பக்கங்கள்

வெள்ளி, 27 நவம்பர், 2015

நீதிக்கட்சி தமிழுக்கு என்ன செய்தது?


திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் தமிழுக்கு என்ன செய்துவிட்டது என்று கேள்வி எழுப்பு வோர்க்கூட நாட்டில் முளைத்திருக்கிறார்கள். ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும் அல்லது கெட்ட நோக்கம் இருக்கவேண்டும்.
1857 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சென்னைப் பல் கலைக் கழகத்தில் தமிழுக்கு இடம் கிடைக்கச் செய் வதற்குக்கூட திராவிடர் இயக்கம்தான் காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், பி.ஏ. படிப்பதாக இருந்தாலும், இண்டர்மீடியட் படிப்பதாக இருந்தாலும், ஒரு செம்மொழி கட்டாயம் படித்திருக்கவேண்டும் என்ற போர்வையில் சமஸ்கிருதம் கட்டாயப் படிப்பாகி விட்டது.
தமிழ் - சமஸ்கிருதம் என்பதை மய்யப்படுத்தி சென்னைப் பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமே நீண்ட காலம் நடந்து வந்தது.
இதுபற்றி கு.நம்பி ஆரூரான் எழுதிய தமிழ் மறு மலர்ச்சியும் திராவிடத் தேசியமும் (மொழி பெயர்ப்பு, க.திருநாவுக்கரசு, ப.ஆனைமுத்து கிருஷ்ணன்) எனும் ஆய்வு நூல் அரிய தகவல்களைத் திரட்டித் தந்துள்ளது.
இந்த 1916-1917 காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் முளைத் தெழுந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே மொழியியல் அடிப்படையில் தொடர்ந்து பேசப்பட்டு வந்ததால், மூண்டெழுந்த திராவிட இன உணர்வை ஒருமுகப்படுத்தி வெளிப்படுத்த இது ஒரு வாய்க்காலாகப் பயன்பட்டது. சமஸ்கிருத ஆதரவாளர்களுக்கும், தாய் மொழிப் போராளிகளுக்கும் இடையே எழுந்த கருத்து மோதல்கள் - ஜாதி இனப் பூசல்களாக அடையாளப் படுத்தப்பட்டன.
பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியுடனும், பார்ப்பனர் அல்லாதார் தமிழ், பிற மாநிலத் தாய் மொழிகளுடனும் இணைத்துப் பேசப்பட்டார்கள்.
பி.ஏ. பட்டப் படிப்பில் கட்டுரைப் பாடமும், பி.ஏ. ஆனர்ஸ் படிப்புத் தொகுதியில் திராவிட மொழிகளைப் பயிலும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தரவேண்டும் என வேண்டி, வைஸ்ராய்க்கு ஒரு விண்ணப்பம் எழுதி அளிக்கவேண்டும் என்று 1918 இல் சென்னைத் திராவிட சங்கம் ஏற்பாடு செய்தது. அய்.சி.எஸ். தேர்விற்கான பாடத் திட்டத்தில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக வைக்கப்பட வேண்டுமென்று இலண்டனில் உள்ள இம்பீரியல் கவுன்சில் நிர்வாகத்திற்கு வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அளிக்க இருக்கும் விண்ணப் பத்தில் திராவிட மொழிகளையும் சேர்க்கவேண்டும் என்று சென்னைத் திராவிட சங்கம் வைஸ்ராய்மூலம் ஒரு கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வந்தன. பின் னாளில் பனகல் அரசர் என்று அறியப்பட்ட பி.இராமராய நிங்கர் திராவிட சங்கத்தின் அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டு பேசுகையில், பார்ப்பனர் அல்லாத மக்களுக்குத் திராவிட மொழிகள்தான் முதன்மையானவை. சமஸ் கிருதத்தை ஏற்பதில் பல வகையான சமயம் சமூகம் சார்ந்த சங்கடங்களும், சிக்கல்களும் உள்ளன (மேற்கண்ட நூல் பக்கம் 138).
சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பி.ஆர்.சுந்தரம் அய்யர் இண்டர் மீடியட் தேர்வில் இரண்டாம் மொழி பாடத்துக்கான (தாய் மொழியில் - அதாவது தமிழில்) கட்டுரைத் தாளை நீக்கிவிடவேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு ஆதரவாக 22  வாக்குகளும், எதிர்த்து 15 வாக்குகளும் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. பல்கலைக் கழகம் அமைத்த ஆய்வுக் குழுவின் அறிக் கையைக் குறிப்பிட்டு, சமஸ்கிருதக் கல்வியை ஊக்குவிப் பதற்காக இண்டர்மீடியட் வகுப்பில் தாய்மொழிக் கட்டு ரைத் தாளைத் தேர்விலிருந்து நீக்கவேண்டும் என்று கடுமையாக வாதிட்டார்.
தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய சி.ஜோதிராவ் இந்தியாவின் இலக்கியம், தத்துவம், சமயம் ஆகிய எல்லாமே சமஸ்கிருதத்தோடு பின்னிப் பிணைந்து கிடக் கின்றன. சமஸ்கிருத மொழியறிவு இல்லாமல் இவற்றை யெல்லாம் எப்படிக் கற்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
இப்படிப் பச்சையாக தமிழ் - சமஸ்கிருதப் போராட்டம் - பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாக அந்தக் காலத்தில் நடந்து வந்திருக்கிறது.
நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு - தமிழின் கை ஓங்கியது.
1923 இல் நீதிக்கட்சி ஆட்சி இயற்றிய சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் - சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் அமைப்பையே புரட்டிப் போட்டு, பல்கலைக் கழக சிண்டிகேட்டின் நடவடிக்கைகளை மேலாய்வு செய்யும் அதிகாரத்தையும் வழங்கியது. உண்மையில் இதுதான் திருப்புமுனையாகும்.
நீதிக்கட்சித் தலைவர்கள் ஆர்.வெங்கட் ரத்தினம் நாயுடு, என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் இப்படிப் பல பார்ப்பனர் அல்லாத அறிஞர் பெருமக்கள் போராடிப் போராடித்தான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம்பெற வழிவகுத்தார்கள்.
தமிழில் வித்வான் பட்டம் பெறுவதற்குக்கூட சமஸ் கிருதம் படிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது என்றால், அக்கால நிலையைப் புரிந்துகொள்ளலாமே!
மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300. தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயம் முதலியாருக்கோ மாதச் சம்பளம் ரூ.81. என்ன கொடுமை இது! இதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் - மாற்றி அமைத்தவர் நீதிக்கட்சி முதலமைச்சர் பனகல் அரசர்.
இந்த வரலாறுகளை எல்லாம் தெரிந்துகொள்ளாமல் தமிழுக்கு நீதிக்கட்சி என்ன செய்தது - திராவிடர் இயக்கம் என்ன செய்தது - பெரியார் என்ன செய்தார் என்று கேட்பது அறியாமை அல்லது அழுக்காறாகத்தான் இருக்க முடியும்.
-விடுதலை,25.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக