பக்கங்கள்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

திருநங்கைகளுக்குச் சம உரிமை


திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வகை செய்யும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் ஏப்ரல் 24 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற மூலகாரணமாக இருந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா. திருநங்கைகளுக்குத் தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க, வகை செய்யும் திருநங்கைகள் உரிமை மசோதா 2014 மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதாவினைத் தாக்கல் செய்தபோது, அனைவருக்கும் மனித உரிமைபற்றிப் பேசுகிறோம். ஆனால் சிலர், புறக்கணிக்கப்-படுகின்றனர். பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் மனித உரிமைகள் உள்ளன.
வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்துப் பாதுகாத்து சமமான சமுதாயம் அமைப்பதற்கான சட்டம் ஏற்படுத்த நான் தாக்கல் செய்த மசோதா வழி செய்யும். திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 29 நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால் இந்தியாவில் மட்டும் இல்லை என்று திருச்சி சிவா குறிப்பிட்டார்.
பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்றுதான் ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த இந்த  மசோதா நிறைவேறியுள்ளது குறித்து திருநங்கைகளுக்காக தொடர்ந்து பணியாற்றும் பிரியா பாபு, எங்களுக்கான முக்கியமான மசோதா நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இது, மக்களவையில் கொண்டுவரப்பட்டு நடை-முறைப்படுத்தப்பட வேண்டும். பிற மசோதாக்கள் போல கிடப்பில் போட்டுவிடக் கூடாது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கான வெற்றி சாத்தியப்படும் என்றார்.
இதை வரவேற்பதோடு மட்டுமல்லாமல் இது உரிய அளவில் பயன்படக்கூடிய சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. மேலும் அவர் கூறியபோது,
வரவேற்கத்தக்க மிகவும் நல்ல விஷயம். உலக அளவில் இந்தியாவில் மட்டும்தான் திருநங்கைகள் பிச்சை எடுக்கும் நிலை உள்ளது. திருநங்கைகள் மசோதா குறித்த இடஒதுக்கீடு சட்டமாக இயற்றப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும்.
திருநங்கை எனில் பெண் எனவும் திருநம்பி என்றால் ஆண் எனவும் இந்தச் சமுதாயம் நினைத்துப் பழக வேண்டும். மூன்றாம் பாலினம் எனக் குறிப்பிடக் கூடாது. மூன்றாம் பாலினம் என்கின்றனரே, அப்படியெனில் முதல் பாலினம் யார்?
குடும்ப ஆதரவின்றி, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, இந்தியப் பிரஜை என்ற உரிமையினை இழந்து நிற்கும் எங்களுக்கு இந்த மசோதா மூலம் நன்மை கிடைக்க வேண்டுமெனில் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எங்களது அடையாள அட்டையிலும் மருத்துவச் சான்றிதழிலும் பாலின மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடப்பட வேண்டும்.
எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நாங்கள் எதிர்பார்ப்பது இலவசங்களை அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டினை மட்டுமே. அன்று, ஒடுக்கப்பட்ட -_ தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் முயற்சியினால் _ போராட்டத்தினால் கிடைத்த கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு காரணமாக உயர்த்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால் நாங்கள் எதிர்நோக்கிக் காத்திருப்பது போல் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்கும். அதன்மூலம் நாங்களும் கண்ணியமாக வாழ முடியும் என்றார்.
மனித உரிமைக்காகத் தோன்றிய திராவிட இயக்கம் ஜாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டவர்-களையும் பெண்களையும், மத சிறுபான்மை-யினரையும், சமத்துவ நிலைக்குக் கொண்டுவர கடந்த காலங்களில் தொடர்ந்து பணியாற்றி வெற்றி கண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பால் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியதும் மலிவான சொற்களால், அழைக்கப்பட்டதற்கு மாற்றாக, திருநங்கை என்று மதிப்புறு சொல்லாக மாற்றியதும், திருநங்கைகளுக்கான   நலவாரியம் அமைத்ததும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.
இன்று இந்தியா முழுமையிலும் உள்ள திருநங்கைகளுக்கான உரிமையைப் பெற்றுத் தர வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மசோதாவைக் கொண்டுவந்து நிறை-வேற்றியிருப்பது திராவிட இயக்கச் சாதனை வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்.
இந்தச் சாதனைக்கு உரியவரான திருச்சி சிவா அவர்களுக்கு தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வாழ்த்துத் தெரிவித்தார்.
-உண்மை இதழ்,16-31.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக