பக்கங்கள்

திங்கள், 30 மே, 2016

ஜாதி வித்தியாசம் (நாகை கே.முருகேசன்)


18.5.1935, புதுவை முரசிலிருந்து
மக்களில் ஜாதி மத்தியாக கற்பிக்கப்பட்டதே ஒழிய, தானாக ஏற்படவில்லை யென்று இன்னமாகச் சொல்லலாம். சாஸ்திரத் தைச் சற்று உற்று நோக்குவோமானால் பிராமண, கூத்திரிய வைசிய, சூத்திர என நான்கு வகையாக  அக்காலத்திற்கேற்றபடி, அக்கால மக்கள் பிளவுபட்டு ஒவ்வொருபிரிவும் தங்கள் தங்கள் கடமையைச் செவ்வனே நடத்தி வந்ததாக காணக்கிடக்கிறது.
நாம் மேலே குறிப்பிட்ட காலம் வேறு, இக்காலம் வேறு என்பது வாசகர் களுக்குத் தெரிந்த விஷயம் இக்காலத்திலே பொதுவாக மூன்று ஜாதியார் (பிராமணர், குத்திரர், தீண்டாதார்)கள் தான் இருக் கிறார்களென பிராமணர்கள்சொல்லுகிறார்கள் மேற்குறிப் பிட்ட மூவகை ஜாதி உட்பிரிவில் எண்ணிலடங்காததும் எட்டிலடங்காததுமான பல ஆயிரக்கணக்கான ஜாதிகள் இருக்கின்றன.
வலுத்தவன் இளைத்தவனை அடக்கிவைப்பது என்பதற்கு ருஜூ இந்த ஜாதி வித்தியாசமே ஆகும். பிறர் சொத்தை ஏமாற்றி விலாப்புடைக்க உண்ட, உண்ணும் ஒரு சாரார் (பிராமணர்) தன் இனத்தாரைத் தவிர்த்த மற்றவர்களைக் சூத்திரரெனவும், தீண்டாதார் களெனவும் கூறுவது நமக்கு மட்டிலடங்காகோபம் வருகிறது.
குத்திரர்களை விட மிகக் கேவலமாய் நடத்தப் படுகின்றவர்கள் தீண்டாதார்களான நமது ஆதிதிராவிட சகோதரர்கள். அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் எனப்பொய்யா மொழி புகலுகிறது. ஆனால் தற்கால பிராமணர்கள் எனப்படுவோர் அதற்கு முற்றிலும் முரணாக நடப்பதால், இக்காலத்தில் அம்மொழி பொய்த்து விட்டதென்னலாம்.
மேலும் மனுவில் கப்பல் பிரயாணம் செய்கிறவர்களும், வ ட் டி. வாங்குபவர்களும், குருக்கள் வேலை பார்ப்பவர்களும், ஒருவன் கீழிருந்து உக்தியோகம் பார்ப்பவர்களும், காப்பி கிளப் முதலியன வைத்து வயிறு வளர்ப்பவர்களான பார்ப்பனர் களையும் சண்டாளர்களென கூறியிருப்பதை உற்று நோக்குங்கள்.
தற்கால பார்ப்பனர் எல்லோரும் மேற்குறித்தபடி நடப்பதால், அவர்களைத்தான் சண்டாளர்களெனப் புகல இடமிருக்கிறது. சூத்திரிடத்தில் தானம் வாங்கி பிராமணர் உண்ணலாகாதென மனுவில் இருந்தும், பிராமணர்கள் அதிகார தோரணையில் சூத்திரர்களென அவர்கள் சொல்லும் தம் மக்களிடத்தில் தானம் வாங்கி உண்பது அநியாயமல்லவா? நாம் அவர்களுக்கு தானம் கொடுப்பது நம் முடைய மடமைத் தன்மையைக் காண்பிப்பதால், சாஸ்திரத்தில் சொன்னபடி கற்கால ஒழுங்கற்ற ஒருஜாதிக்குத் தானம் கொடுக்காமலிருப்பதே நலம்.
தானம்வாங்குவதற்கு உத்தம பிராமணர்கள் அகப்படுவது கஷ்டம்.   மேலும் சாஸ்திரத்தில் சொல்லியபடி ஒரு பார்ப்பனரையாவது தற்காலத்தில் பார்ப்பது குதிரை  கொம்பாக இருக்கிறது. ஆதலால் பிராமணர்களே தற்காலத்தில் இல்லை யெனலாம்.
தற்காலத்தில் சூத்திரரென்போரைப் பார்ப்பதே துர்லபமாய் இருக்கிறது. ஆகையால் சூத்திரரென்னும் வார்த்தையைப் பிராமணர்களென்று ஒரு சாரார் ரிஜிஸ்டேர்டு பார்சல் செய்து நாரத முனிவருக்கு அனுப்பட்டும்.
பெருவியாதிக்காரரையும், மற்றும் தொத்து வியாதிக்கார்களையும் தான் நாம் தொடக் கூடாதாகையால், தீண்டாதார்களெனக் கூற வேண்டுமே தவிர மற்ற நமது ஆதிதிராவிட சகோதரர்களை தீண்டாதார் களெனப் புகலுவது நம்முடைய ஆணவத்தைக் காண்பிக்கிறது. பெரும் பாலோர் தங்கள் மடமைத் தனத்தால் ஆதிதிராவிட சகோதரர்களைக் தீண்டாதார்களென நினைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் சற்றுநிதான புத்தியுடன் ஆழ்ந்து சிறிது நேரம் யோசித்தால் உண்மை விளங்காது போகாது.
ஆதிதிராவிடர்களும் ஒருவருக்கும் அஞ்சாமல் கோழைத் தனத்தை விலக்கிவிட்டு, தைரியத்துடன் எல்லோருடனும் நெருங்கிப் படிக்கவேண்டு மல்லாமல், பிற மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அவர்களும் அனுபவிப்பார்களாக. அதனால் என்ன ஆபத்து நேரிடினும் அஞ்சா நெஞ்சுடன் அதைத் தவிர்த்துப் பிற மக்களுடன் கூடி வாழவேண்டும்.
ஆதிதிராவிட மக்களுக்கும் பிற மக்களுக்கும் ஆயிரக்கணக்கான கலப்பு மணம் நடைபெறவேண்டும். அப்பொழுது தான் ஜாதி வித்தி யாசம் என்னும் பேய் வந்தவிடம் தெரியாமல் பறக்கழியாகும்.
எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும், மற்றொரு மனிதன் தாழ்ந்த மனிதனாகவும் கருதப்படுகிறான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா? ஆண் ஜாதி பெண் ஜாதி யாகுமிரு ஜாதி வீண் ஜாதி மற்ற தெல்லாம் குதம்பாய் என பாம்பாட்டிச் சித்தர்பாடலை எல்லோரும் கவனியுங்கள். ஆங்கிலப் புலவாகிய டென்னிசனும் அதே கருத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டி இருக்கிறார்.
சகோதரர்களே! இந்த ஜாதி வித்தியாசக் கொடுமையை ஒப்புக் கொள்ளாதார் யார்? இதை  ஒழிக்க வேண்டுமென்று சொல்லாதார் யார்? ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடா து அகற்கு ஆதாம் இல்லை யென்று சொல்லாத பெரியார் யார்? ஆனால் நாகரீக முன்னேற்றமடையும் கற்காலத்தில், ஜாதி வித்தியாசத்தைப் பாராமல் எல்லோரும் சகோதர்களென்று கருதும் இன்னாளில், ஜாதிவித்தியாசம் என்னும் பேய் மறைய இடமிருக்கிறது.
எல்லாமதங்களும் எவ்வுயிர்க்கும் அன்பா இரு எல்லோரும் சமம் அன்பே கடவுள் எனப்புகலுகின்றன. இவைகளை உணர்த்தும் உணராதுபோல் பலர், அர்த்தமில்லாமல் ஒரு பெரிய பாலைவனத்தில் போடும் வீண் சத்தத்தைப்போல ஓலமிடுவதை நோக்க நமக்கு வியப்பாக இருக்கிறது.
முக்கியமாக எல்லோரும், தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கும் வாலையும், நெற்றிக் குறியையும் முக்கியமாக தகர்த்தெறிய வேண்டிய விஷயங்களில் முதன்மையான தென்று சொல்லலாம்.
ஜாதி வித்தியாசம் என்னும் சாக்கடை துர்நாற்றமெடுக்கையில், சுயராஜ்யம் வேண்டுமென்று ஓலமிடுவது பழிப்பிற்கிடமாயிருக்கிறது. ஜாதி வித்தியாசத்தை அறவே ஒழிக்க ஒவ்வொரு வரும் அளவு கடந்து உழைக்க வேண்டும்.
ஜாதிகள், பல ஆயிரக் கணக்கானவை எனப் பிறர் சொல்ல தாம் கேட்கும் பொழுது, மயிர்க் கூச்சலுண்டாகிறது, மனம் நெக்குருகிறது, கண் ரத்தமாகிறது.
ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டு மென்போர், பெரிதும் குறுகிய நோக்கமும் தன்னலமும் கொண்டவர்களாகக் தான் இருக்கவேண்டும். ஆகவே நாம் அவர்கட்கு வேண்டிய நல் லிணக்கம் கூறி, ஜாதியின் உயர்வு தாழ்வுகளினால் உண்டாகும் தீமைகளை எடுத்துக் காட்டி மக்கள் தோற்றத்தில் பேதமில்லை என்பதை உணரச்செய்து, அதற்காக நாம் உடல்உள்ளன பலவும் தியாகஞ்செய்தும் அவசியம் நேரின் தூக்கு மேடையை ஏறவும் ஏனைய வாலிபர் முன்னணியில் வர வேண்டும்.
-விடுதலை,19.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக