பக்கங்கள்

செவ்வாய், 22 ஜனவரி, 2019

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன்?

பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே -  அதை எவர் எதிர்க்கிறார்?


இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று?


போதுமான அளவு விவாதிக்காமல் 'ஜெட்' வேகத்தில் சட்டத் திருத்தமா?




போதுமான வகையில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படாமல், அவசர அவசரமாக ஜெட்' வேகத்தில் - இதற்குமுன் எந்த சட்டத் திருத்தத்திற்கும் இல்லாத வகையில் ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றலாமா? ஏழைகளுக்கு உதவி செய்ய பொருளாதார திட்டங்கள் இருக்கும்பொழுது அரசமைப்புச் சட்டத் தில் இல்லாத பொருளாதார அளவுகோலை உயர் ஜாதியினருக்காகத் திணிக்கலாமா? என்ற அடுக் கடுக்கான வினாக்களை எழுப்பி, திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

உயர்ஜாதி ஏழையினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதை' என்பதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, அடுத்த சில நாள்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, சட்டமாக்கி, அமல் தேதியும் அறிவித்து, உடனடியாக இதை செயல்படுத்திடவேண்டும் என்ற மத்திய அரசு மாநிலங்களுக்கு சுற்றறிக்கையையும் அனுப்பியுள்ளது!

அவசர கதியில் 103 ஆம் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது ஏன்?


2019 இல் நடைபெறும் தேர்தலுக்கு இன்னும் 100 நாள்கள் கூட இல்லை; 2019 மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வரவிருக்கும் நிலையில், எந்த ஒரு அரசியல் சட்டத் திருத்தமும் - இவ்வளவு ஜெட்'  வேகத்தில் சரியான விவாதங்களோ - செலக்ட் கமிட்டி விவாதமோ, திருத்தங்களோ ஏதும் இல்லாத வகையில் நிறைவேற்றப்பட்ட ஒரே சட்டத் திருத்தம் இந்த 103 ஆவது திருத்தம்தான்!

சில மாதங்களுக்குமுன் 2018 இல் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களிலும் அதுவும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மண் என்று அவர்களால் நம்பப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இந்தி மாநிலங்களில் ஆட்சியை இழந்த பதற்றத்திலிருந்து, இனிவரும் தோல்விகளிலிருந்து தப்புவதற்குப் பல வழிவகைகளையும் காணும் முயற்சியிலே இப்படி - காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்ட வேகம்!

இது அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே அடியோடு தகர்க்கும் சட்டத் திருத்தம் அல்லவா என்ற கேள்வி நாடு தழுவிய அளவில் சட்ட நிபுணர்களால் கேட்கப்படுகிறது!

மத்திய பி.ஜே.பி. அரசுக்கு சில கேள்விகள்???


சில கேள்விகள் - இதுவரை மோடி அரசு பதில் கூறாதவை:

1. இப்படி ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே மத்திய அரசு, ஏதாவது சர்வே' நடத்தி உயர்ஜாதி ஏழைகள் எத்தனை சதவிகிதம் என்று கண்டறிந்துள்ளதா?

2. உயர்கல்வி நிறுவனங்களில் சேராத, சேர்ந்து படிக்காமல் தவிக்கும் உயர்ஜாதி ஏழைகள் - பலவீனமான பிரிவினரில் அல்லது (இப்போது கூறும்) பொதுப் பிரிவினரிலிருந்து எவ்வளவு சதவிகிதம் என்பது கண் டறியப்பட்டதா? புள்ளி விவரம் உள்ளதா?

3. 10 சதவிகிதம் என்பது, எந்த அடிப்படையைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது?

4. ஏற்கெனவே முந்தைய அய்க்கிய முன்னணி அரசால் பொதுத் துறை நிறுவன வங்கிகளில், சொத்து ஜாமீன் (Collateral Security)  ஏதும் இல்லாமலே கல்விக் கடன், உயர்கல்வி படிக்கும் ஏழைகளுக்கு வழங்கும் சட்டம் இருக்கும்போது, இப்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு உயர்ஜாதியினருக்கு உயர் கல்வியில் தேவை என்பது தேவையா? இது ஒரு அரசியல் வித்தை (Political Gimmick) என்பதல்லாமல் வேறு என்ன?

உச்சநீதிமன்றம் சொன்ன இரு அளவுகோல்கள்!


5. ஏற்கெனவே 19.10.2006 இல் - எம்.நாகராஜ் & மற்றவர்கள் Vs அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பில் இரண்டு அளவுகோல்கள் முக்கியம் என்று வற்புறுத்தப்பட்டுள்ளதே.

1. சமூக ரீதியான பிற்படுத்தப்பட்ட தன்மை (socially backwardness)

2. போதிய பிரதிநிதித்துவம் இன்மை - இவை கருத்தில் கொள்ளவேண்டியவை. (In adequacy of representation) (இது பின்னால் பல தீர்ப்புகளில் பின்பற்றப்பட்டுள்ளது).

இந்நிலையில், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு இப்போது, இது உயர்ஜாதியினருக்கு மட்டுமல்ல, எல்லா ஏழைகளுக்கும் அல்லது பொருளாதாரத்தில் பலவீனமா வர்களுக்கும் என்று ஏடுகளில் திட்டமிட்ட ஒரு பித்தலாட்டப் பொய்யை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்!

103 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக நிறை வேற்றப்பட்டு, அமலாக்க, மத்திய அரசு வற்புறுத்தும் சட்டத்தில்,

(6) Nothing in this Article or sub-clause (g) of clause (1) of Article 19 or clause (2) of Article 29 shall prevent the State from making,
(a) any special provision for the advancement of any economically weaker sections of citizens other than the classes mentioned in clauses (4) and (5); and.... 

16(4) சரத்தின் 4 ஆவது பிரிவு, 5 ஆவது பிரிவின்கீழ் வருகின்றவர்களைத் தவிர மற்றவர்கள்'' என்றால், அதன் பொருள் என்ன?


தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.,),

மலைவாழ் மக்கள் (எஸ்.டி.),

இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.) தவிர என்பதுதானே?

உயர்ஜாதியினருக்குப் பொருளாதார (மறைமுகமாக) பலவீனம் இட ஒதுக்கீடு என்றுதானே பொருள்?

உயர்ஜாதியினர் கூறி வந்த அந்தத் தகுதி திறமை என்னாயிற்று?


பொதுப் பிரிவினர் திறமை அடிப்படையில் தேர்வு என்பது, சுருங்கிய நிலையில், இதுவரை இந்த உயர்ஜாதியினர்'' குற்றம் சாட்டி வந்த தகுதி, திறமை'' வாதம் என்னவாயிற்று?

இனிமேலாவது பார்ப்பனர்கள் தகுதி-திறமை'' இட ஒதுக்கீட்டால் போய்விட்டது என்ற நீலிக் கண்ணீர் விட்டு அழாமல் இருப்பார்களா?

பார்ப்பனர்களுக்கு இரட்டை வேடம்; இரட்டை நாக்கு; இரட்டைப் போக்கு எப்போதும் கைவந்த கலையாகும்.

இரட்டை வேடம்!


பிறப்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது - தகுதி அடிப்படையில்தான் இருக்கவேண்டும்'' என்பார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆக, தகுதி'' ஆகமப்படிப்பில் வெற்றி - அடிப்படை தேவை என்றால், அப்போது பிறப்பு அடிப்படையில் பாரம்பரிய அர்ச்சகர் முறை தேவை என்று உச்சநீதிமன்றம் சென்று வாதாடுவார்கள். இதையும் இப்போது புரிந்துகொள்ளுங்கள்!

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்.


சென்னை


22.1.2019

-  விடுதலை நாளேடு, 22.1.2019

1 கருத்து:

  1. Casino Game For Sale by Hoyle - Filmfile Europe
    › casino-games › casino-games › casino-games › casino-games Casino Game for sale by where to order air jordan 18 retro racer blue Hoyle on Filmfile Europe. how to get air jordan 18 retro men red Free shipping for most countries, no jordan 18 white royal blue discount download required. Check 룰렛 베팅 the deals 플렉스 홀덤 we have.

    பதிலளிநீக்கு