பக்கங்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

கேரள அரசு எளிமையாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியுள்ளது! தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும்!

கேரள அரசு எளிமையாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியுள்ளது!

தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அவசர அறிக்கை

தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் ஒரு முக்கிய அம்சமாகவும், மனித உரிமைக் காப்பு நடவடிக்கையாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தனது போராட்டத்தின் விளைவாக தற்போது கேரளாவில் எளிமையான நியமனங்கள் மூலம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கி உள்ளது. எனவே தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை  உடனே நியமனம் செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அவசர அறிக்கை வருமாறு:

கேரளாவில் 6 தாழ்த்தப்பட்ட ('தலித்') ஜாதியினர் உட்பட 36 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ள செய்தி எல்லா ஏடுகளிலும் வந்துள்ளது!

திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மொத்தம் 62 பேர்களை அர்ச்சகர்களாக நியமிக்கத் தேர்வு செய்த பட்டியலில் S.C., S.T., OBC என்ற வகுப்புகளிலிருந்து 32 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப 20 பேர்களும், பொதுப் போட்டி என்ற திறந்த போட்டியிலிருந்து 16 பேர்களும் (36இல்) அடங்குவர்.

S.C.  வகுப்பிலிருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள் ளார்கள். தேவசம் போர்டின் தலைவர் ராஜகோபாலன் நாயர் அவர்கள் இதனை செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

1949 முதல் இந்த தேவசம் போர்டில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை - போராட்டம் வலுவானது! பல ஆண்டுகளாகவே இக்கோரிக்கை அங்கே சமூக நீதி அமைப்புகளால் வற்புறுத்தப்பட்டு வந்தது!

வருங்காலத்திலும், கொச்சியிலும்,  மலபாரிலும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நியமனங்கள், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் இதே முறை தொடர்ந்து பின்பற்றப் படும் என்று திரு. ராஜகோபாலன் நாயர் தெரிவித்துள்ளார்!

இது பாராட்டி வரவேற்கப்பட வேண்டும்; முற்போக்கு அரசு என்று கேரள அரசு காட்டியுள்ளது!

மிக எளிமையாக செயல்படுத்தியுள்ளது!

பல ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட வாய்ப்பு அளிக்கும் அரசு ஆணை  (G.O.) (தமிழ்நாடுபோல சட்டமன்றத்தில் தனியே சட்டமாக இயற்றப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத் தகுந்தது) போடப்பட்டது!

அதனை எதிர்த்து யாரும் தமிழ் நாட்டில் நடந்தது போல், அர்ச்சகர்களும், பார்ப்பனர்களும், காஞ்சி சங்கராச்சாரி போன்ற மடாதிபதிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை.

இதனால் மிக எளிமையாக, முறையாக அதனை அங்குள்ள  அரசு (கேரள மாநில) செயல்படுத்திட ஏதுவாக அமைந்தது!

மானமிகு கலைஞர் ஆட்சியில்.....

தந்தை பெரியார் அவர்கள் ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் ஒரு முக்கிய அம்சமாகவும், மனித உரிமைக் காப்பு நடவடிக்கையாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தனது போராட்டத்தைத் துவக்கியபோது, தி.மு.க. ஆட்சியின் முதல்வராக மானமிகு கலைஞர் இருந்தார்; அவர்  உடனே அய்யாவை நேரில் வந்து சந்தித்து "இதற்கென தனிச் சட்டம் ஒன்றினையே கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்திடுவோம். இதற்காகப் போராடவோ, சிறை செல்லவோ தேவை ஏற்படாது; இது தங்கள் அரசு தானே!" என்று கூறி 1970இல் பாரம்பரிய அர்ச்சகர் முறையை ஒழித்துத் தகுதி அடிப்படையில், அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் நடக்கும் என்று சட்டம் இயற்றினார் (2.12.1970). உடனே தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்,  மடாதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

பார்ப்பனர், மடாதிபதிகள் வழக்கு

இதனை உச்சநீதிமன்றத்தில் அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் எஸ்.எம். சிக்ரி, ஜஸ்டிஸ் ஏ.என். குரோவர், ஜஸ்டிஸ் ஏ.என் ரே, ஜஸ்டிஸ் டி.ஜி. பாலேகர், ஜஸ்டிஸ் எம்.எச். பெய்க் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து இச்சட்டம் செல்லும் - அரசமைப்புச் சட்டம் 25 - 26 பிரிவுகளுக்கு முரண் அல்ல என்று தீர்ப்பு தந்தனர்!

என்றாலும் 'எங்கே திமுக அரசு  நாத்திகர்களை அர்ச்சகர்களாக நியமித்து விடுவார்களோ' என்ற அச்சம் தேவையற்றது; அப்படி இருந்தால் நீங்கள் இதே நீதிமன்றத்திற்கு வந்து பரிகாரம் தேடலாம் என்று ஒரு கருத்தினையும் உள்ளடக்கினார்கள்!

இதனால் அது உடனடியாக செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது!

தனிச் சட்டம் நிறைவேற்றம்!

"தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக" இதனை வருணித்த முதல்வர் கலைஞர் அவர்கள் 2006இல் ஒரு தனிச் சட்டம் (Act 15 of - 2006) நிறைவேற்றினார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுபோட்டு வைணவ, சைவ ஆகமப் பாடங்களை நடத்தி ஓராண்டு படித்து பட்டயம் பெற்ற அனைத்து ஜாதியிலிருந்தும் பார்ப்பனர் முதல் ஆதி திராவிடர் வரை 69 சதவீகித இடஒதுக்கீடு அடிப்படையிலும், பொதுப் போட்டி அடிப்படையிலும் 207 பேர் படித்து தகுதி பெற்ற அர்ச்சகர்களாகத் தேர்வு பெற்றனர்.

இதனை எதிர்த்து தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலனசபை, ஆதி சைவ சிவாச்சாரியார் நலச் சங்கம் (மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர்கள்) உட்பட உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு 'தடையாணை' ' (Stay) பெற்று   விட்டனர்.

சட்டம் செல்லும் என தீர்ப்பு

இறுதியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015இல் ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா ஆகியோரின் அமர்வு தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

அத்தீர்ப்பில் பாரா 43-இல் கூறப்பட்டுள்ள ஒரு கருத்து, "ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன் படிக்கான சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும்.

சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செய்யப்படல் வேண்டும்" என்றும் வலியுறுத்தியது அவ்வமர்வு.

போராட்டம் 5000 பேர் கைது - சிறை

ஏற்கெனவே ஆகமங்களை பள்ளிகளில் படித்து தகுதி பெற்று தயார் நிலையில் உள்ளவர்களை உடனடியாக - இத்தீர்ப்பு எந்தத் தடையும் செய்யாததால்  தமிழக அரசு  - முன்பு சட்டமன்றத்தில் அளித்த உறுதிமொழிகளைச் செயல்படுத்திட நாம் ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் - தனியே கடிதம் எழுதி போராட்டமும் (சட்டமன்றத் தேர்தலின்போது (2016 மே 16) நடத்தி 5000 பேர் நாடு முழுவதும் கைதாகி சிறையேகினோம்!

ஏற்கெனவே எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதும்,  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் கொடுத்த வாக்குறுதி, தமிழக அரசு சார்பில் என்பதால் அது இன்றைய எடப்பாடி அரசையும் கட்டுப்படுத்தக் கூடிய உறுதிமொழியே ஆகும்.

எம்.ஜி.ஆர். நூற்£ண்டு விழாவைக் கொண்டாடுகிறபோது  எம்.ஜி.ஆர். அரசும், ஜெயலலிதா சட்டப் பேரவைக்குள் தந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் நியமனம் 69 சதவிகித அடிப்படையில் செய்வோம் என்று கூறிய உறுதிமொழியையும் செயல்படுத்தப்படுவது இவ்வரசுக்குக் கூட பெருமையாக முடியுமே!

தமிழக அரசு அலட்சியம் காட்டலாமா?

கேரளத்தில் எளிமையான நியமனங்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக்கிட நடைபெறும்போது, தந்தை பெரியார் மண்ணில் இது, சட்டத் தடைகளோ, தீர்ப்பு இடைகளோ குறுக்கே நிற்காதபோது செயல்படுத்த அலட்சியம் காட்டலாமா?

நாம் இன்றைய முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தனிக் கடிதமும் அனுப்பியுள்ளோம்.

எனவே, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் மூலம் உடனடியாக பயிற்சி பெற்ற அனைவரையும் 69 சதவிகித  இடஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்ய தாமதிக்கவே கூடாது!

இன்றேல் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து, கலந்தாலோசித்து அடுத்த கட்டத்தை அறிவித்தாக வேண்டிய கட்டாயக் கடமை திராவிடர் கழகத்திற்கு உண்டு.

எனவே தாமதிக்காமல், கேரளாவைப்போல உடனே செயலில் இறங்கட்டும் இன்றைய தமிழக அரசு!

சட்டத் தடை ஏதும் இல்லை - மறவாதீர்!

 

கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

 

சென்னை

7-10-2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக