பக்கங்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பரோடாவில் ஆலயப் பிரவேசம்


சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமஸ்தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றேயென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது.
தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர்.
பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரையாக்கினர்.
அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்ணெண்ணெய் ஊற்றிகுடி, தண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங்கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை உபயோகிக் காமல் விட்டு விட வில்லை.
அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த  உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாம லிருக்க முடியாது.
இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும் கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டு கிறோம். இதற்கு முன் போர் சமஸ்தானத்திலும் இவ்வாறே தாழ்த்தப்பட்ட சமுகத்தார்க்கும் கோயில் பிரவேசம் அளித் திருக்கின்றனர்.
அதைப்பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டு கிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்டசபையில், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதாக தீர்மானம் நிறை வேறியிருக்கின்றது.
சென்னை அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை அனுசரித்தும் பரோடா, போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்திருக்கும் உத்தரவுகளைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம்.
சுதேச சமதானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாண பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்புகிறோம்.
அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பினருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பினருக்கும் நீதி புரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.
குடிஅரசு  - துணைத் தலையங்கம் - 06.11.1932

சௌந்திரபாண்டியன் வெற்றி
சமீபத்தில் நடைபெற்ற மதுரை ஜில்லா போர்டு தேர்தலில் நமதியக்கத்தோழர் சௌந்திர பாண்டியன் அவர்கள் பெரு வாரியான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதறிய அளவிலா மகிழ்ச்சியடைகிறோம்.
பொது ஜன சேவையில் ஆர்வமும், ஊக்கமும், செல்வாக்குமுள்ளவர் பலர் வெளியே தங்கி விடுவதும், தன்னலமும், வைதிகப்பித்தும் கொண்ட சிலர் அங்கம் பெற்று பொதுநலத்தொண்டை அறவே மறந்து சுயநலமே கருத்திருத்தி பணியாற்றுவதும் இப்போதைய ஸ்தலஸ்தாபனங்களின் இயற்கையாய் போய் விட்டது.
நமது தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் முன்னர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராய் இருந்து ஆற்றி வந்த பொது நல சேவையையும், தாழ்த்தப்பட்டார் விஷயத்தில் காட்டி வந்த அனுதாபமும், வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் போய் விடாமல் அவைகளைச் சட்ட மூலமாய் அமலுக்குக் கொண்டுவருவான்வேண்டி எடுத்துக் கொண்ட பெரு முயற்சிகளும், தமிழ் நாட்டார் இதற்குள்ளாக மறந்திருக்க மாட்டார் களென்றே நம்புகிறோம்.
பொதுவாக மதுரை ஜில்லா வாசிகளும், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் தங்கள் தங்கள் நன்மைக்காக கடைசி வரை வாதாட ஒரு உண்மையும், ஊக்கமும், உறுதியும் கொண்ட இத்தகைய ஒரு அக்கத்தினரை பெற்ற பெருமைக்கு உரித்தவர்களென்றே எண்ணுகிறோம். வெற்றி பெற்ற நமதியக்கத் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு நமது மகிழ்ச்சியுரியதாகுக.
குடிஅரசு - துணைத்தலையங்கம் 07.08.1932


-விடுதலை,14.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக