்றியபோது, திராவிட இயக்கத்தின் பேராசிரியர் அவர்களுக்கு மணிவிழா! தமிழ் இனம் தலைதாழக் கூடாது என்பதற்காகவே அல்லும் பகலும் பாடுபடும் நமது பேராசிரியர் அவர்களது பணி, இன்றைய தமிழ்நாட்டிற்குத் தேவையானதொரு முக்கியப் பணியாகும்.

அய்யாவின் அறிவியக்கத்தில் சேர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த நாள் முதல் அண்ணா கண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றும் இந்நாள் வரை அவரது உழைப்பு, தமிழினத்திற்கு இனமானம் உண்டாக்குவதற்கே என்றால் அது மிகையல்ல!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், மாணவராக பயின்று கொண்டிருந்தபோதே பல மாணவ இளைஞர்களை அய்யாவின் சுயமரியாதை இயக்கத்திற்கு ஈர்க்கும் பெரும்பணியை இடையறாது செய்தவர்!

கழகப் பிரச்சாரங்களுக்காக வெளியூர்களுக்கு செல்வதற்கு அவர்கள் தயங்கியதே கிடையாது. இளந்தாடி நெடுஞ்செழியன், டார்பிடோ ஏ.பி.ஜனார்தனம் ஆகியோர் இவருடன் பல மேடைகளில் ஒன்றாகத் தோன்றி பேசிடும் இளஞ்சிங்கக் குட்டிகளாவார்கள்.

நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் கடலூரில் நடக்கும் பொதுக் கூட்டங்களை இவரையும் இளந்தாடி நெடுஞ்செழியனையும் அழைத்து நடத்துவார்; அப்போது இவர்களை நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன். பிறகு, ஈரோட்டில் அய்யா அவர்கள் நடத்திய மாணவர் பயிற்சி முகாம் இவைகளின்போது அங்கேயும் கலந்துகொண்டபோதும் கண்டு மகிழவும் அவர்களது சொல்லாற்றல், சிந்தனைத் தெளிவு கண்டு மகிழவுமான வாய்ப்புகள் அநேகம் உண்டு.

பேராசிரியர் வாதங்கள் எப்போதும் எவராலும் மறுக்கப்படாத வகையில் தர்க்கரீதியான வாதங்களாகவே அமைந்து இருக்கும்! அது காரணமாகவே பல்வேறு இளைஞர்கள் விவரம் தெரிந்த தமிழ் மக்கள் இவர்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இவர்களை பல்கலைக்கழக மாணவப் பருவ வாழ்க்கையில் மலர்தேடும் வண்டுகள் போல மொய்க்க ஆரம்பித்தனர்.

அவரது நுண்ணறிவு, அவரது ஆற்றல் இன்றும் என்றும் தமிழினத்திற்குக் காவல் அரணாகக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அவர் மணிவிழா நம் இனவிழா! அவர் வாழ்க! என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்காட்டி மணிவிழா உரையை நிறைவு செய்தேன். ஏராளமான தி.மு.க. தோழர்களும், தி.க. தோழர்களும், பொதுமக்களும் பெருமளவில் கூடியிருந்தனர்.

 

(நினைவுகள் நீளும்)

- உண்மை இதழ், 16-30.4.18

முதல் திருத்தத்தின் மூலவர் காமராஜர்!




Published :  15 Jul 2014  09:00 IST


Updated :  15 Jul 2014  11:15 IST

சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் முதல் மந்திரியாக ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் 1947-ல் பதவியேற்ற பிறகு, 1928-ல் பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைப் பின்வருமாறு திருத்தி, ‘மொத்த உத்தியோகம் 14 என்றால், பிராமணருக்கு 2, கிறிஸ்துவருக்கு 1, முஸ்லிமுக்கு 1, ஆதிதிராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, மற்ற பிராமணர் அல்லாதாருக்கு 6 என்ற வீதத்தில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டார். 'காங்கிரஸ் ஆள்கிறதா? தாடி இல்லாத ராமசாமி ஆள்கிறாரா?' என்கிற குரல்களைக் கிளப்பிய மாற்றம் இது.


இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண அரசு, 24.03.1947 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை மூலமாக, 14 பணியிடங்கள் இருந்தால், அவற்றில் இரண்டை, பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்தது. ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரின் தலைமையிலான சென்னை மாகாண அரசுதான், இந்தியா விலேயே முதன்முறையாகத் தனி ஒதுக்கீடு வழங்கியது.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 21.11.1947 அன்று பிறப்பித்த அரசு ஆணையின்படி, இதற்கு முன் 12 என்று கணக்கிடப் பட்ட பணியிடங்கள் 14-ஆக உயர்த்தப்பட்டு, உயர்த்தப்பட்ட இரு பணியிடங்களும் பிராமணர் அல்லாத, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வழங்கப்பட்டு, ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

நீதிமன்றம் போட்ட தடை


இந்தியா குடியரசு நாடாகி, இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு பிராமண மாணவர்கள் வகுப்புவாரி ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஒதுக்கீட்டு ஆணை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதி மற்றும் 29(2)-வது விதி ஆகியவற்றுக்கு முரணானது' என்றும், ‘தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்' என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய கமிட்டியில் இடம்பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரே இந்த வழக்கில் வாதிகளுக்காக வாதாடினார். 1928 முதல் ஓரளவுக்காவது நடைமுறையில் இருந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதிக்கும் 29(2)வது விதிக்கும் முரணானது' என்று சொல்லி ரத்துசெய்து உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சென்னை மாகாண அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது, ‘கம்யூனல் ஜி.ஓ. செல்லாது' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்.

பெரியார் நடத்திய மாநாடும் பேரெழுச்சியும்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் விளையக்கூடிய பேராபத்தைத் தடுக்கத் திட்டமிட்ட பெரியார், 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ. மாநாடு' ஒன்றைக் கூட்டினார். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் பெரியாருக்கு ஆதரவு தந்தார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு பிரிவினரும்கூட பெரியாரின் நியாயமான கோரிக்கைக்கு மறைமுகமான நல்லாதரவு காட்டினர்.

தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 14.08.1950 அன்று மாணவர்கள் களத்தில் இறங்கினர். சென்னை மாகாணம் முழுவதிலும், ‘அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்' அல்லது ‘அரசியல் சட்டம் ஒழிய வேண்டும்' என்ற கோஷம் தலைதூக்கியது. இந்தத் தீர்ப்பால், மக்களுக்கு ஏற்பட இருக்கிற ஆபத்தை உணர்த்துகிற வகையில், அறிஞர் அண்ணா அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘பொன் விலங்கு' என்ற தலைப்பில் நூலாக 1953-ல் வெளியிடப்பட்டது. அதில், “30 ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்லறிவாளர்கள் பேசிப் பேசி ஆதரவு திரட்டினர். அந்த வகுப்புவாரி முறை, இதோ சட்ட விரோதம் என்று ஆகிவிட்டது… அமைச்சர்களே என்ன செய்யப்போகிறீர்கள்? சமூக நீதியைக் காக்கப் போரிடப் போகிறீர்களா? அல்லது சந்துபொந்து தேடி அலையப்போகிறீர் களா? நேர்மையாளர்களே! நாட்டுத் தலைவர்களே! நிலைமையைக் கவனியுங்கள். எதிர்கால வேலைத் திட்டம் என்ன?” என்று உரிமைக் குரல் எழுப்பியிருந்தார் அண்ணா.

குரலைச் செயலாக்கிய காங்கிரஸ்

மக்கள் சக்தியின் வலிமையையும், இந்தக் கோரிக்கையின் நியாயத்தையும் இந்திய அரசு உணர வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. ஜனநாயகவாதியான பிரதமர் நேரு, உண்மை நிலையை அறிய, காமராஜரைக் கலந்தாலோசித்தார். காமராஜர் தந்த தெளிவான ஆலோசனைக்குப் பிறகு, இந்திய அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் முதல் திருத்தத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

அரசமைப்புச் சட்டத்தின் 1951-ம் ஆண்டு செய்யப்பட்ட முதல் திருத்தம், 15-வது விதியின் 4-ம் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அந்தத் திருத்தம் ‘இந்த 15-வது விதியில் உள்ள எதுவும், அல்லது 29(2)-ல் கண்ட எதுவும், சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய குடிமக்களுக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைசாதி மக்களுக்கும் முன்னேற்றம் அளிக்கக் கருதி, மாகாண அரசாங்கம் தனிச் சலுகை வழங்குவதற்காகச் செய்யும் எந்த ஏற்பாட்டையும் தடை செய்யாது' என்பதாகும்.

சமூகநீதியை முன்னெடுத்த மூலவர்

இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு, பிற்பட்ட வகுப்பினருக்கு 25% இடஒதுக்கீடு கிடைத்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி 15% இடஒதுக்கீடு கிடைத்தது. ஆக மொத்தம் 41% இட ஒதுக்கீடு உத்தியோகங்களிலும் கல்வி நிலையங்களிலும் கிடைத்தது. எனினும், இந்த ஏற்பாட்டில் தம் லட்சியம் நிறைவடையாததை உணர்ந்த பெரியார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, பிராமணர் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் ஜனத்தொகையின் அடிப்படையில் விகிதாச்சாரப்படி கல்வி மற்றும் உத்தியோகத் துறைகளில் அரசியல் சட்டரீதியாக இடஒதுக்கீடு செய்துதர வேண்டும்' என்று பேசியும் போராடியும் வந்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பெற்ற முதல் திருத்தத் துக்குப் பிறகு, பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை மீண்டும் புதிதாகப் பிறப்பித்துச் செயல்படுத்தியது.

காலம்காலமாகத் தமிழ்ச் சமுதாயம் அனுபவித்துவந்த இடஒதுக்கீட்டு உரிமையைக் காக்கப் பல்வேறு வகைகளில் தொடர்ந்து போராடிய பெரியார் - அரசமைப்புச் சட்டத்தில், முதல் திருத்தம் கொண்டுவருவதற்குத் தூண்டுகோலாக இருந்த காமராஜர் - இப்பிரச்சினை குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதி மக்கள் கருத்தைத் திரட்டிய அண்ணா ஆகிய இம்மூவருமே முதல் திருத்தம் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தார்கள். அன்று பிரதமர் நேருவோடு காமராஜருக்கு இருந்த அரசியல் நெருக்கத்தின் காரண மாகவே நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற முடிந்தது. அவ்வகையில், ‘முதல் திருத்தத்தின் மூலவர்' என்று காமராஜரைக் குறிப்பிடுவது எத்தனை பொருத்தம்!

- ஆ. கோபண்ணா, பத்திரிகையாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர், ‘காமராஜ் - ஒரு சகாப்தம்’ என்ற நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: desiyamurasu@gmail.com

புதன், 1 ஆகஸ்ட், 2018

பாஜக ஆளும் உ.பி.யில் தாழ்த்தப்பட்ட பாஜக பெண் எம்.எல்.ஏ. வருகைக்குப் பிறகு கோவில் சுத்தப்படுத்தப்பட்டதாம்!



லக்னோ, ஆக.1 உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண் எம்.எல்.ஏ. ஒருவரின் வருகைக்குப் பிறகு கோவில் சுத்தப்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட் டத்தில் உள்ள முஸ்கரா  குர்த் கிராமத்தில் த்ரும் ரிஷி கோவில் உள்ளது. மகாபாரத காலத்தில் இருந்து இருப்பதாக கூறப்படும் இந்த் கோவிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளூர்வாசிகளால் பின்பற்றப்படுகிறது. அப்படி மீறி நுழைந்தால் அந்த கோவில் மாசுபட்டு விடும் என்ற நம்பிக்கையாம்.

இந்த தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனிஷா அனுராக். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் கடந்த 12-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த பொழுது அந்த கோவிலுக்கு வருகை புரிந்துள்ளார்.

ஆனால் அவர் வந்து சென்ற பிறகு அந்த கோவிலானது  கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கோவில் சிலைகள் அனைத்தும் அருகில் உள்ள பிரயாகை நகருக்கு ‘தோஷம்‘ நீக்குவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த தகவல் வெளி யாகி தற்பொழுது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மனிஷா அனுராக் இது பெண்களை அவமதிக்கும் செயல் என்றும், அரைகுறை அறிவுள்ளவர்களின் நடவடிக் கையென்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 - விடுதலை நாளேடு, 1.8.18

மருத்துவப் படிப்பில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி



புதுடில்லி, ஆக.1 தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பொது ஜாதி பிரிவை  சேர்ந்த மாணவர்கள் முத்து ராம கிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன் றத்தில் ஒரு மனு தாக்கல் செய் யப்பட்டது. அதில், ‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992இல் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும், 69 சதவிகித இட ஒதுக் கீடு கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரி யில் சேரும் உரிமை பாதிக்கப் பட்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற் படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் ஆகி யோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.

அதோடு, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018 -

20-19 கல்வியாண்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும், கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும் என மனு வில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப் பில், கே.எம். விஜயன், ஜி. சிவ பால முருகன் ஆகியோர் ஆஜரா கினர். தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர், சேகர் நாப்தே மற்றும் யோகேஷ் கண்ணா ஆஜராகினார்.

இந்த வழக்கில் இன்று (1.8.2018) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 69 சதவிகித இட ஓதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர். கூடுதல் சீட் ஒதுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக் குரைஞர் விஜயன் குரலை உயர்த்தி வாதிட்டதாகவும், நீதி மன்றத்தில் அவ்வாறு வாதிட கூடாது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.

1994ஆம் ஆண்டு தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றி, 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தியது. இதற்கு அப்போதைய குடியரசு தலை வரும் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 1.8.18

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்குக் கிடைத்த முதல் வெற்றி

தந்தை பெரியார் தொடங்கி, முதலமைச்சர் கலைஞர் சட்டமியற்றிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்குக் கிடைத்த முதல் வெற்றி


மதுரையில் நியமனம் செய்ததுபோல ஆகம பயிற்சி பெற்றுக் காத்திருக்கும்


அனைவரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்க!




மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் பல தடைகளுக்குப் பிறகு இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறது - மதுரையில் பார்ப்பனர் அல்லாதார் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இனி எந்த சட்டப் பிரச்சினையும் இல்லாத நிலையில், ஆகமப் பயிற்சி பெற்று நியமனத்துக்காகக் காத்தி ருக்கும் அனைவரையும் அர்ச்சகராக தமிழக அரசு நியமனம் செய்யவேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

1969 இல் தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம்


நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தனது தள்ளாத வயதில், முதுமையைப் புறந்தள்ளி, வயதில் அறிவில் முதியார் வாய்மைப் போருக்கு என்றும் இளையார் - உயர் எண்ணங்கள் மலரும் சோலை'' என்று புரட்சிக்கவிஞரால் வர்ணிக்கப்பட்டதற்கேற்ப 95 ஆம் ஆண்டிலும் ஜாதி- தீண்டாமை ஒழிப்புக்கான களமாக,  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கான போராட்டத்தை 1969 ஆம் ஆண்டில்  தொடங்கினார். அதற்குமுன்பே  30 ஆண்டுகளாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வேண் டும் என்பதை வலியுறுத்தியும், 1958 இல் திருச்சி ஜாதி ஒழிப்பு மாநாட்டின் முக்கிய தீர்மானமாகவும் அதனை நிறைவேற்றி வலியுறுத்தி வந்தோம் என்பதும் வரலாறு.

தி.மு.க. அரசு - மானமிகு கலைஞர் அவர்கள் முதல மைச்சராக இருந்த காரணத்தால் 1970 இல் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பனர்கள்


வழக்கமான உயர்ஜாதி பார்ப்பனர் எதிர்ப்பு; சட்ட ரீதியாக - சமூக ரீதியாக இதற்கு அமோக வரவேற்பு இருந்தபோதிலும்கூட, நேரே உச்சநீதிமன்றத்திற்கே சென்று வழக்குத் தொடுத்தனர்.

சிறீபெரும்புதூர் ஜீயர் தொடங்கி மற்ற சில அர்ச்சகர் அமைப்புகளை இணைத்தும், காஞ்சி சங்கராச்சாரியார்கள், சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தொடங்கி அனை வரும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இந்த சட்ட வியூகத்தை வகுத்து, சட்டப் போரை நடத்தினர்.

பல்கிவாலா என்ற புகழ் வாய்ந்த பிரபல மூத்த வழக்குரைஞருக்கு ஆச்சாரியார் பரிந்துரை கடிதம் கொடுத்து வாதாடும்படிக் கேட்டுக்கொண்டார். அவர்  பீஸ்' வாங்காமலேயே இலவசமாக பல நாள் வாதாடினார். 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற தனி அமர்வு இந்த வழக்கினை விசாரித்து, இதன் தீர்ப்பை மகராஷ்டிர (பார்ப் பன) நீதிபதியான ஜஸ்டீஸ் பாலேகர் தீர்ப்பை எழுதினார்.

அதன்படி தமிழ்நாடு அரசு - கலைஞரின் தி.மு.க. அரசு கொண்டுவந்த பரம்பரை அர்ச்சகர் ஒழிப்புச் சட்டம் (1970) சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

"ஆபரேசன் வெற்றி - நோயாளி செத்தார்!''


தி.மு.க.ஆட்சியினர்நாத்திகர்கள்;அவர்கள்யாரை வேண்டுமானாலும் - ஏன் கடவுள் நம்பிக்கையில்லாதவர் களையும், பிற மதத்தவர்களையும்கூட இந்து கோவில்களில் அர்ச்சகர்களாக நியமித்து அதன் புனிதத்தைக் கெடுத்து விடக் கூடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது'' என்று பொய்யுரைகளை வாதங்களாக்கினர்.

அப்படி நிகழ்ந்தால், தாராளமாக மீண்டும் இந்த உச்ச நீதிமன்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் நாடலாம் என்று கூறி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தும் - வைக்காமலும் ஒரு அரைப்புள்ளி (Semi Colon) போட்டனர்.

ஆகம விதிகள்படிதான் அர்ச்சனை நடைபெறவேண் டும் என்றும் கூறியதால், நாம் விடுதலை'யில் - ஆபரேசன் வெற்றி; ஆனால், நோயாளி செத்தார்'' என்று முழுப்பலன் உடனடியாகக் கிட்டாத ஒரு நிலை வந்தது என்றோம்.

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு...


இதற்கிடையில், தந்தை பெரியார் அவர்கள் 1973 டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்தார்கள். அவருக்குத் தமிழக அரசின் சார்பில் இறுதி நிகழ்ச்சியை அரசு மரியாதையுடன் - எவருக்கும் எளிதில் வராத துணிவுடன் அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் செய்து, மன நிறைவடைந்தார். நாட்டையே வியக்க வைத்த இந்த சாதனையை செய்து தனி வரலாறு ஒன்றைப் படைத்தார்!

பெரியார் நெஞ்சில் தைத்த முள்


பிறகு கூறினார், நமது தந்தைக்கு அரசு மரியாதை தந்தோம்; ஆனால், அவர் நெஞ்சில் இருந்த முள்ளை (அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்) அகற்ற முடிய வில்லையே'' என்று ஆதங்கப்பட்டார்; அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு, டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையில் அறிவார்ந்த சமய வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, (2006) அவர்களது  பரிந்துரைகளைப் பெற்று, சைவம் - வைணவப் பிரிவுகளுக்கு ஆகமப் பயிற்சிப் பள்ளிகளைத் தனியே அமைத்து, 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி பார்ப்பனர் தொடங்கி அனைத்து ஜாதி மாணவர்களையும் சேர்த்து பயிற்சி அளித்து 206 பேர் தயார் ஆனார்கள்.

இடையில் பத்தாண்டுகள் சிக்கல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் (உயர்ஜாதி பார்ப்பனர்) குழு உச்சநீதிமன்றத்தில் இதற்கு மீண்டும் வழக்குத் தொடுத்தனர். சுமார் 10 ஆண்டுகாலம் ஓடிற்று. இடையில் அர்ச்சகர் நியமனம் செய்யக்கூடாது என்று உறுதியை அரசிடம் நீதிமன்றம் பெற்றுக்கொண்டதால், பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத சட்டச் சிக்கல் ஏற்பட்டது.

2015 இல்  இறுதி விசாரணை


பிறகு அவ்வழக்கினை இறுதி விசாரணை செய்த  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 16.12.2015 இல் தமிழ்நாடு - கலைஞர் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்புக் கூறிவிட்டனர்; நமக்குக் கிடைத்த வெற்றி இது.

தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளிடையே மாறுபாடு இல்லை


இதற்கிடையில் தமிழக ஆட்சி மாற்றம் முறையே எம்.ஜி.ஆர்., செல்வி ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் ஏற்பட்டபோதும், அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை நிச்சயம் அமுல்படுத்துவோம் என்று சட்டமன்றத்திலும் - இரண்டு காலகட்டங்களிலும் உறுதியளித்தனர். எனவே, தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு இதில் மாற்று நிலைப்பாடே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேரில் வலியுறுத்தினோம்


இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2015 இறுதியில் வந்துவிட்டதை - வரவேற்று, தெளிவாக்கி திராவிடர் கழகம் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்குப் பிறகு வந்த முதலமைச்சர்கள் இருவருக்கும் (ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.) வேண்டுகோள் மனுக்களை நேரிலும், அஞ்சல் வழியிலும் அனுப்பினோம்.

தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்குக் கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைத்து சென்னையில் மாநாடு நடத்தினோம். அதற்கு முன்பு பொதுத் தேர்தலின்போது 18.4.2016 அன்று திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தில் 5000 பேர் கைது செய்யப்பட்டோம்.

இதற்கெல்லாம் இப்போது கைமேல் பலன் கிடைத் துள்ளது!

மதுரையில் முதல் நியமனம்


பயிற்சி பெற்ற 206 பேர்களில் (சிலர் மறைந்துவிட்டார்கள்) ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி பட்டியலிலிருந்து மதுரைக் கோவிலில் அர்ச்சகர் நியமனம் பெற்றது நமது நெஞ்சங்களை மகிழ்ச் செய்துள்ளன!

மருத்துவமனையில் இருக்கும் கலைஞர் கழுத்தில் வெற்றி மாலை


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நமது மானமிகு தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சூட்டப்பட்ட வெற்றி மாலை இது.

தமிழக அரசுக்கும், குறிப்பாக முதல்வருக்கும் நமது பாராட்டு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஆகமப் பயிற்சி பெற்ற மற்றவர்களையும் இதனைத் தொடர்ந்து உடனடியாக நியமனங்கள் செய்திட தவறக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

அர்ச்சகர் இடங்கள்


ஏராளம் காலியாகவே உள்ளன


(அ) தமிழ்நாட்டுக் கோவில்கள் 38,000 ஆகும். இதில் 2,000 கோவில்களில்கூட ஆகமம் தெரிந்த அர்ச்சகர்கள் இல்லை என்பதையும்,

(ஆ) வைணவ திவ்ய தேசங்கள் 108 எனப்படுபவை களில் 106 கோவில்களுக்குச் சென்று வந்துள்ள வ.வே. வாசு நம் பிள்ளை இராமானுஜாச்சாரியார் அந்த 106 திவ்ய தேசங் களில் 30 கோவில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பயிற்சி பெற்ற அனைவரையும் நியமிக்கவேண்டும்


எனவே, உடனடியாக எஞ்சிய பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டியது அவசர அவசியம்.

அடுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து ஜாதிகளி லிருந்து அர்ச்சகப் பயிற்சிப் பள்ளியை தமிழக அரசு தொடர்ந்து இயங்கச் செய்து 69 சதவிகித அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

இனி சட்டக் குழப்பத்துக்கும் இடம் இல்லை


இதில் இனி சட்டக் குழப்பத்தை யாரும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் புரிந்துகொண்டு மேலும் விரைந்து செயல்பட வேண்டும்.

உத்தரகாண்டின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 15.6.2018 அன்று (புக்கராஜ் Vs உத்தரகாண்ட் மாநில அரசு) உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது!

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நமக்கு ஏதோ சாதகமற்ற தீர்ப்புபோல குழப்பியவர்களின் வாதங் களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் முக்கிய மைல்கல்!


மெல்லக் கதவு திறந்துள்ளது. இது முழுமையாக திறக்கப்படவேண்டும். சுமார் 8 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவர்களை கருவறைக்குள்ளே அனுப்பிட வேண் டும். கேரள அரசு முந்திக்கொண்ட இந்தப் பிரச்சினையில், அவர்களையும் முந்திட வேண்டும். தந்தை பெரியார் - கலைஞர் - திராவிடர் இயக்கம் வென்றுள்ளது!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும்

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

1.8.2018

 

(தி இந்து ஆங்கில நாளிதழில் 31.7.2018) அன்று வெளிவந்த செய்தி 7 ஆம் பக்கம் காண்க)

- விடுதலை நாளேடு, 1.8.18