பக்கங்கள்

சனி, 11 நவம்பர், 2017

கோவா மாநிலத்தில் 'சூத்திரன் பாடல்கள்' நூல் உருவாக்கியுள்ள 'தீ'



பனாஜி, அக்.29 கோவா மாநிலத்தில் இலக்கியத் துறை யில் விருது அளிக்கப்பட்ட நூலுக்கு பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நூலாசிரியர் மற்றும் பதிப் பாளர்மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்து மதத்தின் பெயரால் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிப்போயுள்ள ஜாதி மற்றும் மொழி ஆதிக்கம் குறித்து நாட்டுப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள வற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களின் தொகுப்பு நூல் Ôசுதிர் சுக்ட்Õ எனும் நூலாகும். அந்நூல் 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அந்நூலின் ஆசிரியர் எழுத்தாளர் கவிஞர் விஷ்ணு சூர்யா வாக் (வயது 52) ஆவார். பாஜகவின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவில் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் ஒரு கவிஞர். நாடகக் கலைஞர், பத்திரிகையின் மேனாள் ஆசிரியர், கருத்துப்பட ஓவியரும் ஆவார். கோவா மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள  பிற்படுத்தப்பட்ட (பந்தாரி) வகுப்பைச் சேர்ந்தவர்.

சுதிர்சுக்ட் (சுதிர்களின் பாடல்) எனும் தலைப் பில் கொங்கணி பாடல்களை அவர் தொகுத்தார். அந் நூல் 2013 ஆம் ஆண்டிலேயே பதிப்பிக்கப்பட்டும் வெளியுலகிற்கு அதிகமாக தெரியாமல் இருந்தது. கோவா மாநில அரசின் நிதியில் இயங்கக்கூடிய கொங்கணி அகாடமியின் கவிதைப் புத்தகத்துக்கான 2016ஆம் ஆண்டுக்குரிய விருதுக்கு அந்நூல் தேர்வு செய்யப்பட்டது.

அதனையடுத்து கோவா மாநிலத்தில் உயர் ஜாதியினரின் குறிப்பாக கவுட் சரஸ்வத் பார்ப்பன  வகுப்பினரின் கடுமையான எதிர்ப்பால் அந்நூல் குறித்து தகவல் தற்போது பரவியுள்ளது. கொங்கணி அகாடமியின் சார்பில் இன்னமும் அனைத்து விருதுகள் குறித்த தகவல்களும் வெளியாகாத நிலையில்,  சுதிர் சுக்ட் நூல்குறித்து சலசலப்பு ஏற் பட்டுள்ளது.

அந்நூலாசிரியரின் பாடல்களில் முக்கியமான கருத் தோட்டமாக பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளடக்கமாக உள்ளது.

கோவா மாநிலத்தில் உள்ள எளிய மக்கள் பயன் படுத்துகின்ற கிராமப்புற மக்களின் நடையில் பேச்சு வழக்கிலான கொங்கணி மொழியில் அந் நூலின் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

பார்ப்பனர்கள் தேவநாகரி எழுத்து வடிவத்தில் கொங்கணி மொழியை எழுதுவதையும், பேசுவ தையும் தரமான கொங்கணி மொழி என்று கூறி வருகிறார்கள். சமஸ்கிருத மயப்படுத்தி எழுதியும் வருகிறார்கள்.

அந்நூலின் பாடல்கள் பேச்சு வழக்கு மொழியில் அமைந்துள்ளதால், பார்ப்பனர்களின் கடும் எதிர்ப் புக்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது.

கோவா புத்தக விவாதக் குழு உறுப்பினர் கல்வி யாளர் அகஸ்டோ பிண்டோ அந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

அந்நூலின் முகப்பு பாடலாக கீழ்க்கண்ட பாடல் இடம் பெற்றுள்ளது. சுதிர் சுக்ட் (பந்தாரி வகுப்பைச் சேர்ந்தவர்கள் சுதிர்களுக்கு பிறந்தவர்கள் அல்லது சுதிர் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுவர்)

“நான் ஒரு சுதிர்

என் பாட்டன் ஊமை

என் தந்தையும் செவிடாக இருந்தார்

நான்தான் உண்மையில் இந்த மண்ணின் பூர்வ குடி

வெளியிலிருந்து வந்தவர்கள் வயிறு நிரப்பிக்கொண்டனர்

ஆனால், நான் எப்போதுமே பசியில்.

இந்த மண் ஞானத்துக்கான தலையாய ஊற்றாக தகுதியுடன் இருந்தது

தென்காசி என்று அழைக்கப்படுவதற்கு முன்பாக

பரசுராம் என்பவனால்...

அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில்

நான் கோபாவேசமாவேன்

ஜாதியம் என்னும் புழுவை கோவாவுக்கு முதலில் கொண்டு வந்தான்’’

மேலும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:

“பரசுராமன் அம்பு எய்தினான்

கடலுக்குள் சென்று திரும்பியது

இந்த கதை ஆண்டாண்டுகளாக கூறப்பட்டு வருகிறது

அவர்கள் வெகுமக்களை ஏமாற்றிவிட்டார்கள்

இதுபோன்ற பொய்களையே நிலைநிறுத்திட அவர்கள் விரும்பினார்கள்

அதாவது இந்த உலகமே அவர்களால் படைக் கப்பட்டது

நீங்கள்தான் முதலில் இருந்தவர்கள் என்றால், நீங்கள் பாவிகள்

பிறகு மகர்கள், பண்டாரிகள், கார்விக்கள், பாகிக்கள்,

கவுடாக்கள், வெலிப்புகள், தாங்கர்கள், கன் பிக்கள் என்போரெல்லாம் யார்?

யார் அவர்கள்?

இந்த மண்ணை வளமாக்க

அவர்கள் வியர்வையையும், குருதியையும் சிந் தியவர்கள்

ஆமாம், ஆமாம்.

அவர்கள் சுதிர்கள்...

நாங்கள் சுவாமிகளை பெற்றிருக்கவில்லை

மற்றும் எங்களுக்கு மடங்கள் இல்லை

கோயில் கருவறை எங்களுக்குத் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கும்

கடவுள் உங்கள் கைகளில் இருக்கிறார்

உங்களிடையே உள்ள அனைத்து வேற்றுமைகளுக் கிடையே

நீங்கள் ஒன்றுபட்டு இருக்கிறீர்கள்

கிடைமட்டமானாலும், செங்குத்தான நிலையா னாலும்

உங்கள் நெற்றியில் ஜாதி முத்திரை உள்ளது

அது உங்களை நன்றாகவே உயர்ந்தவர்கள் என்று பொருத்திக் காட்டும்

கோயில் தூண்களைவிட நீங்கள் இளைத்திருப் பீர்கள்

ரதத்தை எங்கள் தோளில் சுமக்கிறோம்

நாங்கள் தடுக்கப்பட்டு வெளியே சுற்றி நிற்கையில்

நீங்கள் கருவறைக்குள் நுழையலாம்

தலைமுறை தலைமுறையாக

சிறிது சிறிதாக சேர்க்கப்பட்ட அனைத்தும்

நாங்கள் அளிக்கின்ற இலைகளில்

அனைத்து பிரசாதங்களும் உங்களுக்கே

ஆமாம் ஆமாம்

ஏனென்றால்,

நாங்கள் சுதிர்கள்.’’

இவ்வாறு பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான எழுத்துப் போராக அந்நூல் வெளியிடப்பட்டு, பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக

'தீ'யாக பரவி வருகிறது.
-விடுதலை நாளேடு, 29.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக