பக்கங்கள்

திங்கள், 30 மே, 2016

மலையாளத்தில் பார்ப்பனீயம்


(1929 -குடி அரசிலிருந்து)
தென் திருவிதாங்கூரில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய சிவசேத்திரமாகக் கருதப்படுவது சுசீந்திரமாகும். இங்கு கோயில் கொண்டிருக்கும் சுவாமியின் பெயர் தானுமாலயன் (மும்மூர்த்திகளும் ஓர் காலத்தில் ஒன்று சேர்ந்து ஒரே மூர்த்தியாய் அமைந்தது) என்று ஸ்தல புராணங்கூறுகின்றது. ஊரின் பெயரை நோக்கினால் இந்திரன் சுசி அடைந்த புரமென விளங்குகின்றது.
ஓர் காலத்தில் இந்திரன் செய்த அடாத காரியத்திற்காக அவனது உடம்பு முற்றும் ஆயிரம் யோனிகள் தோன்றிவிட்டன வென்றும், பின்னர் பன் னூறாண்டுகள் தவஞ்செய்ததின் பலனாய் அவ்யோனிகள் கண்களாய் மாறின வென்றும் பண்டைப் புராணங்கள் கூறு கின்றன.
சாபத்தை நீக்குவதற்காக இந்திரன் தவஞ்செய்த வனிடம் சுசீந்திர (புர) மென்றும் தனது வெள்ளை யானை அய்ராவதத்தை ஏன் அது மகேந்திரகிரியிலிருந்து தன்கோடு கொம்புகளால்  பூமியைக் கீறிக்கொண்டேவர அவ்வழியாகப் புறப்பட்ட நதியே கோட்டாறு எனப் பெற்றதென்றும் இதனால் இது மிக பழமையான நதியாகையால் பழையாறு என்று இப்பொழுது வழங்கப்படுகிறதென்றும் சுசீந்திரத்திற்கு சுமார் இரண்டு மைலுக்கு வடமேற்காயிருக்கும் ஊருக்கு கோட்டாறு என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது என்று அப்புராணங்கள் கூறுகின்றன.
மேற்சொன்னபடி புறப்பட்ட ஆறு, இந்திரன் யாகம் முதலிய இயற்றிய விடத்தில் வந்து நின்றது என்றும் இவ் விடத்திலேயே இப்பொழுது பொற்றாமரைத்தடாகம் அமைந் திருக்கிறதென்றும் இவ்விடத்தில் பல யாகம் செய்து தூய்மை அடைந்தான் என்றும் இத்தகைய புண்ணிய ஸ்தலத்தை எவ்விதக் குற்றஞ்செய்தவர் தரிசித்தாலும் தூய்மையடை வரென்பதும் மும்மூர்த்திகளை  ஒரே சமயத்தில் ஒரே வடிவில் தரிசிக்கிற பலனும் கிட்டும் என்பதும் இப்பக்கத்து மக்களின் நம்பிக்கை.
இவ்விடத்தில் வசிப்பவர்கள் யார்யாரெனின் பெருஞ் செல்வத்தையுடைய இக்கோவிலிலிருந்து கிடைக்கும் வருமா னத்தைக் கொண்டு காலங்கழிப்பவரே.
இவ்வூரிலிருந்து சிறிது தூரத்திற்கப்பாலிருக்கும் கக்காடு என்ற சேரியிலுள்ள சாம்போர் முதலிய தீண்டா திருக் குலத்தினரின் வண்டி முதலியவை ஆற்றிலிறங்கியே போக வேண்டுமாயின் அதற்கு உயர்குலத்தாருடைய அனுமதி வேண்டும்.
இன்றேல் வண்டியைக் கொண்டு போக முடியாது. கோயிலைச் சுற்றியுள்ள அக்கிராகாரத்தினரும் அவருக்கு அடுத்தபடியாயுள்ள வேளாளரும் சுசீந்திரம் சத்தியாக் கிரகத்தின் போது தீண்டாக் குலத்தினருக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொண்ட விஷயம் யாருமறிந்த தொன்றாகும். பொதுப்பணத்தைக் கொண்டு போடப்பட்டிருக்கிற வருடந் தோறும் செப்பனிடப்படுகிற சுசீந்திரப்பாதைகளில் ஒரு குலத்தார் செல்லலாகாது எனத் தடுக்கப்பட்டு வந்ததை யொட்டியே சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவதாக இத்தகைய புண்ணிய ஷேத்திரத்தின் புராணப்படி பார்த்தாலும் அங்கு ஜாதி வித்தியாசமில்லை யென்பதும், இந்திரனைப் போன்ற பெரும் பாவங்களைச் செய்தவரும் அங்குள்ள கடவுளை வணங்கித் தூய்மை பெறலாமென்பதும் வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது. எனவே சிறிதும் குற்றமின்றி .. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அனுமதிக்காது தடுப்பது பெரும் அறியாமையும், ஆண வமுமாகும்.
உற்றுநோக்கின் இங்கோர் உண்மைப்புலப்படும். அதாவது எந்தப் போராட்டத்திலும், கோடாரிக்காம்புகளாய்ப் பிறந்தி ருக்கும் பிராமணரல்லாதாரே தம் இனத்தவரைத் தாழ்த்துவ தற்குத் துணைபுரிகிறார்களென்பது, கடந்த சுசீந்திரம் சத்தியாக் கிரகத்திலும் யார் யார் முன்வந்தார்கள் பார்ப்பனர் யாரேனும் உண்டா?
இல்லவே இல்லை எனலாம் சோற்றுத் தடியர்களான பார்ப்பனரல்லாதாரே, அதாவது பார்ப்பனர் ... தூண்டி விட்டுப் பின் நிற்பதே பார்ப்பனர் வேலை ஏதாவது குரோதத்தைக் கிளப்பிவிட்டால் பார்ப்பனரல்லாத கோடாரிக் காம்புகள் தலைவிரித்தாடும். நம் இனத்தவரை துன்புறுத்துகின்றோமே எனச் சிறிதும் நினைக்கமாட்டார்கள்.
கோவில்  சோற்றுக்கு வழியில்லாமற் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கதிகம், சுசீந்தரம் கோவிலைப் பற்றிய வருவாயே அங்குள்ள பார்ப்பனருக்கும் பிற உயர்ந்த இனத்தவர்க்கும்.
எனவே தாழ்த்தப்பட்டவரை அனுமதித்து விட்டால், தம்பிழைப்புக் கெட்டுப்போய்விடும் என்ற பயம் ஒரு புறம் இதற்காக எதிர் சக்தியாகிரகஞ்செய்தனரேயன்றி வேறல்ல. வேறு காரணமுமில்லை. தாழ்த்தப்பட்டவர் வீதிகளில் வராத தால் வண்டிக்கூலி விறகு வெட்டுக்கூலி முதலிய பலவும் அவர்கட்கே பார்ப்பனருக்கு கோவிலினின்றும் பொருள் ஏராளமாக கிடைப்பதால், எவ்வளவு கொடுத்தாலும் அதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
எனவே பார்ப்பனீயத்தின் ஆட்சிக்குத் தோள் கொடுப் பவர் பிராமணரல்லாத கோடரிக் காம்புகளேயாகும். பிராம ணரல்லாதார் யாவரும் ஒரு முகப்பட்டு நின்றால் தாழ்த்தப் பட்டவருடைய உரிமைகள் விரைவில் பாதுகாக்கப்படும். இந்திரனைத் தூய்மைபடுத்திய தானுமாலய மூர்த்திக்கு இவர்களுடைய மாசற்றநெஞ்சைத் தூய்மைப்படுத்த மனம் வரவில்லைபோலும்.
திருவாங்கூர் அரசாங்கத்தார் தேவஸ் தான விஷயத்தில் செய்திருக்கும் சில சீர்திருத்தங்கள் ஓரளவுக்கு போற்றற் குரியனவாகும். தேவஸ்தான இலாகாவை ஏற்படுத்தியதிலிருந்து கோவில் காரியங்களெல்லாம் சிறிது கவனமாகப் பார்க்கப்படுகின்றன. பெருச்சாளிகளுடைய மனம் போல் நடக்கத்தடை ஏற்பட்டுவிட்டது.
இன்னுஞ்சிறிது முற்போக்கைக் கொண்டு கோவிலுட் சென்று கும்பிடவும் தெருவீதிவழி செல்லவும் மனிதராய்ப் பிறந்த எவருக்கும் உரிமையுண்டென உண்மையை நிலை நிறுத்தினால் மிகவும் நலமெனக் கூறுகிறோம். மிருகபலியை நிறுத்திய கவர்மெண்டார் மனித உரிமைகளின் பலியையும் நிறுத்த முன்வர வேண்டியது அவசியமாகும். ஒருகுலத்திற் கொருநீதி வழங்கல் நியாயமன்று. யாவரையும் அனுமதிப்ப தால் சுவாமி ஓடிவிட மாட்டார்! அதனால் யாதொருவிதக் கெடுதியும் நேரிடாது நன்மையே உண்டாகும்.
பார்ப்பனீயம் ஒழிக! சமத்துவம் ஓங்குக! மூடத்தனம் மூழ்குக!
-விடுதலை,4.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக