பக்கங்கள்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

சுயமரியாதைத் திருமணம் அன்றும் இன்றும்


முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கடந்த வாரம் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை அமைப்பின் வடக்கு மண்டலச் செயலாளர் மு.மாறன் - ஹேமலதா இல்லத் திருமண விழாவை சென்னை சிந்தாதிரிப்பேட் டையில் 10.7.2014 அன்று மாலையில் நடத்தி வைத்தார். அவர் நடத்தி வைத்த எத்தனையாவது சுயமரியாதைத் திருமணம் என்று கேட்டால் எவருக்கும் சொல்லத்தெரியாது.
எண்ண முடியாத எண்ணிக்கை
எண்ணிக்கை தெரியாமையா? இல்லை. எண்ண முடியாமையே. அந்த அளவிற்குச் சுயமரியாதைத் திருமணங் களின் எண்ணிக்கை ஆயிரம், லட்சத் தைக் கடந்து விட்டதுதான். ஆயினும் இன்றைய தலைமுறையினருக்கு அவ்வப் போது சுயமரியாதைத் திருமணம் ஏன்? என்பதை எடுத்துச்சொல்ல வேண்டிய நிலையும் இருக்கிறது.
சில திருமணங்களோ தந்தைக்குத் தமிழர் தலைவர் நடத்தி வைத்து இன்று மகனுக்கோ, மகளுக்கோ நடத்தி வைக்கின்ற திருமணங்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழர் தலைவர் பெற்றோருக்கு நடத்தி வைத்து, இன்று பேரன் பேத்திகளுக்கும் நடத்தி வைக்கிற அளவுக்குச் சுயமரியாதைத் திருமணம் செய்தவர்கள் எல்லாம் குறையேதுமில்லாமல் இன்னும் சொல்லப் போனால் பெருஞ் சிறப் போடு கடல் கடந்து தொழில்புரியும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்கள்.
இப்படியும் நடந்தது!
அதேநேரத்தில் இதையும் சொல் லாமல் இருக்க முடியவில்லை. நண்பர் ஒருவரின் மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். அந்த நண்பரின் திருமணமோ 27 ஆண்டுகளுக்கு முன் இனமானப் பேராசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணம். அவருடைய குடும்பத்தில் நடைபெற்ற திருமணங் கள் எல்லாம் சுயமரியாதைத் திருமணங்கள்.
அவருடைய மகள் சுயமரியாதைத் திருமணத்தில் பிறந்தவள் பொறியியல் பட்டம் பெற்றவர். கைநிறையச் சம்பளம் வாங்குவோர் மல்டி நேஷனல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர். அவர் பணி செய்யப்போன இடத்தில் மணமகனைத்தேடிக் கொண்டார். நண்பரின் மகள் பார்ப்பனரல்லாத வகுப்புப் பெண். மணமகனோ -_ அவர் காதலித்தவர் பார்ப்பன வகுப்பினர். அதுமட்டுமல்ல. தமிழ்ப் பார்ப்பனர் கூட இல்லை. தெலுங்குப் பார்ப்பனர். அப்பையனுக்குத் தந்தையும் இல்லை. கலப்புத் திருமணம் தான். காதல் திருமணம் தான்.
மண விழாவிற்குச் சென்ற எங் களுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. பார்ப்பனரல்லாத அப்பெண்ணுக்கு மஞ்சள் தோய்ந்த சேலையை மடிசார் கட்டி, மணமகன் சட்டையில்லாமல் பூணூல் போட்டு, வைதீக முறையில் காசி யாத்திரை, பூவோடு ஊஞ்சல், மடியில் தந்தை வைத்துக்கொள்ளுதல் என்று சடங்குகள். இக்கொடுமையை என்ன வென்று சொல்ல. கலப்புத் திருமணம் இன்று ஆரியக்கலப்புத் திருமணமாகி விட்டிருந்தது. நண்பரைப் பார்த்துக்கேட்டேன். ஏம்பா, பேரா சிரியரை வைச்சுக் கல்யாணம் பண்ணிய நீயா இப்படி? பொண்ணு விரும்பின பையன் வீட்டிலே இப்படித்தான் செய்யனும்னுட்டாங்க. இப்படி ஒரு கல்யாணம் தான் செய்து பார்ப்போமே என்றார் பதில் இப்படி?
சுயமரியாதைத் திருமணம் செய்து இப்படி நலமாக எவ்விதப் குறைபாடு களும் இல்லாமல் வாழ்த்தும் நிலை இப்படி. ஆசிரியர் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்து இன்று திருமணம் செய்பவர்கள் இல்லம் நன் றாக இருக்கிறது, சிறப்பாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி வருகிறார்.
சுயமரியாதைத் திருமணம்
எனவே இன்றைய தலைமுறையின ருக்கு உணர்த்தத் தமிழர் தலைவர் எடுத்துக்கூறுகிறார். சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் உருவாக் கினார்கள். செல்லாது என்ற அந்த நிலையை மாற்றி பேரறிஞர். அண்ணா அதைச் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினார். அந்தப்பெருமை பேரறிஞர் பெருந்தகை அண்ணாவையே சாரும். திமுக ஆட்சி அமைந்ததும் அந்த அமைச்சரவையையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்திலே அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்தி அவர் இந்தச் சுயமரியாதைத் திருணங்களையெல்லாம் நடந்தவை நடக்கின்றவை இனியும் நடக்க இருப்பவை என்று எல் லாத்திருமணங்களும் செல்லும் என்று சட்டம் இயற்றினார். இந்தத் திரும ணத்தைப் புகுத்திய பெரியார் சட்ட வடிவம் அளித்த அண்ணா ஆகிய இரு தலைவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று குறிப்பிட்டார்.
சிவகாமி - சிதம்பரனாரில் ஒரு தொடக்கம் வீரவணக்கம் செலுத்துவோம் என்றால் இந்த நிலையை எட்டுவதற்கு எண்பது ஆண்டுகளில் பட்ட துய ரங்கள், தொல்லைகள் கொஞ்ச நஞ்சமா?
1930 இல் தந்தை பெரியார் நடத்தி வைத்த சிவகாமி சிதம்பரனார் மறுமணத்தில் தாலியில்லாமல் மண மக்களாகிய கணவன் மனைவி ஆக்கிய முதல் திருமணத்தில் அய்யர் இல்லாமல் ஹோமம் இல்லாமல் அட்சதை இல் லாமல் நடத்தி வைத்த திருமணத்தில் பெரியார் கூறினார்.
இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க்காதல் கொண்டு தாங்களாகவே தைரியமாக முன்வந்து இருவரும் சீர்திருத்த முறையில் ஆண், பெண் இருவரும் சமஉரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத்திருமணமாகும். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம் தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகுகாலமாக வேரூன்றிக் கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும் பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு அறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல் லாமலும் சீர்த்திருத்த உலகத்திற்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக் கிறது.
இத்திருமணத்தில் தாலிகட்டுதல் என்றும் சடங்கு நீக்கப்பட்டிருக்கிறது. கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஓருகயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்
ஈ.வெ.ரா. நாகம்மையாரின் புரட்சி
சுயமரியாதைத் திருமண வரலாறு என்று கூறினால் அதில் ஈ.வெ.ரா. நாகம் மையாரின் பங்கினைக் கூறவில்லை யெனில் எவர் கூறுவதும் முழுமை பெறாது.
நாகம்மையார் மறைந்தபோது அவருடைய உருவப்படத்தினைத் திறக்கும் முன் ஆற்றிய சொற்பொழிவில் திரு.வி.க.அவர்கள்
பெண்ணுலகிற்கு நாகம்மையார் மனம் வாக்குகாயங்களினால் தான் மறையும் வரை அரும்பாடுபட்டார் என்று கூறிப் பெண் உரிமைக்கு நாயக்கர் அருந்தொண்டாற்றினார், ஆற்றுகின்றார், ஆற்றுவார் அவருக்கு உறுதுணையாக நாகம்மையார் செய்த தொண்டு அளவிடற்கரியது என்று குறிப்பிட்டார் எனில் பெரியார் நிகழ்த்தி வைத்த சுயமரியாதைத் திருமணத்திற்கு உறுதுணையாய் இருந்தது குறிப்பிடத் தக்கது.
1932 ஆம் ஆண்டு நாகம்மையார் தலைமை வகித்து 72 ஆண்டுகளுக்கு முன் நடத்தித் தந்த கடைசித் திருமணம் புரட்சிகரமான திருமணம்.
கடந்த 10.7.2014 அன்று மாலை வேளையில் நம் தமிழர் தலைவர் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் நடத்தி வைத்தாரே அதற்கும் முன்னோடியானது நடத்தி வைத்தவர் பெரியார் கூட இல்லை. பெரியாரின் வாழ்விணையர் தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார்.
இரவில் நடத்திய திருமணம்
12.9.1932 அன்று இரவு - ஆம் இரவில் தான் நடைபெற்ற திருமணம் அது இரவு 9.30 மணிக்கு ஈரோட்டில் கோர்ட்டு வீதி ஈ.வெ.ரா.மாளிகையில் நாகம்மையார் தலைமையில் நடை பெற்ற திருமணம் அது.
மணமகன் தென்மாப்பட்டு (திருப் பத்தூர்) சமதர்ம செந்தமிழ் கலாசாலை ஆசிரியர் திரு. சி.முருகன் மணமகள் பாலக்காடு செல்லம்மாள் இத்திரு மணத்தை வாழ்த்திப் பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசினார்.
இத்திருமணம் தந்தை பெரியார் ஊரில் அவர் இல்லாமலே நடைபெற்ற திருமணம். பதினைந்தே நிமிடங்களில் நடைபெற்று முடிந்த திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைவர் கலைஞர் பெருமை கொள்வது
சுயமரியாதைத் திருமணத்தின் அரும்பெரும் சிறப்பை உணர்த்துவதற்கு சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.தங்கவேலு அவர்களின் இல்ல மண விழாவில் கலைஞர் அவர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்ட ஒன்றைப் பதிவு செய்வோம்.
தி.மு. கழகம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை இழந்தது. கலைஞர் அவர்கள் நாம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறா விட்டாலும் எத்தனை இடங்களைப் பெற்றோம் என்பதை விட எத்தனை திருமணங்களை இந்த ஆண்டு சுயமரியாதைத் திருமணங்களாக நடத்தி வைத்தோம் என்ற அந்த எண் ணிக்கையிலே தான் நாம் பெருமை யடைகிறோம். அந்தப் பெருமையைத் தொடர்ந்து நாம் காப்பாற்ற தொடர்ந்து நடைமுறைப்படுத்த நம்முடைய இயக்கத்திலே இன்றைக்கு ஒரு தங்கவேலன் அல்ல, பல தங்க வேலன்கள் உருவாகியிருக்கிறார்கள். நாம் அரசியலிலே அடைய வேண்டிய அளவுக்கு வெற்றி அடையாவிட்டாலும் கூடச் சமுதாய சீர்திருத்தத்திலே நாம் பெற்ற வெற்றியை எண்ணிப்பார்த்து பெருமை அடையலாம் என்று குறிப்பிட்டார்.
இன்றைக்குத் திராவிட இயக்கத்திலே வாழும் மாபெரும் தலைவர், கலைஞர் அவர்கள், எண்ணிப்பார்க்காத தோல்வி ஒன்று ஏற்பட்டபோதும் அரசியல் வெற்றி பெறாவிட்டாலும் பரவா யில்லை சமுதாய வெற்றி பெற வேண் டும் என்று கூறிச்சுயமரியாதைத் திரு மணத்தின் மாண்பை எடுத்துக்கூறினார் என்றால், அவருடைய வாழ்வில் நிகழ்வுற்ற  சுயமரியாதைத் திருமணம் ஒன்றை  நடத்தப் போய் அய்ம்ப தாண்டுகளுக்கு முன் பட்ட அவஸ்தை, இடையூறு, அச்சமூட்டிய சூழ்நிலை இன்று நினைவில் நிழலாடியிருக்க வேண்டும்.
சுயமரியாதைத் திருமணம் நடத்தபட்டபாடு
அந்த நிகழ்வு என்ன? எங்கே நடந்தது, தலைவர் கலைஞர் அந்த நாளில் மு.கருணாநிதி என்று மட்டும் அறியப்பெற்ற காலத்தில் பட்டபாடு என்ன? அந்தச் சுவையான நிகழ்ச்சி இது தான்.
தலைவர் கலைஞர் அவர்களே கூறக்கேட்போம்.
இன்று சுயமரியாதைத் திருமணங்களைக் கழகத் தலைவனாக இருக்கிற என் தலைமையில் நடத்திக் கொள்ள விழைவோர் பலராகலின், அனைவர் விழைவையும் ஏற்று நிறை வேற்ற இயலாத நிலையில், கழகத்தின் இலட்சியப்பணி நடைபெறுவதற்கு நிதி வழங்குவோரின் திருமணங்களுக்கே செல்லக் கூடியவனாக உள்ளேன். அதன் படி அய்யாயிரம் ரூபாய் நிதியினைத் தலைமைக் கழகத்தில் செலுத்தி, என்னை அழைப்போர் பலர் அதனினும் பல மடங்கு தொடங்கியது முன் கழக உடன்பிறப்புக்களின் சுயமரியாதைத் திருமணங்கள் கழக முன்னணியினரைக் கொண்டு நடைபெறுவதனால், தமிழின் மானங்காக்கும் கொள்கை நாளும் பரவுகிறது என்பதில் தான் மனநிறைவு கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியுடன் கடந்த காலத்தில் நடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன்.
வடமொழியும், வடமொழிப் புரோகிதமும் சமசுக்கிருத மந்திரங்களும் சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாத அளவுக்குத் தமிழர்கள், தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்பத் தங்கள் திரு மணங்களை நடத்திக்கொள்ள வேண் டுமென்று சொல்லவும், அப்படி நடத் திடவும் சுயமரியாதை இயக்கத்தினர் கடுமையாகப் போராட வேண்டி யிருந்தது.
1946 ஆம் ஆண்டு என்று எனக்கு நினைவு - தஞ்சை மாவட்டத்தில் பாப நாசம் என்ற ஊரில் சுயமரியாதை இயக்க நண்பரும் என் நெருங்கிய நண் பருமான ராஜூ என்பவருக்குத் திரு மணம் என் தலைமையில் நடைபெறும் என அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டது.
அதே நாளில் தஞ்சாவூரில் கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலைமை யில் என் மைத்துனர் இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் மண விழா. அந்த நிகழ்ச்சிக்குக் கூட நான் செல்லாமல் என் வீட்டில் உள்ளவர்களை அனுப்பி வைத்து விட்டுப் பாபநாசத்திற்கு நண்பர் களுடன் புறப்பட்டு விட்டேன்.
அப்போதெல்லாம் கருப்புச் சட்டை அணிவது வழக்கம். திராவிடர் கழ கத்தின் திட்டபடி! நாங்கள் நாலைந்து பேர் பாபநாசம் திருமணப்பந்தல் முகப்பில் கருஞ்சட்டையுடன் நுழைந்த வுடன் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
டேய்! கருப்புச்சட்டைப் பசங்க யாரும் உள்ளே நுழையக்கூடாது. அய்யரை வைத்துத்தான் கல்யாணம் நடத்துகிறோம். நீங்க போங்க வெளியே என்று கதர்ச்சட்டை அணிந்த முரட்டு ஆசாமிகள் எங்களை விரட்டியடித் தனர். மணமகன் எங்கே என்று பார்த் தோம் கிடைக்கவில்லை பந்தலிலிருந்து கிளம்பி, அந்த ஊர்க் குளக்கரைப் படித்துறையில் வந்து அமர்ந்து கொண் டோம், ஏமாற்றத்துடன். பிறகு என் நண்பன் தென்னனை கருஞ்சட்டையைக் கழற்றச் சொல்லி நீ போய்த்திருமண வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்துவா என்றேன்.
அவ்வாறே சென்ற தென்னன் திரும்பிவந்து அய்யரை வைத்துத் திருமணம் நடைபெறுகிறதென்றும், மாப்பிள்ளை ராஜூ, மணவறையில் அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறார் என்றும் சொல்லவே. ஒரு அரை மணி நேரம் கழித்து மணமகன் ராஜூவே எங்களைத் தேடிக் கொண்டு வந்து விட்டார். அழுது புலம்பிய அவரை நாங்கள் சமாதானப்படுத்தினோம். காலைச் சிற்றுண்டி அருந்த அழைத்தார்.
நான் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டிவிட்டேன். இனிமேல் பெண் வீட்டார் என் சொற்படிதான் கேட்க வேண்டும். காலை உணவருந்தியவுடன் மணவிழாப் பந்தலிலேயே நீங்கள் எங்களை வாழ்த்திப் பேச வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.
எங்களுக்கு வயிற்றுப்பசி ஒரு புறம் - பேச வேண்டும் என்ற பசி மற்றொரு புறம். ஒப்புக்கொண்டு கிளம்பினோம். ராஜூ பந்தலில் பேசுவதற்கு மேடை போடுகிற வேலைகளைக் கவனிக்கச் சென்றார். எங்களைப் பந்தியில் உட்கார வைத்துவிட்டுத்தான் சென்றார் ஆனால், பரிமாறுவதற்கு அதே முரட்டுக் கதர்ச்சட்டைக் காரர்கள் தான் வந்தனர் அவர்கள் எங்கள் பக்கத்து இலை வரையில் இட்லி வைப்பார்கள். எங்களிடம் வரும்போது ஒரு முறைப்பு முறைத்து விட்டுப் போய் விடுவார்கள். நாங்களும் சாப்பிட்டு முடித்தது போல பாவனை செய்துவிட்டு, பேச்சுப் பசியையாவது தீர்த்துக் கொள் வோம் என்று பந்தலில் அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தோம். மணமக்களை வாழ்த்திப் பேசுவது என்ற பெயரால் மிக நீண்ட நேரம் நான் ஆற்றிய உரை, சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? ஏன் என்பதற்கான விளக்கங் களை விரிவாக வழங்குவதாக அமைந் தது முகப்புக்குள்ளேயே வராதே என எங்களை விரட்டிய முரட்டுக் கதரா டைக்காரர்களே முகமலர்ந்து என்னை அணுகி முதலில் நடந்து விட்ட தவறுகளுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர்.
இது போன்ற அனுபவம் - சுயமரி யாதைத் திருமணங்களைத் தொடக்க காலத்தில் நடத்திக் கொண்டவர்களுக் கும் நடத்தி வைத்தவர்களுக்கும் ஏராளமாக இருந்ததுண்டு.
எதிர் நீச்சல் போடும் ஆற்றலைத் தந்தை பெரியார் அவர்களிடத்தில் கற்றுக்கொண்டு எஃகு உள்ளத்துடன் இடையூறுகளைக் கடந்து வந்ததுதான், இன்றைக்கு ஆயிரக்கணக்கான திரும ணங்கள் தமிழ்மொழி உணர்வுடனும், தமிழ் இனவுணர்வுடனும் தமிழர்களின் இல்லங்களில் நடைபெறுகிற காட் சியைக் காணமுடிகிறது.
தமிழர் திருமணமும் இனமானமும்
இவ்வளவும் கற்பனையாக எழுதப் பட்டன அல்ல. பேராசிரியர் க.அன்பழ கன் அவர்களின் தமிழர் திருமணமும் இனமானமும் என்ற நூலுக்கு தமி ழினத் தலைவர் கலைஞர், முத்தமிழறி ஞர் அவர்கள் வழங்கிய அணிந்துரையில் காணப் பெறுபவை தாம் இவை. இது அன்றைய நாள் - அய்ம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு.
உலகமயமாகிய பெரியார்
ஆனால் இன்று - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அரிதின் முயன்று, முயன்று தந்தை பெரியாரை உலக மயமாக்கியதன் பயனாய் -_
பெரியாரியல் என்பது இருக்கிறதே அது எளிமையை அடிப்படையாகக் கொண்டது. அதே நேரத்தில் சிக்க னத்தை அடிப்படையாகக் கொண்டது. எளிமையும், சிக்கனமும் எங்கே இருக்கிறதோ, அங்கே தன்மானம் தானே காப்பாற்றப்படும். ஏனென்றால் கடன் வாங்கவேண்டிய அவசியம் கிடையாது. மிக முக்கியமாகக் கடன் வாங்கவேண்டிய அவசியம் கிடையாது என்கிற போது தன்மானத்தை விடவேண்டிய அவசியமும் கிடையாது இப்படி ஒரு அற்புதமான ஒரு கொள் கையைப் பெரியார் வாழ்வியலாகக் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஊர்கள் தோறும் மேடை தோறும் மணமேடை தோறும் எடுத்துக் காட்டி யதன் பயனாய் - இன்று ஜெர்மனியில் சுய மரியாதைத் திருமணம் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தில் ம.பெ.அறிவாழி - சித்ரா மணவிழா நிறைவேறிச் சுயமரியாதைத் திருமணம் இன்று ஏழுகடல் தாண்டி, ஏழுமலை தாண்டி என்பார்களே அது போன்று தாண்டித் தாண்டி இன்று ஜெர் மனிக்குச் சென்று இருக்கிறது.
ஜெர்மானியர்கள் எளிமையாக, மத சம்பந்தமில்லாமல், சடங்குகள் சம்பிர தாயங்கள் இல்லாத திருமணங்கள் நடைபெறுவதைப் பாராட்டியிருக்கிறார்கள்.
ஆகத் தமிழர் தலைவர் சத்தமில் லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆர்ப்பரிப்பு இல்லாமல் இன்று ஒரு சாதனையை ஜெர்மனியின் ஆரியம் உயர்ந்தது என்று அலறிய ஹிட்லரின் அந்நிய பூமியில் சாதித்துக் காட்டியி ருப்பதைப் பாராட்ட வேண்டும்.
சுயமரியாதைத் திருமணம் அன்றும் - சுயமரியாதைத் திருமணம் இன்றும்.
எவ்வளவு மாற்றங்கள்!
வியக்கிறோம். மகிழ்கிறோம்.


நாதனின் காதல் திருமணம்
எங்கள் திருமணம்.. காதல் திருமணம். ரகசியமாக நாங்கள் இருவரும் காதலித்தோம் மூவாரில் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஊர்மிளா நந்தி என்ற வங்காளிப் பெண்ணை 18 வயதில் காதலிக்கத் தொடங்கினேன். அப்போது அவருக்கு 13 வயது.
எங்கள் காதலை ஊர்மிளா குடும்பத்தினர் எதிர்த்தார்கள். பல இன்னல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையேயும் எங்கள் காதல் பூத்துக் குலுங்கியது. எது வந்தாலும் எதிர்த்துப் போராடுவது என்று உறுதியாக இருந்தோம். ஊர்மிளாவை கூட்டிக் கொண்டு எங்கேயாவது சென்று திருட்டுத்தனமாக கல்யாணம் செய்து கொள் என்று நண்பர்கள் பலர் கூறினர். எது நடந்தாலும் இரு தரப்பு குடும்பத்தினரின் முழு ஆதரவோடுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வைராக்கியத்துடன் இருந்தோம். அதையே அம்மாவும் கூறினார்.
அந்த உறுதிதான் 16 ஆண்டுகள் கழித்து எங்கள் இருவரையும் இணைத்தது. ஊர்மிளாவின் குடும்பத்தினரின் முழு ஆசீர்வாதத்தோடு எங்களுக்கு இரு அழகான குழந்தைகள். ஜுதிக்கா, ஓசித் பிறந்தனர். இன்று மூன்று பேரப் பிள்ளைகளுக்கு நாங்கள் தாத்தா, பாட்டி எங்கள் திருமணம் காதல் திருமணம் என்பதால் ஜுதிக்கா பல்கலைக் கழகத்தில் சீனரை காதலித்தபோது நாங்கள் அவருக்கு முழு சம்மதம் தெரிவித்தோம்.
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் அவர்களின் 90ஆம் அகவையையொட்டி சிகரம் தொட்ட தமிழர் எனும் தலைப்பில் செம்மொழி இலக்கிய இதழின் சார்பில் வெளியிட்ட சிறப்பு மலரில் வெளியான தகவல் இது. அனுப்பி உதவிய-மயிலாடுதுறை வட்டம் அரங்கக் குடி தமிழவேள் நற்பணி மன்றத்தார்க்கு நன்றி!
-விடுதலை ஞா.ம.,2.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக