பக்கங்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2015

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு...


கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்
காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு...

கவிஞர் கலி. பூங்குன்றன்
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க் ஸிஸ்ட்)யின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் (தீக்கதிர்’ 18.9.2015) அவரது இணையர் பிருந்தாகாரத் (‘தி இந்து’ 10.9.2015) தற்போதைய அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி (கடலூரில் 29.9.2015)  ஆகியோர் என்ன காரணத்தினாலோ திராவிடர் இயக்கத்தைப் பற்றியும், நீதிக்கட்சி குறித்தும் சகட்டு மேனிக்குச் சேற்றை வாரி இறைத்துள்ளனர்.
ஒரு கால கட்டத்தில் வருணமா? வருக்கமா? என்ற தத்துவக் கருத்துப் போர் களில் எல்லாம் ஈடுபட்டு, இந்திய சமூக அமைப்பில் இங்கு வருணம்தான் வருக்க மாக இருக்கிறது என்று பொதுவுடைமை வாதிகள் ஏற்றுப் பணியாற்றுங் காலம் மலர்ந்து வந்தது.
கடந்த ஆண்டுகூட தீக்கதிரில் (9.9.2014) ஒரு சிறப்புக் கட்டுரை வெளியாகி இருந்தது. பிரபல திரைப்பட இயக்குநர் ஆனந்த்பட்ட வர்த்தன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை அது.
“இந்தியர்களின் வாழ்வில் கருவிலிருந்து கல்லறை வரை சாதியே தீர்மானிக்கிறது” என்று அக்கட்டுரையில் முக்கியமாக வலியுறுத்திக் கூறப்பட்டு இருந்தது. பிராமணீயமும் முதலாளித்துவமுமே நாட்டின் இரு எதிரிகள் என்று பேராசிரியர் அருணன் அவர்கள் துல்லியமாக கருத்துத் தெரிவித்து வருகிறார்
பழைய தத்துவார்த்த சண்டைகள் எல்லாம் ஓய்ந்து மதச் சார்பற்ற தன்மை - சமூக நீதித் தளத்தில் இடதுசாரிகளும் திராவிடர் இயக்கமும் இணைந்து பணி யாற்றும் ஒரு கால கட்டத்தில் எதற்காக சி.பி.எம். இப்பொழுது - பொது எதிரியை விட்டுவிட்டு - திராவிடர் இயக்கத்தின்மீது துப்பாக்கியைத் தூக்குகிறது என்றே தெரியவில்லை.
இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கியே தீருவோம் என்று மதவாதம் தலைக்கேறி மதம் பிடித்த யானைபோல திமிறிக் கொண்டு துவம்சம் செய்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் தோழன் யார்? பகைவன் யார் என்பதை அறிவதில், கணிப்பதில் ஏன் இந்தத் தடுமாற்றம்?
இந்த நிலையைக் கண்டு “சபாஷ்! சபாஷ்!” என்று மதவாதம் மத்தளம்  கொட்டி மகிழ்ச்சித் தேரில் பவனி வராதா?
நீதிக்கட்சி என்றாலே உடனே மிட்டா மிராசுதாரர் கட்சிதானா? அந்தக் கால கட்டத்தில் பார்ப்பன வல்லாண்மையை எதிர்க்க யார் யார் கிடைத்தார்களோ அவர்களை எல்லாம் கணையாக்கிப் பிறவி முதலாளித்துவத்தை எதிர்த்ததில் என்ன குற்றம் கண்டு விட்டது  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி!?
அந்த மிட்டாமிராசுகளும் வருண தருமப்படி சூத்திரர்கள் தான்.
கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டு மானால் சென்னை போன்ற நகரங்களுக்கு வந்துதான் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் எங்கே தங்கிப் படிப்பார்கள்? உணவு விடுதிகளில்கூட (பெரும்பாலும் பார்ப்பன விடுதிகளே) பார்ப்பனர் அல்லாதார் எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்துதான் சாப்பிட வேண்டும் என்ற நிலை இருந்த காலத்தில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கான விடுதியை ஏற் படுத்திய டாக்டர் சி.
நடேசனார் நீதிக்கட்சிக் காரர்தான். அந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பரிணமித்த சிவ சுப்பிரமணிய நாடார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பிற்காலத்தில் வந்த டி.எம். நாராயணசாமி பிள்ளை போன்றவர்கள் என்ற வரலாறு தெரிய வேண்டாமா?
சென்னை மவுண்ட் ரோட்டிலும் ஜார்ஜ் டவுனிலும் இருந்த  ‘பிராமணாள்’ உணவு விடுதிகளில் குஷ்டரோகிகளும், நாய்களும், பறையர்களும் உள்ளே நுழையக் கூடாது என்றிருந்த நிலை எல்லாம் உண்டே!
பெரிய வணிகராக இருந்த வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகரத் தலைவராக இருந்து ஆற்றிய அரும்பணிகள் சாதாரணமானதா? மதிய உணவுத் திட்டத்தை முதலில் அறிமுகப் படுத்தியதும் அவர்தானே.
வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்தபோது அவரை வரவேற்க சென்னை மாநகர தலைவராக இருந்த தியாகராயர், கோட்டும், சூட்டும் அணிந்துதான் வர வேற்க வேண்டும் என்று ஆளும் வர்க்கம் வற்புறுத்தியபோது, அதனை மறுத்து தாம் எப்பொழுதும் அணியும் அந்த உடை யுடன்தான் (வெள்ளுடை வேந்தர் அவர்)  வரவேற்பேன் என்று சொன்ன சுயநலமற்ற வீரர் ஆயிற்றே - அதே நேரத்தில் வேல்ஸ் இளவரசரை வாழ்த்தி வரவேற்று லாலி பாடியவர் தான் சுப்பிரமணிய பாரதியார்.
மற்றொரு நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் டி.எம். நாயர் அந்தக் காலத்திலேயே லண்டன் சென்று படித்த காது, மூக்கு, தொண்டை,  (ணிஸீt) மருத்துவ நிபுணர்; தாம் சம்பாதித்ததை எல்லாம் பொதுத் தொண் டுக்கு அர்ப்பணித்தவர். நீதிக்கட்சியின் மும்மூர்த்திகள் என்று  இவர்கள் போற்றப்பட்டனர்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக லண்டன் வரை சென்று பாராளுமன்றத்தில் சாட்சி சொல்லச் சென்ற இடத்தில் மரணத்தைத் தழுவியவர்.
அவர் மரணம் அடைந்தபோது திருவல் லிக்கேணி பார்ப்பனர் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலில் ஆயிரம் தேங்காய்களை உடைத்தனர் என்பது தெரியுமா?
“தென்னாட்டு லெனின்” என்று டாக்டர் நாயரை தந்தை பெரியார் புகழ்ந்து எழுதினார் என்பதை லெனின் விரும்பிகள் அறிவார்களா?
நீதிக்கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல் அமைச்சராக கட்சித் தலைவர் என்ற முறையில் வாய்ப்பு இருந்தும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து, சக தோழர் கடலூர் சுப்பராய ரெட்டி அவர்களைப் பரிந்துரைத் தாரே!
அந்த நீதிக்கட்சி ஆட்சியில்தான் பொது வீதிகளிலும், கிணறுகளிலும் தாழ்த்தப்பட் டோர் புழங்கும் உரிமை ஆணை பிறப்பிக் கப்பட்டது. (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924). தொழிலாளர் துறை என்ற ஒன்று உருவாக் கப்பட்டு முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வீட்டுமனை, பொருளாதார வளர்ச்சி என்கிற திசையில் வேக நடைப் போட்டதே!
ஓர் ஆதி திராவிடரை முதன் முதலாக மந்திரியாக்கிய பெருமை  நீதிக்கட்சியையே சாரும். தாழ்த்தப்பட்டோரின்  ஆலயப் பிரவேசத்திற்காகத் திருச்சி மலைக்கோட் டையில் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்ற, பணக்கார உயர் ஜாதிக் குடும் பத்தைச் சேர்ந்த நீதிக்கட்சியின் முன்னணி வீரர்கள் ஜே.என். இராமநாதன், திரு. டி.வி. சுப்ரமணியன் ஆகியோர் பார்ப்பனரின் கைக் கூலிகளால்  மலைக்கோட்டைப்படி களில் உருட்டி விடப்பட்டு நையப்புடைக் கப்பட்டனர்.
காங்கிரசு மாநாடுகளில் தாழ்த் தப்பட்டோருக்குத் தனி உணவு வரிசை இருந்த கால கட்டங்களில்,  நீதிக்கட்சி மாநாடுகளில் சமபந்தி போசனங்கள் நடத் தப்பட்டன. ஆதிதிராவிடர் மாநாடுகளில் கலந்து கொண்டு நீதிக் கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பேருந்துகளில் தாழ்த்தப்பட் டோரை அனுமதிக்காமல் இருந்த இழி வினைச் சட்டம் போட்டு நடைமுறையில் ஒழித்துக் கட்டியவர்கள் நீதிக்கட்சியினர்.
“தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் கிடையாது’ என்று துணிச்சலாகச் சட்டம் போட்டு செயல்படுத்தியவர்கள் நீதிக்கட்சியினர்.
‘ஜஸ்டிஸ் கட்சி என்றால் மந்திரிகளும் பல பணக்காரர்களும் தான் சில மக்கள் ஞாபகத்துக்கு வருகிறதே தவிர, அதன் கொள்கைகள் அது செய்த வேலைகள் ஆகியவை அநேகருடைய ஞாபகத்துக்கு வருவதில்லை’.        -
‘குடிஅரசு’ 29.3.1936
“(நீதிக்கட்சி) இந்த முறையில்தான் சமூக சீர்திருத்தத் துறையிலும் தீண்டாமை ஒழிப்பு முதல் தேவதாசிகள் ஒழிப்பு மசோதா விபசாரிகள் ஒழிப்பு மசோதா, தேவஸ்தான பணம் பொது நலமான காரியங்களுக்குப் பயன்படுத்தும் மசோதா, லேவா தேவிக் காரர்கள் மசோதா, இனாம் குடிகள் மசோதா என்பவைகளான பலவற்றில் அடுக்கடுக் காகக் கொண்டு வந்து சட்டங்களாக ஆக்கிக் கொண்டு வரப்படுகிறது.
இந்த மசோதாக்களில் எதையாவது ஒன்றைக் காங்கிரசோ, பார்ப்பனர்களோ ஆதரித்தார்கள் என்றாவது, எதிர்க்கா மலாவது இருந்தார்கள் என்றாவது இன்று யாராவது சொல்ல முடியுமா என்பதோடு அவை எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்கும் இடையில் நிறைவேற்றி சட்டமாக்கிய பிறகாவது அதை உண்டாக்கியவர்களின் உத்தேசப்படி அமல் நடத்தவாவது விட் டார்களா என்பதை யோசித்தால் பார்ப் பனர்களின் யோக்கியதையும், காங்கிரசின் யோக்கியதையும் மூடனுக்கும் நன்றாய் விளங்கி விடும்.
- ‘குடிஅரசு’ 1.3.1936
பார்ப்பனீயத்தைத் தவிர்த்து பகுத்தறிவு சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியதோடு, அதற்குச் சட்ட வடிவம் கொடுத்த சாதனை - சமூகப் புரட்சி தமிழ்நாட்டிலன்றி, 25 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சி புரிந்த சி.பி.எம். மேற்கு வங்கத் தில் சாதிக்க முடியாதது ஏன்?
தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் அதன் வழிவந்த திமுக ஆட்சியில் தானே சட்டம் இயற்றப்பட்டது.
பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் நீக்கும் தீர்மானம் 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதோடு, அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தை துறந்த ஜாதி ஒழிப்பு வீரர்களை போல இந்தியாவில் வேறு எங்கு பார்க்க முடியும்?
கம்யூனிசம் பேசும் பெரிய தலைவர் களே தாம் பெயருக்குப் பின்னால் தொங் கும் ஜாதி வாலை வெட்டிக் கொள்ளாத பரிதாபத்தை என்ன சொல்ல!
இந்தியாவிலேயே சமூக நீதிக்கு வித் திட்டு வகுப்புவாரி உரிமை என்ற இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தது நீதிக்கட்சி யல்லவா!
இந்தியாவிலேயே பெண்களுக்கு வாக்குரிமை முதன் முதல் அளித்ததும் நீதிக்கட்சி ஆட்சிதான்!
இந்தியாவிலேயே  ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்தி பெரியார் நினைவு சமத்துவப் புரத்தை உருவாக்கியது திராவிடர் இயக்கமான தி.மு.க ஆட்சிதானே?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் அவர்களின் கருத்துப்படி அதற்காக சட்டம் தி.மு.க.. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதே - இதற்கு இணையாக கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்காளத்திலேயோ கேரளாவிலேயோ காட்ட முடியுமா?
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொற் பதக்கம் அளிப்பு முதல் அடுக்கடுக்கான மகளிர் உரிமை முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தானே நிறைவேற்றப் பட்டன. மூவலூர் இராமாமிர்தம் திருமணம் உதவித் திட்டம், ஈ.வெ.ரா. நாகம்மையார் ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்,
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டம், அன்னைதெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்  - இவை எல்லாம் திமுக ஆட்சியின் முற்போக்கு சமதர்மத் திட்டங்கள் இல்லையா!?
சமூக ஏற்றத் தாழ்வைப் போலவே பொருளாதாரத் துறையில் உள்ள ஏற்றத் தாழ்வினையும் ஒழிக்க வேண்டும் என்ற  கொள்கையைத் தி.மு.க. ஆட்சி வெறும் வாய்ஜாலமாக வைக்காமல் கை வண்ண மாகச் செயலாக்கிக் காட்டியுள்ளதே!
(1) அண்ணா சமர்ப்பித்த முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே போக்குவரத்துத் துறை யில் 75 மைல்களுக்கு மேற்பட்ட பஸ் ரூட்டுகளை, அவை காலாவதி ஆக ஆக அரசு நாட்டுடைமை ஆக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அது செயலாகியது.
அதனை எதிர்த்துப் பஸ் முதலாளிகள் உயர்நீதி, உச்சநீதிமன்றங்களுக்கு சென்று முயன்றும் தோல்வியடைந்தனர்.
1969 மார்ச் வரை 380 பஸ் ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. 1969-70-இல் 60 பஸ் ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட் டன. ஆக  சுமார் 440 பஸ் ரூட்டுகள் அரசினரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.
பஸ் முதலாளிகளையே நம்பிப் பழைய காங்கிரஸ் தேர்தலை நடத்தியது என்ற நிலையில், அவர்களால் முடியாததை விஞ் ஞான பூர்வ சோஷலிசத்தைத் தேர்தல் பிர கடனமாகக் கொண்ட தி.மு.க. செய்து காட்டியது!
2) நில உச்ச வரம்புச் சட்டம் காங்கிரஸ் காரர்கள் காலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று வைக்கப்பட்டது. அதுவும் காங்கிரசில் அப்போது அமைச்சர்களாகவும் அதற்குத் தேர்தல் நிதி கொடுப்பவர் களாகவும் உள்ள பெரும் நிலப் பிரபுக்கள் பாதிக்கப்படாத வகையில் ஏராளமான விலக்குகள் - மேய்ச்சல்நிலம், கரும்பு நிலம், சவுக்கு நிலம் - இப்படிப் பலவற்றினை மனத்திற் கொண்டே விலக்குத் தந்ததுபோல் செய்தனர்.
தி.மு.க. ஆட்சி நில உச்ச வரம்பினைத் திடீரென 15 ஸ்டாண்டர்டு ஏக்கராவாகக் குறைத்ததோடு, விலக்குகளை நீக்க ஒரு குழுவும் அமைத்து, அதன் அறிக்கைமீது செயல்படக் காத்திருந்தது.
இதன் காரணமாக இங்கு நிலப்பறி இயக்கம் வெற்றி பெற முடியாத நிலை ஏற் பட்டது. சட்டப் பூர்வமாகவே ஆதிக் கத்தைத் தடுக்க முயலுகையில் வன்முறை வளராதல்லவா?
(3) நிலமற்ற  ஏழை எளிய மக்களுக்குத் தி.மு.க. ஆட்சி,  சுமார் 2லு லட்ச ஏக்கரா விற்கு மேல் பட்டா வழங்கியது.
தி.மு.க. அரசு 4 ஆண்டுகளில் வழங்கியது 2லு லட்சம் ஏக்கர்களுக்கான பட்டாக்கள்.
அதில் சில இடங்களைச் சட்டமன்ற உறுப்பினர்களில் யார் பெற்றிருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டு மென்றும், அந்தப்படி கொடுக்கா விட்டால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடும் என்றும் முதல்வர் கலைஞர் கூறியுள்ளார்.
காட்டு நிலங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலங்களையும், ஏழைகளுக் குப் பட்டாக்களாக வழங்க வகை செய்யும் வகையில் திருத்தப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
(4) தமிழ்நாடு 1969ஆம் ஆண்டு பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டம்
பண்ணைத் தொழிலாளர்களுக்கு நியாய விகிதங்களில் ஊதியம் கொடுப்பதற்கும், அதற்குத் தொடர்பானவற்றுக்கு வகை செய்வதற்குமான சட்டமாகும் இந்தச் சட்டம்.
இச்சட்டத்தின் மூலம் அறுவடைக்கான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதுடன், நிர்ண யித்த நியாய ஊதியம், கதிரடிக்கப்படுகிற களத்துமேட்டிலேயே கொடுக்கப்பட வேண்டும் என்றும், தொடர்புள்ள பண்ணைத் தொழிலாளர்களுக்கு நியாய ஊதியம் கொடுக்கப்படாமல் களத்துமேட்டிலிருந்த விளை பொருளின் எந்தப் பகுதியையும் அப்புறப்படுத்தக் கூடாது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
உரிய காலத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் விளைவாகப் பண்ணைத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கவும் தஞ்சை மாவட்டத் தில் ஒழுங்காக அறுவடை நடக்கவும் ஏதுவாயிற்று.
(5) புஞ்சை நிலங்களுக்கு வரிவிலக்கு
வசதிக் குறைவான விவசாயிகட்கு வரிச்சுமையை நீக்கப் புன்செய் நிலங் களுக்கு அடிப்படைத் தீர்வை நில வரி விலக்கு.
(6) 5 ஏக்கரா உள்ள சிறு உழவர்க்கு நஞ்சைக்கும் வரி விலக்கு
கெய்க்வார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, 5 ஏக்கரா வரை உள்ள விவசாயிகளின் நஞ்சைகட்கு வரி விலக்கு அளிக்க அரசு முனைந்துள்ளது. இதனால், அரசுக்கு அன்று இழப்பு ரூ.6 கோடி.
ரூ.7,000 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது தி.மு.க. ஆட்சி தானே!
மாநில சுயாட்சியைக் கை விட்டு விட்டதாக ஒரு குற்றச்சாற்று வைக்கிறது சி.பி.எம். நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் 33 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற சமூக நீதிக் குரலை திராவிடர் கழகம் போன்ற சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் ஒலித்தன.
மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களின் கருத்தும் அதாகத்தானிருந்தது ஆனால் சி.பி.எம். மகளிர்ப் பிரிவு அதனை எதிர்த் தது என்பதுதான் வேடிக்கை. இதனைச் சுட்டிக் காட்டி அன்றே ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது (22.7.1998).
இந்தியாவிலேயே இந்திக்கு இட மில்லை இரு மொழியே என்ற சட்டம் நடை முறையில் உள்ளது தமிழ்நாட்டில் தான். அதே நேரத்தில் சி.பி.எம். ஆண்ட மேற்கு வங்காளத்தில் மூன்று மொழிகள் - கேரளாவிலும் அதே நிலைதானே.
இந்தியஅரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்ற 22 மொழிகளும் ஆட்சி மொழிஆக வேண் டும் என்று குரல் கொடுப்பது தமிழ்நாட்டில் தான் திராவிடர் கழகம்தான் - திமுக தான்.
தமிழ் செம்மொழி என்ற தகுதியைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கமான திமுக ஆட்சியே!
கல்வியைப் பொதுப் பட்டியலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வரும் சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகமும், அரசியல் கட்சியான திமுகவும் தானே! இவையெல்லாம் மாநில சுயாட்சிக் கொள்கை இல்லை என்று சொல்லப் போகிறதா சி.பி.எம்.!?
தி.மு.க. முதலாளித்துவ கட்சி என்ற குற்றச்சாற்று சரியானதுதானா? அதே இடதுசாரிகள் இதே திமுகவில் கூட்டணி வைத்துக் கொண்டிருந்ததே - இப்பொழுது திடீர் என திமுக முதலாளித்துவக் கட்சி ஆகி விட்டதா?
முதலாளித்துவ கட்சியா? சோசலிசக் கட்சியா என்ற முத்திரை குத்தும் அதிகாரம் மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா!?
பி.ஜே.பி.யும், காங்கிரசு முதலாளித்துவக் கட்சி என்று குற்றச்சாட்டும் சி.பி.எம். காங்கிரஸ் அணியோடு ஆலிங்கனம் செய்து கொண்டு இருக்கவில்லையா? தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் (என்.டி.ஏ.) சி.பி.எம்மைச் சேர்ந்த மூத்த தலைவர் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருந்தது எப்படி? புதிய பொருளாதாரக் கொள்கை அமலில் இருந்த கால கட்டத்தில் தானே இவை எல்லாம் நடந்தன.
மாநிலங்களவைத் தேர்தலில் தம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்வாகும் கால கட்டங்களில் திமுக முதலாளித்துவத்துக்குத் துணை போகும் கட்சியாகக் கண்களுக்குத் தெரியாதா?
அமெரிக்காவோடு அணு ஒப்பந்தத்தை மத்திய காங்கிரஸ் ஆட்சி ஏற்படுத்திக் கொண்டதற்காகக் காங்கிரசோடு துண்டித் துக் கொண்டது தவறானது எனக் காலந் தாழ்ந்து கருத்துச் சொன்னதுதானே சி.பி.எம்.
இடதுசாரிகள் காங்கிரசோடு இணைந் திருந்தால் அது முதலாளித்துவக் கட்சி யில்லை - புதிய பொருளாதாரக் கொள் கைக்கு அப்பாற்ப்பட்டது - அப்படித்தானே
மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சியின் போதும் சரி அதற்குப்பின் புத்ததேவ் பட்டாச்சாரியா ஆட்சிக் கால கட்டத்திலும் சரி - மத்திய அரசு கடை பிடித்து வந்த புதிய பொருளாதாரக் கொள்கையிலிருந்து துண்டித்துக் கொண்டு தனி ஆட்சி நடத்தியதா?
டாட்டா தொழிற்சாலை தொடங்குவ தற்காக விவசாய நிலங்களை பறி முதல் செய்து கொடுத்த ஆட்சி யாருடைய ஆட்சி?
சிங்கூரில் என்ன நடந்தது?
வெகு ஜனப் போராட்டத்தின் காரண மாக ஏற்பட்ட நிலை என்ன? அதற்காகக் கொடுக்கப்பட்ட விலைதானே சிபிஎம் ஆட்சியைப் பறி கொடுத்தது?
தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பிஜேபியோடு கூட்டு சேர்ந்திருந் தனர் என்று குற்றம் சாட்டும் இதே இடதுசாரிகள் இப்பொழுது மதிமுகவையும் சேர்த்துக் கொண்டு “பஞ்ச பாண்டவர் அணி” என்ற ஒரு நிலை இருக்கிறதே - மதிமுக பிஜேபி கூட்டணியில் இருந்த தில்லையா?
ஊழல் ஒரு காரணம் என்றால் அதிமுக வோடு கூட்டணி வைத்த போது அது எங்கு சென்றது?
மற்றவர்கள் மீதெல்லாம் சகட்டு மேனிக் குக் குற்றப் பத்திரிகை படிக்கும் சி.பி.எம். மீது படிக்க வேண்டிய குற்றப் பத்திரிகை யில் இடம் பெற வேண்டியவை ஏராளம் உண்டு. மேற்கு வங்கத்தில் பொதுவுடைமைக் கொள்கையாளரும் பொருளாதார வரலாற் றுப் பேராசிரியருமான அமியா பக்சி இந்து ஏட்டுக்கு அளித்த பேட்டி (31.8.2015)க்கு சி.பி.எம். என்ன பதில் சொல்லப் போகிறது என்பது சுவையான ஒன்றே! (பெட்டி செய்தி காண்க)
திரிபுரா மாநிலத்தில் சமர் ஆச் சார்ஜி என்ற மார்க்ஸிஸ்ட் உறுப்பினர் பண மெத் தையில் புரண்ட செய்தி சாதாரணமானதா? அது பிரச்சினையானதும் அவர் சொன்னது தான் அதற்கு மேலும் ‘கிளைமேக்ஸ்!’ “சில கம்யூனிஸ்டுத் தோழர்கள் நிறைய சொத்து இருந்தாலும் இல்லாதவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். நான் அப்படி அல்ல” என்று சொன்னாரே பார்க்கலாம். (‘தினத்தந்தி’ 19.10.2013 பக்கம் 11)
கேரள மாநில சி.பி.எம். செயலாளர் தோழர் பினாயி விஜயன் அவர்களின் மகன் கரனின் திருமண வைபவம் பிர்லா வீட்டுத் திருமணம் போல கோலாகலமாக நடந்ததே!
அடுத்து சித்தாந்தப் பிரச்சினைக்குள் வரலாம். மத நம்பிக்கையாளர்கள்  மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்வ தற்குத் தடையில்லை (Does not bar persons who have religious faith from Joining the party) என்று சொன்னவர்தான் பிரகாஷ்காரத்.
இது இப்படி இருக்க கேரளத்தில் என்ன நடந்தது? சி.பி.எம். நாடாளுமன்ற உறுப் பினர் கே.எஸ். மனோஜ், மதவழிபாடுகளில் பங்கேற்றதை கட்சி எதிர்த்ததால் தனது மத நம்பிக்கையைக் கைவிட முடியாது என்று 2009இல் கட்சிக்கே முழுக்குப் போட்டார் - ஏனிந்த முரண்பாடு?
கேரள மாநில முதல் அமைச்சராக இருந்த ஈ.கே. நாயனார் வாடிகன் போப்பைச் சந்தித்தபோது கீதையைத்தானே நினைவுப் பரிசாகக் கொடுத்தார். கர்மா வினையைப் பற்றிப் பேசும் நூல்தான் கார்ல் மார்க்ஸின் சீடருக்குக் கிடைத்ததா? கொடுத் தது மட்டுமல்ல - அப்படிக் கொடுத்ததில் என்ன தவறு என்று வக்காலத்து வாங்கியது தான் கொடுமை!
மகர ஜோதி என்பது மோசடி என்பது எல்லோருக்கும் தெரியும் அதுபற்றி கேரள மாநில முதல் அமைச்சர் அச்சுதமேனன் என்ன கூறினார்?
“மகர ஜோதியின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்வதற்காக ஜோதிடர் களிடமோ, அல்லது வானியல் ஆராய்ச்சி யாளர்களிடமோ கேரள அரசு ஆலோ சனை நடத்தாது. சபரி மலையின் கிழக்கே உள்ள பொன்னம்பலமேடு பகுதி முழுவதும் வானில் தெரியும். “மகரஜோதியை” புனிதமான நட்சத்திரமாக லட்சக்கணக்கான பக்தர்கள் கருதுகின்றனர். மக்களின் நம்பிக் கையில் தலையிடுவது தேவையற்றது. (‘தினத்தந்தி’ 21.1.2011 பக்கம் 9)
மற்றொரு முக்கிய தகவல் இந்திய பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த ஜோசப் எடமருகு அவர்கள் கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார் அவர்களை  டெல்லியில் சந்தித்து , மகர ஜோதிபற்றி விளக்கினார்.
‘மகரஜோதி என்பது உண்மையானதல்ல - செயற்கை யாக உருவாக்கப்பட்டதுதான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இதில் நீங்கள் தலையிடாதீர்கள்’ என்று சொன்னது எந்த வகையில் நாணயம்? (ஜோசப் எடமருகுடன் பேட்டி ‘விடுதலை’ 27.2.1993)
மேற்கு வங்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சுபாஷ் சக்ரவர்த்தி (சி.பி.எம்) கொல்கத்தா காளிக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்தார் - உண்டியலில் காணிக்கையும் செலுத்தினார் (2006 செப்டம்பர்) மூத்த தலை வரும் அம்மாநில முதல் அமைச்சருமான ஜோதிபாசு அதனைக் கடுமையாக விமர்சித்த போது, அவ்வமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?
‘நான் முதலில் ஓர் இந்து, அடுத்து பிராமணன், மரபுகளை என்னால் மீற முடியாது. அடுத்து நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று கூறினாரே
கேரளாவில் சாஸ்தம் கோட்டாவில் உள்ள சாஸ்தா கோயிலில் குரங்கு ஒன்று செத்துப் போய் விட்டதாம்; கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் (சி.பி.எம்) சட்டமன்ற உறுப்பினர் குஞ்சுமேனன் ஆகியோர் செத்துப போன குரங்குக்கு செங்கொடி போர்த்திப் புரட்சி வணக்கம் செய்தது எந்த வகை மார்க்சியம்?).
மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தன் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திய வர்தானே - இந்த லட்சணத்தில் அழைப்புப் போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் கொடுத்ததுதான் வேதனை!
2010 மே 18இல் ஒரு அதிர்ச்சி- ஆதி சங்கரர் பிறந்த நாளை தத்துவவாதியின் பிறந்த நாளாகக் கொண்டாடியது சி.பி.எம். அரசு. அங்கு வந்த சிருங்கேரி சங்கராச் சாரிக்கு காவல்துறையின் அணி வகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டதே - அது எந்த அடிப்படையில்?
இன்னொரு தகவல் அது சீதாராம் யெச்சூரி சம்பந்தபட்டது.
காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந் திர சரஸ்வதி கொலைக் குற்றத்தில் சம்பந் தப்பட்டார் என்பதற்காகக் கைது செய்யப் பட்டது குறித்து சி.பி.எம். பொலிட் பீரோ உறுப்பினராக அப்பொழுது இருந்த (இப்பொழுது அகில இந்திய செயலாளர்) போது என்ன சொன்னார் தெரியுமா?
The CPI (m) Leader expressed unhappiness over the way the seer was treated.
சங்கராச்சாரியாரை கைது செய்த விதம் தமக்கு வருத்தத்தை அளிப்பதாக மட்டும் சொல்லவில்லை. தனியாக ஒரு மாளிகை யில் வைத்து விசாரித்திருக்க வேண்டும் என்று சொன்னாரே - அது ஏன்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஒரு மார்க்ஸிஸ்ட் வாதியின் கருத்தாக இல்லாமல் போனது ஏன்?
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவரும் மலைவாழ் குடி மகனாரும், கற்றறிந்த அறிஞரும், அனுபவமிக்கவருமான ஜி.ஜி. ஸ்வெல் அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய முன்னணியால் அறிவிக்கப்பட்டார். இந்தத் தேசிய முன்னணியுடன் அதுவரை இணைந் திருந்த சி.பி.எம். என்ன முடிவெடுத்தது தெரியுமா? காங்கிரஸ் வேட்பாளரான சங்கர்தயாள் சர்மாவை அல்லவா ஆதரித் தது! பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆறுமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தபோது, காங்கிரசின் வேட்பாளர் சங்கர்தயாள் சர்மாவின் வெற்றியின் மூலம் நிலை கொண்டது;
அதற்கு துணை போனதுதான் சி.பி.எம்.  யார் அந்த சங்கர்தயாள் சர்மா? பிராமணர்களிட மிருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் உத்தியோகங்களை எடுத்துச் செல்லலாமே தவிர, அவர்களின் மூளையை எடுத்துச் செல்ல முடியாது என்று பார்ப்பன ஆண வத்தோடு சொன்னவர் - அவருக்குத்தான் சி.பி.எம். ஆதரவு.
மாநில சுயாட்சி - தேசிய இனப் பிரச் சினையில் சி.பி.எம். நிலைப்பாடு என்ன?
1974ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த மிகப் பெரிய சி.பி.எம். தலைவர் பி. இராமமூர்த்தி
***
ஈழத் தமிழர் வெறுப்பு என்பதில் ஈட்டி முனையாக இருந்த இலங்கை ஜனதா விமுக்தி பெரமுனா என்ற சிங்கள வெறிக் கட்சியின் பிரதிநிதிகள் - சி.பி.எம். கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு அழைக்கப்பட் டனர். அதே போல இலங்கையில்  நடை பெற்ற அவ்வமைப்பின் மாநாட்டிலும் சி.பி.எம். பிரதிநிதிகள் கலந்து கொண்ட துண்டு.
2001இல் சிங்கள இராணுவத்தில் ஆனையிறவு முகாமைத் தகர்த்தது விடுதலைப்புலிகள் சேனை! அடுத்த குறி யாழ்ப்பாணம்தான் புலிகளுக்கு; அப் பொழுது தமிழக சி.பி.எம்.இன் மூத்த தலைவரான தோழர் ஆர். உமாநாத் வெளியிட்ட அறிக்கை என்ன? விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைத் தாக்கினால், அதனை முறியடிக்க இலங்கை அரசுக்கு இந்தியா இலவசமாக ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டாரே!
மாலை மலர் ஏட்டுக்கு தோழர் டி.கே. ரெங்கராஜன் அளித்த பேட்டியில் என்ன சொன்னார்? இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்றாரே!
மாலை மலரின் மற்றொரு கேள்வி; பன்னாட்டு விசாரணையை ஏன் எதிர்க் கிறீர்கள்?
டி.கே.ஆர். பதில்: இலங்கை இறை யாண்மையுள்ள நாடு.
கேள்வி: தேசிய இனங்களில் சுயநிர் ணயப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டு மென்ற மார்க்ஸிஸ்ட் கொள்கையை சி.பி.எம். கட்சி கைவிட்டு விட்டதா?
தோழர் டி.கே.ஆர். பதில்: அதை வெளியிலிருந்து திணிக்கக் கூடாது.
(மாலை மலர் 5.3.2012).
எப்படி இருக்கிறது? வெளியிலிருந்து திணிக்கக் கூடாது என்றால், இலங்கைக்கு வெளியே அந்நாட்டைப்பற்றி எதையும் பேசக் கூடாது. எந்தக் கருத்தையும் சொல் லக் கூடாதே!
இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. இதைப் பற்றியெல்லாம் அம்பலப் படுத்த வேண்டும் என்பது நமது ஆசையும் அல்ல நோக்கமும் அல்ல -
ஆனால் சொல்லும்படி வைத்தவர்கள் பிரகாஷ்காரத்தும், சீதாராம் யெச்சூரியும், பிருந்தாகாரத்தும்தான்.
திமுக என்ற பெயரால், திராவிட இயக் கத்தையும், நீதிக்கட்சியையும் கொச்சைப் படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிகளைப் புறக்கணிப்பீர்! மாற்று அரசியல் அணியை ஆதரிப்பீர்!
டில்லியில் நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாட்டில் பிரகாஷ்காரத் அறைகூவல்.
(‘தீக்கதிர்’ 2.7.2013 பக்கம் 3).
இதன்படி பார்த்தால் திமுகவை வெறுப்பது குற்றமல்லவா?
மற்றுமொரு எடுத்துக்காட்டு
“லாலு பிரசாத் யாதவை எடுத்துக் கொண்டால் அவரோடு ஒருங்கிணைந்த இயக்கங்களில் இடதுசாரிக் கட்சிகள் பங் கேற்றுள்ளன. ஆனால் இதன் விளைவாக இடதுசாரிக் கட்சிகளின் வெகு ஜனபலம் குறைந்துள்து. தமிழகத்தைப் பொறுத்த வரை இரண்டு திராவிடக் கட்சிகளுமே இடதுசாரிக் கட்சிகளுடன் உறவு வைக்கத் தயாராக உள்ளன.
காரணம் தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. ஆனால் இந்தத் தேர்தலில் ஜெயலலிதா இரண்டு கம்யூனிஸ் டுக் கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் மட்டும் தர முன் வந்தார். எந்தவொரு திராவிடர் கட்சிகளும் முன்னெப்போதும் இவ்வாறு கூறியதில்லை.
எங்களுக்குப் பல்வேறு கருத்து வேறுபாடு இருந்த போதும் பா.ஜ.க.தான் உடனடிப் பேரபாயம் என் பதை உணர்த்துவோம். அந்தக் கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க சமாஜ்வாதி மற்றும் பல்வேறு ஜனதா தளக் கட்சிகளு டன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம். இதுதான் எங்கள் நடைமுறை உத்தியாக  உள்ளது.
(‘பிசினஸ் லைன்’ பேட்டி - 14.5.2014  - தமிழில் தீக்கதிரில் 15.5.2014 பக்கம் 3)
லாலு மீதும் ஊழல் குற்றச்சாற்று  உண்டு. அவரோடு கூட்டு வைத்துக் கொள்ள லாமாம். ஆனால், தி.மு.க.வோடு கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாதாம்.
இந்தியாவிலேயே சமூக சீர்திருத்த நோக்கத்தோடு செயல்படும் அரசியல் கட்சி தி.மு.க. தானே - நியாயமாக திமுக தோளில் கை போட வேண்டிய மார்க்ஸிஸ்டுகள் மருண்டு ஓடுவது ஏன்?
என்ன அளவுகோல் காம்ரேடுகளுக்கு என்று கேட்கத் தோன்றுகிறதா இல்லையா?
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவது புத்திசாலித்தனமல்ல - பொறுப்பானதும் அல்ல அல்லவே அல்ல.
-விடுதலை ஞா.ம.,3.10.15
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்
காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு... (2)

கவிஞர் கலி. பூங்குன்றன்
‘விடுதலை’ ஞாயிறுமலரில் (3.10.2015) “கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் - காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு” என்று எழுதப்பட்டுள்ள கட்டுரைக்குத் தோழர் மதுரை சொக்கன் அவர்கள் பதில் எழுதிட முயற்சி செய்துள் ளார் - வரவேற்கிறோம். (‘தீக்கதிர்’ 16.10.2015)
ஆனால், நாம் எழுப்பிய அடிப்படை யான கேள்விகளுக்கு எந்தவிதமான உருப்படியான பதிலும் இல்லை. அப்படி சொல்லப்பட்டுள்ள ஒரு சில பதில்களிலும்  பெரும்பாலும் ஆதாரக் குறிப்புகள் ஏதும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
திராவிடர் கழகம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை” என்று பட்டம் கொடுத் ததைக் கேலி செய்து எழுதி இருக்கிறது.
எதற்காக அந்தப் பட்டம் கொடுக்கப்பட் டது என்பதை அறிந்திருந்தும். இதனைக் கேலி செய்வது ஏன் என்று புரியவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்ற நிலை ஏற்பட்டது. தமிழ் நாட் டிலோ 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை யில் இருந்தது. இந்த நெருக்கடியிலிருந்து 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட சட்ட ரீதியான ஒரு வழி காட்டுதலைத் தந்ததுடன் நில்லாது, அதற்கான சட்ட முன் வடிவைத் தயாரித்தும் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
அதனை ஏற்றுச் செயல்படுத்தியவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதன் மூலம் போராடிப் பெற்ற 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது. அந்த அடிப்படையில் முதல் அமைச்ச ருக்குச் “சமூகநீதி காத்த வீராங்கனை” என்று திராவிடர் கழகம் பட்டம் அளித்துப் பாராட்டியதில் என்ன குற்றம் கண்டது சி.பி.எம்? நல்லதைப் பாராட்டுவது  -வரவேற்பது என்பது பூர்ஷ்வாத்தனம் என்ற புதுசரத்தை மார்க்சியத்தில் இணைத்து இருப்ப தாகத் தெரிகிறது.
பாராட்ட வேண்டியதைப் பாராட்டினால்தான் எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும் பொழுது அதற்குரிய மரியாதை கிடைக்கும் என்பது பொதுத் தொண்டின் பால பாடம்.
பொதுவாக சமூக நீதிப் பிரச்சினையில் போதுமான அக்கறையை அக்கட்சி மேற் கொண்டதில்லை; மண்டல் குழு அறிக்கை யில்கூட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆளும் மேற்கு வங்கத்தின் நிலைப்பாடு பற்றி அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பட்டியல் இல்லாத மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று; பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று மண்டல் குழு அறிக்கையிலே அதிகாரப் பூர்வமாக எழுதப்பட்டுள்ளதே (Mandal Report Chapter IX Safeguards, Reservations, Etc 9.8)
இந்த நிலையில் உள்ளவர்கள் சமூக நீதியை அழுத்திச் சொல்பவர்களைக் கண் டால் கோபப்படத்தான் செய்வார்கள் சமூகநீதிக்காகப் பயன்பட்டவர்களைப் பாராட்டுவதை விரும்பவும் மாட்டார்களே!
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் என்ற நிலையில் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானது.
பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலே இல்லாத மாநிலங்களை மண்டல் தனது அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளார். பட்டியலே இல்லை என்று சொன்னால் இடஒதுக்கீடே இல்லை என்று அர்த்தம். அந்த மாநிலப் பட்டியலில் மேற்கு வங்க மும், ஒன்று.
அரசியல் சட்டத்தில் 15(4), 16(4), 29(2) ஆகிய பிரிவுகள் இடஒதுக்கீடு பற்றிப் பேசுகின்றன. இவ்விதிகள் பற்றியும் பிற் படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றியும் மேற்கு வங்க சி.பி.எம். அரசே குழு ஒன்றை நியமித்தது.
குழு நியமிக்கப்பட்ட நாள் 1.8.1980 இந்த மிக முக்கியமான ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் உயிர் நாடியான பிரச்சினைக்காக ஏற்படுத்தப் பட்ட குழு ஒரே மாதத்தில் அறிக்கையைக் கொடுத்தது என்றால் அதன் பொருள் என்ன?
அவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு அவசரமாக அறிக்கை கொடுத்த தாகப் பொருள் கொள்ள வேண்டாம். சம்பிரதாயத்துக்காக ஓர் அறிக்கை அளிக் கப்பட்டது என்றே பொருள். அந்த அறிக்கை என்ன சொன்னது தெரியுமா? அதைவிட மிகப் பெரிய அதிர்ச்சி அடிப்படையைத் தகர்க்கும் ஆபத்தான யோசனை!
இடஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கூடாது. பொருளாதார அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது - அதனைத்தானே சி.பி.எம். அரசும் எதிர்பார்த்தது! (பிஜேபி யும், பார்ப்பனர்களும் பொருளாதார அடிப் படையைத்தானே வலியுறுத்துகின்றன).
எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட் டோருக்கு வருமான வரம்பு கொண்டு வந்தபோதும், அதனை ஆதரித்த ஒரே கட்சி சி.பி.எம்.தான்!  சி.பி.அய் - அதிலிருந்து வேறுபட்டு பொருளாதார அளவுகோலை; திராவிடர் கழகத்துடன் இணைந்து எதிர்த் தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு அவர்கள் சென்னைப் பெரியார் திடலில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார் (26.7.1978).
“எங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி அட்மிஷனில் புதிய முறை ஒன்றை உருவாக்கி அமல்படுத்தி வருகிறோம். அத னால் லஞ்சம் முறை கேடுகளை முற்றிலும் தவிர்த்து விட்டோம்; தகுதி - திறமை அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கி றோம்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று பேசினாரே பார்க்கலாம். (இக்கட்டுரையை எழுதியவர் அந்தவுரையை நேரில் கேட் டவர்) அவ்வுரை ‘விடுதலை’  28.7.1978 முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது  எப்படி தெரியுமா?
“பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை - மே.வங்க புரட்சி அரசின் சாதனை என்று மார் தட்டுகிறார் ஜோதிபாசு!” என்று முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1984 இல் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீட்டுத் துறை வெளியீடு எண் 322 நாள் 30.5.1984) அதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளை யும், சமூக அமைப்புகளையும் கூட்டி (25.3.1984) போராட்டத் திட்டத்தையும் அறி வித்தது திராவிடர் கழகம்.
தமிழ்நாடெங்கும் 23 மாவட்டத் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வு ஆணையை எரிக்கும் போராட்ட மும் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். அவர்களின் அந்த நுழை வுத் தேர்வை ஆதரித்து வரவேற்ற ஒரு கட்சி உண்டு என்றால் அதுதான் மார்க் சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி. அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் நல்ல சிவன் அவர்கள் தமிழ்நாடு மேலவையில் முழக்கமிட்டு ஆதரவுக் கரம் நீட்டினாரே!
“வானொலிப் பெட்டிகளும்; தொலைக் காட்சிப் பெட்டிகளும் கிராமப்புற மக்களி டையும் பரவலாகி வரும் இன்றைய சூழ்நிலையில், நுழைவுத் தேர்வில் கிராமப் புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படு வார்கள் என்ற பயம் தேவையற்றது” - என்று கிராமப்புற ஏழைப் பாட்டாளி மக்களின் தோழர் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே ‘அதிர்ச்சி’ அடையக் கூடிய வகையில் வரவேற்றாரே - பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமும் உண்டு கொல்!
அதே சி.பி.எம். இதே நுழைவுத் தேர்வை பற்றி இப்பொழுது என்ன கூறுகிறது?
“கிராமப் புற மாணவர்கள் சமூகப் பொருளாதார ரீதியாக பின் தங்கிய ஏழை - எளிய மாணவர்களுக்கு எதிரானது; எனவே இந்த முயற்சியைக் கை விட்டு இப்போ துள்ள முறையே தொடர வேண்டும் என கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது”. (சென்னையில் 7,8-10-2015 நாட்களில் கூடிய கட்சியின் மாநில செயற்குழுத் தீர் மானத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது ‘தீக்கதிர்’ (10.10.2015 பக்கம் 3)
இந்த 2015ஆம் ஆண்டிலேயே கிராமப் புற ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படு வார்கள் என்கிறது கட்சியின் மாநிலக் குழு; 1984ஆம் ஆண்டில் கிராமப் பகுதிகள் எப்படி இருந்திருக்கும்?
“நுழைவைத் தடுக்கவா நுழைவுத் தேர்வு?” எனும் தலைப்பில் தலையங்கமும் தீட்டியுள்ளது (‘தீக்கதிர்’ 7.10.2015). இப்போது மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் கிராமப் புற மாணவர்களுக்கும் எதிர் காலத்தில் வாசல் அடைக்கப்பட்டு விடும் என்றும் அத் தலையங்கம் முத்தாய்ப்பாகக் கூறுகிறது.
நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் இது 2015 சி.பி.எம். நிலை; கிராமப் பகுதி மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் - இது 1984 சி.பி.எம். நிலை.
ஏனிந்த முரண்பாடு? சமூக நீதிப் பிரச்சி னையில் ஆழமான புரிதல் இல்லை இக் கட்சிக்கு என்பதுதான் இதனுடைய நிகர உண்மை. வர்க்கம் பற்றிப் பேசும் இவர் களுக்கு வருணத்தைப்பற்றிய ஆழமான புரிதல் இல்லாததன் வெறுமையே இது!
சட்டப் பேரவைகளிலும் நாடாளுமன் றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற சமூகநீதிக் குரல் ஒலிக்க ஆரம்பித் தது; திராவிடர் கழகம் அதனை வற்புறுத்தி யும் வந்தது. மேற்கு வங்க முதல் அமைச்சர் ஜோதிபாசு அவர்கள் அந்தக் கருத்தை வலி யுறுத்தினார்.
ஆனால் அக்கட்சியின் மகளிர் பிரிவு அதனை எதிர்க்கிறது. இதுகுறித்து சி.பி.எம். கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தீக்கதிர் (16.7.1998) கருத்துப்படம் ஒன்றை வெளியிட்டு மகளிர் மசோதா எட்டாக் கனியாக உள்ளது. இதைப் பறிக்க விடா வண்ணம் லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும் காலைத் தட்டிவிடுகின்றனர் என் கிறது அந்தக் கருத்துப் படம். இது குறித்து ‘விடுதலை’ அப்பொழுதே கண்டித்துத் தலையங்கம் தீட்டியது. (22.7.1998).
1967 ஆம் ஆண்டு திமுக ஆளும் கட்சி ஆனது 1972ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலில் வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தனர் என்று ‘தீக்கதிர்’ குற்றப் பத்திரிகை படித்துள்ளது.
இது உண்மை எனில் இந்த இரு முத லாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளை சி.பி.எம். புறக்கணித் ததா? கூட்டுச் சேர்ந்து அரசியல் லாபம் பெற்றதா? முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரு கட்சிகளோடு மார்க்சியத்தை மாசற ஏற்றுக் கொண்டிருக்கும் நாங்கள் கூட்டணி சேர மாட்டோம் என்று மார் தட்டியிருந்தால்
‘சபாஷ் மார்க்ஸிஸ்டு கட்சி!’ என்று ஒரு கைலாகுக் கூடக் கொடுத்திருக்கலாம் அதற்கு மாறாக பத்து அரசியல் கட்சி களோடு பதினொன்றாவது கட்சி என்ற சராசரி நிலையில் தானே சி.பி.எம். செயல் பட்டு வந்திருக்கிறது  - மறுக்க முடியுமா?
இரு தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி வைத்தபோது குறைந்த பட்சம் கொள்கைத் திட்டங்களை வைத்ததுண்டா? மாறாக எத்தனை சீட்டுகள் என்ற பேரம் பேசுவதில் தானே தனது சூட்டிப்பைக் காண்பித்தது? திமுக ஆட்சியில் முதலாளித்துவத்துக்கு எதிரான வகையில் பேருந்துகள் தேசிய மயம் உள்ளிட்ட ஒரு  நீண்ட பட்டிய லையே கடந்த கட்டுரையில் பட்டியலிட் டுக் காட்டியிருந்தோமே - அதைப்பற்றி குறை கூற முடியாமல்,
இப்படிப் பொத்தாம் பொதுவில் எழுதுவது உண்மையை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கு வற்றி விட்ட தன்மையையே இது காட்டுகிறது.
சுயமரியாதைத் திருமணச் சட்டம், பெண்கள் மறுமலர்ச்சிக்கான அலை அலையான திட்டங்கள், பெரியார் நினைவு சமத்துவபுரம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் - இவை எல்லாம் தந்தை பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்தடங்கியவை இல்லை என்கிறதா தீக்கதிர்? கடந்த கட்டுரையில் நாம் இவற்றை எடுத்துக்காட்டிய பிறகும் மீண்டும் இப்படி எழுதுவது எந்த வகையில் மெச்சத் தகுந்தது?
இந்திய அளவில் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்திருத்த சட்டங்கள் திட்டங்கள்போல, வேறு எந்த மாநிலத்திலாவது, சி.பி.எம். ஆண்ட மேற்கு வங்கத்திலோ, கேரளாவிலோ செயல்படுத் தப்பட்டனவா என்ற கேள்வியை இந்த இடத்தில் மீண்டும் எழுப்புகிறோம்; சவாலைச் சந்திக்கத் தயார் தானா?
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப் பட்டது சுயமரியாதைத் திருமணம் என்பது ஊர் உலகத்திற்கே தெரிந்த ஒன்று. மார்க்சிடுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி அவர் களால் எழுதப்பட்ட “ஆரிய மாயையா? திராவிட மாயையா?”
“விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்!” எனும் நூலில் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு சட்டம் கொண்டு வருமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தியதன் விளைவாக சுயமரியா தைத் திருமணச் சட்டம் என்று ஒரு தனிச் சட்டம்  நிறைவேற்றப்பட்டது என்று எழுதவில்லையா?
தி.மு.க.ஆட்சியில் செம்மொழித் தகுதி கிடைத்தது பற்றி எழுதினால் அப்பொழுது மத்திய ஆட்சியில் கம்யூனிஸ்டு இருந்தது என்று சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையில்லையா! கம்யூனிஸ்டுக் கட்சி அந்தக் கூட்டணியில் இல்லாமலிருந்தால் தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத் திருக்காதா? நீதிக்கட்சியின் மாநாட்டில் (1918 மார்ச்சு 30, 31 நெல்லூர் மாநாட்டில்) தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற உண்மையைச் சொன்னால், “அய்யோ நீதிக் கட்சியா?’ என்று மதுரை சொக்கன்  துள்ளினாலும் துள்ளுவார்.
இன்னொரு வயிறு வெடிக்கும் தமாஷ் உண்டு தி.மு.க ஆட்சி வந்த பிறகுதான் தமிழக அரசின் தஸ்தாவேஜுகளிலும் கடி தங்களிலும் கோபுரம் சின்னமாக வைத்துக் கொண்டது என்றும் தோழர் பி. இராம மூர்த்தி அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். எப்படி இருக்கிறது கதை?
உண்மை என்னவென்றால் தமிழக அரசுக்குக் கோயில் சின்னம் வந்தது காங் கிரஸ்காரரான ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல் அமைச்சராக இருந்தபோது 1950ஆம் ஆண்டில்...
அந்த வழியில் இன்று வரை தவறான தகவல்களை அள்ளி விடுவதில் சி.பி.எம். சலிப்பதில்லையோ!
.....
ஓர் ஆதி திராவிடரை முதன் முதலாக மந்திரியாக்கிய பெருமை நீதிக்கட்சியைச் சாரும் என்று நாம் எழுதியதற்கு தீக்கதிர் எழுதும் பதில் என்ன தெரியுமா? 1967 முதல் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்த போது சட்டசபை துணை சபாநாயகர், ஆதி திராவிடர் நலத்துறை ஆகியவற்றைத் தாண்டி முக்கியதுறைகளுக்குள் பெரும் பாலும் அவர்கள் நுழையவில்லை என்பதும் உண்மையல்லவா என்று கேள்வி எழுப் பப்பட்டுள்ளது.
இதனை சி.பி.எம். சொல்லுவதுதான் வேடிக்கை. 1980இல் சி.பி.எம். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தபோது ஒரு காபினட் அமைச்சர்பதவிகூட தாழ்த்தப் பட்டவருக்கு அளிக்கப்படவில்லை என்பதை இன்று  அல்ல அன்றே விடுதலை (11.12.1980) சுட்டிக்காட்டிக் கண்டித்ததுண்டு.
1987 கேரளாவில் மார்க்சிஸ்டுக் கம்யூ னிஸ்டுக் கட்சி சார்பில் முதல் அமைச்சருக் கான வேட்பாளராக ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி கவுரி அம்மையார் முன்னிறுத்தப்பட்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்பட்டதா? முதுபெரும் கம்யூனிஸ் டுக் கட்சியைச் சேர்ந்த ஈழவ மூதாட்டி வெளியேறி ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி (மக்களாட்சிப் பாதுகாப்புப் பேரவை) என்ற ஓர் அமைப்பினை நிறுவினார் என்பது வரலாறு.
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் கலை ஞர் அவர்களே என்ன உயர் ஜாதி வட் டாரத்தைச் சேர்ந்தவரா? எத்தனை மிக மிக என்று போட்டும் என்னைப் பிற்படுத்தப்பட் டவர் என்று அழைக்கலாம் என்று சொன்னதில் ஆழமான அர்த்தம் உண்டே!
கலைஞர் ஆட்சியின்போது தானே  ஒரு வரதராசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்டவர் என்ற பெருமைக்கு  உரியவர் ஆனார். உச்சநீதி மன்றத்திற்குச் சென்ற முதல் தாழ்த்தப்பட் டவரும் அவர்தான் என்பது சாதாரண மானது தானா?
முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபியோடு திமுக கூட்டணி வைத்திருந் தது. நவீன தாராளமயக் கொள்கைகளுடன் எந்த முரண்பாடும் இல்லை திமுகவுக்கு என்பது ஒரு குற்றச்சாற்று.
சி.பி.எம். கேரளா, மேற்கு வங்க மாநிலங்களை ஆண்டபோது மத்திய அரசின் இந்த நவீன முதலாளித்துவ தாராளமயக் கொள்கையிலிருந்து வெகு தூரம் விலகி ஓடிற்றா? மத்திய அரசின் அந்தக் கொள்கை எந்த வகையிலும் அவர்களின் மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று உறுதியாகக் கூற முடியுமா?
டாக்டர் மன்மோகன் சிங் தலைமை யிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இருந்தவர் யார்? சோம்நாத் சட்டர்ஜி சி.பி.எம்.மின் முதுபெரும் தலைவர் அல்லவா! அந்தக் காலக் கட்டத்தில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்னவாம்? ஒரு கட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குத் தாம் கொடுத்து வந்த ஆதரவை சி.பி.எம். விலக்கிக் கொண்டாலும்,
மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலகாமல் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தவர் - பேரப் பிள்ளைக்குப் பூணூல் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திக் காட்டிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கிய மூத்த தலைவர் அன்றோ!
இவ்வளவும் செய்துவிட்டு, அப்படி ஆதரவை விலக்கிக் கொண்டது தவறு என்று பிற்காலத்தில் புலம்புவானேன்! என்னே தீட்சண்யம்?
சிங்கூரில் நடந்தது என்ன என்ற ‘விடுதலை’யின் கேள்விக்கு தோழர் மதுரை சொக்கன் அவர்களின் பதில் என்ன தெரியுமா? நந்திக் கிராமம் பிரச்சினைகளை கையாண்டதில் தவறு ஏற்பட்டதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டது.
கட்சி என்று  போகிற போக்கில் சாதாரண நிகழ்வுபோல சமாளிக்கப் பார்க்கிறார்.
அங்கு நடந்தது சாதாரணமானதுதானா? அந்த அவலக் காட்சி இதோ:
“நந்தி கிராமத்தில் இருந்த மார்க்சிஸ்டு அரசின் காவல்துறை உடையோடு கட்சி யினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வன் முறையாளர்களும், செய்த அராஜகங்களை சகிக்க முடியாமல் மக்கள்  வேறிடங் களுக்குக் குடிபெயர்ந்து போனார்கள். போனவர்களைக் காவல் துறை மீண்டும் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டு வந்து அவர்களை சொந்த வீடுகளில் கட்டாயப்படுத்திக் குடியமர்த்தி இருக் கிறார்கள்.
அந்தப் பகுதியில் வேறு வெளி யாட்களோ, அவர்களின் உறவினர் களோகூட நுழைய முடியாமல் மார்க் சிஸ்ட்டுக் கட்சி வன்முறையாளர் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளார்கள். உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்கள் கூட வளையத்¬த் தாண்ட முடியவில்லை”
இப்படி ஆனந்த பஜார் இதழில் பேட்டி கொடுத்தவர் யார்? என்பதைத் தெரிந்து கொண்டால் அதிர்ச்சிக் குண்டாந்தடி தலையில் விழும்! ஆம் அவ்வாறு பேட்டி கொடுத்தவர் ஜோதிபாசு ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த அசோக் மித்ராதான்.
இதில் நூறில் ஒரு பாகம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் அடேயப்பா மதுரை சொக்கன்கள் சொக்கப் பானைகள் கொளுத்தித் திருவிழா கொண்டாடிட மாட்டார்களா?
.....
“அதிமுக ஆட்சியில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, இது தலித்துகளுக்கும், சிறு பான்மையினருக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி உறுதியாக எதிர்த்தது. ஆனால், மதங் களையும், கடவுள்களையும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மதமாற்றத் தடைச் சடடத்தை வரவேற் பதில் தயக்கம் இல்லை என்றது திராவிடர் கழகம்.
- இப்படியொரு குற்றச்சாட்டை திராவிடர் கழகத்தின்மீது வைத்துள்ளது மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டு கட்சி.
இவ்வளவுத் தாழ்வாகவும் போக வேண்டுமா? இந்த அளவு சறுக்கிட வேண் டுமா? இருளில் சஞ்சரிக்க வேண்டுமா? உண்மையிலேயே அனுதாபப்படுகிறோம் - வேறு என்ன தான் சொல்ல!
உள் பக்கத்தில் போட்டால் சொக்கன் போன்றவர்களின் கண்களுக்குப் புலப் படாமல் போனாலும் போகும் என்பதற்காக, மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்துத் திராவிடர் கழகத்தின்  பொதுச் செயலாள ராக இருந்த ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை தலைப்புச் செய்தி யாக அல்லவா பளிச்சென்று வெளி வந்தது?
(‘விடுதலை’ 9.10.2002) அந்தத் தலைப்பு வரிகளை மட்டும் எடுத்துக்காட்டினாலே போதுமானது அவசரமாக மத மாற்றத் தடைகள் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவதேன்?  பி.ஜே.பி. ஆளும் மாநிலத்திலேயே கொண்டு வரப்படாத சட்டம்  - பெரியார் - அண்ணா - எம்.ஜி.ஆர். பாரம்பரியம் என்று கூறிடும் திராவிட இயக்க ஆட்சியில் கொண்டு வரப்படலாமா?
மத மாற்றம்  எதனால் நடைபெறுகிறது என்பது முக்கியமல்லவா? மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தலைவர் வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டாரே! விடு முறையில் சென்று விட்டாரா பூங்குன்றன் என்று மதுரை சொக்கன் எழுதியதுபோல் எழுதிட நாம் விரும்பவில்லை.
ஆடு, கோழி, பலியிட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும் அதையும் ஆதரித்தது திராவிடர் கழகம்; இதில் இருக்கிற வர்ணாசிரம அரசியலை பிரித்துப் பார்க்க முடியவில்லை திராவிடர் கழகத் தால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உண்மைதான். திராவிடர் கழகம் இதில் மாறுபடத்தான் செய்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலையடுத்த அம்பகரத் தூரில் காளி கோயிலில் எருமைக்கிடா வெட்டப்படுவதைக்கூட எதிர்த்து தந்தை பெரியார் கட்டளைப்படி போராடி அதனை ஒழித்துக் கட்டியது திராவிடர் கழகம் (1964 மே)
கலாச்சாரம் என்ற பெயரால் மூடநம் பிக்கைகளை வளர்ப்பதில் எப்பொழுதும் திராவிடர் கழகத்திற்கு உடன்பாடில்லை; முன்னோர்கள் வெட்டினார்கள் என்பதற் காக உப்புத் தண்ணீரைக் குடிக்க வேண்டுமா என்ன?
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? இன்றைக்குக்கூட எஸ்.பி.சி.ஏ. சட்டப்படி தமிழ்நாட்டில் கோயில்களில் உயிர்களை பலியிடக் கூடாது என்பதை அறியாதது தான் ஆச்சரியம்.
உள்ளாட்சி முனிசிபல் சட்டம் (Local Municipal Corporation Acts, Prevention of Cruelty to Animals Act 1960, Widelife (Protection) Act, 1972, Indian Penal Code (IPC) அதன்படி ஆந்திரப் பிரதேசம், குஜராத், கருநாடகா, கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கோயில் களில் உயிர்ப் பலி தடுக்கப்பட்டுள்ள தகவலை ‘தீக்கதிர்’ இதுவரை அறியா திருந்தால் இனியாவது தெரிந்து கொள்ளப் பரிந்துரைக்கின்றோம்.
.....
தி.மு.க. அதிமுக கட்சிகளுடன் தொடர்ந்து  மாறி மாறி ‘இனமான’ அடிப்படையில் நட்பு கொண்டிருந்ததால் நியாயமான விமர்சனத் தையும் ஏற்க மறுக்கிறது ‘விடுதலை’ என்கிறது தீக்கதிர்.
இன்னொரு இடத்தில் அதிமுகவுடன் அனுசரணையாக இருந்தால் அந்தக் கட்சி சமூக நீதி காத்த கட்சி, திமுகவுடன் அனுசரணையாக இருந்தால் அந்தக் கட்சி சமூகநீதி காத்த கட்சி என்று  அக்மார்க்கு முத்திரை குத்தும்  - அதிகாரம் உங்களிடம் தான் (தி.க.விடம்தான்) உள்ளதா என்ற கேள்வியைக் கேட்டுள்ளது தீக்கதிர்.
அது என்ன அனுசரணை? அதனை நாணயமான முறையில் விளக்கி இருக்க வேண்டாமா? அதிமுக ஆட்சியில் 69 சதவீதத்தைப் பாதுகாக்க திராவிடர் கழகத் தலைவர் எழுதிக் கொடுத்ததை சட்டமாக் கியதால் சமூக நீதிகாத்த வீராங்கனை தான்; மகளிர்க்கு அடுக்கடுக்கான திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்றியபோது  ‘மகளிர் ஆட்சி உரிமை மாண்பாளர்’ என்று முதல் அமைச்சர் கலைஞருக்கு திராவிடர் கழகம் பட்டம் அளித்தது.
இந்த அனுசரணையில் என்ன தவறு? திராவிடர் கழகம் ஒன்றும் கூட்டணி அரசியல் கட்சியல்ல - சந்தர்ப்ப சதிராட்டம் போடுவதற்கு! தி.மு.க.வும் சரி, அ.இ.அ.தி.மு.க.வும் சரி பிஜேபி கூட்டணியில் சேர்ந்தபோது திராவிடர் கழகம் அதனை ஏற்றுக் கொள்ள வில்லையே! மாறாக எதிர்த்துத் தானே வந்தது. கடுமையாக விமர்சித்தது என்ற உண்மை ‘தீக்கதிரு’க்குத் தெரியாதா?
அடிப்படைக் கொள்கையைத் தவிர வேறு  அனுசரணை எங்களுக்கு ஏதும் இல்லை - இல்லவே இல்லை என்பதை ஒரு முறைக்கு நூறு முறையும் கண்டிப்பாக கூறுவோம்!
(வளரும்)
குறிப்பு: சி.பி.எம். கட்சியின் தலை வர்கள் திராவிடர் இயக்கத்தைப் பற்றித் தவறான வகையில் விமர்சனம் செய்ததற்கு ‘விடுதலை’ ஞாயிறு மலரில் (3.10.2015) “கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு...” என்று அடக்கமாகவும், பண்போடும் பதில் எழுதி இருந்தோம்.
அதற்கு தீக்கதிரில் வெளிவந்த (16.10.2015) கட்டுரைக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா? ‘ரசம் போன கண்ணாடி யில் முகம் பார்க்க முடியாது” என்பதாகும்.
எது ரசம் போன கண்ணாடி என்பதை இரு தரப்புக் கட்டுரைகளையும் படித்துப் பார்த்து வாசகர்கள் முடிவுக்கு வரட்டும்!
-விடுதலை ஞா. ம.,24.10.15
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!
காம்ரேடுகளுக்கு நமது கனிவான வேண்டுகோள் (3)

கவிஞர் கலி. பூங்குன்றன்
சி.பி.எம். அகில இந்திய முன்னணித் தலைவர்களும் சரி மாநில சி.பி.எம். எழுத்தாளர்களும் சரி, நீதிக்கட்சியின்மீது அடிப்படைப் புரிதலின்றிச் சேற்றைவாரி இரைப்பது என்பதை ஒரு பெரிய கண்டு பிடிப்பு போலக் கூறுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
“நீதிக் கட்சி பிராமணர் அல்லாத உயர் ஜாதிக்காக அவர்களால் நடத்தப்படுகிற, அவர்களது கட்சியாகவே பிறப்பெடுத்தது. அரசியல் அதிகாரத்தையும் உத்தியோக செல்வாக்கையும் தங்களுக்காக வென்றெடுப் பதே அவர்களது குறிக்கோள்.
இப்படி ஒரு குறுகிய நோக்கத்துடன் துவக்கப்பட்டிருந்த தால் இவர்கள் இயல்பாகவே ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டார்கள். தங்கள் கையில் அரசியல் அதிகாரம் வரும்வரை  தேசத்தின் சுதந்திர லட்சியத்தையே ஒத்திப் போடலாம் என்றார்கள்” என்று குற்றஞ் சாட்டப்பட் டுள்ளது.
வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட  (1916 டிசம்பர் 20) ‘பார்ப்பனரல் லாதார் கொள்கை’ அறிக்கையை ஆழ்ந்து படித்தால் நீதிக் கட்சியின் தோற்றம், நோக்கம் இவற்றின் அருமை புரியும்.
பொத்தாம் பொதுவில் ஏதோ சொல்லுவது யாருக்கும் எளிது; இதைவிட மேலான தரத்தில் தீக்கதிரிலிருந்து எதிர்பார்த்து ஏமாந்தோம்.
நீதிக்கட்சி ஏன் தோற்றம் பெற்றது? நாம் சொல்லுவதைவிட ‘தினமணி’யின் பழுத்த ஆசிரியரும் - பார்ப்பனருமான திரு. ஏ.என். சிவராமன் என்ன எழுதுகிறார்?
“சென்னை சம்பந்தப்பட்ட மட்டில் மாநில மட்டத்தில் காங்கிரசுக்கு எதிரான கிளர்ச்சி, ஒரு புதிய வடிவில், புதிய உணர்ச்சியுடன் புதிய முடிவுகளுடன் உருவாயிற்று.
இப்போது நமது வரலாற்றுக் கண் ணோட்டத்தை (டெலஸ்கோப் கருவியை) 1920-க்கு முன்னர் இருந்த அய்ந்து ஆண்டு களுக்கு முன் திருப்புவோம்.
1914-1918இல் உலக யுத்தத்தின்போது - காங்கிரஸ் ஸ்தாபனம் இந்தியாவுக்கு டொமினி யன் ஆட்சி (ஆஸ்திரேலியா, கனடா போன்ற சுயாட்சி) வேண்டுமென்று கோரியது. அப் போது காங்கிரஸ் தலைமை பெரும்பாலும் படித்தவர்களிடமே இருந்தது.
அந்தக் காலத் தில் தென்னாட்டில் படித்து உத்தியோகங் களில் அமர்ந்தவர்களின் தொகை, மற்ற இனத்தாரைவிட பிராமணர்கள் தொகை அதிகம் இருந்தது. ஆகையால் காங்கிரசிலும் பெரும்பாலான தலைவர்கள் பிராமணர் களாக இருந்தனர்.
அந்தக் கட்டத்தில் பிரிட்டிஷார் தம்மிடமிருந்த அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றினால், தென்னாடு சம்பந்தப்பட்ட மட்டில் இது பிராமணர் ஆதிக்கமாகவே இருக்குமென்று பிராமணர் அல்லாதவர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும் அஞ்சினர் அல்லது அச்சத்தைக் கிளப்பினர்.
இவர்கள் ‘தென்னிந்திய லிபரல் பெடரேஷன்” என்ற சங்கத்தை அமைத்தனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். “அஞ்சினர் அல்லது அச்சத்தைக் கிளப்பினர்!” என்று ஏ.என். சிவராமன் கூறுகிற அஞ்சலில்தான் நீதிக்கட்சியின் தோற்றமே அடங்கி இருக்கிறது.
(நீதிக்கட்சி வரலாறு - தொகுதி - 1 -
க. திருநாவுக்கரசு பக்கம் 209-210).
பார்ப்பனரான பிரபல தினமணி ஆசிரியர் ஒருவராலேயே நீதிக்கட்சி தோற்றுவிக்கப் பட்டதன்  நியாயத்தை மறுக்க முடியவில்லை.  ஆனால், இடதுசாரி கட்சி ஒன்று அதன் பிறப்பிற்கு மாசு கற்பிப்பது என்பது ஒரு கெட்டவாய்ப்பேயாகும்.
இப்படிக் குற்றம் கண்டுபிடிக்கும் ‘தீக்கதிராலேயே’ ஓர் அடிப்படையான உண்மையை மறுக்க முடியவில்லை.
நீதிக்கட்சி முன் வைத்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கையில் ஒரு ஜனநாயகத் தன்மை இருந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வகுப்புவாரி உரிமையால் ஏற்படும் பலன் பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியாருக்குத்தான் என்று சாதிக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை.
மதுரை சொக்கன், பேராசிரியர் அருணன் அவர்களின் “காலந்தோறும் பிராமணீயம்” எனும் தொகுப்புகளை ஒரு முறை படித்தால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் தோற்றத்தின் அருமையை உணர முடியும்.
நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைப் பட்டியலை அளிக்கத் தயார் - அவற்றைப் படித்துப் பார்த்து விட்டு, அதில் எங்கு பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியினரின் நங்கூரம் பதிந்து இருக்கிறது  என்று கண்டு பிடித்துச் சொல்லட்டும் எடுத்துக்காட்டுக்காக ஒரு சில இங்கே:
  • பொதுத் துறையில் தாழ்த்தப்பட் டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
  • துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படுகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப் பட்டன.
  • தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர், தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என் னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
  • குறவர்களை எல்லா வகையிலும் சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
  • கோவை மாவட்டத்திலுள்ள வலை யர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம் பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தை களுக்கு ரூ.25 - நிதி உதவிகள் (ஸ்காலர் ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.
  • ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.
  • தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
  • ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத் திற்காக நிலங்களை ஒதுக்குகிறபோது மரங் களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
  • அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டது.
  • மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
  • கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற் காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப் பட்டு, அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
  • நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமை யாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
  • பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
  • தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப் பட்டது.
  • ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத் திற்காகப் பொது மக்களின் உதவியையும், உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள் களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
  • குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக் கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
  • ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலை யில் நிலங்களை அளித்தல்.
  • தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
  • மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
  • சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப் பட்டது.
  • கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
  • உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
  • மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.
  • அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக் கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட் டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தர விடப்பட்டு இருந்தது.
  • சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
  • கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளி களிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
  • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர் களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.
அரசு ஆணைகளின் தொகுப்பு:
1. பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10-05-1921.
2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25-3-1922
3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20-5-1922.
4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப் பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளி களில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21-6-1923.
5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11-2-1924; (ஆ) 1825 நாள்: 24-9-1924.
6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27-01-1925.
7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2-5-1922. (ஆ) 1880 நாள் 15-9-1928.
8.வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.744 நாள் 13.9.1928.
9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-10-1929.
மேலும் தேவதாசி ஒழிப்புச் சட்டம் (1930)
பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதிக்கட்சியில் அலை அலையாக நன்மைகள் நடந்தேறியிருக்க, நீதிக்கட்சியால் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதியினர் பலன் அடைந்தனர் - தாழ்த்தப்பட்டோருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லலாமா தீக்கதிர்?
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சர வையின் காலம் (1923-1926). இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் அதுதான் ஒரு ஒளி முத்து!
ஒன்று அறநிலையப் பாதுகாப்பு சட்டம் ஆகும்.
ஆண்டாண்டுக் காலமாகப் பார்ப்பனர் களின் அடுப்பங்கரையாக கோயில்கள் இருந்தன. கோயில் அர்ச்சகர்களைக் கோயில் பூனைகள் என்று கூறி ஒரு நூலையே எழுதியுள்ளார் கோவை கிழார். (1945).
கோயில் கொள்ளையைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டம்.
பார்ப்பனர்கள் தலையில் அல்லவா கை வைத்து விட்டனர்! விடுவார்களா? அதற்கு மேல் வாயை அகலப்படுத்த முடியாத அளவுக்கு அலறினார்கள்.
“நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்து விட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒருமனதாக எதிர்க்க வேண்டும்”
இப்படி பேசியவர் யார் தெரியுமா? பார்ப்பனர் குலத் திலகம் வாயாடி சத்திய மூர்த்தி அய்யர்வாள்தான்.
சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழிய கத்தினர் - நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர்.
சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கிலத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார் -கத்தினார்!
சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும், பலன் அளிக்கவில்லை என்று சமஸ்கிருதத் திலேயே பாடவும் செய்தனர்.
(கே. குமாரசாமி எழுதிய “திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும்” பக்கம் 73).
நாம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காலத்திலேயே இந்தியாவின் தென் கோடியில் இவ்வளவு சாதனைகள் நடந்துள்ளனவே என்பதற்காகத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த மதுரை சொக்கன்கள் தலை நிமிர்ந்து மகிழ வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே காங்கிரஸ்கூட இந்தியாவுக்கான சுதந்திரம் கேட்டு விடவில்லை; ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட் டிலும் இங்கிலாந்து மன்னர் ஆட்சிக்குத் துதி பாடி அந்த ஆட்சியே நிலைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்தது உண்டு.
பார்ப்பனர் ஆதிக்கத்தைவிட வெள்ளைக் காரர் மேல்  என்ற எண்ணம் நீதிக்கட்சியின ருக்கு இருந்ததுண்டு. அதே நீதிக்கட்சி முழு சுதந்திரம் என்ற நிலைப் பாட்டை பிற்காலத்தில் எடுத்ததை யெல்லாம் ஏன் வசதியாக மறைக்க வேண்டும்?
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நீதிக்கட்சி ஆதரித்ததால் மக்களிடம் செல்வாக்கை அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்விப் பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்ததாம். கண்டுபிடித்து விட்டது ‘தீக்கதிர்’
13.2.2015 அன்று நடந்து முடிந்த தேர்தலில் (சிறீரங்கம் சட்டமன்ற இடைத் தேர்தல்) சி.பி.எம். கட்டிய பணத்தைக்கூடத் திருப்பிப் பெற முடியவில்லையே (பெற்ற வாக்குகள் 1552) அதற்கும், இது போன்ற காரணங்கள்தானா? தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்குமா என்ற அசசத்திலும் அய்யத்திலும் இருப்பவர்கள் எல்லாம் இப்படி எழுதக் கூடாது.
நீதிக்கட்சியின் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு சமூகச் சீர்திருத்த சமூக நீதி நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்கின்றனர் என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறது தீக்கதிர்.
‘பீம்சிங்’ இது என்ன குழப்பம்?’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய வசனம் தான் - இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.
வேலைத் திட்டம் ஒன்றை நீதிக்கட்சிக்கு அனுப்பி வைத்து அதை அவர்கள் ஏற்ற பிறகுதான். அந்தக் கட்சியின் தலைவரானார் பெரியார் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார் தோழர் சொக்கன்.
அப்படிச் சொன்னால் போதுமா? இந்த வேலைத் திட்டத்தில் சொல்லப்பட்டவைகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் நீதிக் கட்சியின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாமே!
வேலைத் திட்டமாவது
1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்த தன்மையைக் கெடுக்க கூடியதாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியதாகவும், இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிக மிக தாங்க முடியாததாகவும் இருப்பதால் அவைகளைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும், மீத்துப் பெருக்கி வைப்பதற்கு லாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும்.
2. பொதுஜன தேவைக்கும், சௌகரியத் துக்கும் நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற் சாலைகள், இயந்திரசாலைகள், போக்குவரத்து சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாலேயே நடைபெறும்படி செய்ய வேண்டும்.
3. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும் சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. விவசாயிகளுக்கு இன்று உள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப் பதுடன், இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
5. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் குறிப்பிட்ட ஒரு அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழி யும்படியாகவும், ஒரு அளவுக்கு உத்தியோ கங்கள் எல்லா ஜாதி, மதக்காரர்களுக்கும், சரிசமமாக இருக்கும்படிக்கும் உடனே ஏற் பாடுகள் செய்வதுடன், இவை நடந்து வரு கின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்து தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படி செய் வதுடன், அரசியலில், அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும், குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ மதத்திற்கென்றோ எவ்வித சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ அவற்றிற்காக அரசாங் கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ ஏதாவது பொருள் செல விடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
7. கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிக்காரருக்கோ, அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ வரிப் பளுவே இல்லாமலும் மனித வாழ்க்கைக்குச் சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அன்னியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைபவர்களுக் கும் வருமான வரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
8. லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி, கோவாப்ரேட்டிவ் இலாகா ஆகியவைகளுக்கு இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிர்வாகம் செய்ய வசதிகள் செய்து தக்க பொறுப்பும், நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவைகளை நிர்வாகம் செய்யச் செய்ய வேண்டும்.
9. விவகாரங்களையும், சட்ட சிக்கல் களையும் குறைப்பதுடன் சாவு வரி விதிக்கப்பட வேண்டும்.
10. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து அச்சட்டங்களினால் அமுலில் கொண்டு வரக் கூடியவைகளை சட்ட சபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளை, கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
(‘பகுத்தறிவு’ 23.9.1934)
நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் (14.11.1935 - சென்னை) இந்த வேலைத் திட் டங்களை விளக்கிப் பேசுமாறு பெரியாரை முன்மொழிந்து கேட்டுக் கொண்டவர் யார் தெரியுமா? பொப்பிலி ராஜா! தலைமை வகித்தவர் யார் தெரியுமா? திவான்பகதூர் அப்பாதுரை பிள்ளை;
இந்தக் கூட்டத்தில் செல்வந்தர்கள் உண்டு, மிட்டா மிராசுகள் உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தில் தான் இத்தகைய பொதுவுடைமைக் கோட் பாடுகளை உள்ளடக்கிய வேலைத் திட்டங்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு 80 ஆண்டுகளுக்குமுன் இது நடந்திருக்கிறது என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.
பெரும் பணக்காரர்கள் இருந்ததாலேயே அவர்களுக்காகத் தான் அந்தக் கட்சி உண்டாக்கப்பட்டது என்று வாய் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பேசக் கூடாது.
கம்யூனிஸ்டுக் கட்சியில் மோகன் குமார மங்கலங்கள் இருந்தார்கள் என்பதற்காக, ஜோதிபாசுவின் மகன் தொழில் அதிபர் என்பதாலேயே கம்யூனிஸ்டுக் கட்சிமீது வேறு வகையான முத்திரையைக் குத்தலாமா?
தந்தை பெரியார் அவர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள் பொதுத் தொண்டில் தங்கள் சொத்துக்களை அழித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். எதையும் நிதானத்துடன் பேசுவதும் - எழுதுவும் நன்மை பயக்கும்.
கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் சிலாகித் துள்ளது ‘தீக்கதிர்’.
கம்யூனிஸ்ட்க் கட்சி மதம், கடவுள் நம்பிக்கை போன்ற விசயங்களில் திராவிடர் கழகத்தின் அணுகுமுறையல்ல மார்க்சிய அணுகுமுறை; மதம் ஒரு அபின் என்று கூறிய மார்க்ஸ் அது இதயமில்லாத உலகத்தில் இதயமாக இருக்கிறது என்றும் ஒடுக்கப்பட்ட வர்களின் பெரு மூச்சாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர் கட்சியில் சேரத் தடையில்லை. ஆனால் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைக் கற்றறியும் போது கடவுள் காணாமல் போய் விடுவார். இயங்கியல் அடிப்படையிலான அணுகுமுறைதான் மார்க்சிய நாத்திகம் அது உறுதியானது என்று “டயலிட்டிக் மெட்டீரி யலிசம்” பேசுகிறது தீக்கதிர் - சபாஷ், வரவேற்கிறோம்.
கடல் வற்றி மீன் கருவாடு ஆகும் போது கொத்தலாம் என்று காத்திருக்குமாம் கொக்கு.. அதுபோன்றதே இவர்களின் வாதம்.
கட்சியில் உள்ளவர்கள் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை எப்பொழுது கற்று (எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ!) எப்பொழுது கடவுளைக் காணாமற் போகச் செய்வார்களாம்?
கேரள முதல் அமைச்சர் ஈ.கே. நாயனாரும் மூத்த பொதுவுடைமை வாதி சோம்நாத் சட்டர்ஜியும் (பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்தியவர்) செத்துப் போன கோயில் குரங்குக்குச் செவ்வாடை போர்த்தி புரட்சி வணக்கம் செய்த கேரளத்தைச் சேர்ந்த சி.பி.எம். அமைச்சர்களும்கூட இன்னும் பொருள் முதல் வாதத்தைக் கற்கவில்லையா?
திருவனந்தபுரத்தில் சிருங்கேரி சங்கராச் சாரியார் அளித்த பேட்டி ஒன்றில் (3.1.1980) ஏராளமான கம்யூனிஸ்டுகள் என்னுடைய சீடர்களாக இருக்கிறார்கள். பூஜைகளை செய்து மந்திரங்களை ஓதுகிறார்கள் (‘விடுதலை’ 4.1.1980) என்று சொன்னாரே!
திராவிடர் கழகத்தின் அணுகுமுறை கம்யூனிஸ்டுகளுக்குக் கிடையாதாம். திராவிடர் கழகத்தின் அணுகுமுறையை ஏற்ற கருஞ் சட்டைக்காரன் ஒவ்வொருவனும் கடவுள் மறுப்பாளன்தான்; மத மறுப்பாளன் தான். கம்யூனிஸ்டு அணுகுமுறையைப் பின்பற்றுபவர்களை அவ்வாறு கூற முடியவில்லையே - ஏன்?
இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிய வில்லையா - எந்த அணுகுமுறை வெற்றி பெற்ற ஒன்று என்று?
சாதாரண தொண்டர்கள் ஒரு புறம் இருக்கட்டும்; தீபாவளிக்குச் சிறப்பு மலர் வெளியிடும் தீக்கதிர்கூட பொருள் முதல் வாதத்தைக் கற்றுத் தேறவில்லையா?
இதில் என்ன விலா நோகும் வெடிச் சிரிப்பு நகைச்சுவை தெரியுமா? அப்படி மலர் போட்டதற்கு வக்காலத்து வாங்கியதுதான்!
“ஆதி மனிதன் இருள் பயத்திலிருந்து விடுதலை பெறவும் உணவை சமைக்க உதவும் ஆதார சக்தியாக விளங்கிய இயற்கை சக்தியாம் தீயைப் போற்றும் விழாவே தீப விழாவாக நடைபெற்று வருகிறது.”
(‘தீக்கதிர்’ 20.11.2010 பக்.7).
எப்படி இருக்கிறது - சங்கராச்சாரியார் கூட இப்படியொரு வெண்டைக்காய், விளக்கெண் ணெய் விளக்கத்தைக் கூறவில்லை.
தீபாவளி என்பது இந்து மதத்தின் மூடக் கதை; அதற்கென்று புராணம் உண்டு. புராணத்திற்குப் புனுகு பூசும் வேலைதான்  ஒரு மார்க்ஸிட் நாளேட்டின் வேலையா? இதைவிட மார்க்சைக் கொச்சைப்படுத்தும் பாங்கு வேறு உண்டா?
பார்ப்பனீயத்துக்கு ‘கில்ட்டு’ அடிப்பது மார்க்சியமா?
பிரபல நாவலாசிரியரும், கம்யூனிஸ்டு மான அகேலே என்பவரால் எழுதப்பட்ட நூல் “போயாபேட் பபூல்கா” என்பதாகும். பபூல் என்பது காய்க்காத முள்ளு மரமாகும். காய்க்காத முள்ளு மரத்தைக் காய்க்கும் என்று நட்டு வளர்ப்பது போன்றதுதான் மூட நம்பிக்கை என்பது அந்த நாவலின் சாராம்சம். அது இந்து மதத்தை விமர்சிக்கிறது என்று காரணம் காட்டி பிகார் மாநில அரசு தடை செய்தது என்றால் அதனைப் புரிந்து கொள்ள முடியும்!
ஜோதிபாசு தலைமையிலான மேற்கு வங்க கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சிக்கு என்ன வந்ததாம்? அதுவும் அல்லவா தடை செய்தது; தடை செய்ததோடு மட்டுமல்ல; நூல் ஆசிரியரைக் கட்சியிலிருந்தும், நீக்கிப் பெரும் ‘புரட்சி’ செய்து விட்டதே!
(ஆதாரம்: பிரபல பகுத்தறிவாளரான ஜோசப் எடமருகு எழுதிய ரணரேகை -1.3.1984)
இன்றைக்கு அதிமுக ஒரு பஜனை மடமாகவே மாற்றப்பட்டு விட்டது. பூஜை புனஷ்காரங்கள் தூள் பறக்கின்றன. கோவில் வழியாக கோட்டை நோக்கி செல்வதே நோக்கம் என்றாகி விட்டது. இந்தத் தவறுக்கு கருப்பு மெழுகு வர்த்திகள் வருத்தப்படு வார்களா? அல்லது மாட்டார்களா என்று தெரியவில்லை என்று குறைபட்டு எழுதுவது ‘தீக்கதிர்’.
வருத்தம் என்ன? கண்டிக்கவே செய் கிறோம். அண்ணா பெயரால் கட்சி எதற்கு? கட்சிக் கொடியில் அண்ணா எதற்கு? என்று கேட்டதைவிட வேறு என்ன அதிகமாக எழுத முடியும் - கேட்கவும் தான் முடியும்?
அதே நேரத்தில் அதிமுகவைப் பற்றி சி.பி.எம்.மின் நிலைப்பாடு என்ன?
“வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது. தேசிய அரசியலில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு எழுச்சிகரமான எதிர்காலம் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தேசிய அரசியலில் அவரது பங்கு மகத்தானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.” (மாலை முரசு 2.1.2014) என்று கூறியவர் சாதாரண மானவர் அல்லர்; சி.பி.எம்.மின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்கள் “நமக்கு நாமே” - சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுபற்றி ‘தீக்கதிர்’ என்ன எழுதுகிறது?
அந்தக் காலத்தில் ராஜசூய யாகத்திற்கு முன்பு வலம் வரும் அசுவமேத யாகக் குதிரையைப் போல சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி ‘நமக்கு நாமே பயணம் மேற்கொண்டுள்ள தளபதி பற்றியும் கேலி செய்துள்ளது தீக்கதிர்.
ஓர் அரசியல்வாதி மக்களை நேர்முக மாகச் சந்திப்பது என்பதுகூட மார்க்சிய பார்வையில் குற்றம் என்பதை முதன் முத லாக இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம்.
மக்களுக்குத் தொடர்பு இல்லாத காரணத் தால்தானோ என்னவோ சில  கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகின்றன.
தி.மு.க. பொருளாளரின் பயணம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது என்பதை - இது போன்றவர்களின் வயிற்றெரிச்சல் விமர்சனங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
ரசம் போன கண்ணாடி என்று நம்மைக் கேலி செய்கிறது ‘தீக்கதிர்’; ரசம் போன கண்ணாடியில் முகம் பார்க்க முடியாமல் இருக்கலாம்! தேவைப்பட்டால் அது ஆயுதமாகக் கூடப் பயன்படுமே! அதே நேரத்தில் ரசம் உள்ள கண்ணாடியை, ‘விடுதலை’யின் விமர்சனம் வழி ஒரு முறை ‘தீக்கதிர்’ தனக்குத்தானே தன் முகத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது!
வணக்கம் காம்ரேட்!

-விடுதலை ஞா.ம.,31.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக