பக்கங்கள்

வெள்ளி, 13 மே, 2016

நீதிமன்றத்தை எதிர்த்து கழகம் நடத்திய போராட்டங்கள்


26.8.1985: உயர்நீதிமன்றம் முன்பாக ஆர்பாட்டம்
சென்னை - உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 7 நீதிபதிகள் பதவிக்கும் பார்ப்பனர்களையே நியமிக்கும் வண்ணம் டில்லிக்குப் பரிந்துரைகள் சென்றுள்ளன. 98 விழுக்காடு உள்ள மக்களைப் புறக்கணித்து விட்டு, 100-க்கு இரண்டே விழுக்காடு உள்ள பார்ப்பனர்களுக்கே அய்க்கோர்ட்டை தாரைவார்த்துக் கொடுத்து அதன் மூலம் இதனை மற்றொரு அக்ரகாரமாக்கிடும் அபாயப்போக்கை எதிர்த்து,
26.8.1985 அன்று காலை சென்னை - பெரியார் திடலிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வாயில்களிலும் இரு அணிகளாகப் பிரிந்து தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உயர்நீதிமன்றமா? பார்ப்பன சாதி மன்றமா?
நீதிபதி பதவிக்கு - தாழ்த்தப்பட்டோரை நியமனம் செய்!
பெண்களை நீதிபதிகளாக்கு!
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டோரை நீதிபதியாக்கு!
என்பன போன்ற முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன.
20.11..1986 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 6 நீதிபதிகள் பதவிகளுக்கும் பார்ப்பனர் களையே நியமிப்பதற்குப் பரிந்துரை செய்துள்ள சென்னை - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்துர் கரைக் கண்டித்தும், சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த வர்களை, காலியாக உள்ள இடங்களுக்கு நிரப்ப வேண்டும் என்று கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை - பெரியார் திடலிலிருந்து காலை 9 மணியளவில் ஊர்வலம் புறப்பட்டுச் சென்று 10 மணியளவில் உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகப்பொருளாளர் கா.மா.குப்புசாமி, கழகத்துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன், க.பார்வதி, அ.அருள்மொழி, வீரசேகரன் மற்றம் ஏராளமான கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
2.11.1987 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் உள்ள 20 நீதிபதிகளில் தலைமை நீதிபதி உள்பட 3 பேர்கள் பார்ப்பனர். மேலும்  காலியாக உள்ள 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பொறுப்புக்கு பார்ப்பனர்களைத் தலைமை நீதிபதி சந்துர்கர் சிபாரிசு செய்துள்ளதைக் கண்டித்து, சென்னை - பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் - தோழியர்கள் கொட்டும் மழையிலும் பேரணியாகச் சென்று சென்னை -உயர்நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன் ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை எதிர்த்து மறியலில் ஈடுபட்டு சென்னை - மத்தியச் சிறையில் இருந்த காலகட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
2.6.1990: சென்னை - உயர்நீதிமன்றத்திற்கு வெளிமாநிலத்திலிருந்து நீதிபதி மிஸ்ரா அவர்களை நியமனம் செய்வதைக் கண்டித்தும், தேசிய முன்னணி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை - பெரியார் திடலிலிருந்து மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு உயர்நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வழக்கறிஞர் கோ.சாமிதுரை, கழகத்தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள். இளைஞரணித் தோழர்கள் மகளிரணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
26.4.1994 : தமிழ் தெரியாத நீதிபதி தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என்றும் ஏற்கெனவே நீதிபதியாக இருக்கும் கே.எஸ்.பக்தவச்சலத்தை மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தி சென்னை - பூக்கடை காவல் நிலையத் திலிருந்து பேரணி புறப்பட்டு சென்னை - உயர்நீதிமன்றம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்டத்திற்கான நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர் துரை.சக்ரவர்த்தி, மாநில இளைஞரணிச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பேராசிரியர் ந.இராமநாதன் ஆகியோரும், வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், விழுப்புரம், தஞ்சை மாவட்டத் தோழர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.
18.10.1994 : 27 நீதிபதிகளில் 10 பேர் பார்ப்பனர்களாக உள்ள சென்னை - உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்தும், தமிழர் நீதிபதிகளை வெளி மாநிலங்களுக்கு மாற்றுவதை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட நீதிபதிகளை அதிகரிக்கக் கோரியும் காலை 10 மணியளவில் கழகத்துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் மாபெரும் ஊர்வலமாக சென்னை - பூக்கடை அருகிலிருந்து புறப்பட்டு உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன், எம்.கே.டி.சுப்ரமணியன், க.பார்வதி, உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், இளைஞரணி தோழர்கள், மகளிரணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
10.1.1996 : உயர்நீதிமன்றத்தில் பெண்களுக்கு உரிய பங்கு கொடுக்கப்படாததைக் கண்டித்தும், பிள்ளையார் பால் குடித்ததாகக் கூறப்பட்ட மூடநம்பிக்கைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததை எதிர்த்தும், இந்துத்துவா பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்தும், 3 சதவீதம் உள்ள பார்ப்பனர் 30 சதவீதம் நீதிபதிகளாக அனுபவிப்பதைக் கண்டித்தும் காலை 10 மணியளவில் தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் தலைமையில் சென்னை - பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் ஒலி முழக்கமிட்டு, ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உயர்நீதிமன்றப் பதிவாளர் இராமமூர்த்தி அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
26.3.1997 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படாத 13 இடங்களுக்கு பெண்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர் களையும் நியமிக்கக்கோரி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னை - பெரியார் திடலில் காலை 9 மணியளவில் தொடங்கி வைத்தார்.
வழக்கறிஞர்கள் த.வீரசேகரன், அ.அருள்மொழி, பா.குப்பன், இரத்தினகுமார், இராகுலப்புத்தன் (கணேசன்) ஆகியோர் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தனர். பெரியார் திடலிலிருந்து புறப்பட்ட தோழர்கள் ஒலி முழக்கங்கள் கொடுத்துக்கொண்டே சென்று சென்னை - உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமைக்கழகச் செயலாளர் கலி.பூங்குன்றன், விசுவநாதன்கக்கன், த.வீரசேகரன், அ.அருள்மொழி, பா.குப்பன், கணேசன், க.பார்வதி ஆகியோர் உரையாற்றினர்.
22.1.2004 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பார்ப்பனரல்லாத பெண்களுக்குப் பிரதிநிதித் துவத்தை வலியுறுத்தியும் 22.1.2004 அன்று காலை 10 மணியளவில் சென்னை ஒயிட் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து நீதித்துறை யிலும் சமூகநீதி - இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எங்கும் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்தும் உரையாற்றினார்.
கழகப்பொருளாளர் கோ.சாமிதுரை ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். கோட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் நன்றி கூறினார்.
வடசென்னை தென்சென்னை, தாம்பரம் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களை நீதிபதிகளாக நியமிக்கக்கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை - நினைவு அரங்கம் (மெமோரியல் ஹால்) முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
22.8.2005: சுயநிதிக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
28.12.2005: சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கத்தைக் கண்டித்தும், சமூகநீதி கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
27.7.2006: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
1.11.2006 : நீதிபதி முகோபாத்தியாவை மாற்றுக மறியல், தடையை மீறி ஆர்ப்பாட்டம்
27.11.2007 : நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்
8.3.2008 : நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரியும், சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர வலியுறுத்தியும் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
30.6.2008 : சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கினை விரைவுப்படுத்திட ஆர்ப்பாட்டம்
19.2.2015 : சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்கள் முன் ஆர்ப்பாட்டம்
-விடுதலை ஞா.ம.21.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக